Tuesday 27 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 46

இவ்வாறு பக்தர்கள் காமம் என்ற ஆசையை இறைவனை நோக்கி திருப்பி விட்டு ஆசைகளை வெல்கிறார்கள்.கோபத்தை பகவானிடம் எப்படி காட்டுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
"தகவிலை தகவிலையே நீ கண்ணா 
தடமுலை புனர்தோறும் ,புணர்ச்சிக்கு ஆராச்-
சுக வெள்ளம் விசும்பு இறந்து,அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து,அது கனவு என நீங்கி ஆங்கே 
அக உயிர் அகம்-அகம் தோறும் உள் புக்கு 
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ!
மிக மிக இனி உன்னைப்பிரிவை ஆமால் 
வீவ நின் பசு-நிறை மேய்க்கப் போக்கே " 
          கண்ணா நீ மிகக் கொடியவன்.உன்னோடு அனுபவித்த இன்ப வெள்ளம் வானை கடந்து என் அறிவை அழித்து கனவை போல மறந்து போயிற்று.என் உயிருக்குள் புகுந்து பொறுக்க முடியாத ஆசை நிலையில் என்னை வீழ்த்துகிறது.நீ இந்த பசுக்களை மேய்க்கப்போவது ஒழிக.காமம்,குரோதம்,சிநேகம்,ஐக்கியம்,நட்பு ஆகிய அனைத்து பாவங்களையும் நிதமும் ஹரியில் செலுத்தினால் இறைவனோடு இரண்டற கலந்து விடும் யோகம் வரும்.
          சூத்திரத்தில் கூறிய கர்வம் என்ற பாவத்தை பகவான் மீது செலுத்த வேண்டுமானால் அந்த உன்னத நிலையை ராதை தான் அடைந்திருந்தாள். அவ்வாறு இதுவரை எந்த பக்தனாலும் அடைய முடியவில்லை.இனி அடையபோவதுமில்லை. ராதை பிரேமை மிகுதியால் கண்ணனோடு கோபம் கொண்டு தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தாள். இது பக்தியின் அதி உச்சகட்ட நிலையாகும்.
"த்ரி ரூப பங்க பூர்வகம் நித்யதாஸ நித்யகாந்த
பஜனாத்மகம் வா,ப்ரேமைவ கார்யம் ப்ரேமைகார்யம்" 
இறைவனை பிரேமை பாவத்துடன் பூஜிப்பதே சிறந்தது என்று கூறுகிறார்கள்.அதாவது எஜமானன்-சேவகன் -சேவை இம்மூன்றையும் துறந்து அல்லது மூன்றையும் கடந்து தாஸ பாவம் அடைய வேண்டும்.அல்லது அன்பானாக நினைக்கவேண்டும்.மாணிக்கவாசகரும் ஆழ்வாரும் பெண் பாவம் அடைந்து இறைவனை தொழுதார்கள்.மாணிக்கவாசகர் இறைவனான பசுபதி ஒருவரே ஆண்,மற்ற ஜீவாத்மாக்கள் எல்லாம் பெண்ணாக இருப்பவைகள்,ஆதலால் ஆத்மாக்கள் எல்லாம் பதியான பசுபதியே நாட வேண்டும்.என்றார்.இங்கு ஸ்ரீ நாரதபெருமான் அதையே காந்தா பாவம் என்று கூறுகிறார்.(தொடரும்)

No comments:

Post a Comment