Tuesday 5 August 2014

சவாசனம்

சவாசனம்

சவம் போல சகல அங்கங்களும் அசைவற்று கிடப்பது தான் சவாசனம். இதை சரியான முறையில் செய்தால் சரீரத்திற்க்கு உறக்கத்தை கொடுத்து ஆரோக்கியம் பெறுவதை விட அதிக பலன்களை தரக்கூடியது. தூக்கமின்மையால் மனிதன் அவதிப்படுகிறான். சரீரமும் மனதும் சோர்வடையும்போது இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். யோகசாஸ்திரம் இதை உயர்வாகவும், லாபகரமாகவும் கூறி இருக்கிறது.
          சாந்தமாக படுத்திருந்து என்ன பலன் கிடைக்கப்போகிறது என்ற கேள்வி எழலாம். ஆனால் மனிதன் விழித்திருக்கும்போது பல வேலைகளை செய்கிறான். நடக்கும்போது, ஓடும்போது, உடற்பயிற்சியாகிறது. படிப்பது, யோசிப்பது, அலுவலகவேலை,வியாபாரம்,தொழில் முதலிய துறைகளில் மன
அழுத்தம் ஏற்படுகிறது. நரம்புகளில் இறுக்கம்,உணர்ச்சிகளில் வேகம் உண்டாகிறது. உடம்பு உஷ்ணம் ஆகிறது. ரத்தக்கொதிப்பு வருகிறது. சவாசனத்தால் நாடி நரம்புகளில் இறுக்கம், நரம்புதளர்ச்சி,அழிந்து உடம்பில் உஷ்ணம் குறைகிறது. இதயம் சீராக துடித்து ரத்த சுத்தி ஆகிறது.
          எலும்பு முறிவு ஏற்பட்டால் மருத்துவர் சொல்லும் ஆலோசனை என்னவென்றால் அந்த பகுதியை ஆடாமல் அசையாமல் வைத்திருப்பது அவசியம். ரத்தம் சீராக எல்லா அவயங்களிலும் பாய வேண்டும். அதனால் ஆசனம் செய்பவர்கள் சவாசனத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
           சவாசனத்தால் மனம் அமைதி அடைகிறது. சவாசனத்திற்க்கு பின் சரீரத்திற்க்கு அதிக சக்தி கிடைக்கிறது.இந்த ஆசனம் செய்யும்போது சீராக மூச்சு பயிற்சி செய்தால் நுரையீரலுக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்கும். இதய நோயிலிருந்து விடுபட இந்த ஆசனம் நன்கு உதவி செய்கிறது. ராமபானம் போல செயல்படுகிறது என்று கூறுகிறார்கள்.
செய்முறை:
கீழே ஜமுக்காளம் விரித்து அதில் நேராக மல்லாக்க படுக்க வேண்டும். இரண்டு கைகளையும் இடுப்புடன் சேர்த்து வைக்க வேண்டும். விரல்களை சேர்க்காமல் தளர்வாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொண்டு உடம்பு முழுவதையும் தளர்வாக வைத்துக்கொள்ள வேண்டும். மனதால் இவ்வாறு நினைக்க வேண்டும். எனது கை,கால்கள்,விரல்கள், முழங்கால்கள், தொடைகள்,கழுத்து,வயிறு எல்லாம் செயலற்று மரத்துப்போனது போல ஆகிவிட்டன. அங்கமெல்லாம் லூசாகிவிட்டன. தேகத்தில் எங்கும் இறுக்கமில்லை. நான் மிகவும் அமைதியாக இருக்கிறேன். (அச்சமயம் கவலைகளை மறந்து விட வேண்டும்) இயற்கை அன்னை மடியில் ஆனந்தமாக கிடக்கிறேன் என்று நினைக்க வேண்டும். மேலே,கீழே எங்கும் சாந்தி நிலவுகிறது. நிர்மலமாக தூய காற்றை சுவாசித்து எங்கும் தூய்மையை உணரவேண்டும். மொத்தத்தில் சுத்தமாக யோசிப்பதை விட்டுவிடுங்கள். இதனால் பயம்,கோபம், வருத்தம் போன்ற உணர்ச்சிகள் மறைந்து போகும். மனதில் அபூர்வ அமைதி வந்துவிடும். மனதை காலியாக வைத்துக்கொண்டால் தலைபாரம்,தலைவலி எல்லாம் காணாமல் போகும்.
          உறக்கநிலையில் மனம் சிந்திப்பதில்லை. அதனால் மனதுக்கும் தேகத்துக்கும் நல்ல ஓய்வு கிடைக்கிறது. சவாசனம் செய்யும்போது மனதை லேசாக வைத்துக்கொள்ள வேண்டும். மனதில் சிந்தனைகள் வருவதை தடுப்பது இயலாத காரியம் தான். அவ்வாறு இருப்பினும் தியானத்தில் இருப்பது போல பாவிக்க வேண்டும். தொடர்ந்து அப்யாசம் செய்தால் மனம் அமைதியடையும்.
          சில சமயம் சவாசனத்தில் தூங்கிவிடுவார்கள். அதனால் தீயபலன் எதுவும் இல்லையென்றாலும் நல்ல ஆரோக்கியம் கிடைப்பது போல பாவனை செய்து தேகத்தையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளவேண்டும். வெட்டவெளியிலிருந்து பிராணசக்தி நமக்கு கிடைப்பது போல நினைக்க வேண்டும்.
          சவாசனம் என்பது சோம்பலாக படுத்துக்கொண்டிருப்பது அல்ல. சரீரத்தை லேசாக்கிக்கொண்டு மனதையும் லேசாக்கிக்கொள்ளவேண்டும்.  அல்லது மனம் கனத்திருக்க கூடாது. இந்த ஆசனம் மூளையின் உஷ்ணத்தை தணித்து அழுத்தத்தை குறைத்து நன்கு செயல்பட செய்கிறது. அதனால் ரத்தத்திற்க்கு நல்ல ஆக்ஸிஜன் கிடைக்கிறது.
          நீங்கள் எந்த ஆசனம் செய்து முடித்தாலும் அதன் பாதிநேரம் சவாசனம் செய்தால் நன்மை கிடைக்கும். மூன்று நிமிடம் குறைந்தபட்சம் செய்ய வேண்டும். வேறு ஆசனம் செய்து முடித்தபின் பதினைந்து நிமிடம் கூட செய்யலாம். இந்த ஆசனத்தை பிரதானமாக வைத்து செய்யும்போது மன அழுத்தம், இதய நோய் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற அரைமணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக செய்யலாம். மேலும் தினமும் ஒரு நாளில் இரண்டு, மூன்று முறை அல்லது பல முறையும் செய்யலாம்.
          சோர்வு, படபடப்பு, பயம், சோகம், பொறாமை, துவேஷம் ஆகியவற்றாலும், நரம்பு தளர்ச்சியாலும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆசனத்தை செய்தால் உடல் உஷ்ணம் தணியும். மனமும் அமைதி அடையும். மேற்சொன்ன துர் குணங்களும் தீமைகளும் சீராக மூச்சு விடும்போது அல்லது இதயதுடிப்புடன் சேர்த்து கணக்கு வைத்து சுவாசப்பயிற்சி செய்யும்போது ஒழிந்து போகும். சவாசனத்தில் கால் பாதத்திலிருந்து தலையில் மூளை வரை செயலற்று உணர்வற்று இருப்பதை உணரவேண்டும். சுவாசத்தை சீராக்கினால் மனதில் குழப்பங்கள் நீங்கும். மூன்று வாரத்திற்கு பின் சுவாசத்தின் நல்ல பலன் கிடைக்கும். எதையும் அவசரமாக படபடப்புடன் செய்யக்கூடாது. ஆசனங்களை ஆர்வமுடனும்,சிரத்தை, பக்தியுடனும் செய்யவேண்டும்.
(தொடரும்)        


No comments:

Post a Comment