Thursday 1 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 19

         பக்தி செய்ய எந்த தகுதியும் வேண்டியதில்லை.உதாரணமாக வால்மீகி முனிவர் ஒரு கொள்ளைக்காரராக இருந்தார்.கண்ணப்பநாயனார் ஒரு வேடுவனாக இருந்தார்.இவர்கள் செய்த பக்தி, தவம் செய்த முனிவர்களையும் மிஞ்சக்கூடியது.துளசிதாசர் செய்த ராம பக்தியை விட,ராம நாமத்தை விட சிறந்தது எதுவும் இல்லை.
        பல காலம் சிரமப்பட்டு ஞானம் பெற வேண்டும்.யாகம் செய்வதற்கோ பொருள் செல்வம் வேண்டும்.கடினமான யோக பயிற்சியில் வெற்றி பெற யோகாசனம், பிரணாயாமம் முதலியவற்றை சரியாக செய்ய வேண்டும்.பக்தி யோகத்தில் இவை எதுவும் தேவை இல்லை.அன்புடன் ஒரு பூவை சாற்றினால் போதும்,அல்லது தமக்கு கிடைத்த உணவை படைத்தாலே போதும்,பிரார்த்தனை செய்தாலே போதும். பாகவத புராணத்தில் பகவானே கூறுகிறார்:
"ந ஸாதயதி மாம் யோகோ ந ஸாங்க்யம் தர்ம உத்தவ
நஸ்வாத் யாய ஸ்த பஸ்த்யாகோ யதா பக்திர் மமொர்ஜிதா 
பக்த்யா ஹமேகயா க்ராஹ்ய:ச்ரத்தயாத்ம பிரிய: ஸதாம் பக்தி 
புனாதி மன்னிஷ்டா,ச்வபாகானபி ஸம்பவாத் "
யோகம்,ஞானயோகம்,தர்மம்,ஸ்வாத் யாயம் (வேதங்களை படித்து தத்துவார்த்தமாக பாராயணம் செய்வது)யாகம்,தவம்,தியாகம் ஆகியவற்றால் கூட நான் சீக்கிரம் வசப்பட மாட்டேன்.சான்றோர்களின் பிரிய ஆத்மாவாக இருக்கும் நான் சிரத்தை பிரேமையுடன் அன்பான பக்திக்கு மட்டும் கட்டுப்படுவேன்.பக்தன் அவன் புலயனாக இருந்தாலும் தூய பக்தியால் சித்தி பெற்று விடுவான்.இதற்க்கு உதாரணம்:
   ஸ்ரீ கண்ணப்ப நாயனார் அவர்கள் பன்றிக்கறியை சமைத்து பிரசாதமாக சிவபெருமானுக்கு படைத்தார்.அவர் செய்த பக்தி ஈடு இணையற்றது.
           பகவத்கீதையில் அர்ச்சுனனுக்கு மட்டுமே  தன் விசுவரூப தரிசனத்தை தரிசிக்க செய்து கூறுகிறார்.:
          அர்ச்சுனா நீ கண்ட எனது விசுவரூபதரிசனம்காணக்கிடைக்காதது.மிகவும் அரிது.வேதங்களை பாடி உணர்ந்து பாராயணம் செய்தாலும் யாகங்கள் பல செய்தாலும் தவத்திலும் தானத்திலும் நீ இப்போது கண்டது போல காண முடியாது.ஆனால் என் மீது அனன்ய பக்தி கொண்டால் தான் இது போல் தரிசனத்தை பெற முடியும்.எனது உண்மை தத்துவத்தை அறிய முடியும்.என்னுள் பிரவேசிக்க முடியும்.
         " பல ரூபத்வாத் "
          பக்தி என்பது முழுமையாக பிரதானமாக இருந்து பலன் தர கூடியது.அதாவது இங்கு பிரேமை பக்தியே முழுமையாக இருக்கிறது.இங்கு பக்தி சாதனமாக இல்லை.
      புனிததலயாத்திரை,ஞானம்,வைராக்கியம்,யோகம்,கடமை,தர்மம்(அறம்)விரதம்,உபாசனை,தானம்,புலனடக்கம்,யம நியமங்கள்,ஜபம்,தபம்,யாகம்,அஹிம்சை, குருசேவை,கல்வி, பணிவு,விவேகம்,புகழ்,வேதங்களை கற்று உணர்தல்,இவை எல்லாம் ஆண்டவனை அடைவதற்காக துணை புரியும் சாதனங்கள். பக்தியை அடிப்படையாக கொண்டு தான் இந்த சாதனங்கள் பலன் தருகின்றன.ஆனால் பக்தி இந்த அனுஷ்டானங்களில் துணையாக இருக்கிறது.பக்தி இல்லாமல் எந்த ஜப தபங்களிலும் வெற்றி அடையாது.அவ்வாறு இருப்பதனால் இங்கு நாரதர் மற்ற சாதனங்களுக்கு முக்கயத்துவம் கொடுக்காமல் பக்திக்காகவே பிரேமை பக்தியை உருவாக்க வலியுறுத்துகிறார்.ஆதலால் இங்கே கூறப்படும் பக்தி எந்த துணை சாதனமும் அல்லாமல் முழுமையான பக்தியாகவே கூறப்படுகிறது.
 "ஈச்வரஸ்யாப்யபிமானத்வேஷித்வாத் தைன்யப்ரியத்வாச்ச"   
          பக்தி எப்படி சிறந்ததாக உருவெடுக்கிறது என்பதை கூறுகிறார்கள்.
         யோக சாதனை செய்யும் சாதகர்கள்,சாதரணமாக கீழ் நிலையில் இருக்கும் மனிதர்களை விட நாம் மேம்பட்டவர்கள் வலிமை உள்ளவர்கள் என்று கர்வப்பட்டு கொள்வார்கள்.ஆனால் பகவான் நாமத்தை பக்தியுடன் பஜனை செய்யும் பக்தர்களோ கர்வமில்லாமல் இருப்பார்கள்.(தொடரும்)

No comments:

Post a Comment