Tuesday 2 December 2014

தனுராசனம்


வில்லை போல் வளைப்பதே தனுராசனம் எனப்படுகிறது. இது அதிக பலன் தரும் ஆசனங்களில் ஒன்று. இதில் கழுத்து, தலை,மார்பு இவற்றை மேல் தூக்குவது போல இடுப்பிலிருந்து கீழ் அங்கங்களும் மேல் தூக்கப்படுகிறது. இதனால் கழுத்து பலமாகிறது. தொண்டை நோய் குணமாகிறது,மார்பு விரிவாகிறது. தசைகள் பலப்படுகின்றன. நுரையீரல் ஆரோக்கியமும் உறுதியும் ஆகின்றன. முதுக்குத்தண்டு பின்னால் வளைவதால் அதில் இறுக்கம் மறைகிறது. முதுக்குத்தண்டு எலும்புகளும் நரம்பு மண்டலங்களும் நன்கு செயல்படுகின்றது. இந்த ஆசனத்தினால் தோளிலிருந்து கைவரை தொடைகள் எல்லாம் இழுக்கப்படுகின்றன.
அதனால் சுத்த ரத்தம் பாய்ந்து ஆரோக்கியம் கிடைக்கிறது.
          தனூராசனத்தினால் ஜீரண உறுப்புகள் நன்கு வேலை செய்கின்றன. இதை செய்பவர்கள் பிரத்யாசமாக உணர்வார்கள். மாந்தம், ருசியின்மை, கேஸ்(அபான வாயு போகாமல் இருப்பது.) மலச்சிக்கல் எல்லாம் நாசப்பட்டு போகின்றன. இதனால் சரீரம் லேசாக உணரப்படும். இரைப்பை ஜீரணசக்தி அதிகமாகும். வயிற்றில் இருக்கும் கொழுப்பு, தொடியில் இருக்கும் தடிமன் எல்லாம் மறைந்து போகும். மொத்தத்தில் கொழுப்பு சத்து குறைந்து போகும். நல்ல சுரப்பிகள் வேலை செய்யும். ஆயுளும் அறிவும் வளரும். காமம் கட்டுப்படும். மேலும் கணயம் ஆரோக்கியம் ஆவதால் சர்க்கரை வியாதி குணமாகும். உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும். சிறுநீர் உபாதைகள் நீங்கும். நரம்பு மண்டலம் பலமாகும். வாத நோய்கள் குணமாகும். பெண்களுக்கு கர்பப்பை உறுதியாகும். அதனால் இந்த ஆசனம் பாலகர், இளைஞர், முதியவர், பெண்கள் அனைவருக்கும் ஏற்றது.
          இந்த ஆசனத்தில் சர்ப்பாசனமும்,சலபாசனமும் கலந்திருப்பதால் அவ்விரு ஆசனங்களின் பலன்களும் கிடைக்கின்றன.
          ஆசனம் செய்யும் முறை:
          பூமியில் போர்வை விரித்து அதன் மேல் வயிறும் நெஞ்சும் படும்படி(குப்புற)கால்களை நீட்டி படுக்கவேண்டும். கைகள் இரண்டையும் முதுகுபக்கம் பின்னால் மடக்கி முழங்கால்களையும் பின்னுக்கு மடக்கி கைகளால் கால்களை பிடிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை இழுத்துக்கொண்டு கழுத்து, தலை, தொடை, முழங்கால் ஆகியவற்றை மேல்நோக்கி விறைத்து வைக்க வேண்டும். எவ்வளவு அதிகபட்சம் இருக்க வேண்டுமோ அவ்வளவு அப்படியே இருக்க வேண்டும். மூச்சை அடக்கும் வரை நடுப்பகுதி அடியில் இருக்க சரீரத்தின் முழுப்பாகமும் மேல்நோக்கி ஸ்திரமாக வைக்க வேண்டும். அச்சமயம் இரண்டு முழங்கைகளும் மடக்காமல் நேராக இருக்க வேண்டும். தலை மேல்நோக்கி இருக்க பார்வை எதிர்பக்கம் இருக்க வேண்டும். முழங்கால்களும் குதிகால்களும் சேர்ந்து இருக்க வேண்டும். அதன்பின் அடக்கிய சுவாசத்தை மெதுவாக விட்டுக்கொண்டு (படக்கென்று இல்லாமல்) மிக மெதுவாக கை,கால், தலைகளை பூமியில் வைக்க வேண்டும். அதன் பின் சவாசனம் போட்டுக்கொள்ளலாம்.
          மேற்சொன்னவாறு இந்த ஆசனத்தை ஒன்றிலிருத்து மூன்று நான்கு முறை பிரதி தினமும் செய்ய வேண்டும்.  அதற்கு மேலும் கூட்டிக்கொண்டே போகலாம். சிறிது சிறிதாக ஒவ்வொரு வாரமும் ஐந்து ஐந்து நொடிகளாக கூட்டிக்கொண்டுபோய் ஒரு நிமிடம் வரை மூச்சை அடக்கிக்கொண்டு ஆசனத்தில் ஸ்திரமாக இருந்து அப்யாசம் செய்ய வேண்டும். சரீரம் பெருத்திருப்பவர்கள் தொடை, முழங்கால், குதிகால் முதலியவற்றை சேர்த்து வைக்க முடியாது. அவ்வாறு இருக்கும்போது எளிதாக மடக்க வரும்வரை இரண்டு முழங்கால்களையும் ஒன்றரை அடி தூரத்தில் வைத்துக்கொண்டு அப்யாசம் செய்க. எளிதாக படிப்படியாக ஆகும்போது முழங்கால்களின் நடு தூரத்தை (குறைத்துக்கொண்டே வரலாம்).
          சுவாசத்தை அடக்க கடினமாக இருந்தால் இயல்பாக சுவாசிக்கலாம். தனுராசனம் எளிதாக போட ஆரம்பிக்கும்போது மூச்சை நிறுத்தி செய்யலாம். படபடப்பாக துடிக்கும் பலவீன இதயம் உள்ளவர்களும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இந்த ஆசனத்தை செய்ய கூடாது. அதுபோல பெப்டிக் அல்சர் உள்ளவர்கள், ஹார்னியாவால் பீடிக்கப்படுபவர்களும் செய்யக்கூடாது. குடல் டி‌பி உள்ளவர்களும் கண்ட மாலை உள்ளவர்களும்(தொடைகட்டி) இதை செய்ய கூடாது. மேற்சொன்ன நோயாளிகளைதவிர மற்ற அனைவரும் செய்யலாம்.   தொடரும்)        

          

Monday 1 December 2014

சர்ப்பாசனம்

     


          இந்த ஆசனத்தில் நாபியிலிருந்து மேல்பாகம் தூக்கப்படுவதால் படமெடுத்த பாம்பு போல இருக்கும். அதனால் இதை  சர்ப்பாசனம் என்று கூறுவார்கள். இதை பூஜாங்காசனம் என்றும் கூறுவார்கள். இந்த ஆசனத்தால் பசி அதிகம் உண்டாகும். முதுக்குத்தண்டு பலப்படும். இரைப்பை தசைகள் முதுகுத்தசைகள் அழுத்தப்படுவதால் அவை உறுதிபெற்று விடும். இடா நாடியும் பிங்கலா நாடியும் முதுகுத்தண்டின் இருபக்கமும்  போவதால் அதில் செயலாக்கம் உண்டாகும். இதனால் குண்டலினி சக்தி எழும். இது பிரமாச்சரியத்திற்க்கு உகந்த ஆசனமாகும். சுக்கிலாசயம் பலப்படும். பெண்களுக்கு இந்த ஆசனம் மிகவும் உகந்தது. கற்பபை உறுதியாகும். ஆரோக்கியமாக இருக்கும். மாதவிலக்கு சம்பந்த்தப்பட்ட கோளாறுகள் (சீரற்ற இரத்தப்போக்கு, அதிக இரத்தபோக்கு)எல்லாம் சரியாகிவிடும்.
          இந்த ஆசனம் சிறுநீரகத்திற்க்கும், குடலுக்கும் நல்ல பலன் தரும். கழுத்து, மார்பு, வயிறு, இடுப்பு, தோள்கள்,கைகள் ,தொடைகள்,கைவிரல்கள் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும். கழுத்தில் கண்டமாலா என்ற நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
          செய்முறை:
                    கீழே ஜமுக்காளத்தை விரித்து அதில் குப்புறப்படுத்து இரண்டு கைகளையும் மார்பின் இருபக்கம் வைத்து பூமியில் ஊன்ற வேண்டும். சரீரத்தின் அனைத்து பகுதிகளும் தளர்வாக வைக்க வேண்டும். நெற்றியை பூமியில் வைத்த பின் இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து நீட்ட வேண்டும். பின்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் நீட்ட வேண்டும். இதை படக்கென்று செய்யக்கூடாது. தலையை மேலே தூக்கும்போது மார்பு பூமியில் பதிந்திருக்க வேண்டும். அதன்பின் முதுகை பின்னால் வளைத்து மெதுவாக மார்பை மேலே தூக்க வேண்டும். நாபியிலிருந்த்து கால் வரை எல்லா பகுதியும் பூமியில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். பத்து பதினைந்து நொடி வரை உள்ளே சுவாசத்தை அடக்கி வைத்திருக்கும் நிலையில் அப்படியே இருக்க வேண்டும். சுவாசத்தை விடும்போது மார்பும் தலையும் கீழே குனிய வேண்டும்.
          இந்த ஆசனம் மூன்றிலிருந்து எழுமுறை செய்யலாம். ஆரம்பத்தில் ஐந்து அல்லது பத்து நொடி அப்படியே இருக்கலாம். மெதுவாக அப்யாசம் செய்த பின் ஒரு நிமிடம் சுவாசத்தை அடக்கி அப்படியே இருக்க வேண்டும். இந்த ஆசனத்தை செய்ய முடிந்த வரை செய்து விட்டு கண்கள் மூடி சவாசனம் போட்டு படுத்து ஓய்வு எடுக்க வேண்டும்.
          சிலர் இந்த சர்பாசனத்தில் இரண்டு கைகளையும் பூமியில் ஊன்றாமல் இடுப்புக்கு கீழே வைத்து நாகப்படம் எடுப்பது போல தலையையும் மார்பையும் நிமிர்ந்து வைத்து செய்வார்கள். இது மிகவும் கடினமானது. இப்படி செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. காலையிலும் மாலையிலும் இந்த ஆசனத்தை ஐந்து நிமிடம் வரை செய்யலாம்

Saturday 29 November 2014

சிங்காசனம



இந்த ஆசனம் சிங்கத்தின் வடிவம் கொண்டதாகும். நாக்கை துருத்தி, கை விரல்கள் சிங்கத்தின் கால் விரல்கள் போலிருக்கும்.
          மற்ற ஆசனங்கள் போல் இல்லாமல் இதில் சரீரத்தின் மேல் அங்கங்கள் தாக்கப்படுகின்றன. முக்கியமாக கண்,காது,மூக்கு, தொண்டை,நாக்கு,நுரையீரல்,கைவிரல்கள்,குதிகால் ஆகியவற்றில் அழுத்தம் கொடுக்கப்படுகின்றன. நன்கு பசியெடுக்கும். முகதாடை,நாக்கு, தொண்டையை ஒட்டிய நாக்கின் தொடக்கப்பகுதி ஆகியவற்றிற்கு நன்கு பயிற்சி கிடைக்கிறது. தொண்டை குழி முழுங்கும் பகுதி குரல்வளம், குரல்வளை எல்லாம் தாக்கப்படுகின்றன. கண்களுக்கு நல்ல கூர்மையான நோக்கும் சக்தி கிடைக்கிறது. காது, மூக்கு தொண்டைகளின் குற்றங்கள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கிறது. டான்ஸில், தொண்டைவீக்கம்,தொண்டை கரகரப்பு, இருமல் எல்லாம் வேருடன் நீக்கப்படுகின்றன.
          வயிற்றில் ஜீரண சுரப்பிகள் வேலை செய்யும். நாக்கை வெளியில் இழுப்பதால் தொண்டை மூக்கில், சுத்த ரத்தம் பாயும். வாயில் ஜீரண எச்சில் சுரப்பியால் உணவு நன்கு ஜீரணமாகும். நாக்கை வெளியில் நீட்டுவதால் நரம்புகள் இழுக்கப்பட்டு தாடைகள் இறுக்கம் குறைந்து பலப்படுகின்றன. விக்கல் வியாதி தடுக்கப்படுகிறது.
         சிங்காசனத்தை தொடர்ந்து செய்து பழகிய பின் முழங்கால் தொடை, சதைபிடிப்பு நீங்கி பலமுள்ளதாக ஆகின்றன. இந்த ஆசனத்துடன் சேர்ந்து மூலபந்தம்(ஆசனவாயை மேல்நோக்கி சுருக்குதல்) போட்டால் மூலவியாதி குணமாகும்.
          தன்னுள் சிங்கத்தின் பலம் வருவது போல பாவனை செய்தால் எல்லா அங்கங்களும் வலிமை பெற்றுவிடும். இவ்வாறு தியானம் செய்தால் (மன உறுதி) கிடைக்கும். சக்தி பெருகும்.
          செய்முறை:
          கீழே ஒரு விரிப்பை விரித்தபின் முழங்கால் மடக்கி பூமியில் அமர வேண்டும். கால் பாதங்களை விரல்கள் கீழே நேராக வைத்து குதிகால்களில் உட்கார வேண்டும். குதிகால்கள் சேர்ந்தே இருக்க வேண்டும். முகம் சூரியனை பார்த்து இருக்க வேண்டும். இரண்டு முழங்கால்களும் ஒரு இடைவெளிவிட்டு பூமியில் பதிந்து இருக்க வேண்டும். இரண்டு கைகளையும் தொடைகளின் இடைவெளியில் (நடுவில்) ஊன்ற வேண்டும். அதன் பின் கைவிரல்கள் உள்பக்கம் வைத்து (தன்னை நோக்கி வைத்திருக்க வேண்டும்) சற்று முன்பக்கம் குனிந்து கைகளை மடக்காமல் விறைப்பாக வைத்துக்கொள்க. வயிற்றை உள்பக்கம் வைத்து நெஞ்சை முன் பக்கம் கொண்டு வரவேண்டும். தொண்டையை திறந்து நாக்கை வெளியில் நீட்ட வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளியில் நீட்ட வேண்டும். திருஷ்டியை மூக்கு நுனியில் வைத்துக்கொள்க. சுவாசம் வாய் வழியாக போய்வரவேண்டும். ஒருநிமிடத்தில் நாக்கை வெளியிலும் உள்ளேயும் கொண்டுபோய் நீட்ட வேண்டும்.
          ஒரு நிமிடத்திலிருந்து மூன்று நிமிடம் வரை பிரதி தினமும் இதே முறையில் அவசர கதியில் நாக்கை வெளியில் நீட்டி உள்ளேயும் கொண்டு போக வேண்டும். சிலர் ஒன்றிலிருந்து மூன்று நிமிடம் வரை நாக்கை வெளியில் நீட்டிக்கொண்டு இருப்பார்கள். அல்லது நாக்கை மேல் பல் வரிசை நடுவில் ஒட்ட வைத்து நாக்கின் கடைசி பகுதியில் (சிறுநாக்கு தொண்டைப்பகுதியில்)அழுத்தம் கொடுக்கலாம். அதன் பின் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீளமாக வெளியில் நீட்டிக்கொள்வார்கள். இதனால் அதிக பலன் கிடைக்கும். சிங்காசனத்தில் முழுப்பலன் அடைவது நாக்கை பலமாக, நீளமாக வெளியில் நீட்டுதலே ஆகும். நாக்கை மேல்நோக்கி தொண்டை குழி சேர்த்து ஒட்ட வைப்பது மிகுந்த பலன் உண்டாகும்.
          சிங்காசனத்தில் மூலபந்தம்(ஆசனவாயை மேல்நோக்கி சுருக்கி வைப்பது) போட்டு ஜாலந்தர் பந்தமும்(முகவாய் கட்டையை கழுத்துடன் ஒட்ட வைப்பது) போட்டாலும் நல்லது. சிலர் சிங்காசனத்தில் கைவிரல்களை சிங்கத்தின் கால் விரல் போல செய்து முழங்கால்களில் வைப்பார்கள்.

          மேலும் சிலர் முழங்கால்களில் நின்று முன்னால் குனிந்துகைவிரல்களை விரித்து பூமியில் வைப்பார்கள். இதனால் பலனில் பெரும் வித்தியாசமில்லை. முக்கியமாக நாக்கை வெளியில் நீட்டுவதால் காது, தொண்டை, தாடை ஆகியவை பலப்படுகின்றன. நாக்குக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. (தொடரும்)

Friday 28 November 2014

பகாசனம்


பகாசனமும் யோனிஸ்தானத்தில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அடி வயிறு இரண்டு புட்டம், தொடை,தொடையின் ஆரம்பப்பகுதி, ஜனனேந்திரியம்,நாடி,நரம்புகள் பலப்படும். வீரியம் காக்கப்படும். சொப்பனதோஷம் நீங்கும். பெண்களுக்கு இது அதிக பலன்களை தரும். வெள்ளைபடுதல், மாதவிலக்கு கஷ்டங்கள், அதிக உதிரபோக்கு முதலிய வியாதிகள் நீங்கும். மூல நோய் குணமாகும். பௌத்திரம் குணமாகும். பெண்களின் அழகு கூடும்.
செய்யும் விதி:
கீழே போர்வை அல்லது ஜமுக்காளம் விரித்து அதில் இரண்டு கால்களையும் நீட்டியபடி அமரவேண்டும். பின்பு முழங்கால்களை மடக்கி இரண்டு பாதங்களின் அடிப்பாகத்தையும் சேர்த்து குதி கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும். அதன்பின் இரண்டு கைகளால் இரண்டு குதிகாலை பிடித்து நாபியின் இடத்தில் கொண்டுபோய் வைக்க வேண்டும். சேர்ந்த இரண்டு பாதங்களும் ஜனனேந்திரியத்திர்க்கு  நேர்கோட்டில் பூமியில் வைக்க வேண்டும். மெதுவாக சுவாசத்தை நிரப்பவேண்டும். இரண்டு கைகளையும் முழங்கால்களில் வைத்து கொள்க. நெஞ்சை நிமிர்த்தி நேராக அமரவேண்டும். சக்திக்கு தகுந்தவாறு இருபது நொடியிலிருந்து ஒரு நிமிடம் வரை மூச்சை அடக்கி கொண்டு இருக்க வேண்டும். அதன்பின் மெதுவாக சுவாசத்தை விட வேண்டும். சற்று நேரம் சாதாரணமாக சுவாசிக்க வேண்டும். கஷ்டமாக இருந்தால் சாதாரணமாக உட்காரலாம். இவ்வாறு மூன்று அல்லது ஐந்து முறை ஆசனம் போடலாம். ஆரம்பத்தில் இந்த ஆசனம் போட கடினமாக இருக்கும். முயற்சி செய்து பயிற்சி செய்தால் சில நாட்களுக்கு பின் போட வரும். குதிகால்களை நாபியின் நேர் கோட்டில் சேர்த்து வைத்து பத்து நொடி வரை செய்து கிரமமாக நேரத்தை அதிகப்படுத்தலாம்.

          நான்கு முறை பகாசனம் செய்த பிறகு ஐந்தாவது முறை இவ்வாறு பிராணாயாமம் செய்யலாம். மூன்று நொடி சுவாசத்தை இழுத்து ஆறு நொடிவரை கும்பகம் செய்து(உள்ளே அடக்கி)மூன்று நொடியில் சுவாசத்தை வெளியே விடவேண்டும்.  இதை தாளபத்த பிராணாயாமத்துடன் செய்யலாம். அதாவது இதயத்துடிப்புடன் சேர்த்து மூன்று முறை சுவாசித்து ஆறுமுறை சுவாசக்காற்றை அடக்கி மூன்றுமுறை   (இதயம் துடிக்கும் நேரத்தில்) வெளியில் விடலாம் என்று யோகிகள் கூறுவார்கள். (இந்த ஆசனத்தை தக்க வழிகாட்டுதலுடன் செய்யவும்)(தொடரும்)

Wednesday 24 September 2014

குப்தாசனம்:

 

தேகத்தில் மறைவிடத்தை பாதுகாப்பதே குப்தாசனம் எனப்படுகிறது. குப்தாசனம் ஆண்,பெண் இருவருக்குமே ஏற்றது. சமமாக பலன் தரக்கூடியது. ஆண்களுக்கு உபஸ்த இந்திரியத்தில் சுத்த ரத்தம் கிடைக்கச்செய்கிறது. அதை பலப்படுத்துகிறது. பிரம்மச்சரியம் கடைபிடிக்க உதவியாக இருக்கிறது. வீரியத்தை பாதுகாக்கிறது. சீர் இல்லாத மாதவிலக்கு அல்லது மாதவிலக்கு சமயம் ஏற்படும் கஷ்டங்கள் அதிக இரத்தப்போக்கு ஆகியவை எல்லாம் குணமாகின்றன. கற்பப்பையும் சினைப்பையும் பலப்படுகின்றன. இதை பெண்களுக்கு ஏற்பட்ட வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
செய்யும் விதி:
கீழே ஜமுக்காளம் விரித்து அதில் நேராக அமர வேண்டும். இடது கால் பாதத்தை ஜனன உறுப்புக்கு கீழே வைக்க வேண்டும். காலை பூமியில் பதிய வைக்க வேண்டும். பாதத்தின் அடிப்பாகம் மேல்நோக்கி இருக்க வேண்டும். இரண்டு முழங்கால்களின் பாரம் பூமியில் இருக்க இடது கால் பாதம் வலது கால் தொடைக்குள் இருக்க வேண்டும். வலது குதிகால் ஆசனவாயை நன்கு மூடி அழுத்தம் கொடுக்க வேண்டும். தலை, கழுத்து, முதுக்குத்தண்டு  சமமாக நேர்கோட்டில் இருக்க வேண்டும். இரண்டு கைகளையும் முழங்கால்களில் வைத்துக்கொண்டு ஈஸ்வரனை தியானம் செய்யலாம். ஒரு நிமிஷத்திலிருந்து பிரதி தினமும் மூன்று நிமிஷம் வரை இந்த ஆசனம் செய்யலாம். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகநேரம்(அரைமணிநேரம்) செய்யலாம்.
இந்த ஆசனத்தில் மலத்துவாரத்தை குதையின் மூலத்தை குதிகால் அடைத்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஜனனேந்திரியத்திற்கு கீழேயும் அமுக்கப்படுகிறது. இதை பெண்கள் மிகவும் கவனமாக செய்யவேண்டும். ஜனன இந்திரியத்தில் அழுத்தாமல் குதஸ்தானமும் ஜனன இந்திரியத்தின் கீழே உள்ள இடமும் அமுக்கப்படவேண்டும். ஆசனத்தில் குதா துவாரத்திலும் ஜனன இந்திரியத்திற்கு கீழும் ரத்த ஓட்டம் தடுக்கப்பட்டு பின் ஆசனம் முடிந்தபின் சுத்த இரத்தம் பாயும். அந்தரங்க உறுப்புகள் பலப்படும். ஆசனம் முடிந்தபின் நிச்சயம் சவாசனம் போட வேண்டும். நன்கு ஓய்வு எடுத்த பின் எழுந்திருக்க வேண்டும்.

 தொடரும்
            

     

Tuesday 26 August 2014

பத்மாசனம்

 பத்மாசனம்:


 பூ மலர்ந்திருப்பது போல செய்வதே பத்மாசனம். இரண்டு கால் பாதங்களு 
தாமரை ம் தொடைகள் மீது வைத்திருக்க அடி பாகம் மேல் இருக்க தாமரை பூ மலர்ந்திருப்பது போல தோற்றமளிக்கும்.
          இந்த ஆசனத்தில் தேகத்தின் கீழ் பகுதி (இடுப்பு ) பலப்படும். முதுக்குத்தண்டு நேராக இருக்கும். யோகிகளுக்கு பிராணவாயு சுஷும்னா நாடி வழியே போகும். இதனால் அறிவு நன்றாக செயல்படும். சிந்தனா சக்தி விருத்தியாகும். இது தியானம் செய்ய வேண்டிய ஆசனம். ஆன்மீக பாதையில் துணை புரியும். ஜபமும் தியானமும் செய்யப்பயன்படுகிறது. பிரம்மச்சரியம் காக்கப்படுகிறது.
          இந்த ஆசனத்துடன் ஜாலந்தர் பந்தமும், மூல பந்தமும் செய்வார்கள். முகவாய்க்கட்டையை கழுத்துடன் ஓட்ட வைத்துக்கொள்வது ஜாலந்தர் பந்தம். மூலபந்தம் என்பது ஆசனவாயை சுருக்குவது. இதனால் அஜீரண கோளாறுகள் நீங்கும். வாதரோகமும், பேதியும் தடுக்கப்படும். இந்த ஆசனம் போட்டுக்கொண்டு உத்தித பத்மாசனம், பர்வதாசனம், ப்ரமராசனம் , தாடாசனம் எல்லாவற்றையும் செய்வார்கள். அதனால் சரீர தேகம் ஆரோக்கியம் பெருகும்.
          ஆண், பெண் முதல் பாலகர் அனைவரும் இதை செய்யலாம். இத்துடன் உட்யான பந்தம் செய்தால் (வயிற்றை ஏக்கி ஓட்டினார் போல செய்வது) அதிக பலன் கிட்டும். இந்த ஆசனம் போட்டு முடித்த பின் கால்களை சகஜ நிலைக்கு கொண்டுவரும்போது தேகத்தின் கீழ் அங்கங்களில் சுத்த இரத்தம் பாயும்.

:செய்முறை
இரண்டு கால்களையும் பரத்தி வைத்தபின் வலது பாதத்தை இடது தொடை மீதும், இடது பாதத்தை வலது தொடை மீதும் வைக்க வேண்டும். இரண்டு பாதங்களையும் தொடைகளில் நன்கு பதிய வைக்கவேண்டும். நாபியின் நேர் இரண்டு குதிகால்களும் தொடை ஆரம்பிக்கும் பகுதியில் நன்கு ஒட்டி வைக்க வேண்டும். பாதத்தின் அடிப்பாகம் மேல் இருக்க வேண்டும். குதிகால்கள் இரண்டும் சேர்ந்திருக்க வேண்டும். வலது புறங்கையை இடது உள்ளங்கையில் வைத்திருக்க குதி கால்கள் மேல் வைக்கலாம். அல்லது இரண்டு கைகளையும் முழங்கால்களில் வைத்துக்கொள்ளலாம். தொடைகளும் முழங்கால்களும் பூமியில் பதிந்து இருக்க வேண்டும். அதில் தளர்வாக (லூசாக) இருக்க கூடாது. முதுக்குத்தண்டு, கழுத்து, தலை , இடுப்பு எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்க பார்வை புருவத்தின் நடுவில் அல்லது மூக்கு நுனியில் இருக்க வேண்டும். அல்லது கண்களை மூடிக்கொண்டு புருவநடுவில் நோக்க வேண்டும். அல்லது எதிரில் தெய்வபடத்தையும் நோக்கலாம்.
          பத்மாசனம் ஒன்றிலிருந்த்து பத்து நிமிடம் வரை செய்யலாம். தியானம் செய்பவர்கள் அதற்கு மேலும் செய்வார்கள். கைகளை முழங்காலில்(சுலபமாக இருக்க) வைத்துக்கொள்வார்கள். எதையும் கஷ்டப்பட்டு செய்யக்கூடாது. பயிற்சி செய்து சுலபமாக செய்யலாம். கஷ்டப்பட்டு நெடுநேரம் வரை செய்யக்கூடாது. அதாவது வலி எடுக்கும்வரை செய்யக்கூடாது.
          கனமான சரீரம் உள்ளவர்கள் கால்களை தடிமனாக இருந்தால் இதை செய்ய முடியாவிட்டால் ஒரு கால் பாதத்தை மட்டும் தொடையில் வைத்துக்கொள்ளலாம். அப்போது அர்த்த பத்மாசனம் ஆகிறது. மற்றுமொரு காலை மடக்க முடிந்தவரை மடக்கி கொள்ளலாம். அர்த்த பத்மாசனம் செ(தொடரும்)
ய்பவர்கள் ஒருகாலை மாற்றி மாற்றி தொடையில் வைத்துக்கொள்வது அவசியம். அவ்வாறு இருக்கும்போது இரண்டு கால்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.

          இந்த ஆசனத்தில் முக வாய்க்கட்டையை கழுத்துடன் ஒட்ட வைத்துக்கொள்ளும் பயிற்சியால் தைராய்ட் வர வாய்ப்பில்லை. மூளை சுறுசுறுப்பாகிறது. இந்த ஆசனத்தில் வயிற்றை எக்கி ஒட்ட வைத்து ஆசனவாயை மேல்பக்கம் சுருக்கினால் (மூலபந்தம்) பெருங்குடல் நன்கு செயல்படும். செரிமானம் நன்கு ஏற்பட்டு மலச்சிக்கல் நீங்கும். 

Monday 25 August 2014

சுகாசனம்

சுகாசனம்:





உட்கார்ந்து செய்யும் ஆசனங்களில் சுகாசனம் சுலபமானது. எளிமையானது. ஸ்திரமாக,சுகமாக எந்த ஸிதிதியில் அமர்ந்தாலும் அது சுகாசனமாகிறது என்று பதஞ்சலி யோகம் கூறுகிறது. ஸ்திரமாக உட்காருவதற்கு சுகாசனமே மிகவும் சிறந்தது. மணிக்கணக்கில் கடவுள் வழிபாடுகளில் பஜனை, தியான சமாதி(ஆழ்நிலை தியானம்) ஆகியவை செய்யும்போது சுகாசனத்தில் அமர்வது சுலபமாகிறது. இதில் தேகம்,மனம்,பிராணன்,புலன்கள்,ஆகியவை அதிகம் சோர்வாவதில்லை. சரீரத்தின் கீழ் பகுதியும்,இடுப்பும் நரம்புகளும் உறுதிப்பட்டு பலப்படுகின்றன. முதுகுத்தண்டும் ஆரோக்கியமாகி பலப்படுகிறது. யோகிகளுக்கு சுஷுனா நாடி வழியாக பிராணவாயு சீராக போகும். தியானத்தில் மனம் ஒருமைப்படும். சஞ்சலம் அடையாது.
செய்யும் விதி:
கீழே ஒரு விரிப்பை விரித்துக்கொள்ள வேண்டும். நேராக அமர்ந்து வலது காலின் குதியை இடது தொடையின் மேல் இருக்கும்படி செய்யவேண்டும். இடது காலின் குதிகால் வலது தொடையின் அடியில் செருக வேண்டும். இரண்டு கைகளையும் இரண்டு முழங்கால்களில் வைக்க வேண்டும். சுவாசம் இயல்பாய் போய்க்கொண்டிருக்க வேண்டும். முதுகுத்தண்டும், கழுத்து, தலையும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். கண் பார்வை மூக்கு நுனியை பார்க்க வேண்டும். சரீரத்தை மிகவும் விறைப்பாக வைக்க வேண்டாம். சோர்வாக இருந்தால் கால்களை மாற்றி அமர்ந்து கொள்ளலாம்.
பூஜை, தியானம், போஜனம்  ஆகிய சந்தர்ப்பங்களில் இந்த ஆசனத்தை செய்யலாம். ஐந்து நிமிடத்திலிருந்து மூன்று மணிநேரம் வரை அமர்ந்து இருக்கலாம். ஜபம் செய்யும்போது மூன்று மணிநேரம் வரை காலை மாற்றாமல் சோர்வின்றி அமர முடிந்தால் இந்த ஆசனம் சித்தியாகிவிட்டது என்று யோகிகள் கூறுவார்கள்.
          சரீர ஆசனத்தை முன்னிட்டு இந்த ஆசனத்தை அவ்வளவு நீண்ட நேரம் செய்யத் தேவையில்லை. வசதிக்கு ஏற்றவாறு காலை மாற்றி மாற்றி செய்யலாம். ஆனால் முதுகுப்பகுதி நேராக இருப்பது அவசியம். மிகவும் விறைப்பாக இருக்க வேண்டாம். நாம் சுகமாக அமர்ந்துள்ளோம் என்று மனதை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்.

(தொடரும்)

Tuesday 19 August 2014

உத்தானபாதாசனம்






உத்தானபாதாசனம்:
கால்கள் இரண்டையும் தூக்குவதே உத்தானபாதாசனம் எனப்படுகிறது. கால்களை தூக்கிவைப்பதே முக்கியம். இதனால் வயிற்றில் இருக்கும் கேஸ் வாயுரூபமாக வெளியேறுகிறது. இடுப்பு பலப்படுகிறது. பசி எடுக்கிறது. மலச்சிக்கல் நீங்குகிறது. வயிற்று நரம்புகள் பலப்படுகின்றன. இரைப்பை நன்கு செயல்படும். வயிற்றில் கொழுப்பு இருக்காது. ஹிரனியா வராது. ஆண்,பெண் இருவருக்கும் சரிசமமான பலன் கிடைக்கிறது. இந்த ஆசனத்தை காலையில் எழுந்தவுடன் செய்யலாம். இதனால் கால்களின் ஜாயிண்ட் பகுதியும் நரம்புகளும் இடுப்பும் உறுதி படும். இதில் இருக்கும் அசுத்தங்கள் சிறுநீர் வழியாக வெளியே வரும். தேகத்தின் கீழ் இருக்கும் அங்கங்கள் உறுதியாகும்.
செய்முறை:                      
கீழே ஜமுக்காளத்தில் படுக்கவேண்டும். இரண்டு கைகளையும் தொடைகளின் பக்கம் ஓட்டினார் போல நேராக வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு கால்களும்,முழங்கால்,குதி,கால்பெருவிரல் எல்லாம் சேர்த்து வைத்துக்கொள்க. மூச்சை இழுத்து அடக்க வேண்டும். மெது-மெதுவாக இரண்டு கால்களையும் சேர்ந்தாற்போல் மேலே தூக்கி கீழே பூமி-விரிப்பிலிருத்து இரண்டு அடி மேல்தூக்கி ஸ்திரமாக வைக்க வேண்டும். பார்வை கால் பெருவிரல் மீது பதியவைக்க வேண்டும். எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் மேல் தூக்கி வைக்க வேண்டும். பத்து பதினைந்து நொடிகள் வரை அவசியம் வைக்க வேண்டும். பின்பு மூச்சை விட்டுக்கொண்டு மெதுவாக கால்களை கீழே வைக்க வேண்டும். ஐந்து அல்லது ஏழு முறை கால்களை தூக்கி உத்தான பாதாசனம் செய்தபின் கால்களை மெதுவாக கீழே வைத்தபின் கண்களைமூடி சவாசனம் செய்ய வேண்டும். எவ்வளவு நேரம் இந்த ஆசனம் செய்கிறோமோ அதன் பாதி நேரம் சவாசனத்தில் ஓய்வு எடுக்க வேண்டும்.
          இந்த ஆசனத்தை செய்யும் போது இரண்டு முறை ஒவ்வொரு அடியாக மேலே கொண்டுபோய் இரண்டடி உயரம் வைத்து அப்யாசம் செய்ய வேண்டும். இந்த ஆசனத்தில் இடது கால், வலது கால் மாறி மாறி தூக்கி செய்யலாம். இப்படி சுலபமாக செயலாம்.
          இந்த ஆசனத்தில் மூன்று அல்லது ஐந்து முறை அப்யாசம் செய்யும்போது ஒருநிமிடம் மூச்சை அடக்கி வைத்திருக்கும் வரை இரண்டு கால்களும் மேல் தூக்கி இருக்க வேண்டும். கால்களை மேல்தூக்கி வைத்திருக்கும்போது இரண்டும் சேர்ந்தே இருக்கவேண்டும் என்று கவனத்தில் இருக்க வேண்டும். இரண்டு கால்களையும் மெதுவாக மேல்நோக்கி போகவேண்டியது அவசியம். அப்போது தான் ஆசனத்தின் முழுப்பலனையும் அடையலாம். அதே போல மெதுவாக மந்தகதியுடன் கீழே கொண்டுவருவதும் அவசியம். கால்களில் நடுக்கம் இருக்க கூடாது. மன உறுதி அவசியம். கால்களை மேல்தூக்கி வைத்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்தி அப்யாசம் செய்ய வேண்டும்.


                           தொடரும்

Monday 18 August 2014

மத்ஸ்யாசனம்


மத்ஸ்யாசனம்:
மத்ஸ்யம் என்றால் மீன். மத்ஸ்யாசனம் போட்டு தண்ணீரில்(மல்லாக்க) நீந்தலாம். பத்மாசனத்தில் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இந்த ஆசனத்தில் கிடைக்கும். கழுத்து பகுதியில் கொழுப்பு சேராமல் இருக்கும். மார்பு நுரையீரல் பலப்படும். ஜலதோஷம்,மூச்சிரைப்பு, டான்சில் எல்லாம் இருக்காது. இந்த ஆசனத்தில் கழுத்து அழுத்தப்படுவதால் தாயிராட்,பைராதைராய்ட் வராமல் தடுக்கும். கேன்சரும் தடுக்கப்படும். அனாவசிய சுரப்பிகள் சுரக்காமல் உடலில் அசுத்தம் சேராமல் இருக்கும். வயிற்றுக்கோளாறுகள் நீங்கும். சிறுகுடல், பெருங்குடல் வியாதிகள் குணமாகும். ஆசனவாய் குழாய் நன்கு செயல்படுவதால் மலச்சிக்கல் நீங்கும். அபான வாயு சீராகும்.
செய்முறை:
தூய காற்றோட்டமான இடத்தில் கீழே விரிப்பு விரித்து அமரவேண்டும். வலது பாதம் இடது தொடையிலும், இடது பாதம் வலது தொடை மீதும் வைக்கவேண்டும். நன்கு ஒட்டினாற்போல் இருக்கவேண்டும். இரண்டு பாதங்களின் குதிகால்கள் நாபியின் நேராக அடிவயிற்றை ஒட்டி இருக்கவேண்டும். பின் மெதுவாக முதுகை கீழே வைத்து படுக்கவேண்டும். படக்கென்று படுக்க கூடாது. இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு தலைக்கு கீழே வைத்துக்கொள்க. தலையிலும் முழங்காலிலும் தேகத்தின் முழுப்பாரம் இருக்க தேகத்தின் நடுப்பகுதியை மேலே உயர்த்திக்கொள்க. இடுப்புப்பகுதி பூமியை தொடக்கூடாது. வயிற்றையும் மேல்நோக்கி எழச்செய்யவேண்டும்.
          மத்ஸ்யாசனத்தை தினமும் ஒன்றிலிருந்து மூன்று நிமிடம் வரை செய்யலாம். மெதுவாக நேரத்தை கூட்டிக்கொண்டு போகலாம். பின்பு பத்து பதினைந்து நிமிடம் வரை செய்யலாம். பத்து பதினைந்து நிமிடம் வரை செய்தால் நோய் குணமாவதற்கு நல்ல பலன் கிடைக்கும். இதை சர்வாங்காசனத்திற்கு பின் செய்தால் மிகவும் நல்லது. அல்லது ஹலாசனமும் கர்ணபீடாசனமும் செய்பவர்கள் மத்ஸ்யாசனம் அவசியம் செய்யலாம்.  சிலர் இரண்டு கைகளையும் தலைக்கு கீழ் வைத்துக்கொள்ளாமல் இரண்டு கைகளால் கால் பெருவிரல்களை பிடித்துக்கொள்வார்கள். மத்ஸ்யாசனத்தில் இதுவும் ஒரு வகையாகும். இந்த ஆசனத்தினால் பூஜங்களிலிருந்து கைகள் வரை மிகவும் உறுதியாகும். மத்ஸ்யாசனத்திற்கு பின்பு சவாசனம் அவசியம் செய்ய வேண்டும். சவாசனத்தில் உடல் அங்கங்களை தளர்வாக விட்டு கண்களை மூடி மெதுவாக மூச்சு விட்டுக்கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும். இதனால் இறுக்கம் போகும்.

          தடிமனான சரீரம் உள்ளவர்கள் பத்மாசனம் போட முடியாது. வெறும் சம்மணமிட்டு இந்த ஆசனத்தை பழக வேண்டும். ஒருமாதம் நன்கு பழகியபின் பத்மாசனம் போடவரும். ஆரம்பத்தில் இதை பதினைந்து நொடிகள் செய்யலாம். பலநாள் பயிற்சிக்கு பின்   பத்து நிமிடம் செய்யலாம். இந்த ஆசனத்தில் சுவாசம் இயல்பாக போகவேண்டும். பிராணாயாமம் தேவையில்லை.

தொடரும்

Tuesday 5 August 2014

சவாசனம்

சவாசனம்

சவம் போல சகல அங்கங்களும் அசைவற்று கிடப்பது தான் சவாசனம். இதை சரியான முறையில் செய்தால் சரீரத்திற்க்கு உறக்கத்தை கொடுத்து ஆரோக்கியம் பெறுவதை விட அதிக பலன்களை தரக்கூடியது. தூக்கமின்மையால் மனிதன் அவதிப்படுகிறான். சரீரமும் மனதும் சோர்வடையும்போது இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். யோகசாஸ்திரம் இதை உயர்வாகவும், லாபகரமாகவும் கூறி இருக்கிறது.
          சாந்தமாக படுத்திருந்து என்ன பலன் கிடைக்கப்போகிறது என்ற கேள்வி எழலாம். ஆனால் மனிதன் விழித்திருக்கும்போது பல வேலைகளை செய்கிறான். நடக்கும்போது, ஓடும்போது, உடற்பயிற்சியாகிறது. படிப்பது, யோசிப்பது, அலுவலகவேலை,வியாபாரம்,தொழில் முதலிய துறைகளில் மன
அழுத்தம் ஏற்படுகிறது. நரம்புகளில் இறுக்கம்,உணர்ச்சிகளில் வேகம் உண்டாகிறது. உடம்பு உஷ்ணம் ஆகிறது. ரத்தக்கொதிப்பு வருகிறது. சவாசனத்தால் நாடி நரம்புகளில் இறுக்கம், நரம்புதளர்ச்சி,அழிந்து உடம்பில் உஷ்ணம் குறைகிறது. இதயம் சீராக துடித்து ரத்த சுத்தி ஆகிறது.
          எலும்பு முறிவு ஏற்பட்டால் மருத்துவர் சொல்லும் ஆலோசனை என்னவென்றால் அந்த பகுதியை ஆடாமல் அசையாமல் வைத்திருப்பது அவசியம். ரத்தம் சீராக எல்லா அவயங்களிலும் பாய வேண்டும். அதனால் ஆசனம் செய்பவர்கள் சவாசனத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
           சவாசனத்தால் மனம் அமைதி அடைகிறது. சவாசனத்திற்க்கு பின் சரீரத்திற்க்கு அதிக சக்தி கிடைக்கிறது.இந்த ஆசனம் செய்யும்போது சீராக மூச்சு பயிற்சி செய்தால் நுரையீரலுக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்கும். இதய நோயிலிருந்து விடுபட இந்த ஆசனம் நன்கு உதவி செய்கிறது. ராமபானம் போல செயல்படுகிறது என்று கூறுகிறார்கள்.
செய்முறை:
கீழே ஜமுக்காளம் விரித்து அதில் நேராக மல்லாக்க படுக்க வேண்டும். இரண்டு கைகளையும் இடுப்புடன் சேர்த்து வைக்க வேண்டும். விரல்களை சேர்க்காமல் தளர்வாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொண்டு உடம்பு முழுவதையும் தளர்வாக வைத்துக்கொள்ள வேண்டும். மனதால் இவ்வாறு நினைக்க வேண்டும். எனது கை,கால்கள்,விரல்கள், முழங்கால்கள், தொடைகள்,கழுத்து,வயிறு எல்லாம் செயலற்று மரத்துப்போனது போல ஆகிவிட்டன. அங்கமெல்லாம் லூசாகிவிட்டன. தேகத்தில் எங்கும் இறுக்கமில்லை. நான் மிகவும் அமைதியாக இருக்கிறேன். (அச்சமயம் கவலைகளை மறந்து விட வேண்டும்) இயற்கை அன்னை மடியில் ஆனந்தமாக கிடக்கிறேன் என்று நினைக்க வேண்டும். மேலே,கீழே எங்கும் சாந்தி நிலவுகிறது. நிர்மலமாக தூய காற்றை சுவாசித்து எங்கும் தூய்மையை உணரவேண்டும். மொத்தத்தில் சுத்தமாக யோசிப்பதை விட்டுவிடுங்கள். இதனால் பயம்,கோபம், வருத்தம் போன்ற உணர்ச்சிகள் மறைந்து போகும். மனதில் அபூர்வ அமைதி வந்துவிடும். மனதை காலியாக வைத்துக்கொண்டால் தலைபாரம்,தலைவலி எல்லாம் காணாமல் போகும்.
          உறக்கநிலையில் மனம் சிந்திப்பதில்லை. அதனால் மனதுக்கும் தேகத்துக்கும் நல்ல ஓய்வு கிடைக்கிறது. சவாசனம் செய்யும்போது மனதை லேசாக வைத்துக்கொள்ள வேண்டும். மனதில் சிந்தனைகள் வருவதை தடுப்பது இயலாத காரியம் தான். அவ்வாறு இருப்பினும் தியானத்தில் இருப்பது போல பாவிக்க வேண்டும். தொடர்ந்து அப்யாசம் செய்தால் மனம் அமைதியடையும்.
          சில சமயம் சவாசனத்தில் தூங்கிவிடுவார்கள். அதனால் தீயபலன் எதுவும் இல்லையென்றாலும் நல்ல ஆரோக்கியம் கிடைப்பது போல பாவனை செய்து தேகத்தையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளவேண்டும். வெட்டவெளியிலிருந்து பிராணசக்தி நமக்கு கிடைப்பது போல நினைக்க வேண்டும்.
          சவாசனம் என்பது சோம்பலாக படுத்துக்கொண்டிருப்பது அல்ல. சரீரத்தை லேசாக்கிக்கொண்டு மனதையும் லேசாக்கிக்கொள்ளவேண்டும்.  அல்லது மனம் கனத்திருக்க கூடாது. இந்த ஆசனம் மூளையின் உஷ்ணத்தை தணித்து அழுத்தத்தை குறைத்து நன்கு செயல்பட செய்கிறது. அதனால் ரத்தத்திற்க்கு நல்ல ஆக்ஸிஜன் கிடைக்கிறது.
          நீங்கள் எந்த ஆசனம் செய்து முடித்தாலும் அதன் பாதிநேரம் சவாசனம் செய்தால் நன்மை கிடைக்கும். மூன்று நிமிடம் குறைந்தபட்சம் செய்ய வேண்டும். வேறு ஆசனம் செய்து முடித்தபின் பதினைந்து நிமிடம் கூட செய்யலாம். இந்த ஆசனத்தை பிரதானமாக வைத்து செய்யும்போது மன அழுத்தம், இதய நோய் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற அரைமணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக செய்யலாம். மேலும் தினமும் ஒரு நாளில் இரண்டு, மூன்று முறை அல்லது பல முறையும் செய்யலாம்.
          சோர்வு, படபடப்பு, பயம், சோகம், பொறாமை, துவேஷம் ஆகியவற்றாலும், நரம்பு தளர்ச்சியாலும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆசனத்தை செய்தால் உடல் உஷ்ணம் தணியும். மனமும் அமைதி அடையும். மேற்சொன்ன துர் குணங்களும் தீமைகளும் சீராக மூச்சு விடும்போது அல்லது இதயதுடிப்புடன் சேர்த்து கணக்கு வைத்து சுவாசப்பயிற்சி செய்யும்போது ஒழிந்து போகும். சவாசனத்தில் கால் பாதத்திலிருந்து தலையில் மூளை வரை செயலற்று உணர்வற்று இருப்பதை உணரவேண்டும். சுவாசத்தை சீராக்கினால் மனதில் குழப்பங்கள் நீங்கும். மூன்று வாரத்திற்கு பின் சுவாசத்தின் நல்ல பலன் கிடைக்கும். எதையும் அவசரமாக படபடப்புடன் செய்யக்கூடாது. ஆசனங்களை ஆர்வமுடனும்,சிரத்தை, பக்தியுடனும் செய்யவேண்டும்.
(தொடரும்)        


Monday 4 August 2014

கர்ண பீடாசனம்

கர்ண பீடாசனம்

கர்ணபீடாசனத்தில் இரண்டு முழங்கால்களால் இரண்டு காதுகளையும் சேர்த்து அமுக்கி வைக்க வேண்டும். அதனால் இதற்கு கர்ணபீடாசனம் என்ற பெயர் வந்தது. இதற்கு முன் சொன்ன ஆசனங்களின் பலன் இதர்க்கும் உண்டு. கூடுதலாக இருமல், டான்ஸில்,ஜலதோஷம்,தொண்டைக்கட்டி,மூச்சு இளைப்பு வராது. மேலும் காது வலி,காதில் சீல்  வடிதல் ஆகிய நோய்கள் குணமாகும்.
செய்முறை:
கால்களை சற்று பரத்தி வைத்து படுக்க வேண்டும். இடுப்புக்கு மேலே இரண்டு கால்களை தூக்கியபின் தலைக்கு பின் கொண்டுபோகவேண்டும். இரண்டு பாதங்களை பூமியில் வைக்க வேண்டும். கைகளை நேராக கீழே வைக்க வேண்டும். அதன்பின் முழங்கால்களை மெதுவாக தலைப்பக்கம் மடக்கவேண்டும்.அதன் பின் தோள்களுடன் சேர்க்க வேண்டும். காதில் அழுத்தம் கொடுத்து பூமியை தொட வேண்டும். முழங்கால்களில் இருந்து பாதம் வரை (தலையிலிருந்து) ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். பின்பு மெதுவாக சகஜநிலைக்கு வரவேண்டும். இதை மூன்று முறை செய்யலாம். ஆரம்பத்தில் இந்த ஆசனத்தில் இரண்டு கைகளால் இடுப்பை பிடித்துக்கொள்வதால் தவறு ஏதுமில்லை. ஆரம்பத்தில் பத்து அல்லது பதினைந்து நொடிகள் வரை செய்யலாம். ஐந்து முறை செய்தபின் அபயாசத்தால் நேரத்தை அதிகப்படுத்தி இரண்டு நிமிடம் செய்யலாம்.
          இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் படக்கென்று வேகமாக கால்களை உயர்த்தி பின்னுக்கு கொண்டுபோகக்கூடாது. அதேபோல் பின்னாலிருந்து எடுத்து கால்களை கீழே வைக்க கூடாது. அதனால் தீய பலன் ஏற்படும். இடுப்பில் வலி ஏற்படும். அல்லது இடுப்பு பிடித்துக்கொள்ளும். இதுவும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களுக்கு நல்லதல்ல. முறையாக சர்வாங்காசனம், ஹலாசனம்,அதன்பின் கர்ணபீடாசனம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.    
 (தொடரும்)


Tuesday 22 July 2014

ஹலாசனம்

ஹலாசனம் 

ஹலாசனம் கலப்பையை நினைவு படுத்தும் ஆசனமாகும். முதுகுதண்டின் இறுக்கத்தை போக்கும். மார்பும் முதுக்கும் பலப்படும். சுத்த இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். வாயு பிடிப்பு ஏற்படாது. வயிற்று உபாதைகள் நீங்கும். சிறுகுடல், பெருகுடல் ஈரல் ஆகியவற்றில் அழுத்தம் ஏற்படுவதால் நன்கு செரிமானம் ஏற்பட்டு மலச்சிக்கல் நீங்கும். தாய்ராய்ட் பைராதாய்ராய்ட் முதலிய உறுப்புகள் பலப்பட்டு மனதையும் அறிவையும்(மூளை சுறுசுறுப்பு)ஆரோக்கியமாக வைக்கும். குடல் இறக்கம் வராமல் தடுக்கும். வயிற்றிலும் இடுப்பிலும் தேவையில்லாத கொழுப்புக்கள் நீங்கி மெலிதாக்கும். சர்க்கரை வியாதி தொலையும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
செய்யும் விதி   
கீழே ஜமுக்காளம் விரித்து நேராக படுக்க வேண்டும். முழங்கால் குதிகால் தொடை எல்லாம் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் தொடைகளை ஒட்டி வைக்க வேண்டும். இரண்டு கைகளையும் பூமியில் ஸ்திரமாக வைத்துக்கொண்டு கால்களை அதே சேர்த்த நிலையில் மெதுவாக தூக்கி இடுப்பை 90 டிகிரி கோணத்தில் கொண்டு போனவுடன் கால்களை தலைக்கு முன் நேராக கொண்டுபோய் கால்பெருவிரல் பூமியில் பதியும்படி வைக்க வேண்டும். முழங்காலை மடக்காமல் நேராக வைக்க வேண்டும். முகவாய்க்கட்டை கழுத்துடன் ஒட்டி இருக்கவேண்டும். சிறிது நேரம் அதே நிலையில் இருக்க வேண்டும்.பின்பு கால்களை தூக்கி முதலில் இருந்தவாறு படுத்த நிலைக்கு வர வேண்டும். சற்று ஓய்வு எடுத்த பின் முடிந்த வரை மீண்டும் மீண்டும் இந்த ஆசனத்தை செய்வது நல்ல பலனை அளிக்கும். ஆரம்பத்தில் இதை 20 நொடிகள் வரை செய்யலாம். வாரத்திற்க்கு ஒருமுறை நேரத்தை கூட்டிக்கொண்டு போகலாம். பின் நான்கு நிமிடம் வரை செய்யலாம். அவசரப்பட்டு கால்களை எடுத்து தூக்குவது கூடாது. நரம்புகள் பிசகி விடும். ஆசனம் செய்யும்போது கைகளை இடுப்பில் வைத்துக்கொள்ளலாம். அதனால் சுலபமாக இந்த ஆசனம் வரும். மற்ற ஆசனங்களுடன் சேர்த்து செய்யும்போது நான்கு நிமிடத்திற்க்கு அதிகமாக இதை செய்யவேண்டாம். பெண்கள் அதிகநேரம் இதை செய்யவேண்டாம்.
          இந்த ஆசனத்தில் இரு கைகளையும் பின்னால் கொண்டுபோய் கால் பெருவிரல்களை மடக்கலாம். ஹலாசனத்துடன் சர்ப்பாசனம், சலபாசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்களை செய்யலாம். இந்த ஆசனத்தை உயர் இரத்த அழுத்தம் இதய நோய் உள்ளவர்கள் செய்யக்கூடாது. இந்த ஆசனத்தை சிறிது நேரம் செய்தாலும் சுவாசத்தை வெளியேற்றிவிட்டு வயிற்றை ஒட்டவைத்தும் ஆசனவாயை சுருக்கி செய்தால் நன்றாக பசியெடுக்கும். இது முடிந்தவுடன் சவாசனம் அவசியம் செய்யவேண்டும். அதனால் சுத்த இரத்தம் சீராக சகல அங்கங்களில் ஓடும்.
(தொடரும்)


Monday 21 July 2014

சர்வாங்காசனம்


சர்வாங்காசனம் தேகமெங்கும் உறுதியாக்குகிறது.இதில் முழு தேகத்தையும் மேல்நோக்கி வைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தில் மூளை,கழுத்து, இதயம் நலம் பெறுகின்றன. இதயம் சீராக இயங்குகிறது. அதாவது கால் பாதத்திலிருந்து ரத்த ஓட்டத்தை தலை வரை அனுப்பும் பழுவான வேலை குறைந்து இதயம் சுலபமாக துடிக்கிறது. அதனால் ஓய்வும் கிடைக்கிறது.
         இந்த ஆசனத்தால் நரைமுடி கறுப்பாகும். ஆறுமாதம் அப்யாசம்செய்தால் நிச்சயம் நரைமுடி கறுப்பாகும். கண் பார்வை தெளிவாகும். உடல் நடுக்கம், தலைவலி, ரத்த சோகை குணமாகும். ஞாபக சக்தி விருத்தியாகும். இந்த ஆசனத்தால் கழுத்தில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.அதில் சுத்த ரத்த ஓட்டம் நன்கு ஏற்படும். கழுத்து நரம்புகள் பலப்படும்.
          இந்த ஆசனத்தால் முதுகுத்தண்டு இறுக்கம் இல்லாமல் திட்டமாகும். சோர்வு நீங்கும்.மாபெரும் காரியங்களை செயலாற்ற திறமை உண்டாகும். முதுமையில் வரும் பலவீனம், சொப்பன தோஷம்,வீரிய தோஷம் எல்லாம் நீங்கும். பெண்களுக்கு கர்பப்பை கோளாறுகள் நீங்கும். ரத்த சுத்தி ஏற்படும். தோல் வியாதியும் குணமாகும். சிரசாசனத்திற்கு அடுத்தபடியாக இதன் பலன் கிடைக்கும். இதை முறையாக அப்யாசம் செய்தால் வயிற்று கோளாறுகள், ஈரல் நோய்கள் குணமாகும். மேலும் தொண்டைவலி(டான்சில்)கண்நோய், மலச்சிக்கல், தலைவலி, உடல் பலவீனம் எல்லாம் சரியாகும்.
ஆசனம் செய்யும் விதி:
கீழே ஜமுக்காளம் அல்லது கம்பளி போர்வையை விரித்துக்கொள்ளவேண்டும். அதில் நேராக படுக்கவேண்டும். இரண்டு பாதங்களை சேர்த்து வைத்துக்கொள்க. மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் தூக்கவேண்டும். மெல்ல மெல்ல மேல் தூக்கி இடுப்பில் தொண்ணூறு டிகிரி கொண்டு போக வேண்டும். நான்கு, ஐந்து வினாடிகள் மூச்சை அடக்கிய பின் இரண்டு கைகளால் இடுப்பை பிடித்து உடம்பை மேல்நோக்கி வைக்க வேண்டும். அச்சமயம் நெஞ்சுப்பகுதி முகவாய்க்கட்டையை ஸ்பரிசிக்க வேண்டும்.
          மேற்ச்சொன்ன நிலையில் மூச்சை அடக்கிக்கொண்டு இருபது நொடிகள் ஸ்திரமாக இருக்க வேண்டும். அச்சமயம் கழுத்திலிருந்து கால்கள் வரை நேர்கோடாக இருக்க வேண்டும்.  தேகத்தின் முழு பாரமும் கழுத்து தோள்பட்டை, கைகள் இவற்றில் இருக்க வேண்டும். பார்வை மூக்கு நுனியில் அல்லது பாதங்களின் பெருவிரலில் இருக்க வேண்டும். அச்சமயம் தேகமும் மனமும் ஆரோக்கியம், பலம் பெற்றிருப்பதாக நினைக்க வேண்டும். அதன் பின் மூச்சை விட்டுக்கொண்டு மெதுவாக கால்களை கீழே கொண்டு வந்து இடுப்பை பூமியில் வைத்து முன்பு போல இடுப்பிலிருந்து கால்களை தொண்ணூறு டிகிரிக்கு கொண்டு போக வேண்டும். கைகள் இரண்டையும் நீட்டி பூமியில் வைக்க வேண்டும்.மூன்று வினாடி அதே நிலையில் இருந்து கால்களை மெதுவாக பூமியில் நீட்டி வைக்க வேண்டும்.
          இந்த ஆசனம் செய்தவுடன் வேகமாக கால்களை கீழே கொண்டு வரக்கூடாது.அதனால் சுளுக்கு பிடிக்கும் அபாயம் உள்ளது. மெதுவாக கால்களையும்  உடம்பையும் மேல் நோக்கி தூக்க வேண்டும். அதே போல கீழே வைக்க வேண்டும். இந்த ஆசனத்தை மூன்று முறை செய்யலாம். இந்த ஆசனத்துடன் ஹலாசனமும் கர்ணபீடாசனமும் செய்ய விருப்பம் உள்ளவர்கள் சர்வாங்காசனத்தை ஒருமுறை மட்டும் செய்தால் போதும்.
          இந்த ஆசனத்தை ஒரு நிமிடத்திலிருந்து அதிகமாக செய்ய விருப்பம் உள்ளவர்கள் பிரணாயாமத்துடன் செய்ய தேவையில்லை. வேறு எந்த ஆசனத்தையும் செய்ய விரும்பாதவர்கள் இதை அரைமணி நேரம் வரை கூட செய்யலாம். ஆனால் ஆரம்பித்தவுடன் அதிக நேரம் செய்ய வேண்டாம். இருபது நொடியிலிருந்து ஆரம்பித்து இருபது நொடிகளாக கூட்டிக்கொண்டே செல்ல வேண்டும்.
          இந்த ஆசனம் செய்யும்போது கைகளை பூமியில் நீட்டிக்கூட வைத்துக்கொள்ளலாம். ஆனால் நெஞ்சோடு கழுத்து ஒட்டி இடுப்பு அதே நிலையில் தூக்கி இருக்க வேண்டும். இந்த நிலையை நன்கு பழக்கப்பட்டவர்களே செய்ய முடியும்.
                     சர்வாங்காசனத்தை செய்து கொண்டிருக்கும் போது நன்கு பழக்கப்பட்டபின் ஒவ்வொரு காலையும் மாறி மாறி முன்னால் நீட்டி மேல் கொண்டு போய் பயிற்சியும் செய்வார்கள். அல்லது இரண்டு கால்களையும் மாறி மாறி தலைக்கு பின்னால் கொண்டு போய் பூமியில் வைத்து அதன் பின் மேல்நோக்கி வைப்பார்கள்.
                        சர்வாங்காசனத்தை கர்ணபீடாசனம் போல செய்வார்கள். அதாவது வலது முழங்கால் வலது காதை ஸ்பரிசித்து பாதத்தை பூமியில் வைப்பார்கள். இந்த நிலை கர்ணபீடாசனம் போல வரும்.

          இந்த  சர்வாங்காசனத்தை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் பலவீன இதயம் உள்ளவர்களும் செய்யக்கூடாது. இந்த ஆசனம் செய்து முடித்தபின் அவசியம் சவாசனம் செய்யவேண்டும். அப்போது தான் நல்ல பலன் கிடைக்கும். 

Sunday 13 April 2014

யோகாசனங்கள்

                       ஸ்ரீ கணேசாய நமஹ
யோகாசனங்கள்
யோகாசனம் என்றால் என்ன? யோகாசனம் ஏன் செய்ய வேண்டும்?
நம் தேகத்தினுள் இருக்கப்படும் இயற்கை சக்தியை நன்கு ஆராய்ந்து புரிந்து கொண்டு உடம்பின் இயக்கத்தை சமச்சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதற்கு யோகாசனங்கள் உருவாக்கபட்டிருக்கின்றன.
          செல்வம், சொத்து, வசதியான வாழ்க்கை, ருசியான உணவு, மற்ற இன்பம் தரும் விஷயங்கள் எல்லாம் மனதிற்கும் தேகத்திற்கும் நிச்சயம் சந்தோசம் உண்டாகும். ஆனால் அவை நிரந்தரமானவை அல்ல.தண்டால்,பஸ்கி,ஓடுவது, பந்தாடுவது ஆகிய உடற்பயிற்சிகளும் தற்காலிகமாக உடம்பை உறுதியாக பலமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. ஆனால் யோகாசனங்கள் வெறும் சரீரத்துடன் தொடர்பு கொண்டவை மட்டும்அல்லாமல் மனதையும் உறுதிப்படுத்துகின்றன. யோகாசங்களின் தாக்கம் சூட்சும சரீரம் வரை சென்று ஆத்மாவையும் தொடுகிறது. அதனால் மனதிற்கும் தேகத்திற்கும் நிரந்திரமாக சுகமும் ஆரோக்கியமும் கிடைக்கின்றன.
          பரம்பொருள் பரமாத்மாவை மனம் ஒன்றி தியானிப்பதற்கு யோகாசனங்கள் சிறந்த அஸ்திவாரமாக அமைகின்றன. “ஸ்திரசுகமாசனம்” என்று பதஞ்சலியோகம் கூறுகிறது. அதாவது ஸ்திரமாக சுகமாக ஒரு நிலையில் சரீரத்தை வைத்துக்கொள்வதே ஆசனம். ஆசனத்தால் அலை பாயும் மனம் ஒரு நிலைப்படுகிறது.

          இயற்கையாகவே மனிதனின் தேகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அது போல் விலங்கு, பறவைகள் ஆகிய ஜீவராசிகள் நோய் வாய்ப்படுவதில்லை. ஆரம்பத்தில் மருந்துகள் கண்டுபிடிக்காத காலத்திலும் மனிதன் ஆரோக்கியமாக தான் வாழ்ந்து வந்தான். காலப்போக்கில் மருந்துகள் குறைவாக எடுத்துக்கொள்ளப்பட்டன. இன்றைய யுகத்தில் மனிதன் மிக அதிகமாக மருந்துகள் எடுத்துக்கொள்கிறான்.அதனால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. உண்மையில் இயற்கையாகவே மனிதன் தேகத்தில் நோயை குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. அதனால் உட்கொள்ளப்படும் மருந்துகள் நோயை குணப்படுத்த உதவி தான் செய்கின்றன. அதனால் மருந்தில்லாமல் பல சந்தர்பங்களில் நோய் தாமாகவே சரியாகிவிட்டது என்று சொல்கிறோம். உடற்கூறு சாஸ்த்திரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் யோகாசனங்கள் மூலமாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அதனால் நோய் குணமாகிறது. சில மூச்சு பயிற்சிகளாலும் நோய்கள் குணமாகின்றன. யோகாசனப்பயிற்சிகளாலும் மூச்சு பயிற்சிகளாலும் நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.தேகத்தின் உள் உறுப்புகள் ஆரோக்கியம் பெறுகின்றன.நான் இதனுடன் ஆசனங்கள் வகைகள்,செய்முறைகள், பயன்கள் அனைத்தையும் கொடுத்துள்ளேன். சிறந்த ஒரு வழிகாட்டி உதவியுடன் தம் சரீரத்திற்கு ஏற்றவாறு ஆசனத்தை தேர்ந்தெடுத்து செய்யவும். (தொடரும்)