Thursday 29 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 48

                                                                     
தீய பழக்க வழக்கங்களால் துந்துகாரி என்றொருவன் மகா பாவியாகிவிட்டான்.ஒருநாள் தீயவர்கள் ஒன்று சேர்ந்து அவனை கொலை செய்து விட்டனர்.அவனது வீட்டிலேயே அவனை கொலை செய்து அவனை அங்கேயே புதைத்தும் விட்டனர்.அதன் விளைவாக துந்துகாரி பேயாக மாறிவிட்டான்.கோகர்ணன் என்ற தம்பி துந்துகாரிக்கு இருந்தான்.அவன் மிகவும் நல்லவன்.கடவுள் பக்தி கொண்டவன்.தம்பி தீர்த்தயாத்திரை சென்ற போது அண்ணனை கொலை செய்தார்கள்.தம்பி வீட்டிற்கு வந்து உறங்கிக்கொண்டிருக்கும் போது துந்துகாரி பேய் உருவில் தோன்றி தம்பியை எழுப்பினான்.தான் கொலையுண்டு துர்கதி அடைந்ததை கூறி அழுதான்.கோகர்ணன் மனம் வருந்தி அண்ணனை தூய்மைபடுத்தி கடைத்தேற என்ன வழி என்று யோசித்தான்.பின்பு பெரியோர்களையும் மகான்களையும் சந்தித்து பேசினான்.அவர்கள் பாகவத புராண கதையை நீ படிக்கவேண்டும், மக்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களையும் நீ கேட்கவைக்க வேண்டும்,உன் அண்ணனும் பாகவத கதையை கேட்க வேண்டும் என்றார்கள்.கோகர்ணன் ஒரு விழா போல எடுத்து பாகவத கதையை பாராயணம் செய்தான்.அதன் விளைவாக துந்துகாரி பேய் உருவம் துறந்து தூய்மை அடைந்தான்.இறுதியில் தேவ உருவம் பெற்று சுவர்க்கம் சென்றான்.துந்துகாரி கோகர்ணனை நோக்கி உன்னைப்போல பக்தர்கள் பாவிகளையும் தூய்மை படுத்தி கடைத்தேற்றுவார்கள் என்று கூறி சென்றான்.
         பாகவத புராணத்தில் உத்தவர் கோபிகை பெண்களின் கிருஷ்ண பக்தியை கண்டு மிகவும் வியந்து போனார்கள்.-கல்வி அறிவு இல்லாதவர்களாக, தவம் ,ஞானம் பெற்று மேதாவிகளாக இல்லாதவர்களாக இந்த கோபியர்கள் இருந்தும் வேதங்கள் தேடும் பரம்பொருள் ஸ்ரீ கிருஷ்ணன் மீது ஒப்பற்ற பிரேமை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.கிருஷ்ண பிரேமை அடைவதற்காக பந்த பாசங்களை துறந்து விட்டார்கள்.நான் பகவானிடம் இதை மட்டும் வேண்டிக்கொள்கிறேன்.இந்த பிருந்தாவனத்தில் நான் புல்லாகவோ, செடிகொடியாகவோ அல்லது புதராகவோ ஜென்மமெடுத்து இந்த கோபியரின் பாத தூசி என் மீது பட்டு பெரும் பேரு பெற்றவனாகிவிட வேண்டும்.என்று கூறுகிறார்.
"தன்மயா:"
பஜனை அல்லது தியானம் செய்யும் பக்தர்கள் தாம் எங்கே இருக்கிறோம்,என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறார்கள்.அனன்ய பக்தர்கள் இறைவனோடு ஒன்றிவிடுகிரர்கள். அதுபோல பக்தனும் மனம்,அறிவு,நான் என்ற தன்மை,தேகம் எல்லாம் பகவானுக்கே அர்ப்பணம் செய்து பகவானுடன் ஒன்றி விடுவான்.பகவானுக்கும் அவனுக்கும் பேதமற்று போவதால் அவன் இருக்கும் இடமும் சூழ்நிலையும் தூய்மையாகிறது.
         இப்படிப்பட்ட பக்தர்களால் பகவானும் அவரது திருநாமங்களும் பகவத் பக்தியும் மகா மகிமையுடன் விளங்குகின்றன.
"மோதந்தே பிதரோ ந்ருத்யந்தி தேவதா: ஸநாதா சேயம் பூர்பவதி " 
இவ்வுலகில் பிறவியெடுத்து உண்மையான அனன்ய பக்தர்களாகிவிட்டால் அவனது முன்னோர்கள் மிகவும் சந்தோசப்படுவார்கள்.அவன் இவ்வுலகிற்கு வந்து மக்களை நல்வழிப்படுத்தி தர்மம் தழைத்தோங்க செய்வான், என்று தேவர்கள் மகிழ்ச்சியால் நடனமாடுவார்கள்.அந்த மகான் அவதரிப்பதால் பாவங்களால் துன்பப்பட்ட பூமி பாவங்களை அழிக்க வந்த தலைவன் என்று மகிழ்ந்து போகுமாம்.
          அந்த மகான் மக்களை நல்வழிப்படுத்தி பாவங்களை குறைப்பான்.அவன் செயல்களும் புகழத்தக்க மாபெரும் சேவையாக இருக்கும்.மக்களின் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.யாகங்கள் நடக்கும்.பித்ரு கடன்கள் மீது சிரத்தை ஏற்படும்.அவனை பின்பற்றும் பக்தர்கள் திருப்பணிகள் பல செய்து பக்தி மார்க்கத்தை பரப்புவார்கள்.
          இங்கு பாகவத புராணத்தில் கூறப்பட்டதை கவனத்தில் கொண்டுவர வேண்டும்.
          பிரகலாதன் ஸ்ரீ நரசிம்ம பகவானை நோக்கி கூறுகிறான்."தேவாதி தேவனே என்ன வரம் வேண்டும் என்று கேட்டீர்கள்?ஜகத்குருவான தாங்கள் தேஜஸையும் ஐஸ்வர்யதயும் என்தந்தை ஆத்திரமடைந்து இழிவாக பேசினார்.தம்பியை கொன்றவன் நாராயணன் என்று தவறாக நினைத்து அவர் தங்கள் பக்தனான என்னை இம்சித்து கொடுமைகள் பல செய்தார். மேலும் மன்னிக்க முடியாத குற்றங்கள் பலவற்றை செய்து இருக்கிறார்.தயாநிதியே பாவியான என் தந்தை பயங்கர பாவத்தில் இருந்து விடுபட வேண்டும்.இதுவே நான் கேட்கும் வரம்".உண்மையில் எனக்காக நரசிம்மாவதாரம் எடுத்து தங்களது பார்வை பட்டவுடனேயே என் தந்தை பரமாத்மாவாகிவிட்டார்.
நரசிம்மபகவான் கூறுகிறார்."அப்பனே உன் தந்தையும், முன்னோர்களான பித்ருக்களும் முன்னும் பின்னும் முப்பத்தி ஏழு தலைமுறைகள் சேர்ந்து எனது வைகுண்ட பதவியை அடைந்து விட்டார்கள்.ஏனெனில் பக்தனான நீ இந்த குலத்தில் வந்து பிறந்தாய் அல்லவா?  உன்போன்ற சாந்தமான பக்தர்கள் சமநோக்குடையவர்களாக   இருக்குமிடம் தூய்மையாகிவிடும்.பாலை நிலமும் பசுமையாகிவிடும். நீ இன்றில் இருந்து பக்தர்களுக்கெல்லாம் உதாரணமாக பேசப்படுவாய்.தந்தைக்கு இனி நீ இறுதி சடங்குகளை செய்வாயாக.உன் போன்ற மகனை பெற்றவன் என் அங்கங்கள் ,ஸ்பரிசம் பட்டு தூய்மையாகிவிட்டான் என்று கூறினார்.(தொடரும்)

No comments:

Post a Comment