Saturday 31 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 50

"யதஸ்ததீயா:"
பக்தர்களின் ஜாதி வித்தியாசமோ மற்ற ஏற்ற தாழ்வுகளோ ஏன் பார்க்ககூடாது?ஏனென்றால் அவர்கள் இறைவனின் அடியார்கள்.பகவானுக்கு சொந்தமானவர்கள்.
"வாதோ நாவலம்ப்ய : "
பக்தியோக சாதகர்கள் வாத விவாதங்களில் ஈடுபட கூடாது.அதற்க்கு அவசியமும் இல்லை.தாம் பகவானை பக்தி செய்வதிலேயே, பஜனை செய்வதிலேயே பொழுதை போக்க வேண்டுமே அன்றி வாத விவாதங்களில் ஈடுபட்டு பொன்னான நேரத்தை வீணாக்க கூடாது.
          உன் வாதம் சரியில்லை.நான் சொல்வது தான் சரி என்று நாத்திக வாதம் அல்லது பிற மனிதர்கள் கருத்துக்களை முறியடித்து தர்க்க வாதங்களை வளர்க்க கூடாது.பகவானின் பிரேமை பக்தியை மறந்து வேறு பல விசயங்களில் சிக்கிக்கொள்ள கூடாது.
          தர்க்கம் செய்யும்போது இரு தரப்பினரும் தன் கருத்துக்களை நிலை நாட்ட பிடிவாதமாகவே இருப்பார்கள்.இறுதியில் சண்டையாக கூட மாறலாம்.
"தர்க்கா பிரதிஸ்தாத் " என்று பிரம்மா சூத்திரம் கூறுகிறது.
           விசிச்டாத்வைத கருத்துக்களை பிரதானமாக கொண்டு எழுதிய ராமானுஜா சாரியார் பக்திக்கு தர்க்கவாதத்திற்கு இடமில்லை என்று பாஷ்யம் எழுதியுள்ளார்.கடோபநிசத் கூறுகிறது.
"நைஷா தர்கேன மதிராபனேயா"
தர்க்க வாதத்தால் பிரம்ம தத்துவத்தை புரிய வைக்க முடியாது.இந்த சத்திய தத்துவம் தூய சித்தம் படைத்த சாத்வீக மனிதனுக்கு தாமாகவே உணரப்படுகிறது.
          தர்க்க வாதம் செய்து சாஸ்திர தத்துவங்கள் அறியப்படலாம் தான்.ஆனால் அதை குருவிடம் சந்தேகத்தை தீர்த்துக்கொள்வதற்காக தர்க்க ரீதியாக அணுகலாம்.அதில் குற்றமில்லை.
          பிற மனிதரோடு பிடிவாதமாக ஒருவர் கருத்தை ஒருவர் வலியுறுத்த வாதம் செய்யும் போது கோபம் வரும். ஒருவரை ஒருவர் திட்டிக்கொல்வார்கள்.பகை என்ற தீ பெரிதாக வளர்ந்து கை கலப்பில் முடியும்.தவிர்க்க முடியாத வாதம் செய்யும் சந்தர்பம் ஏற்பட்டாலும் அதை சுமுகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும்.எதிராளி மிக பிடிவாதக்காரனாக இருந்தால் வாதத்தை தவிர்த்து விட வேண்டும்.
          அவர்கள் கருத்து தன் பக்திக்கு, வழிபாட்டிற்கு எதிராக சந்தேகப்படும்படி இருந்தால் அவர்களுடன் தொடர்பு கொள்ள கூடாது.வார்த்தைகளை வளர்க்க கூடாது.தனது கருத்தை புகழ கூடாது.வாதம் செய்யும் நோக்கம் கொண்டு பேசக்கூடாது.பிறர் குற்றங்களை சுட்டிக்காட்டி அவர் மனம் புண் படும்படி பேசக்கூடாது.தன் கருத்தை மதிக்காதவர்களிடம், ஒப்புக்கொள்ளாதவர்களிடம்தன் கருத்தை திணிப்பதற்காக அவர்களின் கருத்தை வெட்டிவிட்டு அழுத்தமாக பேசக்கூடாது.ஏனெனில் அப்படி பேசினால் எதிர் வாதம் செய்பவர்கள் எதையும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.ஆனால் சிரத்தையுடன் கேள்வி கேட்கப்படும் போது நிச்சயம் பகவத் விசயங்களை பற்றி கூற வேண்டும்.பிறரை கேலி செய்வது போல பேசக்கூடாது.பக்தியில் இருக்கும் நம்பிக்கையை தகர்க்க கூடாது. தானும் கடைத்தேற்றி பிறரையும் கடைத்தேற்றவேண்டும். என்ற எண்ணம் இருக்க வேண்டும். பக்தியில் நன்மை பயக்கும் சொற்களை இனிமையாக அன்பாக கூற வேண்டும்.
           தர்க்க வாதங்கள் நிச்சயமாக பகவத் பிரேமையை அளிக்காது.இறைவனடி சேர்க்காது.ஞானத்தையும் உண்டாக்காது.தர்க்கவாதம் நடக்கும் இடத்தில அகந்தை,துவேசம்,கோபம்,பகை,இம்சை எல்லாம் கூட்டம் கூடி அமர்ந்துவிடும்.
"பாஹூல்யாவகாசாதநியதத்வாச்ச "
வாத விவாதங்கள் செய்துகொண்டே இருந்தால் அவை நீண்டு கொண்டே போகும்.தத்தம் கருத்துக்களை நிலை நாட்ட வார்த்தை ஜாலங்கள் சிக்கலை ஏற்படுத்தும்.மேலும் தர்க்க வாதத்தால் எந்த பயனும் இல்லை.தர்க்க வாதம் செய்து சித்தாந்தத்தை நிலை நாட்டி வென்று விட்டாலும் பலனில்லை.பேசுவது என்பது எதுவும் நடைமுறைக்கு பயன்படாது.
பேசுவதை சுலபமாக பேசலாம்.வாழ்கையில் உண்மையை கடைப்பிடிப்பதே சரியான அணுகுமுறையாகும்.வாழ்கையில் சூதின்றி பகவானை தொழுவது சிரத்தையுடன் திருநாமங்களை ஜபம், பஜனை செய்வது மேலான கடமையாகும்.(தொடரும்)

Friday 30 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 49

"நாஸ்தி தேஷு ஜாதிவித்யா ரூபகுல தனக்ரியாதி பேத:" 
மேற்சொன்னவாறு பிறந்த அனன்ய பக்தர்கள் எவராகவும் இருக்கலாம். அவருக்கென்ற அடையாளமும் இருக்காது.பக்தி யோகத்தில் பக்தன் பகவான் மீது பிரேமை செலுத்தும் தகுதி பெற்றவனாக மட்டும் தான் இருப்பான்.மற்ற எந்த தகுதியும் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை.என்று கூறுகிறார்கள்.
          பக்தர்களிடம் ஜாதி வித்தியாசம் பார்க்ககூடாது.பக்தனின் ஜாதி,கல்வித்தகுதி,அழகு,குலம்,பணவசதி,அவன் செய்யும் தொழில் அனைத்தையும் வைத்து அவனை வித்தியாசப்படுத்த கூடாது.தாழ்வாக நினைக்க கூடாது.இதை வைஷ்ணவ கிரந்தத்தில் கூறியிருக்கிறார்கள்.
         வைஷ்ணவ பக்தி கிரந்தத்தில் பகவானுக்கு செய்யும் அபசாரங்கள் 64 உள்ளன.அவற்றில் ஒரு அபசாரம் பக்தர்களில் ஜாதி வித்தியாசம் பார்ப்பது.
ஏழை என்று புறக்கணிப்பது.அவன் செய்யும் தொழிலை இழிவு படுத்தி பேசுவது.பிரேமையால் பகவானையே வசப்படுத்திய பக்தன் மரியாதைக்கு உரியவன்.
        குகன் உயர்ந்த குலத்தவன் அல்ல.கொக்கை எரித்த முனிவனுக்கு, மாமிசம் விற்று பிழைக்கும் குலத்தொழிலை கொண்ட தர்ம வியாதன் தர்மோபதேசம் செய்தான்.வேடுவ குல பெண்ணான சபரி ஸ்ரீ ராமரிடம் அதீத பக்தி கொண்டவர்.அரக்க குலத்தில் பிறந்த பிரகலாதன்,வானரன் ஹனுமான், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த விதுரன்,படிப்பறிவு இல்லாத கோபிகை பெண்கள்,இவர்கள் அனைவரும் எந்த தகுதியும் இல்லாதவர்களானாலும் உள்ளத்தில் பகவானின் பிரேமை பக்தி அபரிதமாக இருந்தது.
         வைஷ்ணவ சம்பிரதாயங்களில் 64 அபசாரங்களையும் ஜாதி வித்யாசமில்லா எல்லா மக்களும் குற்றங்கள் போல தவிர்க்க வேண்டும்.
அபசாரங்கள் சிலவற்றை கீழே குறிப்பிட்டுள்ளோம்:
          வேதங்களை மதிக்காமல் இருப்பது,பகவானின் ஓவியம் அல்லது விக்ரஹத்தை கல்,மண் என்று நினைப்பது,குருவை அவமதிப்பது,நைவேதம் செய்யப்பட்ட பிரசாதத்தை சாப்பிடும் தின்பண்டமாக நினைப்பது,தீர்த்தத்தை சாதாரண நீராக நினைப்பது,துளசி அல்லது வில்வ இலையை சாதாரண இலையாக மதிப்பது,பகவானின் திருவிளையாடல்களை மனிதர்கள் வாழும் முறைக்கு ஒப்பிட்டு கேவலமாக பேசுவது,பகவான் இருக்கிறாரா இல்லையா என்று விவாதிப்பது,அவர் அருளை சந்தேகிப்பது,கிராம தெய்வங்களை அவமதிப்பது,நிந்திப்பது,சாதுக்கள் மீது குற்றம் காண்பது,குலதெய்வத்தை அற்பமாக நினைப்பது,கோவிலில் அல்லது வீட்டில் பகவான் மூர்த்திக்கு முன்னால் காலை நீட்டுவது,கோவிலுக்குள் கையில் கம்பை எடுத்துக்கொண்டு போவது,கோவிலில் பெரிய மனிதர்களை கண்டால் அவர்களை வணங்குவது,கோவிலில் பகவானுக்கு முன்னால் உரக்க சிரிப்பது,அர்ச்சகரிடம் கோபம் கொள்வது,பெண்கள் தலை கேசத்தை முடியாமல் கேசத்தை விரித்துக்கொண்டு போவது,கோவிலுக்கு போதை வஸ்துக்களை உட்கொண்டு அல்லது மாமிசம் சாப்பிட்டு விட்டு போவது,கோவிலில் பிற மனிதர்களிடம் தர்க்க வாதம் செய்வது,பொய் பேசுவது,பகவான் துணை செய்வதில்லை என்று கூறுவது,பிரசாத்தை விற்பது,கோவிலில் பிற மனிதர்களுடன் சண்டை போடுவது அழுக்கு ஆடை அணிந்து தலை ஸ்நானம் செய்யாமல் கோவிலுக்குள் போவது
 கோவிலில் தமக்கு பிரியமுள்ள நபரை பார்த்து நீங்கள் தான் கடவுள் என்று கூறி காலில் விழுந்து வணங்குவது,கை கால்களை கழுவிக்கொள்ளாமல் போவது,கைகளை வீசி நடந்து கொண்டு பிரகாரம் சுற்றுவது,ஆகியவை மன்னிக்க முடியாத அபசாரங்கள்.(தொடரும்)           

Thursday 29 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 48

                                                                     
தீய பழக்க வழக்கங்களால் துந்துகாரி என்றொருவன் மகா பாவியாகிவிட்டான்.ஒருநாள் தீயவர்கள் ஒன்று சேர்ந்து அவனை கொலை செய்து விட்டனர்.அவனது வீட்டிலேயே அவனை கொலை செய்து அவனை அங்கேயே புதைத்தும் விட்டனர்.அதன் விளைவாக துந்துகாரி பேயாக மாறிவிட்டான்.கோகர்ணன் என்ற தம்பி துந்துகாரிக்கு இருந்தான்.அவன் மிகவும் நல்லவன்.கடவுள் பக்தி கொண்டவன்.தம்பி தீர்த்தயாத்திரை சென்ற போது அண்ணனை கொலை செய்தார்கள்.தம்பி வீட்டிற்கு வந்து உறங்கிக்கொண்டிருக்கும் போது துந்துகாரி பேய் உருவில் தோன்றி தம்பியை எழுப்பினான்.தான் கொலையுண்டு துர்கதி அடைந்ததை கூறி அழுதான்.கோகர்ணன் மனம் வருந்தி அண்ணனை தூய்மைபடுத்தி கடைத்தேற என்ன வழி என்று யோசித்தான்.பின்பு பெரியோர்களையும் மகான்களையும் சந்தித்து பேசினான்.அவர்கள் பாகவத புராண கதையை நீ படிக்கவேண்டும், மக்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களையும் நீ கேட்கவைக்க வேண்டும்,உன் அண்ணனும் பாகவத கதையை கேட்க வேண்டும் என்றார்கள்.கோகர்ணன் ஒரு விழா போல எடுத்து பாகவத கதையை பாராயணம் செய்தான்.அதன் விளைவாக துந்துகாரி பேய் உருவம் துறந்து தூய்மை அடைந்தான்.இறுதியில் தேவ உருவம் பெற்று சுவர்க்கம் சென்றான்.துந்துகாரி கோகர்ணனை நோக்கி உன்னைப்போல பக்தர்கள் பாவிகளையும் தூய்மை படுத்தி கடைத்தேற்றுவார்கள் என்று கூறி சென்றான்.
         பாகவத புராணத்தில் உத்தவர் கோபிகை பெண்களின் கிருஷ்ண பக்தியை கண்டு மிகவும் வியந்து போனார்கள்.-கல்வி அறிவு இல்லாதவர்களாக, தவம் ,ஞானம் பெற்று மேதாவிகளாக இல்லாதவர்களாக இந்த கோபியர்கள் இருந்தும் வேதங்கள் தேடும் பரம்பொருள் ஸ்ரீ கிருஷ்ணன் மீது ஒப்பற்ற பிரேமை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.கிருஷ்ண பிரேமை அடைவதற்காக பந்த பாசங்களை துறந்து விட்டார்கள்.நான் பகவானிடம் இதை மட்டும் வேண்டிக்கொள்கிறேன்.இந்த பிருந்தாவனத்தில் நான் புல்லாகவோ, செடிகொடியாகவோ அல்லது புதராகவோ ஜென்மமெடுத்து இந்த கோபியரின் பாத தூசி என் மீது பட்டு பெரும் பேரு பெற்றவனாகிவிட வேண்டும்.என்று கூறுகிறார்.
"தன்மயா:"
பஜனை அல்லது தியானம் செய்யும் பக்தர்கள் தாம் எங்கே இருக்கிறோம்,என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறார்கள்.அனன்ய பக்தர்கள் இறைவனோடு ஒன்றிவிடுகிரர்கள். அதுபோல பக்தனும் மனம்,அறிவு,நான் என்ற தன்மை,தேகம் எல்லாம் பகவானுக்கே அர்ப்பணம் செய்து பகவானுடன் ஒன்றி விடுவான்.பகவானுக்கும் அவனுக்கும் பேதமற்று போவதால் அவன் இருக்கும் இடமும் சூழ்நிலையும் தூய்மையாகிறது.
         இப்படிப்பட்ட பக்தர்களால் பகவானும் அவரது திருநாமங்களும் பகவத் பக்தியும் மகா மகிமையுடன் விளங்குகின்றன.
"மோதந்தே பிதரோ ந்ருத்யந்தி தேவதா: ஸநாதா சேயம் பூர்பவதி " 
இவ்வுலகில் பிறவியெடுத்து உண்மையான அனன்ய பக்தர்களாகிவிட்டால் அவனது முன்னோர்கள் மிகவும் சந்தோசப்படுவார்கள்.அவன் இவ்வுலகிற்கு வந்து மக்களை நல்வழிப்படுத்தி தர்மம் தழைத்தோங்க செய்வான், என்று தேவர்கள் மகிழ்ச்சியால் நடனமாடுவார்கள்.அந்த மகான் அவதரிப்பதால் பாவங்களால் துன்பப்பட்ட பூமி பாவங்களை அழிக்க வந்த தலைவன் என்று மகிழ்ந்து போகுமாம்.
          அந்த மகான் மக்களை நல்வழிப்படுத்தி பாவங்களை குறைப்பான்.அவன் செயல்களும் புகழத்தக்க மாபெரும் சேவையாக இருக்கும்.மக்களின் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.யாகங்கள் நடக்கும்.பித்ரு கடன்கள் மீது சிரத்தை ஏற்படும்.அவனை பின்பற்றும் பக்தர்கள் திருப்பணிகள் பல செய்து பக்தி மார்க்கத்தை பரப்புவார்கள்.
          இங்கு பாகவத புராணத்தில் கூறப்பட்டதை கவனத்தில் கொண்டுவர வேண்டும்.
          பிரகலாதன் ஸ்ரீ நரசிம்ம பகவானை நோக்கி கூறுகிறான்."தேவாதி தேவனே என்ன வரம் வேண்டும் என்று கேட்டீர்கள்?ஜகத்குருவான தாங்கள் தேஜஸையும் ஐஸ்வர்யதயும் என்தந்தை ஆத்திரமடைந்து இழிவாக பேசினார்.தம்பியை கொன்றவன் நாராயணன் என்று தவறாக நினைத்து அவர் தங்கள் பக்தனான என்னை இம்சித்து கொடுமைகள் பல செய்தார். மேலும் மன்னிக்க முடியாத குற்றங்கள் பலவற்றை செய்து இருக்கிறார்.தயாநிதியே பாவியான என் தந்தை பயங்கர பாவத்தில் இருந்து விடுபட வேண்டும்.இதுவே நான் கேட்கும் வரம்".உண்மையில் எனக்காக நரசிம்மாவதாரம் எடுத்து தங்களது பார்வை பட்டவுடனேயே என் தந்தை பரமாத்மாவாகிவிட்டார்.
நரசிம்மபகவான் கூறுகிறார்."அப்பனே உன் தந்தையும், முன்னோர்களான பித்ருக்களும் முன்னும் பின்னும் முப்பத்தி ஏழு தலைமுறைகள் சேர்ந்து எனது வைகுண்ட பதவியை அடைந்து விட்டார்கள்.ஏனெனில் பக்தனான நீ இந்த குலத்தில் வந்து பிறந்தாய் அல்லவா?  உன்போன்ற சாந்தமான பக்தர்கள் சமநோக்குடையவர்களாக   இருக்குமிடம் தூய்மையாகிவிடும்.பாலை நிலமும் பசுமையாகிவிடும். நீ இன்றில் இருந்து பக்தர்களுக்கெல்லாம் உதாரணமாக பேசப்படுவாய்.தந்தைக்கு இனி நீ இறுதி சடங்குகளை செய்வாயாக.உன் போன்ற மகனை பெற்றவன் என் அங்கங்கள் ,ஸ்பரிசம் பட்டு தூய்மையாகிவிட்டான் என்று கூறினார்.(தொடரும்)

Wednesday 28 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 47

தாச பாவ பக்தியாக இருந்தாலும் பதி பக்தியாக இருந்தாலும் தன் நாயகனை தவிர எவரையும் அறிய மாட்டார்கள்.அவர்கள் மனம்,தேகம்,செல்வம்,அறிவு,வாழ்வு ,உயிர், தர்மம்,மோட்சம், நற்கதி அனைத்தும் எங்கள் இறைவன் தான் என்று நினைப்பார்கள்.
"பக்தா ஏகாந்தினோ முக்யா:"
          அனன்ய பக்தர்களே முதலிடம் பெறுவார்கள்.முன் சொன்ன சூத்திரத்தில் சிறந்த பக்தி லட்சணத்தை கூறியிருந்தார்கள்.அந்த சிறந்த பக்தி அதாவது வேறு இடத்தில வைக்காத அன்பு கலந்த பக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
          அனன்ய பக்தியானது ஒப்பற்றது.தமக்கு சொந்தமான செல்வம்,குடும்பம் எல்லாம் பரமாத்மாவுக்கே சொந்தமாகி விடுகிறது.பக்தனோ பரமனின் சேவகன் போல உலகில் செயல்படுகிறான்.எதையும் பரமாத்மா சொரூபமாகவே காண்கிறான்.
"கண்டாவரோத ரோமாஞசாச்ரூபி: பரஸ்பரம் லபமானா: பாவயந்தி குலானிப்ருதிவீம் ச "
பகவானின் திருவிளையாடல்களை பாராயணம் செய்யும் போது, கேட்கும் போது அல்லது பஜனை பாடும் போது அவரை நினைத்து நடனமாடும்போது பரவசத்தின் உன்னத நிலைக்கு போய்விடுவார்கள்.அச்சமயம் பாடும்போது தொண்டை அடைக்கும்.ஆனந்த கண்ணீர் பெருகும்போது ரோமாஞ்சனம் உண்டாகும்.இப்படிப்பட்ட அனன்ய பக்தர்கள் முன் வந்த தலைமுறைகளையும்  வரப்போகும் தலைமுறைகளையும் புனிதப்படுதுவார்கள். பூமியை சுற்றுச்சூழலை புனிதப்படுதுவார்கள்.லயிப்புடன் பஜனை செய்யும் போது சுற்றுச்சூழலில் உள்ள தீய சக்திகள் பறந்தோடிவிடும்.கலகமும் கேடும் ஒழிந்து மனிதர்கள் மனதில் சாந்தி கிடைக்கும்.இப்படிப்பட்ட தூய பக்தர்களின் அருகாமை கிடைப்பதே பெரும் பாக்கியம்.
"தீர்த்தீ குர்வந்தி தீர்த்தானி ஸுகர்மீ குர்வந்தி கர்மாணி ஸச்சாஸ்த்ரீ குர்வந்தி சாஸ்த்ரானி "
புண்ணிய க்ஷேத்திரங்களையும் அவர்கள் புன்னியமாக்குவார்கள்.பாவச்செயல்களால் பாவியானவர்களையும் தரிசன,ஸ்பரிசங்களால் அல்லது பாத சேவையால் புனிதப்படுதுவார்கள்.அவர்கள் செய்யும் செயல்கள் மற்றவருக்கு எடுத்துக்காட்டாக மாறுகின்றன.பாவிகளும் புநிதப்படுதப்படுகிறார்கள் என்பதற்கு பின்வரும் கதை கூறப்பட்டுள்ளது.(தொடரும்)

Tuesday 27 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 46

இவ்வாறு பக்தர்கள் காமம் என்ற ஆசையை இறைவனை நோக்கி திருப்பி விட்டு ஆசைகளை வெல்கிறார்கள்.கோபத்தை பகவானிடம் எப்படி காட்டுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
"தகவிலை தகவிலையே நீ கண்ணா 
தடமுலை புனர்தோறும் ,புணர்ச்சிக்கு ஆராச்-
சுக வெள்ளம் விசும்பு இறந்து,அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து,அது கனவு என நீங்கி ஆங்கே 
அக உயிர் அகம்-அகம் தோறும் உள் புக்கு 
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ!
மிக மிக இனி உன்னைப்பிரிவை ஆமால் 
வீவ நின் பசு-நிறை மேய்க்கப் போக்கே " 
          கண்ணா நீ மிகக் கொடியவன்.உன்னோடு அனுபவித்த இன்ப வெள்ளம் வானை கடந்து என் அறிவை அழித்து கனவை போல மறந்து போயிற்று.என் உயிருக்குள் புகுந்து பொறுக்க முடியாத ஆசை நிலையில் என்னை வீழ்த்துகிறது.நீ இந்த பசுக்களை மேய்க்கப்போவது ஒழிக.காமம்,குரோதம்,சிநேகம்,ஐக்கியம்,நட்பு ஆகிய அனைத்து பாவங்களையும் நிதமும் ஹரியில் செலுத்தினால் இறைவனோடு இரண்டற கலந்து விடும் யோகம் வரும்.
          சூத்திரத்தில் கூறிய கர்வம் என்ற பாவத்தை பகவான் மீது செலுத்த வேண்டுமானால் அந்த உன்னத நிலையை ராதை தான் அடைந்திருந்தாள். அவ்வாறு இதுவரை எந்த பக்தனாலும் அடைய முடியவில்லை.இனி அடையபோவதுமில்லை. ராதை பிரேமை மிகுதியால் கண்ணனோடு கோபம் கொண்டு தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தாள். இது பக்தியின் அதி உச்சகட்ட நிலையாகும்.
"த்ரி ரூப பங்க பூர்வகம் நித்யதாஸ நித்யகாந்த
பஜனாத்மகம் வா,ப்ரேமைவ கார்யம் ப்ரேமைகார்யம்" 
இறைவனை பிரேமை பாவத்துடன் பூஜிப்பதே சிறந்தது என்று கூறுகிறார்கள்.அதாவது எஜமானன்-சேவகன் -சேவை இம்மூன்றையும் துறந்து அல்லது மூன்றையும் கடந்து தாஸ பாவம் அடைய வேண்டும்.அல்லது அன்பானாக நினைக்கவேண்டும்.மாணிக்கவாசகரும் ஆழ்வாரும் பெண் பாவம் அடைந்து இறைவனை தொழுதார்கள்.மாணிக்கவாசகர் இறைவனான பசுபதி ஒருவரே ஆண்,மற்ற ஜீவாத்மாக்கள் எல்லாம் பெண்ணாக இருப்பவைகள்,ஆதலால் ஆத்மாக்கள் எல்லாம் பதியான பசுபதியே நாட வேண்டும்.என்றார்.இங்கு ஸ்ரீ நாரதபெருமான் அதையே காந்தா பாவம் என்று கூறுகிறார்.(தொடரும்)

Monday 26 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 45

"அபிமான தம்பாதிகம் த்யாஜ்யம் "
கர்வமும் பகட்டும் துறக்கவேண்டும். இதற்க்கு முன் சொன்ன சூத்திரத்தில் காமகுரோத லோபங்களையும் நாத்திகத்தையும் துறக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.இந்த நான்கையும் துறந்து விட்டால் யாம் புலன்களை ஜெயித்து விட்டோம் என்று கர்வப்பட்டு கொண்டு இருக்க கூடாது.என்று கூறுகிறார்கள். கர்வம் அறிவுக்கண்ணை மறைக்கும்.அனைவரிடமும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.பணிவு கர்வத்தை அழிக்கும். 
          தன்னிடம் இல்லாததை பிறர் புகழ வேண்டும் என்று பகட்டாக காண்பிக்க கூடாது.பணம் புகழுக்காகதான் பெரிய தர்மாத்மாவாகவும் பெரிய பக்தனாகவும் படம் காட்டிக்கொண்டு பகவானுக்கு தொண்டு செய்வது போல பாவனை செய்து கொண்டு திரிய கூடாது.பிறருக்காக   அல்லது அவர்கள் கவனத்தை திருப்புவதற்காக நாம் செய்யும் செயல்கள் நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும்.கற்ற கல்வியும் அறிவும்,வித்தையும் மேம்படாது.நேர்மையும் பணிவும் பக்திக்கு சாதகமாக இருக்கும்.புராண காலத்தில் அசுரர்கள், இனி நம்மை எவராலும் வெல்ல முடியாததென்று எண்ணி வீழ்ச்சி அடைந்தார்கள்.அதனால் இதை அசுரத்தன்மை வாய்ந்த துர்குனமாக கர்வத்தை கூறி இருக்கிறார்கள்.
"ததர்பிதாகிலாசார: ஸன் காமக்ரோதாபிமானாதிகம் தன்மின்னேவ கரணீயம் "   
அனைத்து கர்மங்களையும் பகவானுக்கு சமர்ப்பணம் செய்த பின் என்ன மீதமிருக்கிறது?தன்னில் இருக்கும் காம குரோத அபிமாங்கலால் தீங்கு வராமல் அவரே தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.என்று அவர் பொறுப்பிலேயே விட்டு விட வேண்டும்.ஆனால் பக்குவப்பட்ட உண்மையான பக்தர்களிடம் காமக்குரோத அபிமாங்கள் பகை எல்லாம் துளியும் இருக்காது.அவர்களோ பிரேமை பக்தியில் தன்னையே 
கரைத்துக்கொள்வார்கள். அவர்கள் கௌரவம்,மானம்,வேகம்,குலம்,நற்குனசீலம்,தேகம்,செல்வம்,போகம்,மோட்சம் அனைத்தும் பகவானிடம் ஆரம்பத்திலேயே சமர்ப்பித்து விட்டார்கள்.பகவான் மட்டும் விரும்பக்கூடிய பொருளாக இருக்கும்.முனிவர்களும் இப்படிப்பட்ட பக்தர்களை பாராட்டுவார்கள்.
          பகவானின் திருமேனி அழகு அலாதியானது.அது அணிந்த ஆபரனங்களுக்கும் அழகை சேர்க்ககூடியது. மூவுலகங்களையும் மயக்கும் ஜெகன் மோகன ரூபம் சௌந்தர்யமும் இனிமையும் அமிர்தமும் கலந்த பரமானந்த பேரழகு.அவரது இனிய இசை குளிர் நிலவு போல சாந்தியை தரும்.அந்த ஜோதியை கண்டு தவத்தால் சித்தி பெற்று தெய்வத்தன்மை அடைந்த மகாமுனிவர்களும் தன் நிலை இழந்த வார்த்தைகளால் அளிக்க முடியாத ஒரு பரவச நிலை அடைகிறார்கள்.(தொடரும்)

Sunday 25 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 44


  1. பெண்கள் மீது அதிக  மோகம் கொண்டவர்களுக்கு வேறு விஷயங்கள் பிடிக்காது.பெண்களை பற்றி பேசவும், பார்க்கவும்,படிக்கவும் தான் பிடிக்கும்.அங்கு இறைவனை பற்றி சிந்திக்க இடமிருக்காது.பக்தி யோகத்திற்கு இது மாபெரும் தடை என்றே நினைக்க வேண்டும்.பெண்களை பற்றி காதல் பாட்டுக்கள் பாடவும் நாடகங்கள் பார்க்கவும் தவிர்க்க வேண்டும்.உண்மையான பக்தனுக்கு இயற்கையாகவே இவற்றுள் ஈடுபாடு இருக்காது.கிரஹஸ்த ஆசிரமத்தில் இருந்தாலும் அற வழியில் சென்று இல்லறம் நடத்த வேண்டும்.அதாவது மனைவியுடன் சேர்ந்து இறை வழிபாடு நடத்த வேண்டும்.தான தர்மங்கள் செய்ய வேண்டும்.மனைவியுடன் சேர்ந்து பக்தி பஜனைகளில் கலந்து கொள்ள வேண்டும்.மனைவியும் உலக ஆசைகளை துறந்து கணவனோடு சேர்ந்து பகவானின் அருளை நாட வேண்டும்.பொருளாசையும் பொன்னாசையும் துறந்து இறைவன் அருளை பெற ஒத்துழைக்கவேண்டும்.
  2. பேராசைக்கோ ஓர் அளவும் இல்லை.எல்லையும் இல்லை.பணம்,பதவி,மோகம் கொண்டவர்கள் என்றும திருப்தியுடன் வாழ மாட்டார்கள்.மேலும் மேலும் உயரே போக விரும்புவார்கள்.ஆசையில் தேவராஜன் இந்திரனுக்கும் திருப்தியில்லை என்று கூறுவார்கள்.ஆசை கண்களை மறைக்க அநியாய வழியிலும் பணம் சம்பாதிக்க துணிவார்கள்.தனவந்தர்களிடம் நட்பு வைத்து அவர்களது சுகபோக வாழ்கையை கண்டும்,சமுதாயத்தில் அவர்களின் செல்வாக்கை கண்டும் நாம் மதி மயங்கி விடக்கூடாது.செல்வ சுக போகம் கேவலம் தூசிக்கு சமமாக நினைக்க வேண்டும்.அது இக லோகத்தில் முடிந்து விடும்.இறை அருள் தான் என்றும் நம்மை தொடரும்.இதை நினைத்து மனதை ஜெயிக்க வேண்டும்.அதற்க்கு மாறாக பணத்திற்கு பின்னால் நாம் அடிமை போல ஓடிக்கொண்டிருந்தால் எப்போது தான் இறைஅருளை பெற ஓடுவதை நிறுத்தி திரும்பி வருவோம்?ஆயுள் முடிந்தவுடன் செல்வ சுகங்களும் இத்துடன் முடிந்து விடும்.சாரமற்ற இவ்வுலக வாழ்வில் என்ன மேன்மையடைந்தோம்? எதை தான் சாதித்தோம்?
  3. பிரத்யட்சமாக காண்பது இந்த உலக வாழ்க்கை தான்.அதை விட்டு விட்டு காணாத ஒரு பொருளுக்காக ,வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய விசயங்களை துறந்து நேரத்தையும் வாழ்கையையும் வீணாக்குவதா, என்று நாத்திகம் பேசுபவர்களோடு கண்டிப்பாக நட்பு கொள்ள கூடாது.கடன் வாங்கியாவது நாவுக்கு ருசியாக நெய் சோறு உண்டு பட்சணங்கள் சாப்பிட்டு இன்பமாக வாழ்வாயாக,உயிரோடு இருக்கும் வரை பிறரை ஏமாற்றி இன்பமாக வாழ்வாயாக.இறந்த பின் யார் உன்னை என்ன செய்யா முடியும்?பரலோகம்,இறைவன் என்பதெல்லாம் சுத்த பொய், என்று நாத்திகம் பேசுவார்கள்.இவர்களுடன் உறவு கொண்டால் நாமும் கலங்கபட்டவர்கள் போல மாறி விடுவோம்.அது நம்மை அதோ கதிக்கு கொண்டு போய் விடும். மேற்சொன்ன மற்ற தீமைகளுக்கு அடிமையாகிவிட்டாலும் ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்டு பக்தியில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.ஆனால் நாத்திகனாக மாறிவிட்டாலோ மீண்டும் ஆத்திகனாக மாறினால் தான் இறைவன் பக்தி வழிக்கு வர முடியும்.இதுவும் பெரும் ஆபத்தானது.
  4. பொதுவாக உண்மையான பக்தன் எவரையும் விரோதியாக கருத மாட்டான்.ஏனெனில் அவன் பகையை துறந்தவன்.அவ்வாறு இருக்க சகல உயிர்களையும் பரமாத்மாவின் மக்களாகவே பார்பான். இந்த உன்னத நிலை அடையாத பக்தன் தமக்கு எதிராக செயல்படும் அல்லது துவேசிக்கும் நபரிடம் பதிலுக்கு அதே போல பகை பாராட்ட கூடாது.அவனை பற்றி விமர்சிக்கவும் கூடாது.ஏனெனில் பகையும் கோபமும் துவேசமும் பழி வாங்கும் என்னத்தை உண்டாக்குகிறது.பக்தனோ பகவானை அன்பொழுக ஆராதிப்பவன்.தானும் அன்பு மயமானவன்.ஆதலால் அனைவரிடமும் கூடுமானவரை மனதில் அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.அன்பும் நட்பான எண்ணங்களும் மனதிலிருந்து வெளியே பரவும்போது எதிர் திசையிலிருந்து வரும் கோபமும் பகையும் தணிந்து போகும்.அதற்க்கு மாறாக அதே போல நாமும் கோபமும் துவேசமும் வளர்த்து எண்ணங்கள் மூலமாக பரவசெய்தால் இரண்டும் மோதிக்கொண்டு வெடிக்கும்.இவ்வாறு பக்தி யோகத்தில் இருப்பவன் காம,குரோத,லோபங்களை ஜெயிக்க வேண்டும்.(தொடரும்)

Saturday 24 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 43

ரிஷி முனிவர்கள் வியாசர்,நாரதர்,சுகதேவர் ஆகியோர் உருவமற்ற பரப்ரம்மத்தை உணர்ந்தவர்கள்.தியான சமாதியில் பரமானந்த பேரின்பத்தை அடைந்தவர்கள்.ஆயினும் இவர்களில் பகவானின் தெய்வீக குணங்கள் ,தெய்வீக இசை,ஆகியவற்றில் தன்னை இழந்து விட்டார்கள்.ஏனெனில் பகவானின் திருமேனி மாயையோடு கூடியது அல்ல.இது தெய்வீக ஜோதி சொரூபமானது.பகவத் கீதையில் அர்ச்சுனன் வியந்து தரிசித்த ரூபம்.இதை சொல்லிலடங்கா பரம சாந்தியாக ஆனந்த கடலாக வர்ணித்தாலும் நிறைவாகாது.அந்த பரஞ்சோதியின் பிரேமையும் அப்படிபட்டதேயாகும்.
" லோகஹானௌ சிந்தா ந கார்யா நிவேதி தாத்ம லோகவேதத்வாத் "
பக்தர்கள் உலகியல் விசயங்களின் லாப நஷ்டங்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.ஏனெனில் சிந்தை எல்லாம் சிவமயமாக அல்லது ஹரி மயமாக இருக்கும் போது அங்கு வேறு விசயங்களுக்கு இடமேது? உலகியல் கடமைகளையும் வேத சாஸ்திரங்களை பின்பற்றி வாழும் முறைகளையும் முன்பே அவன் அர்ப்பணம் செய்து விடுகிறான்.பக்தியின் உச்சகட்டத்திற்கு போன பின் தன்னையும் தன் கடமைகளையும் கூட மறந்து விடுகிறான்.மற்ற சிந்தனைகள் அவனை விட்டு தாமாகவே விடைபெற்று விடுகின்றன.தன்னையே அர்ப்பணித்து விட்ட பின் அவனை சார்ந்த மனைவி, மக்கள்,சொத்து சுகங்கள் எல்லாம் தாமாக பகவான் திருவடியில் சேர்ந்து விடுகின்றன.அவன் உயிர் வாழ்வதற்காக மட்டும் பட்டற்று கடமைகளை செய்கிறான்.
"ந ததஸித்தௌ லோகவ்யவ ஹாரோ ஹேய :
 கிந்து பலத்யாகஸ்தத் ஸாதனம் ச கார்யமேவ " 
மேற்சொன்னவாறு உலகியல் விசயங்களும் வேத சாஸ்திர கடமைகளும் பக்தியின் மேல்நிலையில் தாமாக விடுபடாவிட்டால் கடமைகளை அவசியம்
செயலாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.நல்ல கர்மங்களின் புண்ணிய பலனை ஆண்டவனுக்கே கொடுத்து விட வேண்டும்.பகவானுக்காகவே சேவை செய்வது போல பிற உயிர்களுக்கு நன்மை செய்து வாழ வேண்டும். அவ்வாறு செய்தால் தற்பெருமை ஒழியும். பக்தியின் ஆரம்பபடியில் இருப்பவர்கள் தீமையிலிருந்து விலகி சுயநலமின்றி தேவ பூஜைகளையும் பித்ரு கடனையும் சாஸ்திரங்கள் கூறியபடி செய்வார்கள்.
"ஸ்திரிதன நாஸ்திக வைரி சரித்ரம் நச்ரவணியம்"
முன் சொன்ன சூத்திரங்களில் உலகில் வாழ்வதற்கு உதவும் கடமைகளை, பக்தியை ஒரு சாக்காக வைத்து துறக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்கள்.இருப்பினும் பக்தி மார்க்கத்தில் செல்பவர்கள் சில தீமைகளில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
          பெண் முஹம பிடித்த நபர்களுடன் நட்பு கொள்ள கூடாது.பேராசை பட்டு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்க கூடாது.நாத்திகம் பேசும் நபர்களிடம் சகவாசம் கூடாது.தமக்கு எதிராக செயல்படும் நபர்களிடம் தீராத பகையும் வேண்டாம்.அவர்களை பற்றி புறம் பேசவும் வேண்டாம்.அவர்கள் வரலாற்றினை கேட்கவும் வேண்டாம்.
          ஆண்களை வசியபடுத்தும் சுபாவமுடைய பெண்களிடம் நட்பு கொள்வது மரணத்தை தழுவுவதற்கு சமமானது.ஏனென்றால் யானைகூட்டத்திற்க்கு தலைமை தாங்கும் யானையை மற்ற யானைகள் வந்து அதனுடன் சண்டையிட்டு வீழ்த்திவிடும். அதனால் தன் ஆத்மாவை மேன்மை அடைய செய்து பக்தி யோக வழியை பின் பற்றி வாழ விரும்புகிறவன் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.(தொடரும்)


Friday 23 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 42

                                                              

ஒரு கோடை காலத்தில் காட்டில் உள்ள யானை கூட்டம் அதிக வெப்பத்தால் துன்புற்று நீர் நிலையை நோக்கி சென்றது.ஓர் இடத்தில ஒரு பெரிய ஏரியை கண்டு மிக உற்சாகமாக யானைகள் நீருக்குள் இறங்கி தண்ணீர் பருகி தாமரை தண்டுகளை பிடுங்கி தின்றன.இஷ்டம் போல நீராடின.ஏரி நீரை யானைகள் கலக்கி கொண்டிருக்கும் போது திடீரென்று நீருக்கடியில் ஒரு முதலை வந்து யானை தலைவன் காலை பற்றிக்கொண்டது.நிலை தடுமாறிய யானை தலைவன் பலம் கொண்டு காலை இழுத்தது.மற்ற யானைகளும் யானை தலைவனை இழுத்தன.முதலிடம் சிக்கிகொண்ட யானையை பார்த்து மற்ற யானைகள் பிளிறின.அவைகளின் முயற்சி பலிக்காமல் போனது.நெடுநாள் கழித்து முதளையிடம் சிக்கிய யானை தலைவனை விட்டு விட்டு யானை கூட்டம் அனைத்தும் சென்று விட்டன.முதலைக்கோ நீரில் பலம் கூடிக்கொண்டே இருந்தது.
           யானைக்கும் முதலைக்கும் நடந்த இழுபறி போராட்டம் வருடக்கணக்கில் தொடர்ந்தது.யானை பலவீனமடைய தொடங்கியது.அச்சமயம் யானைக்கு கர்மவினைபயனாக முன்ஜென்ம நினைவு வந்தது.நாம் இந்த பிறவியில் வீழ்ந்து ஆசா பாசங்களில் சிக்குண்டு ஆண்டவனை மறந்தோமே என்று நினைத்தது.சரண் அடையும் அடியாட்களை காப்பாற்றும் இயல்புடைய ஸ்ரீ நாராயணர் தாம் எம்மை காப்பாற்ற வேண்டும் அவரே யம பயம் போக்கி பக்தருக்கு நற்கதி அளிப்பார் என்று நினைத்து ஆதிமூலமே ஸ்ரீ நாராயணா என்னை காத்தருள்வீர் பெருமானே இந்த தாவர ஜங்கமம் அடங்கிய வையகமும் வானகமும் காக்கும் பரம் பொருளே என்மீது தயை புரிய வேண்டும் என்று பகவானை அழைத்து. சர்வசக்தி படைத்த விஷ்ணு பகவானுக்கு யானையின் பிரார்த்தனை குரல் விஷ்ணு பகவானுக்கு கேட்டது.அவர் மனமிரங்கி கருடன் மீதேறி அங்கு வந்தார்.சுதர்சன சக்ராயுதம் ஏவி முதலையின் தலையை வெட்டினார்.யானையை இழுத்து கரையில் கொண்டு வந்தார்.அவர் ஸ்பரிசம் பட்டு யானை தன உடல் துறந்து தேவனாக மாறியது.முதலையும் சாபம் நீங்க பெற்றது.இருவரும் தேவர்களாக மாறி விஷ்ணுபகவானுடன் சேர்ந்து வைகுண்ட பதவியை அடைந்தார்கள்.
 "ப்ரமாணாந்தர்ஸயான பேக்ஷத்வாத் ஸ்வயம் பரமாணத்வாத் "
பக்தியை நிருபிக்க எந்த பிரமாணமும் தேவையில்லை.ஏனெனில் அதுவே பிரத்யட்ச பிரமாணமாக இருக்கிறது.பக்தியின் பிரேமை ஆனந்தம் தாமாக உணரப்படுகிறது.அந்த இறை இன்பம் பக்தனாக இருப்பவனுக்கே தெரியும்.மனமுருகி நினைக்கும் போதே பரவசமடைந்து நடனமும் ஆடுவார்கள்.
"சாந்திரூபாத் பரமானந்தரூபாச்ச "
பக்தி ஏன் பிரத்யட்ச பிரமாணமாக நிருபிக்கபடுகிறது?ஏனென்றால் அது சாந்தி ரூபமானது.பரமானந்த ரூபமானது.பக்தி செலுத்தினால் பக்தனுக்கு சாந்தி கிடைக்கிறது.பகவான் தன மஹா மகிமையை விட்டு இறங்கி வந்து பக்தர்கள் முன் தன் திவ்ய சக்தியுடன் பிரகடனமாகிறார்.பகவான் ஆனந்தமானவன் என்று நிரூபிக்கிறார்.இது முக்குணங்களுடன் சேர்ந்த சகுண பிரம்ம சொருபமில்லை என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.(தொடரும்)

Thursday 22 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 41

பகவத் கீதை கூறுகிறது.-
           ஆர்த்த பக்தன், ஜிக் ஞாஸு பக்தன்  பக்தன்,அர்த்தார்த்தீ பக்தன் ஆகிய மூன்று வகை பக்தர்கள் தனி தனி இயல்பு உடையவர்கள்.
           ஆர்தபக்தன்: ஆபத்து வியாதி போன்ற தன் கஷ்டங்களையும் பாவங்களையும் அழிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் பகவானை தொழுது பஜனை செய்வது கோவில் திருப்பணிகளை செய்வது ஆகிய வழிகளால் இறைவனை ஆராதிப்பான்.
            ஜிக் ஞாஸு பக்தன்: பகவான் என்றால் அவருடைய ஆற்றல் என்ன ? பகவானை தத்துவார்த்தமாக எப்படி அறிய முடியும் எங்கும் நிறைந்த ஈசன் எப்படி அருள் பாலிக்கிறார்?என்று பகவானை பற்றி நன்கு அறிய விரும்பும் வேட்கை கொண்டவன் தன் அரிய பிரேமை பக்தியால் உபாசனை செய்து நெருங்குகிறவன் ஜிக் ஞாஸு பக்தன் பக்தன் ஆகிறான்.
             அர்த்தார்த்தீ பக்தன்:இவன் புராண காலத்து அசுரர்கள் போல தவமிருந்து நாம ஜபம்,தியானம் செய்து வரங்களை கேட்பான்.மென்மையான வாழ்வு ,பெயர்,புகழ்,செல்வம் எல்லாம் பகவானிடம் விரும்புவான்.
           உலகத்தின் நிலையில்லா வாழ்வில் நிலையில்லா அற்ப சுகங்களுக்கும் சந்தோசங்களுக்கும் பகவானிடம் கையேந்துவது எப்படி இருக்கிறதென்றால் -பொன்னும் பொருளும் ரத்தினங்களும் வழங்கும் பெரும் செல்வந்தனிடம் போய் எனக்கு தவிடு வேண்டும் என்று கேட்பது போல உள்ளது.
           உண்மையில் செல்வதினுள் பெரும் செல்வம் இறைவன் அன்றோ அந்த செல்வதை அடைந்த பின் வேறு எந்த செல்வம் பெரிதானது?அல்லது வேறு செல்வதை எதற்காக விரும்ப வேண்டும்?
"உத்தரஸ்மாதுத்தரஸ்மாத் பூர்வ பூர்வா ச்ரேயாய பவதி "
முக்குண பகதிகளில் சாத்வீக பக்தியே சிறந்ததாக முதலிடம் பெறுகிறது.அதுபோல ஆர்த்த பக்தி-அர்த்தார்த்த பக்தி,  ஜிக் ஞாஸு பக்தி ஆகிய வற்றில்  ஜிக் ஞாஸு பக்தியே சிறந்ததாக முதலிடம் பெறுகிறது.
"அன்யஸ்மாத் சௌலப்யம் பக்தௌ"
இறைவனை அடைய வேண்டிய மற்ற வழிகளை விட பக்தியோக வழியே சுலபமானது.கர்ம,ஞான, தியான யோகங்கள்,அனுஷ்டானம் செய்வதற்கு கடினமானவை.பக்தியோகத்தின் பலனோ எந்த பாதிப்புமின்றி கிடைத்து விடும்.மற்ற சாதனைகளில் சிறிய தவறு ஏற்பட்டாலும் அதன் பலன்கள் எதிர்மாறாக இருக்கும்.அல்லது சாதகர்களை பாதிக்க கூடியதாக இருக்கும்.
பகவான் மீது நம்பிக்கை கொண்டு முக்காலத்திலும் எங்கும் அவர் அருளை உணர்ந்தவன் நிச்சயம் பக்திக்கு பாத்திரமாகி விடுவான்.அக்கணமே அவன் பாவங்கள் எல்லாம் நாசப்பட்டு விடும்.இதற்காக எதையும் தியாகம் செய்ய தேவையில்லை.
             விலங்குகளும் பறவைகளும் பக்தி செய்து ஆண்டவனை தரிசித்த வரலாறும் உள்ளது. கஜேந்திரன் யானை, தவளை,பல்லி, சிலந்தி,வானரர்,ஆகியோர் செய்த வரலாறு கோவில்களில் சிற்பங்களால் ஓவியங்களால் பேசப்படுகிறது.பக்தி செய்த பக்தர்களிடம் பகவான் தன் மகாமஹிமையை விட்டு இறங்கி வந்து விடுவார்.(தொடரும்)

Wednesday 21 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 40

ஆசைகளை அடிப்படையாக கொண்டு உலகில் பெயருடன் புகழுடன் வாழ வேண்டும்.இஸ்வர்யங்கள் பெற்று வசதியாக, சுகமாக வாழ வேண்டும்.என்று ஆராதனை செய்வது(அதாவது இதில் விக்ரஹ  ஆராதனையும் கோவில் வழிபாடும் இருக்கும்)இதுவே ராஜச பக்தி எனப்படுகிறது.
           கோவிலை கட்டி பிறர் புகழ வேண்டும் என்பதற்காக போலியான பக்தி பஜனை செய்வது,அல்லது கோவிலில் விளக்கு போட்டு உபயம் என்று எழுதி வைப்பது,அல்லது கோவிலுக்கு தேவையான பொருள் உதவி செய்யும் போதும் பண உதவி செய்யும் போதும் தன் பெயரை பொறிக்கசெய்து உபயம் என்று எழுதி வைப்பது ராஜச பக்தி எனப்படுகிறது.
         பிறருக்கு கஷ்டத்தை கொடுத்து இம்சித்து பக்தி பஜனை எல்லாம் செய்வது தாமச பக்தியாகும்.இந்த வரிசையில் உயிர் பலி கொடுத்து இம்சித்து பூஜைகளை நடத்துவதும் தாமச பக்தியை சேர்ந்தது.பிறருடன் போட்டி போட்டுக்கொண்டு வழிபாடு செய்வதும் ஆடம்பரமாக செலவு செய்து விழா எடுப்பதும் பொருட்களை கோவிலுக்கு தானமாக தந்ததை பெருமையாக பேசிக்கொள்வதும் தாமச பக்தியை சேர்ந்தவை.
          தாமச பக்திக்கு எடுத்துக்காட்டாக மூர்க்க நாயனார் என்ற ஒரு சிவ பக்தர் ஒருவர் இருந்தார்.அவர் திருவேற்காட்டில் அமர்ந்துள்ள சிவபெருமானுக்கு சிவதொண்டு புரிந்து வந்தார்.அவர் சிவனடியாருக்கு உணவளித்து அதை பார்த்து மகிழ்ந்த பின் தான் உண்பது வழக்கம்.
          அவர் நாள் தோறும் தூய்மையான சோறு நெய் சுவை மிகுந்த கறி வகைகள் முதலியவற்றை நன்றாக சமைக்க செய்து தம்மிடம் வந்த சிவனடியார்களை வணங்கி உபசரித்து அவர்களுக்கு உணவளித்து அவர்களுக்கு வேண்டிய பொருட்களை கொடுத்துதவி அத்தொண்டில் பெரிதும் மகிழ்ந்து வந்தார்.இப்படி இருக்க நாளுக்கு நாள் அடியவர்கள் கூட்டம் பெருகலாயிற்று.நாயனாரிடம் இருந்த பொருட்கள் எல்லாம் செலவாயின.அவர் தம்மிடம் இருந்த அடிமைகளோடு பரம்பரை உரிமையான நிலம் அணிகலன்கள் முதலிய பொருட்கள் எல்லாம் விற்று சிவனடியாருக்கு விருந்து படைக்கும் திருத்தொண்டில் மகிழ்ந்து வந்தார்.முடிவில் எவ்வகை பொருளும் இல்லாத நிலை ஏற்பட்டது.மேலும் மேலும் விருந்து படைக்க வழியில்லாமல் அவர் வறுமையில் வாடி இனி பொருளுக்கு என்ன செய்வது என்று மனம் சோர்ந்தார்.பிறகு முன்னாளில் கற்ற சூதாட்டத்தினால் பொருளீட்ட கருதினார்.அவ்வூரில் சூதாடுவோர் இல்லாததால் அவ்வூரில் இருந்து புறப்பட்டார்.
          அவர் சூதாடும்போது முதல் ஆட்டத்தில் தோற்று பணய பொருளை இழப்பார்.ஆனால் பின் ஆட்டங்களில் எல்லாம் வெற்றி பெற்று பெரும் பணய பொருளை அள்ளிக்கொள்வார். எதிர் ஆட்டம் ஆடுபவர் வாக்கு மாறினால் தமது உடை வாளால் அவரை குத்துவார்.  சூதாட்டத்தில் தாம் வெற்றி பெற்ற பொருளை தம் கையாளும் தீண்ட மாட்டார்.தமக்காகவும் பயன்படுத்த மாட்டார்.அவற்றை சமையல் செய்வோரிடம் கொடுப்பார்.அவர்கள் அமுதாகுவார்கள்.அடியார்கள் யாவரும் விருந்துன்டபின் கடைசி பந்தியில் தாமும் அமர்ந்து அமுது செய்வார்.
          மூர்க்க நாயனார் இவ்வுலகை விடுத்த பின் சிவ புண்ணிய பேற்றால் பூத கணங்கள் சூழ்ந்து இசை பாட ஆனந்த தாண்டவம் செய்தருளும் சிவபெருமானது உலகமாகிய சிவபுரம் அடைந்து பேரின்பமடைந்தார்.
         கௌணீ பக்தர்கள் முறையாக பகவானை உபாசிப்பதில்லை என்றாலும் இவர்கள் நிச்சயம் பகவானை நெருங்க முயற்சி செய்கிறார்கள்.படிப்படியாக இவர்களும் அகத்தூய்மை பெற்று நிச்சயம் பகவானை அடைவார்கள்.
          கருணைக்கடலான பகவான் அவரை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தாலும் அவர் நம்மை நோக்கி நான்கு அடி எடுத்து வைக்கிறார்.இவர்களும் இறுதியில் பகவானின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.இவர்களையும் புண்ணிய ஆத்மாக்களாக மகா புருசர்கள் பக்தி செலுத்தி ஊக்குவிப்பார்கள்.ஏனெனில் பக்தியால் மட்டும் பகவானை சார்ந்து சரண் அடைவது பகவத் தியானம் பஜனை எல்லாம் தாமாகவே வந்துவிடும்.ஆனால் எப்படியும் பகவானை அடையவேண்டும் என்ற லட்சியம் வேண்டும்.வேறுவிதமாக மூன்று வகை பக்தர்கள் இருக்கிறார்கள்(தொடரும்)

Tuesday 20 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 39

உன் தாமரை கண்கள் என் உள்ளத்தை பிளக்கின்றனவே.உனக்கு கருணை என்பது கிடையாது.நீ மிக்க கொடுமைக்காரன் என்று பாடி வருந்துகிறார்.
          மேலும் விளக்கமாக கூற வேண்டுமென்றால், காடு ,மலை அடங்கிய இந்த மேதினி எங்கும் தன் பிரபுவான இதயத்தின் நாயகனை காண்பார்கள்.காதுகளால் எல்லா சங்கீதங்களையும் அவன் புகழ் கீதமாக கேட்பார்கள்.இனிய நறுமணத்தில் நாயகனின் துளசி மணத்தை நுகர்வார்கள். இறைவன் திருநாமங்களை இனிக்க இனிக்க உச்சரிப்பார்கள்.தேகத்தால் பகவானை பூஜை செய்வார்கள்.
          ஆகாயத்தில் ஓம் என்ற ஒலி ஆண்டவனின் குரலாக கேட்கிறது.உலகில் ஒலிக்கும் ஒலியெல்லாம் ஓங்கார ஒலியின் வடிவங்களே.வாயுவில் பகவானின் தெய்வீக  மணமும் ஸ்பரிசமும் உணரப்படுகின்றன.அக்னியில் இருக்கும் ஜோதி பரஞ்சோதியாக தெரிகிறது.பூமியில் இருக்கும் மணம் எல்லாம் நறுமணமாக இறைவன் உணரப்படுகிறான்.பறவைகளின் குரல்களும் சலசலக்கும் தாவரங்களும் ஹரிசிவா,ஹரிசிவா,என்றே ஒலி எழுப்புகின்றன.என்று மகான்கள் கூறுகிறார்கள்.உலகமனைத்தும் பேரின்பமயமாக இருக்கிறது.எங்கும் ஆனந்த மயமாக ஆருயிர் கண்ணன் அமுத மயமான இறைவன் சௌந்தர்யமும் மாதுர்யமும் நிறைந்து உணரப்படுகிறான்.பார்ப்பவன் பார்க்கப்படும் காட்சி ஜீவராசிகளின் அதிசயங்கள் எல்லாம் மதுரமாக தெரிகின்றன.
          வேதம் கூறுகிறது: -"பகவானின் அருள் எங்கும் நிறைந்து இனிமையான காற்று வீசட்டும்.சமுத்திரங்கள் இனிய ஓசை கிளப்பட்டும்.மதுவை பொழியட்டும்.பயிர் பச்சைகளும் தாவரங்கள் ஒளசதங்களும் அமிர்தம் பொழிந்து பூமியின் ஒவ்வொரு மண் துகளும் புனிதமாக இனிமையாக இருக்கட்டும்"
           இவ்வாறு பக்தனின் பார்வையில் எல்லாம் இன்பமயமாக இருக்கும்.
பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
          என்னை எங்கும் காணும் பக்தன் என்னில் சகலத்தையும் காண்கிறான்.அவன் மனக்கண் முன்னிருந்து நான் மறைவதில்லை.அவனும் என் சிந்தையில் இருந்து மறைவதில்லை.
          சாந்தோக்ய உபநிஷத் கூறுகிறது:
யத்ர நான்யத் பச்யதி ----- பிரம்மத்தை தவிர அவன் எதையும் அறிய மாட்டான்.அவன் அமரத்தன்மை வாய்ந்தவன்.பிரம்மத்தை மறந்து எதையும் பார்ப்பவன்,கேட்பவன்,அற்பமானவன் அவனே இறப்பவன்.எல்லையற்ற பிரமாண்டமாக இருக்கும் பிரம்மம் அமிர்தமயமானது,சாத்தியமானது,மதுரமானது,அது போல பிரேமையும் அதே தன்மையுடன் இருக்கிறது.
"கெளணீ த்ரிதா குணபேதாதார்தாதி பேதாத்வா" 
          இதுவரை மேலான மேன்மை தரும் பக்தியை பற்றி விவரமாக கூறினார்கள்.அதற்க்கு சற்று கீழ்தளத்தில் உள்ள பக்தி குண பேதங்களால் மூன்று வகைப்படும் அல்லது ஆர்த்த பக்தியின் பேதங்களாலும் மூன்று வகைப்படும்.
          மேல்நிலை பக்தியில் திளைத்தவர்கள் சீக்கிரமே பகவானின் பிரேமை அன்பில் கலந்து விடுவார்கள்.பகவத் கீதையில் இதை ஞானியின் பக்தி என்றும் நிர்குண பக்தி என்றும் காரணமில்லா பக்தி என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த காரணமில்லா பக்தியில் பக்தனின் சித்தமும் செயல்பாடுகளும் இடைவிடாமல் தன்னிச்சையாக பகவானை நோக்கி பிரவாகமாக ஓடும்.சித்தம் அனன்ய பிரேம பாவம் கொண்டு பகவானை விட்டு விலகாமல் இருக்கும்.
         கெளணி பக்தி என்பது முக்குணங்களை கொண்டது.அதாவது சாத்வீகம்,ராஜசம்,தாமசம்,ஆகிய மூன்று குண பேதங்களுடன் இருக்கிறது.அனைத்து கர்மபலன்களும் பகவானுக்கே அர்ப்பணம் செய்து எதற்கும் ஆசைபடாமல் பகவானை ஆசையுடன் வழிபட்டு வருவது சாத்வீக பக்தியாகும்.(தொடரும்) 

Monday 19 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 38

"ப்ரகாசதே க்வாபி பாத்ரே "
சில பக்தர்களிடம் மட்டும் பிரேமை வெளிப்படையாக தெரியும்.பகவான் அருள் அவர்கள் தேகத்தில் இறங்கும்.ரோமாஞ்சனம் உண்டாகும்.பிரேமையின் உச்சகட்டத்தில் அவர்கள் ஆடுவார்கள்.பித்து பிடித்தவர்கள் போல நடந்து கொள்வார்கள்.
           உதாரணமாக கோபிகை பெண்கள் பிரேமையின் உச்ச கட்டத்தில் தன்னை கிருஷ்ணனாகவே பாவித்தார்கள்.ஒரு பெண் மற்றொரு பெண் மீது ஏறி உறியிலிருந்து வெண்ணை திருடுவது போல பாவனை செய்தாள். ஒரு பெண் காளியநாகமாக மாறி நடித்தாள். மற்றொரு பெண் அவள் மீது ஏறி "ஏ காளிய நாகமே உனக்கு பாடம் புகட்டவே நான் வந்திருக்கிறேன் " என்று கூறினால். இவ்வாறு அந்த பிரேமை வெளிப்படுகிறது.
" குணரஹிதம் காமனாரஹிதம் ப்ரதிக்ஷண வர்தமான மவிச்சின்னம் சூக்ஷமதரமனுபவரூபம் " 
         உண்மையான அன்பு குணத்தை பார்த்து வருவதில்லை.அது தாமாகவே இயற்கையாக வரும்.குணத்தை பார்த்து வந்தால் அந்த நபரின் குணம் மாறுபடும்போது அன்பு இருக்காது.அன்பு என்றும் மாறாதது.குணங்களையும் குற்றங்களையும் கண்டால் அன்பு செலுத்த முடியாது.உண்மை பிரேமை என்ற அன்பு குணங்களின் வட்டத்தில் அடங்காதது.
         உண்மையான பிரேமை என்ற அன்பு ஆசையின் அடிப்படையிலோ லாபத்தை வைத்தோ வராது.
         பிரேமைக்கு பாத்திரமான நபர் நலமாக மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதை தவிர தமக்கு ஒரு லாபம் வர வேண்டும் என்று அன்பு செலுத்துபவர்கள் கருத மாட்டார்கள்.அன்பில் சுய நலம் கலந்தால் அந்த அன்பு களங்கப்படுகிறது.அன்பு எந்த சூழலிலும் குறையாது.அது பிரதிக்ஷனமும் பெருகிக்கொண்டே போகும்.
         பக்தன் அந்த பெருகிக்கொண்டே போகும் பிரேமையை நிச்சயம் உணர்வான்.அந்த பிரேமை ஒருபோதும் எந்த சூழலிலும் அறுபடாது.
         பிரேமை என்பது இதயம் என்ற குகைக்குள் நம்மையும் அறியாமல் உதயமாகிறது.அதனால் அது மிகவும் நுண்ணியமானது.என்று சூத்திரத்தில் கூறுகிறார்கள்.இதயத்தில் அது முளை விடும்போது படிப்படியாக வளர்கிறது.
அதன் பின் ஆனந்தமயமாக மாறுகிறது.அது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் மாறுகிறது.ஸ்ரீ ராமனின் பிரேமை பக்தி சக்தியால் ஹனுமான் மலையையும் தூக்கிவிட்டான்.பிரேமை அன்பை அனுபவித்து செயல்பட்டான்.
"தத்ப்ராப்ய ததேவாவலோகயதி ததேவ ச்ருனோதி ததேவ பாஷயதி ததேவ சிந்த்யதி"  
பிரேமையின் தெய்வீக ஆனந்த ரசத்தில் மூழ்கி விட்டவனுக்கு எல்லா பொருள்களும் உயிர்களும் தன் இனிய தலைவன் பகவானின் ரூபங்களாகவே தெரியும்.எதை கேட்டாலும் பகவானின் குரலாகவே கேட்கும்.எதை பேசினாலும் தன் பிரபுவான பகவானை பற்றியே பேசுவான்.சிந்திப்பதெல்லாம் தன் அன்புக்குரிய நாயகன் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்.மற்ற நபருக்கோ பொருளுக்கோ இடமிருக்காது.பக்தன் பகவானை நினைத்து பித்தன் போல நடந்து கொள்கிறான்.என்பதையே ஆழ்வார் பாசுரம் விளக்குகிறது.
 வேய் மருதோள்-இணை மெலியும்-ஆலோ !
மெலிவும் என் தன்மையும் யாதும் நோக்காக் -
காமரு குயில்களும் கூவும் ஆலோ !
கண மயில் -அவை கலந்து ஆலும் ஆலோ !
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு 
ஒரு பகல் ஆயிரம் ஊழி,ஆலோ!
தாமரை கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ!
தவவலை தகவிலையே நீ,கண்ணா!
கோகுலத்து இடைப்பெண்ணாக பாவித்து பாடுகிறார் ஆழ்வார்.-
உன்னை பிரிந்து விரக தாபத்தால் மூங்கில் போன்ற என் கைகள் இரண்டும் மெலிந்து போகின்றனவே.என் விரகதாபத்தை கண்டு கொஞ்சமும் இரக்கம் கொள்ளாமல் இந்த அழகிய குயில்கள் சந்தோசமாக கூவுகின்றனவே கூவி என் விரகதாபத்தை அதிகப்படுத்துகின்ற்னவே இந்த மயில் கூட்டங்களும் அவ்வாறே கூடிக்கூடி நடனம் ஆடுகின்றனவே,நீ பசுக்களை மேய்க்க காடு சென்று விட்டாய்.ஒரு பகல் ஆயிரம் ஊழிகாலமாக நீள்கிறதே.நீ எப்போது திரும்பி வருவாய்.(தொடரும்)

Sunday 18 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 37

"ய: கர்மபலம் த்யஜதி கர்மாணி ஸன்யஸ்யதி ததோ நிர்த்வந்த்வோ பவதி "
யோக ஷேமங்கள் பற்றி கவலை படாமல் தாம் செய்து வந்த பூஜை வழிபாடு அல்லது நல்ல காரியங்களின் புண்ணிய பலன்கள் தம்மை சேர வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு அவற்றை ஆண்டவனுக்கே அர்ப்பணம் செய்ய  வேண்டும். 
பகவான் சம்பந்தப்பட்ட காரியங்கள் அல்லாத காரியங்களையும் துறக்கவேண்டும்.எல்லாவற்றையும் துறந்துவிட்டு சுக துக்கங்களை சமமாக நினைக்க வேண்டும்.மனம் ,வாக்கு,சரீரத்தால் எந்த கர்மங்கள் செய்தாலும் அதை பகவானுக்காக செய்ய வேண்டும்.அதன் பலனை பகவானுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும்.இன்பம்,துன்பம்,லாபம்,நஷ்டம்,தனது,பிறரது என்ற இரண்டு விசயங்களையும் ஒன்றாக பாவிக்கவேண்டும்.
           பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
வேதங்களும் முக்குணங்கள் கொண்டவை. அதாவது முக்குணங்களை வெளிப்படுத்தும் உலகியல் விசயங்களையே பேசுகின்றன.ஆதலால் அர்ச்சுனா நீ முக்குணங்கள் வலையில் சிக்காமல் இருக்க வேண்டும்.நிதமும் தூய சத்துவ சித்தமுடன் சுக துக்கங்களால் பாதிக்கபடாமல் யோக க்ஷேமங்களை சிந்திக்காமல் பரமாத்மா சொரூபத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
"வேதானபி ஸன்ன்யஸ்யதி கேவலம விச்சின்னானு ராகம்லபதே " 
          வேதங்கள் உலகியல் விசயங்களையே பகர்கின்றன.அவற்றில் ஞானகாண்டம் தான் ஆத்மா,பரமாத்மா தத்துவங்களை விமர்சிக்கிறது.வேதங்கள் சொல்லும் சில முக்கியமான கடமைகளை மட்டும்
செய்யலாம்.சொர்கத்திற்கு வழிகாட்டும் யக்ஞயாகங்கள் செய்யதேவையில்லை என்பதை உணர்த்தும் வகையில் வேதங்களில் சொல்லப்பட்ட கர்மங்களை துறக்க வேண்டும் என்று சூத்திரத்தில் கூறி இருக்கிறார்கள்.
          பக்தர்களோ பகவான் பிரேமையில் மூழ்கி மற்ற விசயங்களை மறந்து விடுவார்கள்.இதில் வேதங்களில் சொல்லப்பட்ட கர்மங்களை சரிவர செய்ய முடியாமல் போக எல்லா கர்மங்களும் தாமாக விடுபட்டு விடும்.அவன் வேதங்களை கடந்து உபநிசதங்கள் கூற்றுப்படி இறைவனில் இரண்டற கலந்து விடுகிறான்.என்றென்றும் மனதில் இறைவனை குடி வைத்து அவனை விட்டு இணை பிரியாமல் பேரின்பம் அடைகிறான்.
"ஸ தரதி ஸ தரதி ஸ லோகான்ஸ்தாரயதி "
இப்படிப்பட்ட பக்திமான் பிறவி பெருங்கடலில் இருந்து கரை சேர்கிறான்.தான் மட்டுமில்லாமல் தன்னிடம் வந்தவர்களையும் கரை சேர்த்து விடுகிறான்."மத் பக்தி யுக்தோ புவனம் புனாதி "என்று பாகவதம் கூறுகிறது.அதாவது தூய பக்திமான் இறைவனோடு உண்மை,பிரேமை கொண்டவன் ,தான் இருக்கும் சுற்று சூழலை தூய்மை ஆக்குகின்றான்.உலக மக்களையும் கரை சேர்ப்பதால் அகில உலகையும் தூய்மை படுத்துவான்.
          பிரேமை எப்படி லட்சங்களுடன் இருக்ககூடியது என்பதை அடுத்த சூத்திரத்தில் கூறுகிறார்கள்.
   "அனிர்வசனீயம் பிரேமாஸ்வரூபம் "
பகவானிடம் இருக்கப்படும் பிரேமை காதல் எல்லாம் வார்த்தைகளால் விளக்க முடியாது.அதை அனுபவிப்பவர்களே பாக்கியசாலிகள். "அன்பே சிவம்" என்ற கூற்று படி பகவான் அன்பு மயமானவர்.பிரேமைக்கும் பகவானுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.பகவானை நினைத்தால் இனிக்கும் அனுபவம் ஏற்படுகிறது. உள்ளம் உருகி பரவசமாகிறது.பரபிரம்மம் வாக்குக்கு அப்பாற்பட்டது என்று உபநிசதங்கள் கூறுகின்றன.
          உலகில் நெடுநாள் பிரிந்து போன, தமக்கு அன்புக்குரிய மகன், உற்றவர்,தாய் தந்தை,நண்பர் மீண்டும் சந்திக்கும் போது அளவில்லா ஆனந்தம் உண்டாகிறது.அவர்களுடன் பேசுவதிலும் தொடுவதிலும் அலாதியான அன்பு சுரந்து இன்பம் உண்டாகிறது.அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
ராமாயணத்தில் இலங்கையில் இருக்கும் சீதைக்கு ஸ்ரீ ராமர் செய்தி அனுப்புகிறார்.
"பிரியே உனக்கும் எனக்கும் இருக்கும் அன்புக்காதலை என் மனம் மட்டும் தான் அறியும். என் மனம் எநநேரமும் உன் நினைவில் தான் உருகுகிறது.அந்த பிரீத்தி ரகசியத்தை நான் மட்டும் தான் அறிவேன்.
           மனம் எந்நேரமும் பகவானின் பிரேமை என்ற நீருக்குள் மூழ்கி விட்டால் பேச முடியாது. ஆனந்த அனுபவம் மட்டும் தான் இருக்கும்.
"மூகாஸ்வாதனாவத் " 
          இனிப்பின் ருசியை சுவைத்து சாப்பிட்டு பார்த்தால் தான் உணரமுடியும்.அது எப்படி இருக்கிறது என்று கேட்டால் வாய் பேச தெரிந்த நாம் இனிக்கிறது என்று கூறுவோம்.இனிக்கிறது என்றால் என்ன ? இதற்க்கு பதில் கூற முடியாது.ஊமை ஒருவன் இனிப்பை சாப்பிட்டு அந்த ருசியை அவனால் கூற முடியாது.அந்த நிலை தான் பிரேமையை உணர்ந்த பக்தர்களுக்கு உண்டாகிறது.அவர்களும் அதை வர்ணிக்க இயலாமல் ஊமையாகி விடுவார்கள்.
பிரகலாதன் கூறுகிறார்:
          காந்தம் அருகில் இருக்கும் இரும்பை இழுப்பது போல சக்கரதாரி விஷ்ணு பகவான் என்மனதை கவர்ந்து இழுக்கிறார்.அதன் காரணத்தை யான் அறியேன்.
அவரை நினைத்த மாத்திரத்தில் என்னையே நான் மறந்து விடுகிறேன்.வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பரவச நிலை ஒன்று என்னை ஆட்கொள்கிறது.(தொடரும்)  

Saturday 17 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 36

"யோ விவிக்த ஸ்தானம் ஸேவதே யோ லோக பந்தமுன்மூலயாதி நிஸ்த்ரைகுன்யோ பவதி யோக க்ஷேமம் த்யஜதி "
          இதற்க்கு முன் சொன்ன சூத்திரத்தில் மாயையை கடக்க மூன்று வழிகள் கூறப்பட்டுள்ளன.இந்த சூத்திரத்தில் ஐந்து உபாயங்களை கூறுகிறார்கள்.
           நான் எனது,என்ற பற்று சொத்து சுகங்கள் நடுவில் இருந்தால் வைராக்கியம் உண்டாகாது.மேலும் பற்று தான் உண்டாகும்.ஆதலால் பகவத் விஷயங்கள் அல்லாதவற்றில் நெருக்கம் கொள்ளாமல் தனித்து வாழ வேண்டும்.என்று சூத்திரத்தில் கூறி இருக்கிறார்கள்.பகவத்கீதையிலும் பகவான் அதையே கூறுகிறார்.
"விவிக்ததேசஸேவித்வமரரதிர் ஜனஸம்ஸதி "   
உலகியல் விவகாரங்களில் ஈடுபட்டிருக்கும் ஜனக்கூட்டத்தில் இருந்து விலகி தனித்து இருக்க வேண்டும். இந்த சூழ்நிலை பகவத் தியானத்திற்கு உகந்தது.
எவ்வளவு தான் பகவான் மீது ஈடுபாடாக இருந்தாலும் அதற்க்கு தக்க சூழ்நிலை இல்லாவிடில் எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியாது.பகவானின் பிரேமையில் கட்டுப்பட வேண்டுமானால் உலகியல் பந்தங்கள் என்ற கட்டுக்களை அறுக்க வேண்டும்.உலகியல் விவகாரங்களில் எவ்வளவு துன்பம் இருக்கின்றன.பகவானை நோக்கி போகும் பக்தி வழி எவ்வளவு நிம்மதியும் ஆனந்தமும் இருக்கின்றதென ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.இதனால் தாமாக பந்த பாசங்கள் கழன்று விடும்.
          முக்குணங்களில் உருவானதே இந்த உலகம். உலகப்பற்றை அறுக்க வேண்டுமானால் முக்குணங்களில் இருந்து விடுபட வேண்டும்.சாத்வீக,ராஜச,தாமச குணங்களை ஜெயிக்க வேண்டும். இல்லையேல் அவை உலக விவகாரங்களில் நம்மை அமிழ்த்திவிடும்.
         சாத்வீகம் என்பது அதிக அன்பும் பாசமும் அதிக இரக்கமும் கொள்வது.அதிக அன்பாலும் அதிக இரக்கத்தாலும் ஒருதலை பட்சமாகிவிடும் நிலையில் ஒருவருக்கு பரிந்து, ஒருவரை பகைத்து கொள்ளும் கட்டாயம் ஏற்படும்.அல்லது பிறரை இம்சிக்கும் குணம் தலை தூக்கும்.
         ராஜசம் என்பது கோபம் வேகம் பிறரை இம்சிக்கும் குணம் ஆகியன.தாமசம் சோம்பல்,செயல்படாமல் தூங்கிகொண்டிருப்பது,மயக்கம் முதலியன.இவை மூன்றும் தவிர்க்கப்பட வேண்டும்.
        கிடைக்காதது,கிடைப்பது-யோகம் எனப்படுகிறது.
         கிடைத்ததை காத்துக்கொள்வது க்ஷேமம்.க்ஷேமம் என்றால் நலன்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.இதில் உலகியலில் கிடைக்காத சுக போகங்கள் கிடைப்பதை யோகமும் கிடைத்த நலன்களை காத்துக்கொள்வதை க்ஷேமம் என்றும் கூறலாம்.இந்த உலகியல் யோக க்ஷேமங்களை பற்றி சிந்திக்காமல் இருக்க வேண்டும்.கிடைத்தாலும் விலகி கொள்ள வேண்டும்.
         மற்றொரு யோக க்ஷேமம் -- கடவுள் விசயத்தில் யோகமேன்பது கடவுளை அடைவது அல்லது கடவுளை அடையும் உபாயத்தை ,வழியை அடைவது. க்ஷேமம் என்றால் பகவானை அடையும் வழியை அறிந்து அதிலுருந்து பிறழாமல் சாதனை செய்வது.
         இரண்டுவித யோக க்ஷேமங்களை பற்றி கொண்டு கவலை பட்டுக்கொண்டு இருக்க வேண்டாம். எல்லாவற்றையும் முழு பொறுப்பையும் பகவானிடம் அர்ப்பணித்து விட்டு பகவானை வழிபடுதளிலேயே குறியாக இருக்க வேண்டும்.என்று சூத்திரத்தில் கூறுகிறார்கள்.என்னை மட்டும் உபாசிக்கும் பக்தர்கள் என்னை மட்டும் நம்பி இருப்பார்கள்.அவர்களின் யோக க்ஷேமங்களை நானே பொறுப்பேற்று சுமந்து கொண்டு இருக்கிறேன்.
"போஜனாச்சாதனே.சிந்தா வ்ருதா குர்வந்தி வைஷ்ணவா
யோ அசௌல விச்வம்பரோ தேவ ஸ கிம் தாஸானு பேக்ஷதே "
வைஷ்ணவர்கள் உணவு உடை பற்றி ஏன் வீணாக கவலை பட வேண்டும்? அகில விசுவத்திர்க்கும் உணவளிப்பவன் தன பக்தர்களை மறந்து விடுவானா?
                                                                                                                    (தொடரும்)

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 35

"தரங்காயிதா அபீமே ஸங்காத் ஸமுத்ராயந்தி "
காமமும் (உலகில் இருக்கும் அனைத்து வித ஆசைகள்)குரோதமும் அலைகள் போல எழுந்து எழுந்து பெரும் அலைகடலாக பெருகி விடுகின்றன.மேற்சொன்னது போல தீயவர் சேர்கையால் அல்லது தீமைகளை தன்னில் வளர்த்து கொள்வதால் பெரிய அளவில் பெருகி விடுகின்றன.
          தீமைகளை வேருடன் களைய வேண்டும்.சிறிதளவு தேங்கி விட்டால் கூட அவை படிப்படியாக வளர்ந்து ஆபத்தை விளைவிக்கும்.தீயின் சிறு பொறியை விட்டு வைத்தாலும் அது பெரிய நெருப்பாக மாறி எல்லாவற்றையும் சாம்பலாகி விடும்.
         ஆரம்பத்தில் காமகுரோதாதிகள் சிறு அலை போல தோன்றினாலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பெருகி கடல் போல ஆகி விடும்.என்று கூறுகிறார்கள்.நல்ல எண்ணங்களை விரட்டிவிடும்.நம்மனதில் நல்ல குணங்கள் அதிகமாகவும் தீய எண்ணங்கள் குறைவாகவும் இருக்கின்றன என்று நினைத்து கொள்ள கூடாது.இந்த மனதை அடிக்கடி சோதித்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.இந்த மனமானது கீழான விசயங்களை நோக்கி விரைந்து பாயக்கூடியது. மாயையை எவராலும் வெல்ல முடியும்.என்பதை அடுத்த சூத்திரத்தில் கூறுகிறார்கள்.
"கஸ்தரதி கஸ்தரதி மாயம்? ய : ஸங்கான் ஸத்யஜதியோ மஹானுபாவம் ஸேவதே, நிர்மமோ பவதி " 
மாயையை வென்று எவன் கரை சேருகிறான்?ஜனன மரணத்தை விட்டு எவன் கடைத்தேருகிறான்? என்ற கேள்வி எழும் போது தேவைக்கு அதிகமாக இருக்கும் (ஏனெனில் உலகில் வாழ்வதற்கான சில விஷயங்கள் இன்றியமையாதவை)உலகியல் விசயங்களை துண்டித்து துறந்து விட்டவன் பக்தர் அல்லாதவர்களுடன் அதிக தொடர்பு கொள்ளாமல் தீயவர்களோடு சுத்தமாக தொடர்பை அறுத்து கொண்டவன் கடைதேருவான்.மகான்களோடு தொடர்பு கொள்பவன் பற்றற்று வாழ்க்கை வாழ்ந்து நான் என்ற அகந்தையை விட்டோழிப்பான். 
         நதியில் நீந்த வேண்டுமானால் கைகளாலும் கால்களாலும் நீரை அடித்து விலக்கிக்கொண்டே போனால் மூழ்காமல் இருக்கலாம்.அது போலவே மகா பயங்கரமான மாயை என்ற நதியை நீந்தி கடக்கவேண்டுமேன்றால் இருகைகளாலும் அகங்காரத்தையும் விசயபற்றையும் விலக்கிக்கொண்டே போக வேண்டும்.இல்லையேல் முடிவில்லா பிறவி பெருங்கடலில் மூழ்கி விட வேண்டியது தான்.
         மாயை சம்ஸாரக்கடலில் நீந்திக்கொண்டிருக்கும் போது கைகால்கள் சோர்ந்து விடும்போது ஒரு படகு போல மகான்களின் திருவடிகளை பற்றிக்கொள்ளவேண்டும்.பாகவதபுராணம் கூறுகிறது.மிகுந்த குளிர் பிரதேசத்தில் தீயை மூட்டி பக்கத்தில் குளிர் காய்வார்கள்.அதனால் குளிரும் விலங்குகளில் இருந்து பயமும் நீங்கி இருளும் அகன்று சுகம் கிடைக்கும்.அதுபோல மகான்களின் நிழலில் இருந்து கொண்டால் பாவங்கள் ஜெனனமரண பயம் அஞ்ஞான இருள் இவை மூன்றும் விலகி சென்றவுடன் நமக்கு அலாதியான அமைதி கிடைக்கும்.
          தந்தை இரண்யன்,மகன் பிரகலாதனை நோக்கி கேட்கிறான்."உனக்கு இந்த மதி எப்படி வந்தது?விடாப்படியாக எப்படி ஹரியை பற்றிக்கொண்டு இருக்கிறாய்?
          பிரகலாதன் அதற்க்கு பதில் அளிக்கிறான்."தந்தையே இறைவனை நோக்கி பக்தி கொள்ளும் மதி எவருக்கு எப்படி வரும் என்று கூறுகிறேன்.-பற்றற்ற சாதுக்களான மகான்களின் பாத தூசி தன் தலை மீது பட்டவுடன் எல்லா அனர்த்தங்களையும் அது விரட்டி அடிக்கும்.அப்போது ஸ்ரீ ஹரியின் பாத கமலங்களை பற்றிக்கொள்ளும் மதி ஏற்படுகிறது.
         ஜட பரதன் ரஹூகணன் என்ற மன்னனிடம் கூறுகிறார்:கிடைப்பதற்கரிய பகவானின் பேரருள் பகவத் தத்துவ ஞானம், பிரேமை எல்லாம், தவம்,யக்ஞம்,கிரஹச்தாசிரம கடமைகள் வேத அத்யாயனம், தீர்த்தாடனம், அக்னி உபாசனை, சூரிய உபாசனை யாவற்றாலும் கிடைக்ககூடியவை அல்ல. ஆனால் மகா புருஷர்களை அண்டி சேவை செய்யும் பாக்கியம் கிடைத்து அவர்கள் பாத தூசி மேனியில் பட்டு விட்டால் மட்டும் கிடைத்து விடும்.
                                                                                    (தொடரும்)

Friday 16 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 34

தீயவர்களின் சேர்க்கையில் இருந்து தப்பித்து இருக்க வேண்டும்.நல்லவர்களின் சேர்க்கையின் அவசியத்தை கூறிவிட்டு தீயவர்களை தவிர்க்க வேண்டும்.என்று கூறுகிறார்கள்.நல்லவர்களின் சேர்கையால் பகவானின் கதை கேட்பதும் பஜனையும் நாமஜபமும் செய்தால் பகவான் மீது பிரேமை வளரும்.நல்லொழுக்கம் நிலைத்து இருக்கும்.சாஸ்திர ஞானமும் வைராக்கியமும் உண்டாகும்.அப்யாசம் பலப்படும்.பெரியோர்கள் மகான்கள் சேவை தொடரும்.நேர்மை இருக்கும்.
          மேற்சொன்ன விசயங்களுக்கு எதிராக தீயவர்களின் நட்பால் தீய விஷயங்கள் மனதில் குடி புகும்.புலன் விசயங்களுக்கு அடிமையாகி விடுவது,பிறரை துவேசிப்பது,தன சொந்த சுகத்தை நாடி போவது,.ஒழுக்கம் கேட்டு திரிவது,பெரியோருக்கு கீழ் படியாமல் இருப்பது,தன்னுடைய சந்தோசமே பெரிது என்று நினைப்பது, தீய விசயங்களை பற்றி கொள்வது,சுய கௌரவம் கருதுவது,கோபம் கர்வம்,பொறுமையின்மை அகத்தூய்மை புறத்தூய்மை இல்லாமல் இருப்பது, இரக்கமின்மை,அசாத்தியமாக இருப்பது,அமைதி இல்லாமல் அலைவது, இவற்றுடன் உயிர் வாழ்ந்தால் தன் ஆத்மாவை அதொகதிக்கு தள்ளிவிட்டவன் ஆவான் மனிதன்.அசுர சம்பத்து படைத்த அனைத்து குணங்களும் குடியேறி விடும்.
          பாகவத புராணத்தில் கபில முனிவர் தன் தாயிடம் கூறுகிறார்:
நல்லவர் நலபை துறந்து மீண்டும் ஏன் பாவகுழியில் விழவேண்டும்? பெண் பித்து பிடித்தவர்களோடு சேர்ந்தால் அவர்கள் மனதில் இருள் சூழும்.மேலும் சத்தியம்,தூய்மை, தயை,நல்லறிவு,திரு,மானம்,புகழ், சாந்தி எல்லாம் பறந்தோடி விடும்.இவர்கள் எதிர்காலம் சிதறுண்டு போகும்.ஆதலால் புலன் இன்பங்களை பெரிதாக நினைக்கும் கீழ் பிறவி அடைந்த மனிதர்களோடு தொடர்பு கொள்ள கூடாது.துளசிதாசர் ராமாயணத்தில் கூறுகிறார்.நரகம் மிக மோசமானது.தீயவர்களின் சேர்கை அதனினும் கீழானது.தீயவர்களின் சேர்கை இல்லாதபோதும் மனம் வேறு விசயங்களை பற்றி சிந்தித்து தடுமாறினால் உடனே பகவானை சரணடைய வேண்டும்.தன்னுடைய முயற்சியிலும் வெற்றி காண வேண்டும்.நாம் வாழும் வாழ்க்கை முறை தீமைகள் இருக்கின்றனவா என்று எப்போதும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
" காமக்க்ரோத மோஹஸ்ம்ருதிப்ப்ரம் ச புத்திநாச ஸர்வநாச காரணத்வாத்"
தீயவர்களின் சேர்கையால் காம குரோத மதி மயக்கங்களால் நினைவாற்றல் அழிந்து அறிவும் நாசமாகி இறுதியில் சர்வ நாசமும் ஆகிவிடும்.
          பகவான் சம்பந்தப்பட்ட தத்துவங்களையும் நாம ஜெபம் பஜனைகளும் விட்டு விட்டு புலன்களுக்கு இன்பம் தரும் உலகியல் விசயங்களில் கவனம் செலுத்துவதே தகாத விஷயம்.சர்வ நாசத்திற்க்கும் இதுவே மூலகாரணம்.
சித்தம் ஓயாது எதை சிந்திக்கிறதோ அதில் பற்று ஏற்படுகிறது.தீயவர்கள் அல்லது தீமை விளைவிக்கும் விசயங்களோடு தொடர்பு கொள்வதால் மனிதனின் சரீரம், வாக்கு,மனம் யாவும் அடங்காத ஆசைகளோடு அடிமையாகின்றன.ஆசைக்கு அடிமையாகிவிடும்போது பேராசை மேலும் பெருகுகிறது.ஆசை நிறைவேறாவிட்டால் கோபம் வருகிறது.கோபத்தால் மதி மயக்கமும் நினைவாற்றலும் அழிகிறது.அறிவு நாசத்தால் இகலோக பரலோக நலன்கள் அழிகின்றன.பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.ராஜச குணத்தால் உண்டாகும் காமமும் (சகலவித ஆசைகளும் காமத்தில் அடங்குகின்றன)குரோதமும் தான் மனிதனை பாவக்குழியில் தள்ளுகின்றன.எல்லா நன்மைகளையும் இவை அழித்து விடுகின்றன.அர்ஜுன இவை இரண்டையும் நீ பரம வைரிகளாக நினைப்பாயாக.(தொடரும்) 

Thursday 15 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 33

துஸ்ஸங்க: ஸர்வதைவ த்யாஜ்ய :"


பாண்டிய மன்னன் தீயவர்களான சமணர்களோடு இணைந்து நட்பு கொண்டதால் இறைவன் அருளை இழந்து பெரும் துன்பத்திற்கு ஆளானான்.அந்த நாட்களில் பாண்டிய நாட்டில் சமண மதம் பெருகி சைவ மதம் குன்றி இருந்தது.பரம்பரை பரம்பரையாக சைவ நெறியில் நின்ற பாண்டியமன்னன் முந்தய பிறவியில் செய்த தீவினையின் பயனாக சைவ சமயத்தை நீக்கி சமண சமய நெறியின் சார்பையே நல்லறம் எனகருதியிருந்தான்.
          இந்நிலையில் பாண்டிய மன்னனின் பட்டத்து மஹா ராணியார் மங்கையர்க்கரசி மந்திரியாரையும் வீரர்களையும் அனுப்பி திருஞானசம்பந்தரை அழைத்து வர செய்தார்.இதற்கிடையில் சமணர்கள் தவ வேடத்தில் தங்களை மறைத்துக்கொண்டு திருஞானசம்பந்தர் தங்கி இருக்கும் திருமடத்தை அடைந்தார்கள்.அங்கு தீ மூட்ட மந்திரம் ஜெபித்தார்கள். மந்திரத்தால் மடத்திற்கு தீ மூட்ட முனைந்தார்கள்.ஆனால் அவர்கள் மந்திரம் ஜெபித்தும் தீபற்றவில்லை.இதனால் மனம் தளர்ந்து ஒன்று கூடி அச்சம் பெருகிடக்க ஆலோசித்தார்கள்.பிறகு அரசன் இதை அறிந்ததால் நமது மேன்மையை மதிக்கமாட்டான் நமது பிழைப்பையும் கெடுப்பான் என்று எண்ணி அவர்கள் தம் கையால் தீக்கோல் எடுத்து சென்று சிவனடியார்களின் மடத்திற்கு தீயிட்டார்கள்.
         மடத்தின் வெளிப்புறத்தில் பற்றிய தீயை கண்ட சிவனடியார்கள் மனம் கலங்கி அதை தணித்தார்கள். சமணர்கள் செய்த பாவ காரியங்களால் அந்த வினைப்பயன் வீண் போகவில்லை.அவர்கள் மூட்டிய தீ பாண்டியமன்னனிடம் வெப்ப நோயாக வந்து சேர்ந்தது பாண்டியனுடைய உடல் வெப்பு நோயின் கொடுமையால் நடுங்கியது.எரியும் நெருப்பை போன்ற சூடு கணகண வென்று அவன் உடம்பெல்லாம் பரவியது.மன்னன் சமணர்களை பார்த்து "நீங்களும் சிவனடியாரான ஞானசம்பந்த பிள்ளையாரும் என் நோயை தீர்த்து உங்கள் தெய்வத்தன்மையை நிலை நிறுத்தி கொள்ளுங்கள் "என்றான்.
        பாண்டியன் தன்னை சூழ்ந்து ஓலமிடும் சமணர்களையும் அருளுடைய ஞானசம்பந்தரையும் நோக்கி "எனக்குள்ள அந்த வெப்பு நோயை நீங்கள் தனித்தனியாக வெவ்வேறு  விதமாக விரைவில் தீர்த்து வையுங்கள்.அதை தீர்த்து வைபவர்களே வாதில் வெற்றிபெற்றவர்கலாவர் "என்று மன்னன் சொன்னான்.உடனே சமணர்கள் அரசே நாங்கள் மந்தரித்து எங்கள் தெய்வ வல்லமையால் உமது உடம்பின் இடது பாகத்திலுள்ள நோயை தீர்ப்போம். என்று சொல்லி அரசனது இடது பாகத்து நோயை தீர்பதற்காக அவர்கள் மன்னவனருகே தங்கள் நாமத்தை முழங்கி மயிர்ப்பீலிக்கற்றயினால்  அரசனது இடப்பாகத்தை தடவினார்கள்.அதனால் வெப்பம் முன்னிலும் அதிகமாக கொதிதெழுந்து பாண்டிய மன்னனை வருத்தி எடுத்தது.மன்னன் அதை பொறுக்கமுடியாதவனாகி ஞானசம்பந்தரை பார்த்தான்.சம்பந்தர் ஆலவாய் சொக்கநாதரை நினைத்து "ஆலவாய் அண்ணலே அரசனின் வலப்பக்கத்து வெப்பு நோயை நீரே மந்திரமாகி, மருந்துமாகி தீர்ப்பீர் என்று வேண்டிக்கொண்டு பெருமானை நினைத்து மந்திரமாவது  நீறு என்னும் திருநீற்று பதிகத்தை பாடி அந்த திருநீற்றை கொண்டே அரசனது வலப்பக்கத்தில் தடவியருளினார்.தடவியதும் வலப்பக்கமிருந்த வெப்புநோய் முழுவதும் நீங்கி பொய்கை போல குளர்ந்தது. ஆனால் அவ்வலப்பக்க நோய் 
இடப்பக்கம் புகுந்து முன்பிருந்த நோயோடு சேர்ந்து இருமடங்காக பெருகலாயிற்று.சமணர்களின் பீலிகள் அந்த நோயின் வெப்பத்தால் எரிந்து கருகின.உடம்பின் இடப்பக்கத்து வெப்பம் தங்களையும் தாக்க ஆரம்பிக்கவே சமணர்கள் நடுங்கி அதை தாங்க முடியாமல் தள்ளி பொய் ஒதுங்கி நின்றார்கள். திருஞானசம்பந்தர் வலப்புறத்து வெப்பு நோயை போக்கியது கண்டு அங்கிருந்த பெரியவர்கள் அதிசயித்து அவரை சூழ்ந்து கொண்டார்கள்.உலகில் வெப்பமும் தட்பமும் பொருந்தி இருப்பது போல அரசன் உடம்பிலும் ஒரு பக்கம் வெப்பமும் மறுபக்கமும் குளிர்ச்சியும் பொருந்தி இருந்தது.
          மன்னன் கூறினார்.என்னுடல் ஒன்றிலேயே இந்த இருவேறு தன்மைகளின் இயல்பையும் அனுபவித்தேன்.என்னே அதிசயம்.வெப்பமான சமணர்களே நீங்கள் தோற்று விட்டீர்கள்.என்னை விட்டு தூர போய் விடுங்கள்.என்று கூறி ஞானப்பிள்ளையார் சம்பந்தரை நோக்கி என்னை வாழ்விக்க வந்த மறைக்குல வள்ளலாரே என் உடலின் இடப்பக்கத்திலுள்ள வெப்பு நோயும் தீர நீரே அருள் செய்யும் என்று வேண்டினார்.ஞானசம்பந்தர் தமது திரு முகத்தில் கருணை காட்டி திருக்கையில் வெண் திருநீறு காட்டி திருப்பதிகம் நிறைவாக்கிதுதித்து பாண்டியனுடலில் இடது பக்கம் ஒருமுறை தடவ அரசனது இடப்பக்கத்து வெப்பம் அகன்று நோய் முழுவதும் நீங்கியது.பாண்டி மா தேவியாரும் மந்திரி முதலிய பெரியோர்களும் சம்பந்தர் திருவடிகளை தங்கள் தலைகளால் வணங்கி நாங்கள் பெருமை பெற்றோம் மேன்மையுற்றார் எங்கள் மன்னர் என்று கூறி உள்ளம் மகிழ்ந்தனர்.
                                                                                      (தொடரும்) 

Wednesday 14 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 32

          ராமாயணத்தில் ராமன் மனம் பரதனிடம் இருந்தது.பரதன் மனம் ராமனிடம் இருந்தது.
         கோபிகை பெண்கள் என் மகிமை பாடி என்னையே பூஜித்து சிரத்தை கொண்டு என்னையே மனதில் வைத்திருந்தார்கள்.நானும் அவர்களை மனதில் வைத்து இருக்கிறேன்.பூஜிக்கிறேன் என்று பகவான் கூறுகிறார்.ஒரு கட்டத்தில் கோபிகை பெண்கள் கண்ணனாகவே மாறி விடுவார்கள்.பகவத் கீதையில் கூறுகிறார்: பக்தர்கள் எப்படி என்னை பூஜிக்கிறார்களோ அப்படியே நான் அவர்களை பூஜிக்கிறேன்.இதுவே உண்மையான மகான்களின் அடையாளம்.
      "  ததேவ ஸாத்யதாம்     ததேவ ஸாத்யதாம்"
ஆதலால் மகான்களை சந்திக்க அவசியம் முயற்சிக்க வேண்டும்.அப்போது
வெகு சீக்கிரமே பகவானின் அருளை பெற்று விடலாம்.
         வெளி தோற்றத்தில் மகான்களை பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் நெடுநாள் அவர்கள் கூட இருந்து பழக வேண்டும்.அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று சில காலதிருக்கு பின் அறிந்து கொள்ளமுடியும்.தன்னையும் முழுமையாக அர்ப்பணித்து விட வேண்டும்.
        ஸ்ரீ கிருஷ்ண பகவான் பக்தி யோக தத்துவத்தை நன்கு அறிந்து கொள்ள உத்தவரை கோபிகை பெண்களிடம் அனுப்புகிறார். உத்தவர் பிருந்தாவனதிருக்கு வந்து கோபிகை பெண்களின் உயர்ந்த பிரேமை பக்தியை நேரில் கண்டறிகிறார். அன்பின் உச்சகட்டத்தை தொட்டு விட்ட அவர்களின் வாழ்க்கை முறையை கண்டு மிகவும் வியந்து போகிறார்.இது போலவே மகான்களை நாம் அவசியம் நேரில் காண வேண்டும். அவர்களை தேடி போக வேண்டும்.
          மகான்களும் அனைவரையும் உற்றவராக நினைத்து பகவானின் பக்தியோக ரகசியத்தை உபதேசித்து விட மாட்டார்கள்.அவர்கள் உள் மனதில் தெய்வ சங்கல்பம் அனுமதி தந்தால் தான் ஏற்றுக்கொள்வார்கள்,அவர்களிடம் உண்மையாக நடந்து கொண்ட பின் உலகியல் ஆசைகளை பெரிதாக மதிக்கிறோமோ என்று அறிந்த பின் நம்மை பகவானை நோக்கி திசை திருப்புவார்கள்.அவர்கள் அருளால் (நம்மை சோதித்தபின்)நாம் பகவானின் அன்புக்கு பாத்திரமாகி விடுவோம்.நமது மனமும் அருள் தாகம் எடுத்து பகவானுக்காக எங்கும்,உருகும்.
          பகவானின் பிரேமையில் இரண்டரகலந்த பக்தர்கள் நம்மை என்றும் கை விட மாட்டார்கள்.அவசியம் நம்மை கரை சேர்ப்பார்கள்.இப்படிப்பட்ட மகான்கள் மோட்சத்தையும் விரும்பாதவர்கள்.மக்களை உய்விப்பதர்காகவே ஜென்மமேடுப்பர்கள்.பகவானின் அருளை பெறுவதற்காக அலையும் பக்தர்களை சந்தித்து மிகவும் மகிழ்ந்து ஞானத்தையும் பக்தியையும் உபதேசிப்பார்கள்.அவர்கள் தரிசனமும் ஸ்பரிசமும் பேசுவதும் மிக புண்ணியத்தை தரும்.உலக துன்பங்களில் இருந்து விடுபட அது ஒரு நல்ல வாய்ப்பு என்று நாம் உணர வேண்டும் (தொடரும்)

Tuesday 13 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 31

"லப்யதே அபி தத்க்ருபயைவ "
          எல்லாம் வல்ல அந்த இறைவனின் திருவருளால் மட்டும் மஹா புருசர்கள் சந்திப்பு நிகழும்.
          பகவான் எவரை தன்னுடயவனாக்கிகொள்ள விரும்புகிறாரோ அவரிடம் தன சொருபமாக விளங்கும் மகானை அனுப்புகிறார்.


         திருஞானசம்பந்தர் என்ற மகானுக்கு நேரடியாக சிவபெருமானின் அருள் கிடைத்து இருந்தது.பிள்ளை பிராயத்தில் இருந்தே சிவபெருமானை நினைத்து உருகிபதிகங்களை பாடிகொண்டே இறைவன் குடிகொண்ட கோயில்களுக்கு சென்ற வண்ணம் இருந்தார்.
         திருநெல்வாயில் அறத்துறையில் மூர்த்தியாக வீற்றிருக்கும் சிவபெருமான் ஞானசம்பந்தர் தம் காலால் நடந்து வந்ததை கண்டு மனமிரங்கினார்.சிவபெருமான் அன்று இரவே அவூரில் உள்ள ஒவ்வொரு அந்தணர் கனவிலும் தோன்றி "ஞானசம்பந்தன் நம்மிடம் வருகிறான் முத்து சிவிகையும், முத்து மணிக்குடையும் நம்மிடம் இருந்து எடுத்து சென்று அவனுக்கு கொடுங்கள் " என்று கூறி மறைந்தார்.வேதியர்கள் எல்லோரும் விழித்து எழுந்தனர்.அவ்வூரில் உள்ள சந்திரசேகர பெருமானின் ஆலயத்திற்கு எல்லோரும் திரண்டு சென்றனர்.ஆலயத்தினுள் இருந்தவரும் அக்கனவு கண்டு எழுந்தார்.அனைவரும் சேர்ந்து ஆச்சர்யம் அடைந்தனர்.திருப்பள்ளி எழுச்சிக்காலம் வந்தது.அன்பர்கள் திருக்காப்பு நீக்கினார்கள்.
         அங்கே சந்திரசேகர பெருமானின் முன்னிலையில் சந்திரனை போல பிரகாசமான ஒரு முத்து சிவிகையும் ஒரு வெண்குடையும் ஊதும் முத்து சின்னமும் காணப்பட்டன.எல்லோரும் அளவில்லா ஆனந்தம் அடைந்து தலை மீது கை குவித்து கும்பிட்டு ஆரவாரம் செய்தார்கள்.
          அங்கு திருஞானசம்பந்தர் அன்று இரவே கனவில் சிவபெருமான் தோன்றி நாம் உனக்கு கொடுத்துள்ள முத்து சிவிகை முதலானவற்றை ஏற்றுக்கொண்டு சிவிகையில் ஏறி எம்மிடம் வருவாயாக என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.இவ்வாறு இறைவனை முழுமையாக அறிந்து கொண்ட ஞானசம்பந்தர் சிவபெருமானின் பேரன்பு பொழியும் பக்தராக இருந்தார்.
          உண்மையில் பகவானின் அருளும் மகான்களோடு ஏற்படும் தொடர்பும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கும்.
      "  தஸ்மின் ஸ்தஜ்ஜனே பேதா பாவாத் "
பகவானுடன் ஒன்று கலந்து பிரேமையில் திளைத்த பக்தர்களுக்கும் பகவானுக்கும் எந்த வித வித்யாசமும் இல்லாததால் மகான்கள் உயர்ந்தவர்கள்.
       "  ப்ரஹ்மவித் ப்ரஹ்மை பவதி " என்ற உபநிசத வாக்கு படி இறைவனை முழுமையாக அறிந்து கொண்டவர்கள் பிரம்மமாகி விடுவார்கள்.அப்படிப்பட்ட மகான்களை சேவித்தால் அது பகவானுக்கே செய்யும் சேவை ஆகிறது.பாகவத புராணத்தில் பகவானே கூறுகிறார்.சாதுக்கள் என் இதயம் ஆவார்கள்.என் இதயம் சாதுக்களிடம் உள்ளது.என்னை தவிர எவரையும் அறிய மாட்டார்கள்.நானும் அவர்களை விட்டு பிரிய மாட்டேன்.(தொடரும்)
          

Monday 12 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 30

மகான்களின் அருள் கிட்டுவது மோட்சத்திற்கும் அது ஈடாகாது. பகவானின் பிரேமையில் இரண்டற கலந்த பெரியோர்கள் நாடி வந்தவர்கள் மனதில் பக்தியை வித்திடுவார்கள்.என்று துளசிதாசர் கூறுகிறார்.
          மகா புருஷர்களின் சேர்கையால் சீக்கிரமே நமக்கு இறையருள் கிடைத்துவிடும்.அவ்வளவு குறுகிய காலத்தில் யோகம் செய்தாலும் சாங்கிய யாகம் அறிந்திருந்தாலும் புண்ணியம் செய்தாலும் வேதங்களை படித்தாலும் தவம் தியாகம் யாகங்கள் செய்தாலும் தான தட்சிணைகள் கொடுத்தாலும் யம நியமங்கள் கடைபிடித்து தீர்த்தாடனம் செய்தாலும் விரதங்கள் இருந்தாலும் அவர்களுக்கு நான் வசப்பட மாட்டேன்.என்று பாகவதத்தில் பகவானே கூறுகிறார்.இதற்க்கு காரணம் என்ன வென்றால் மேற்சொன்ன சில சாதனைகள் இகலோக ஆசையின் அடிப்படையில் அல்லது பரலோக ஆசையின் அடிப்படையில் செயாப்படுகின்றன.மேலும் அந்த சாதனைகள் நிஷ்காம பாவமாக (பலனை எதிர்பாராத ) செய்த பின் சித்தம் தூய்மை அடைந்து முக்தி யடைய தகுதி கிடைக்கிறது.ஆனால் மஹா புருசர்களின் சேர்கையால் மிக எளிதாக சுதந்திரமாக மாறாத பிரேமை பக்தி கிடைத்து விடுகிறது.அது அவர்கள் நம் மீது அன்பு கொண்டு பேரருளை பொழிவதற்கு மட்டும் கிடைக்கும் மிக அரிதான வாய்ப்பு.
          சூத்திரத்தில் மேலும் கூறப்படுவதாவது:
பூர்வ ஜென்மத்தில் புண்ணியமான பலனால் அல்லது இறைவனை தொழுத பலனால் நேரடியாக பகவானின் சிறிதளவு அருள் கிடைத்தாலும் உய்வடயலாம்.ஆனால் பகவானின் அருளால் தான் மகா புருஷர்களின் சந்திப்பும் கிடைக்க கூடும்.அந்த சந்திப்பு மிக அரிதானது என்று அடுத்த சூத்திரத்தில் கூறுகிறார்கள்.
 "மஹத்சங்கஸ்து துர்லபோ அகம்யோ அமோகச்ச "
உலகில் நேரான சுபாவமுள்ள தர்ம சிந்தனை உள்ள நல்லொழுக்க சீலர்களாக இருக்கப்படும் தெய்வ சம்பத்து படைத்த மகான்களை காண்பது அரிது.உபதேசங்கள் சொல்வது சுலபமானது.அதை கடைபிடிக்கும் சாதுக்களோ பரம ஞானிகளோ எளிதில் கிடைக்க மாட்டார்கள்.நாம் உண்மையாக சரண் அடைந்தாலும் பாராமுகமாக இருப்பார்கள்.யோகிகளும் ஞானிகளும் விரும்பும் பிரேமை பக்தி அவர்கள் மூலமாக சாமானியமாக கிடைப்பதும் இல்லை.மேலும் உயர்ந்த ஞானிகளை அடையாளம் காண முடியாமல் போகிறது.
          சிலர் எல்லாம் அறிந்தவர்களாக சாஸ்திரம் படைத்தவர்களாக இருப்பார்கள்.கவர்ந்திழுக்கும் பேச்சு திறமை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.பக்தர்கள் போல தத்துவ மேதைகள் போல நடிப்பார்கள்.மனம் உருகுவது கண்ணிற் வடிப்பது,தெய்வம் தன்னில் இறங்கி விட்டது என்று ஆடுவது எல்லாம் புற தோற்றதால் எதையும் நிச்சயமாக நம்ப முடியாது.சிலர் ஆழ்கடல் போல எந்த ஆர்பாட்டமும் அல்லாது இருப்பார்கள்.எதையும் நிச்சயிக்க முடியாது.நான் தான் பெரிய ஞானி என்று எவரும் தன வாயால் சொல்வதில்லை. ஆதலால் உண்மையான மகானை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.அதிஷ்டவசமாக ஒருவர் கிடைத்துவிட்டால் பிறவி எடுத்த பலனை அடைந்துவிடலாம்.அவரிடம் சென்று சரண் அடைந்தது வீண் போகாது.
         சாதரணமாக ஒரு நல்லவரோடு நட்பு கொள்ளும்போது நம் மனதிற்கு இதமாக இருக்கிறது.நமது துன்பங்கள் தீர்ந்துவிட்டது போல அனுபவம் உண்டாகிறது.அதற்கும் மேலாக நமக்கு மகா புருசர்கள் கிடைத்தால் நமது பாக்கியமே பாக்கியம்.அவர்கள் நம் மனதை தூய்மை படுத்தி பகவானை நோக்கி திருப்பி விடுவார்கள்.அவர்கள் தரிசனத்தால் நமக்கு அடிமனதில் பக்தி சுரக்கும்.(தொடரும்)

Sunday 11 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 29

விஷ வேகம் என் தலைக்கு ஏறி என்னை சாய்த்து விடுமே ! அதற்க்குள்ளாக நான் கொய்த இந்த வாளைக்குருத்தை வேகமாக கொண்டு போய் கொடுப்பேன்.நிகழ்ந்ததை ஒருவரிடமும் சொல்ல மாட்டேன்.பெரியவர் போஜனம் செய்தருளல் வேண்டும்.என்று நினைத்து வீட்டினுள் புகுந்து தன தாயிடம் வாழை குருத்தை கொடுத்து மயங்கி சுருண்டு விழுந்தான்.மகனின் கையில் உதிரம் வடிவத்தையும் உடலின் குறிகளையும் கண்டு விஷம் தீண்டியதால் மாண்டுவிட்டான் என்று உணர்ந்து கொண்டு விட்டார்கள்.ஆனாலும் அவர்கள் சிறிதும் மனம் கலங்காமல் திருநாவுக்கரசர் போஜனம் செய்வதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்தார்கள்.அருமை புதல்வனின் சவத்தை ஒரு பாயில் வைத்து சுற்றி மூடி வீட்டின் ஒரு புறத்தில் மறைத்து வைத்தார்கள்.பின்பு பெரியவர் அமுது செய்ய காலதாமதம் ஆகிறதே என்று பரபரப்போடு இல்லை விரித்து சோறு காய்கறிகளெல்லாம் அழகுற வைத்து விட்டு திருநாவுக்கரசர் சுவாமிகளிடம் வந்து வணங்கி எழுந்து நாங்கள் பகவான் அருள் பெற்று பாக்கியசாலி யாக திருவமுது செய்து எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார்கள்.
           திருநாவுக்கரசர் எழுந்து கை கால்களை கழுவி வேறொரு ஆசனத்தில் அமர்ந்து இலையில் உணவிற்கு முன் வெந்திருநீறு பூசிக்கொண்டார்.பிறகு அவர் அப்பூதியடிகளுக்கும் அவரது மனைவியாருக்கும் திருநீறு வழங்கினார்.அவர் புதல்வர்களுக்கும் திருநீறு கொடுக்கும் போது உங்கள் மூத்த மகனையும் அழையுங்கள் விபூதி சாத்த வேண்டும்.என்றார்.அப்பூதியடிகள் நிகழ்ந்ததை ஒன்றும் சொல்லாமல் "இப்போது இங்கு அவன் வரமாட்டான் என்றார்." இதை கேட்டதும் அப்பர் சுவாமிகளுக்கு இறைவன் அருளால் ஒருவித தடுமாற்றம் உண்டாகியது.அவர் அப்பூதியடிகலாறை பார்த்து இவ்வார்த்தையை எம் உள்ளம் தாங்காது.அவன் என்ன செய்தான் நீங்கள் உண்மையை சொலுங்கள்.என்றார்.உடனே அப்பூதியடிகள் உடல் நடுங்கி பயந்தார்.உண்மையை சொன்னால் பெரியவர் அமுது செய்வதற்கு இடையுறு நேரிட்டு அப்பாக்கியத்தை இழக்க நேரிடும் .ஆனால் மாதவர் கேட்கும் போது உண்மையை மறைக்காமல் சொல்லவும் வேண்டியிருக்கிறதே என்று சிந்தை நொந்து சுவாமிகளை பரிவோடு வணங்கி தம் மைந்தனுக்கு நிகழ்ந்ததை கூறினார். அதை கேட்டதும் திருநாவுக்கரசர் நீர் செய்தது  நன்றாக இருக்கிறது , யார் தான் இப்படி செய்வார்? என்று சொல்லி எழுந்தார்.ஆவி நீங்கிய பிள்ளையின் சவத்தை பார்த்தார்.இறைவன் திருவருள் புரியும் வண்ணம் "ஒன்று கொலாம் " என்னும் திருப்பதிகத்தை பாடி பாம்பின் விஷத்தை போக்கலானார்.தீய விஷம் நீங்கியது.மூத்த புதல்வரான திருநாவுக்கரசு ,சுவாமிகளின்சிவந்த  திருவடிகளை வணங்கினார்.   அவனுக்கு அவர் தூய வெண்ணீறு அளித்தார்.அப்பூதியடிகளும் அவர் மனைவியாரும் ஸ்வாமிகள் உணவு உண்ண இவன் சிறிது இடையூறு செய்தானே என்று மனம் வருந்தினார்கள்.
          மற்ற விசயங்களில் ஆசையை துறந்து பற்றற்ற நிலை வந்து அகண்ட பஜனை செய்த பின் பக்தி மேலும் எப்படி உறுதியாகிறது என்பதை கூறுகிறார்கள்.அந்த மேலான பக்தி மகான்களின் கருணை பார்வையால் வருகிறது.பகவானின் அருளால் கூட வரலாம்.
         மகா புருஷர்கள் என்றும் கருணையுள்ளவர்கள் அவர்கள் அருளுக்கு பாதிரமாகிவிட்டாலே போதும்.அவர்களுடன் பொழுதை கடத்த வேண்டும்.
அவர்களை உதாரணமாக வைத்துக்கொண்டால் தாமாக உலக பற்றுகள் விலகி விடும்.பகவானை மறக்காத பாக்கியம் கிட்டும்.மகா புருஷர்கள் சாஸ்திர ஞானம் உள்ளவர்களாக ஒழுக்க சீலர்களாக இருப்பதுடன் பகவானின் தத்துவங்களை உணர்ந்து பக்தயுள்ளவர்கலாகவும் இருப்பார்கள்.இவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள்.
        பாகவத புராணத்தில் சூத ரிஷி கூறுகிறார்:
        அடியார்களான மகான்களின் நட்பு கிடைத்தால் போதும் அதற்க்கு இணையாக சொர்க்கத்தில் கிடைக்கும் மேன்மையும் ஈடாகாது.பிறவாமை என்ற மோட்சமும் பெரிதல்ல.மற்ற ஐஸ்வர்யங்களை கேட்கவா வேண்டும்.மகான்களின் அருகாமையில் வரும் சாந்தியும் சுகமும் வேறு எந்த சாதனத்திலும் வராது.(தொடரும்)

Saturday 10 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 28

அறியாது தன்னிச்சையால் பகவான் நாமம் உச்சரிக்கப்படும் போதே இவ்வளவு பலன்கள் கிடைகின்றதேன்றால் பிரியமுடன் அன்பு மேலிட உள்ளம் உருகி உச்சரிக்கும் போது அதன் பலனை கேட்கவா வேண்டும்.பல ஜென்மங்கள் செய்த பாவங்கள் ஒழியும். பிறவி பெருங்கடலில் இருந்து விடுபட்டு இறுதியில் இறைவனிடம் சேர்ந்து விடலாம்.
"முகயதஸ்து மஹத்க்ருபையைவ பகவத்க்ருபாலேசாத்வா " 
அவன் தாள் பணிய அவன் அருள் வேண்டும்.என்று கூறியிருக்கிறார்.மாணிக்கவாசகர்.
          பிரேமை பக்தி கை கூட வேண்டுமானால் சிறிதளவாவது பகவான் அருள் வேண்டும்.மகான்களின் அனுக்கிரகம்மிகவும் அவசியம்.
         மகான்களின் கருணையால் அடியார்களும் இறைவன் அருளை எளிதில் பெற்று விடுகிறார்கள்.திருநாவுக்கரசர் என்ற மகான் அன்பான கருணையால் அப்பூதி அடிகளாரினை கடைதேற்றினார்.இதற்க்கு உதாரணமாக இந்த கதையை கூறலாம்.
 சோழ நாட்டில் திங்களூரில் அந்தன குலத்தில் அப்பூதியடிகள் என்ற பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.அவர் ஆனந்த தாண்டவம் புரியும் சிவபெருமானுக்கு அன்பர்.திருநாவுக்கரசு சுவாமிகளை கண்டறியும் முன்பே அவருடைய திருத்தொண்டின் பெருமைகளையும் அதற்க்கு இறைவன் அருளிய திருவருட்பன்பையும் பற்றி கேள்விப்பட்டு திருநாவுக்கரசர் மீது மானசீகமாக பேரன்பு கொண்டார்.
          தமது வீட்டிலுள்ள அளவுக்கருவிகளுக்கும் மக்கள்களுக்கும் பசுக்களுக்கும் மற்ற பொருள் எல்லாவற்றிற்கும் திருநாவுக்கரசர் என்ற திருப்பெயரை வைத்து அன்புடன் அழைத்து வந்தார்.தாம் அமைத்த திருமடம்,தண்ணீர்பந்தல் முதலியவற்றிற்கும் திருநாவுக்கரசர் பெயரையே வைத்து அளவிலா அற செயல்கள் புரிந்து வந்தார்.
         அவ்வாறு அப்பூதியடிகள் தர்மங்கள் புரிந்து வாழ்ந்து வரும் காலத்தில் திருநாவுக்கரசர் ஸ்வாமிகள் பல சிவஸ்தலங்களை தரிசிக்க வேண்டி திங்களூர் வழியாக வந்தார். அங்கு தமது பெயர் சூட்டிய ஒரு தண்ணீர் பந்தலை கண்டார்.திருநாவுக்கரசர் அங்கிருந்து புறப்பட்டு அப்பூதியடிகளின் வீட்டு வாசலை அடைந்தார்.திருநாவுக்கரசருடைய திருவடிகளை அப்பூதியார் வணங்கினார்.கருணை வடிவானவரே தாங்கள் என் வீட்டிக்கு வந்தருளினீர்கள்.இது நான் செய்த தவம் என்றார்.திருநாவுக்கரசர் அதற்க்கு "திருபுவனத்தில் எழுந்தருளி உள்ள சிவபெருமானை வணங்கிவிட்டு வரும்போது வழியில் நீர் வைத்துள்ள நிழல் நிறைந்த தண்ணீர் பந்தலை கண்டோம்.அவ்வாறே நீர் செய்து வரும் மற்ற அறங்களை பற்றியும் கேள்விப்பட்டோம்.அதனால் உம்மை காண விரும்பி இங்கு வந்தோம்.என்று கூறினார்.அப்பூதியடிகளே நீங்கள் தண்ணீர் பந்தலுக்கு தம்முடைய பெயரை எழுதாமல் வேறொரு பெயரை எழுத வேண்டிய காரணம் என்ன ? அதை கூறுங்கள் என்று கேட்டார்.
          இதை கேட்டதும் அப்பூதியடிகள் சற்று கோபமாக கூறினார்."சிவனடியாரே நீங்கள் இப்படி சொல்லகூடாது.சமணர்களுடன் சேர்ந்து கொண்டு பல்லவ மன்னர் இழைத்த கொடுமைகளையும் சூழ்ச்சிகளையும் திருநாவுக்கரசர் தமது திருத்தொண்டின் வலிமையினாலே வென்றார்.அத்தகையவரின் திருபெயரயா வேறொரு பெயர் என்று சொல்கிறீர்கள்? சிவபெருமானின் திருவடியின் கீழ் அன்புடன் செய்யும் திருத்தொண்டின் மூலமாக இப்பிறவியிலும் நாம் கடைத்தேறலாம் என்று நினைத்து திருநாவுக்கரசர் என்று பெயர் எழுதினேன்" என்றார்.
           அவருடைய அன்பின் பெருமையை திருநாவுக்கரசர் உணர்ந்து "புறச்சமயமான சமணத்துறையில் நான் முன்பு பிரவேசித்து விட்டேன்.அதை தடுப்பதற்காக சிவபெருமானால் பெருஞ்சுலை நோய் தரப்பட்டு அவரருளால் ஆட்கொள்ளப்பட்டு பாக்கியம் பெற்றிருந்தாலும் சிறு தொண்டன் நான் என்றார்.
         அவருடைய வார்த்தைகளை கேட்டு அவர் தாம் திருநாவுக்கரசர் என்பதை அப்பூதியடிகள் அறிந்து கொண்டார்.தம் இரு கைகளையும்   தலைமேல் குவித்து ஆனந்த கண்ணீர் அருவியாக பெருகி வழிய வாய் குழற உடம்பெல்லாம் புல்லரிக்க தரையில் அப்படியே விழுந்து திருநாவுக்கரசரின் திருவடிகளை தம் தலை மீது வைத்தார்.
          அதன் பின் அப்பூதியடிகளார் திருநாவுக்கரசரை தம் வீட்டிற்க்கு அழைத்து சென்று அவர் தம் திருவடிகளை தமது மனைவி மக்களுடன் வாசனை நீரால் சுத்தம் செய்து அந்நீரை அவர்கள் எல்லோர்க்கும் தங்கள் தலை மீது தெளித்துக்கொண்டு மகிழ்ந்தார்கள்.சுவாமிகளை ஒரு பீடத்தில் அமர செய்து அன்னம் ஏற்கவேண்டும் என்று அப்பூதியடிகள் வேண்டினார். தம் மனைவியாரை பார்த்து ஆண்டவன் அருளால் பெறுவதற்கரிய பேரு பெற்றோம்.என்று கூறி மிகவும் மகிழ்ந்து சமைக்க புகுந்தார்.அறுசுவை கறிகளாக்கி இனிய அன்னம் வடித்து அமுதமாக்கினார். உணவு பரிமாற இலை விரிப்பதர்க்காக தம் பிள்ளைகளில் மூத்த திருநாவுக்கரசரை கூப்பிட்டு வாழை இலை அரிந்து கொண்டு ஓடி வா என்று சொல்லி அனுப்பினார்.
         பெற்றோர் சொல்படி திருநாவுக்கரசு என்ற பெயர் கொண்ட மூத்த மகன் கொல்லைப்புற தோட்டத்திற்கு விரைந்து ஒரு பெரிய வாழை குருத்தை அரிந்தான். அப்போது ஒரு பாம்பு அவன் கையை தீண்டி சுற்றிக்கொண்டு கண்ணில் கனல் எரிய படமெடுத்தபடி இருந்தது.(தொடரும்)

Friday 9 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 27

இந்த புராணத்தில் விஷ்ணுவின் அவதாரங்களும் மகிமைகளும் வர்ணிக்கப்பட்டுள்ளன. இவை உலக தாபங்களையும் துக்கங்களையும் தணிக்ககூடியவை.இதை கேட்பவர்களும் சொல்பவர்களும் புனிதமாகி விடுவார்கள்.
          எல்லையற்ற இறைவன் உவமை அற்றவர், தெவிட்டாத பேரின்பமானவர். அவரிடம் பக்தி கொண்டு விட்டால் இப்பிறவி எடுத்த பலனை அடைந்து விட்டோம் என்பதை அறிய வேண்டும்.உலகியல் சந்தோசங்கள் இதற்க்கு முன் தூசி பெறாதவை.இதை விட மேலானது எதுவும் இல்லாததால் இனி எதையும் அடைய தேவையில்லை.
         ஒரு வீட்டில் அல்லது ஓர் இடத்தில பகவானின் திருநாம குணங்களை பாடி ஒலிக்கசெய்யும்   போது அங்குள்ள சூழ்நிலையே மாறிவிடும்.தீமைகளும் தீய எண்ணங்களும் அங்கிருந்து ஓடி விடும்.
        பகவான் நாமங்களை உச்சரித்தால் பாவங்கள் நாசப்பட்டு போகின்றன.மரண காலத்திலோ எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.நிச்சயம் அந்த ஆத்மா நற்கதி அடையும்.பகவானை ஆராதிக்கும் பொது பத்து குற்றங்களை செய்ய கூடாது.
  1. சான்றோர்களை நிந்திப்பது,
  2. பகவான் நாமங்களை தரக்குறைவாக பேசுவது அல்லது அவமதிப்பது,
  3. குருவை அவமதிப்பது,
  4. சாஸ்திரங்களை நம்பாமல் குற்றம் காண்பது,
  5. பகவான் நாமங்களின் மகிமையை நம்பாமல் இருப்பது,
  6. பக்தி  இல்லாத  தானம்,விரதம்,யாகம் எல்லாம் பகவான் நாமங்களுக்கு ஈடாகாது என்று சொல்வது,
  7. பகவான் நாமங்களை பஜனை செய்ய பிடிக்காதவர்களிடம் பக்தியை பற்றி பேசுவது,உபதேசிப்பது,
  8. இறைவனை நினைத்து உருகாத மனம் படைத்தவரை நிர்பந்திப்பது.
  9. பகவானின் பூஜைக்காக பணம் வசூலித்து அதை கொள்ளை அடிப்பது,
  10. அகந்தை கொண்டு பணியாமல் இருப்பது. 
ஸ்ரீ பாகவத புராணம் கூறுகிறது:
          பகவான் நாமத்தை எப்படி நினைத்தாலும் அது தன சக்தியை அவசியம் வெளிப்படுத்தி விடும்.நெருப்பின் சக்தியை தெரியாமலும் அதை தொட்டால் அதன் சக்தியை காட்டி விடும்.
         அது போல பகவானின் பெயரால் வேறு ஒருவரை அழைத்தாலும் அல்லது கேலி செய்தாலும் அல்லது வேறு விஷயங்கள் பேசும்போது நடுவில் அறியாமையில் பகவானின் பெயரை உச்சரிக்கபடுவதாலும் அந்த திரு நாமத்திற்கு சக்தி குறையாது.அதாவது எந்த சூழலிலும் மனிதர்கள் பாவம் அழியும்.
          பகவானின் மகிமையை புகழ்பாடும் அனைத்து புராணங்களும் திருநாமங்களை பற்றி பெருமை பேசுகின்றன.எல்லா தெய்வங்களுக்கும் ஆயிரம் திருநாமங்கள் உள்ளன.பாகவத புராணத்தில் தன தாயிடம் கபில முனிவர் கூறுகிறார்: 
" பகவான் நாமங்களை உச்சரிப்பவன் புலயனாக இருந்தாலும் அவன் மேன்மை அடைகிறான்.அவன் தவங்களை செய்து விட்டான்.கங்கை முதலிய ஆறுகளில் நீராடிவிட்டான்,யாகங்கள் செய்து விட்டான்,வேதங்களை ஓதி விட்டான்,இதை அறிந்து கொள்க,அவர் மேலும் கூறுகிறார்:
         மனிதன் நடந்து கொண்டிருக்கும் போது தடுக்கி விழுந்தால் ஹரி,ஹரி,என்று ஹரே நமஹா என்று சொல்ல வேண்டும்.அல்லது ராம,ராமா என்று உச்சரிக்கவேண்டும்.வலியால் துடிக்கும் போதும் ஹரி ஹரி அல்லது இஷ்ட தெய்வங்களான சிவா சிவா என்றோ கூற வேண்டும். இவ்வாறு பழகி விட்டால் பழக்கம் காரணமாக தன்னை அறியாமல் பகவான் நாமம் வாயிலிருந்து வந்தால் எல்லா பாவங்களும் கழுவப்படும்.
          பகவான் நாமங்களை உச்சரிக்கும் போது முடிவில்லா பரம்பொருளான இறைவன் நிச்சயமாக  செவிமடுக்கிறார்.ஆபத்து காலத்திலோ அல்லது தேவைப்படும் போதோ பக்தர்கள் ஹரி நாமத்தை உச்சரித்து அழைத்தால் இறைவன் நிச்சயம் அங்கு வருவார்.பிரத்யட்சமாக தெரியாவிட்டாலும் அவர் அருளை நிச்சயமாக அங்கு உணர முடியும்.ஆபத்துகள் விலகும்.துன்பத்தில் மாட்டிக்கொள்பவர்கள் நிச்சயம் அதிலிருந்து விடுபடுவார்கள்.இது சத்தியம்.
மேலும் பகவான் திருநாமங்களை உச்சரிக்கும் போது பகவான் அவர் சித்தத்தில் அமர்ந்து பாவங்களையும் அஞ்ஞான இருளையும் அழித்து விடுகிறார்.சூரிய ஒளி பரவும் போது இருள் காணாமல் போகிறதல்லவா?
                                                                                     (தொடரும்)
        

Thursday 8 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 26

"லோகே அபி பகவத்குணச்ரவண கீர்தனம்" 
உலகில் மனித சமுதாயத்தின் நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது மனதில் இறைவனை சுமந்து கொண்டே இருக்கவேண்டும்.அவனுக்காக எல்லா பணிகளையும் செய்ய வேண்டும்.காதால் அவன் புகழ் கேட்கவும் வாக்கால் அவன் புகழ் பாடவும் அதிகநேரம் செலவிடவேண்டும்.அவ்வாறு செய்யும் போது வெட்டிபேச்சுகளிலும் வீண் விவகாரங்களிலும் ஈடுபட வாய்ப்பிருக்காது.
         சுயநலத்திற்காக பொருளீட்டுவதற்காக பணத்திற்கு பின்னால் போகும்  
மனிதர்கள் சொந்த சுகத்திற்காக உயிர் வாழ்ந்து இறக்கும் மனிதர்கள் சாரமில்லாத உலகில் எதை சாதித்தார்கள்.இவர்கள் ஐந்து அறிவு இரண்டறிவு ஓரறிவு படைத்த மிருக பட்சி ஜீவா ஜந்துக்களை விட கீழானவர்கள்.ஏனெனில் மிருக பட்சிகளுக்கு சூதும் பொய்யும் தெரியாது.பிறரை வஞ்சிக்க தெரியாது.
        பகவான் சம்பந்தப்பட்ட இல்லாத கதைகளும் பேச்சுக்களும் உலகவாழ்க்கைக்கு தேவையாக இருக்கலாம்.ஆனால் இறைவனை நெருங்க வேண்டும் என்று பக்தி செய்பவர்களுக்கு அவை வீணானவையே.பகவானின் திருநாமங்களும் குணங்களும் அடங்கிய பாட்டு அதுவே புண்ணியமும் மங்களமும் தரும்.இதுவே சாத்தியமானது.அந்த மகிமையை அறிந்தவர்களுக்கு ரம்யமாகவும் சலிக்காமலும் நித்தமும் புத்தம் புதிதாகவும் இருக்கும்.மனதிற்கு இன்பம் தரும்.அதை மனதில் பக்தியுள்ளவர்களே அனுபவிக்க முடியும்.ஆனந்தமாக அதை ஏற்றுக்கொள்பவர்களுக்கு துக்ககடலில் இருந்து கரை சேரும் உணர்வு ஏற்படும்.
       பகவானின் பஜனையில் கலந்து கொள்பவர்கள் சிரத்தையுடன் திருவிளையாடல் புராண கதைகளை கேட்பவர்கள் நிச்சயம் பக்தர்களாகி விடுவார்கள்.பாகவத புராண முடிவில் சுகதேவர் கூறுகிறார்.(தொடரும்)

Wednesday 7 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 25

திருநாவுக்கரசர் முன் அலங்காரமாக வந்து நின்றார்கள்.வில் போன்ற நெற்றி விளைநதிழுக்க கான அமுதம் பொங்கும் கொல்வய் கனிவாய் ஒளிவீச கவர்ந்திழுக்கும் கண்கள் மின்னலிட அப்பெண்கள் இன்னிசை பாடினார்கள்.கற்பக பூந்தளிர் போன்ற காலடிகளால் மோக நடிப்புடன் அவர்கள் நடனமாடவும் தொடங்கினார்கள்.அப்சரசுகள் அப்பரின் முன் நடனமாடி பூமாரியை அவர் மீது அள்ளி பொழிந்தார்கள்.அரம்பையர்கள் பலவிததாலும் அப்பரின் மனநிலையை கவர்ந்திழுக்கவும் குலைக்கவும் முயன்றார்கள்.ஆனால் சிவபெருமானின் திருவடிகளில் சிறிதும் அகலாத அன்பு செலுத்தும் பெருந்துரவியாரான அப்பரோ அந்த பேரின்ப நிலையிலேயே நினைவெல்லாம் நிலைத்திருக்க தமது சித்த நிலை சிறிதும் மாறுபடாமல் தம் திருதொன்டிலேயே நிலையாக நின்றார்.அவருக்கு மங்கையரும் சிவமாகவே தென்பட்டார்கள்.

          மனதில் வேறு ஆசைகளை வைத்துக்கொண்டு வெளிப்பார்வைக்கு கோவிலுக்கு சென்று பக்தி கொள்வது போல இருப்பது வெளிவேசமாகும்.பகவான் மீது அன்பு இதயத்தில் இருந்து வரவேண்டும்.உள்ளம் உருகி பாட வேண்டும்.உலக விசயங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் இறைவன் பக்தியார் உருவாகும் பரமானந்தத்தை அறிய மாட்டார்கள்.அது போல இறைவன் பக்தி என்ற தேனை குடித்த பக்தர்கள் உலகியல் விஷயங்கள் என்ற கரும்பு சாற்றை நோக்கி போக மாட்டார்கள்.
         "அவ்யாவ்ருத பஜனாத் "
          பக்தி பகவத் பிரேமையினால் வருகிறது என்பது உண்மை தான்.அது மாறாத பக்தியாக உருவாக வேண்டுமானால் அகண்ட பஜனை அதாவது இடைவிடாத பஜனை செய்ய வேண்டும்.
          இந்த மனம் மிக மோசமானது.இதில் மிருககுணமும் உண்டு.தேவ குணமும் உண்டு.இதை இழுத்து பிடித்து பகவான் திருவடிகளில் பதிய வைக்க வேண்டும்.இல்லையேல் நொடியில் அது வேறு விசயங்களை நோக்கி ஓடி விடும்.அதற்க்கு மனம் வைராக்கியம் அடைந்து பக்குவப்படவேண்டும்.
         தியானம்,பஜனை இன்று செய்தோம்,நாளை செய்யவில்லை என்று இருக்ககூடாது.அது தொடர்ச்சியாக நடைபெறவேண்டும்.
         கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் இதையே கூறுகிறார்.
        அனன்ய பக்தி கொண்டு என்னை என்றும் நினைப்பவர்களுக்கு நான் சுலபமாகிவிடுகிறேன்.ஏனெனில் அவர்கள் மிக உறுதியாக இருக்கிறார்கள்.
இறைவனை நினைத்து நினைத்து அகண்ட பஜனை செய்வார்கள்.
         அன்றாட வேலைகள் செய்யும் போதும் (ஸ்நானம்,போஜனம்)வேறு பல கடமைகள் செய்யும் போதும் பகவானின் திருநாமங்களை ஜபித்துக்கொண்டே இருப்பார்கள்.உயிர் மூச்சில் நாம ஜபம் கலந்து விடும்.(தொடரும்)

Tuesday 6 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 24

ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கும் ஆத்மா ஆனந்த ரூபமானது.அது அன்பு மயமானது.ஏனெனில் ஆத்மா,பரமாத்மா இறைவனின் அம்சம் தான்.இறைவன் பரமானந்த சொரூபமானவர்.பரம பிரேமை என்ற அன்புமயமானவர்.
         ஜீவனில் சித்தம் ஆசை,துக்கம்,கிலேசம் முதலிய வற்றை பற்றிக்கொள்ளும் போது அது கலங்கி போகிறது.அதில் தெளிவு ஏற்படாது.ஆதலால் துக்கத்தை தரும் ஆசைக்கு அடிமையாகி விடுகிறது.ஆதலால் சித்தத்தில் பரமாத்மனின் தெய்வீக சொரூபத்தின் ஒளி பிரதிபலிக்காமல் இருக்கிறது.அந்த ஆத்ம ஜோதி தெரிய வேண்டுமென்றால் விசயங்களை நோக்கி ஓடும் எண்ணங்களை இறைவன் பால் திருப்ப வேண்டும்.அதற்க்கு இரண்டு உபாயங்கள் இருக்கின்றன.மற்ற உலக விஷய ஆசைகளை துறக்க வேண்டும்.உலக விஷய சுகங்களில் ஈடுபட்டுக்கொண்டே பக்தி செலுத்த முடியாது.பற்றில்லாமல் உலகில் கடமைகளை செய்துகொண்டு பக்தி செய்ய  முடியும். ஏனெனில் இறைவன் ஒருவரே அன்புக்கும் ஆசைக்கும் உரியவர்.அவரிடம் மட்டும் பிரியம் வைக்க வேண்டும்.ஏனெனில் நான்,எனது என்று நினைக்கும் போது தான் அங்கு ஆசை உண்டாகிறது.பகவானின் பக்திக்கு முன் நான் என்பது எங்கே வரும்?நான் பகவானுக்கு சொந்தமாகிவிட்டேன் அல்லவா,எனது என்பதும் இல்லை,ஏனெனில் எனது என்பது உலகில் எதுவும் இல்லை.எனக்கு சொந்தமானது அனைத்தையும் அவர்க்கு அர்ப்பணித்து விட்டேன் அல்லவா.
          புலன் வழி சுகங்களில் மனதை செலுத்தினால் அவற்றில் மனம் சிக்கிக்கொள்ளும்.விசயதியாகம் என்ற சூத்திரத்தில் சொல்லப்பட்டது.பகவான் சம்பந்தமான விசயங்களை நாம சங்கீர்த்தன பஜனை வழிபாடு ஆகியவற்றிற்கு எதிரான விஷயங்கள்.
         மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணிப்பார்க்கும்போது மனதை பிரவிபெருங்கடலில் வீழ்த்திவிடும். ஆதலால் சான்றோர்களை சேவிக்கவேண்டும்.பக்தர்களோடும் நல்லவர்களோடும் நட்பு கொண்டு வாழவேண்டும்.முடிந்தவரை இது பகவானின் கட்டளை என்று நினைத்து பலனை கருதாமல் கடமைகளை செய்யலாம், அது தியாக வாழ்க்கைக்கு சமமாகும்.
            ஒரு சமயம் திருநாவுக்கரசர் மதுரையிலிருந்து புறப்பட்டு திருப்புவனம் ராமேஸ்வரம்,திருநெல்வேலி, திருகாளாப்பெர் முதலிய திருப்பதிகளை கண்டு வணங்கி ஆங்காங்கே திருப்பதிகங்களை பாடித்தந்து பாண்டியநாட்டை விட்டு சோழநாட்டை அடைந்து திருப்புகலூர்க்கு வந்து சேர்ந்தார்.. அங்கேயே தங்கி இருந்து பல திருப்பதிகங்களை பாடியவண்ணம் வழிபாடு செய்தார்.
          அவருடைய பற்றற்ற நிலையினை உலகுக்கு எடுத்துக்காட்ட சிவபெருமான் விரும்பினார்.அதனால் திருநாவுக்கரசர் உலவாரதிருப்பணி செய்யும் இடங்களில் எல்லாம் பரர்கற்களோடு   செம்பொன்னும் நவமணிகளும் தோன்றி விளங்கும்படி சிவபெருமான் அருள் செய்தார்.அப்பர் அவற்றை எல்லாம் பருக்கை கற்களோடு சேர்த்து கூட்டி உலவாரத்தில் ஏந்தி தடாகத்தில் வீசி எறிவார்.புல்லுக்கும்,கல்லுக்கும், பொன்னுக்கும் மணிக்கும் சொல்லை தவிர எவ்வித வேறுபாடும் இல்லை என்னும் பற்றுஅற்று நிலையில் இருந்தார்.அப்பரின் இந்த தூய துறவு நிலையை மென்மேலும் விளங்கசெய்ய பூம்புகலூர் புண்ணியனார் விரும்பினார்.
          அவருடைய திருவருளினால் விண்ணுலகத்து தேவதாசிகள் வானகத்தில் இருந்து இறங்கும் மின்னல் கொடிகள் போல மன்னுலகத்திர்க்கு   வந்தார்கள்.
                                                                                                               (தொடரும்)
                                                                

Monday 5 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி23

          இவர்கள் பக்திக்கு இருப்பிடமான இறைவனுடன் இரண்டற கலந்து விடுகிறார்கள்.மற்ற ஞானம் முதலிய விஷயங்கள் முக்கியமில்லாமல் போய்விடுகின்றன என்று நாரதர் கூறுகிறார்.
        "ஸ்வயம் பலரூபதேதி ப்ரஹ்ம குமாரா:"  
          சனகாதி முனிவர்களும் ஸ்ரீ தேவரிஷி நாரதரும் பக்தியால் தான் பக்தியின் உயர்ந்த நிலைக்கு போக முடியும் என்கிறார்கள்.பக்தியே சிறந்த பக்தி என்ற பலனை தருகிறது.ஆதலால் (அதுவே)பக்தி தாமே பலனாக இருக்கிறது.பக்தர்கள் பக்தியை வளைக்கவே மேலும் பக்தி செய்கிறார்கள்.அதாவது இறைவனை நேசிக்கிறார்கள்.பக்தி இயற்கையாகவே தாமாக வருகிறது.அதை விட சிறந்தது எதுவும் இல்லை.அது ஆண்டவனையும் வசப்படுத்தி விடுகிறது.
       "  ராஜ க்ருஹ போஜனாதிஷு ததைவ த்ருஷ்டத்வாத் 
ந தேன ராஜ பரிதோஷ: க்ஷ்தாசாந்திர்வா "
          அரசனின் அரண்மனையும் ராஜ போக உணவும் நன்கு அறிந்து கொள்ளும் போது அதை பற்றி முழு ஞானம் தான் ஏற்படுகிறது.ஆனால் அனுபவ பூர்வமாக உணர முடியாது.அதாவது அரசனின் அரண்மனை பற்றியும் அரசனை பற்றியும் அறிந்து கொண்டால் அரசனை மகிழ்விக்க முடியுமா?
          அரசன் அறங்காவலன் மிகுந்த படை பலம் பெற்று வலிமையானவன்.குடிமக்களுக்கு நன்மை செய்பவன் என்று தெரிந்து கொண்டால் அரசனிடம் நட்பு கொண்டாட முடியாது, அல்லது அரச போக உணவை அறிந்து கொண்டால் பசி தீராது.அது போல வேத சாஸ்திரங்களை படித்து இறைவனை தத்துவார்த்தமாக அறிந்து ஞானம் பெற்றாலும் அந்த இறை அனுபவம் கிட்டாது. இறை அனுபவம் தியானத்தாலும் யோகத்தாலும் மட்டுமே கைகூடும்.இறைவனை தியானித்துக்கொண்டு இருந்தால் பிரேமை பக்தி முற்றிய நிலை அடையும்.அதனால் உள்ளம் கரைந்து இறை அனுபவம் உண்டாகும்.
         பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்:
பக்தி மிக கொண்டு என்னை தொழுதால் நான் அவர்கள் உள்ளத்தில் குடியிருப்பேன்.அவர்களும் என்னுள் இருப்பார்கள்.
 "தஸ் மாத் சை(सै )வ க்ராஹ்யா முமு க்ஷூ பி " 
          பிறப்பு இறப்புகளில் இருந்து பற்று என்ற பந்தத்திலிருந்து விடுபட் வேண்டுமானால் பக்தியை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
         பிரேமை பக்தியோடு தன வாழ்க்கை யை இணைத்து கொண்டால் பகவானின் தெய்வீகத்தை பிரத்யட்சமாக உணரலாம்.மேலான பக்தியில் ஈடுபட தியாகராஜ சுவாமிகளும் புரந்தர தாசரும் ஆண்டவனை பிரத்யட்சமாக கண்டார்கள்.அவர் அருளை பெற்று சித்தி அடைந்தார்கள்.யோகிகளும் முனிவர்களும் சிரமப்பட்டு கிடைக்கும் முக்தி பக்தர்கள் முன் அடிமை போல வந்து விடுகிறது.ஆனால் பக்தர்களோ முக்தியை விரும்ப மாட்டார்கள்.பகவானை தான் விரும்புவார்கள்.இப்படிப்பட்ட உயர்ந்த நிலைக்கு கொண்டு போகும் பக்தி மார்க்கத்தை விட்டு வேறு மார்க்கத்தை ஏன் பின்பற்ற வேண்டும்?
      "தஸ்யா ஸாதனானி காயன்த்யா சார்யா:"  
கர்மயோகத்தையும் ஞானத்தையும் விட பக்தியே சிறந்தது என்று கூறிவிட்டு பக்தி யோகத்தை கூறும் நாரதர் பக்தி மார்க்கத்தை பின் பற்றும் ஆச்சாரியர்கள் உபதேசிக்கும் உபாயங்களை கூறுகிறார்.
       " தத்து விஷயத்யாகாத் ஸ ங்கத்யாகாச்ச"
பக்தியோக வழியில் செல்ல வேண்டுமானால் ஆசைகளை தூண்டும் விசயங்களை துறக்க வேண்டும்.அந்த இன்பம் என்று கருதப்படும் விசயங்களில் ஒட்டுதல் இல்லாமல் இருக்க வேண்டும்.(தொடரும்)