Saturday 16 February 2013

கற்புக்கரசி சுகன்யா 2

சுகன்யா பதற்றமடைந்து செய்வதறியாது தவித்தாள்.இவர்களில் யார் என் கணவர் என்று அறியாமல் அஸ்வினி குமாரர்களையே சரணடைந்தாள்.தன் கணவர்  யார் என்று அடையாளம் காட்டச்சொல்லி வேண்டினாள்.அவள் கற்பைகண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்து அஸ்வினி குமாரர்கள் அவள் கணவர் சியவனரிஷியை (தேவகுமாரராக மாறிய)அடையாளம் காட்டிவிட்டு வானுலகம் சென்று மறைந்தார்கள்.
          சிலகாலம் கழிந்த பின் சுகன்யாவின் தந்தை தாம் செய்யப்போகும் யாகத்தை தலைமைதாங்கி நடத்திக்கொடுப்பதற்க்கு சியவனரிஷியின் ஆசிரமத்திற்க்கு வருகை தந்தார்.அச்சமயம் தம் மகள் பேரொளி படைத்த ஒரு வாலிபனோடு சிரித்து பேசிக்கொண்டிருப்பதை கண்டார்.அதனால் வருத்தமும் கோபமும் அடைந்தவர்,” உன்னை மகள் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன்.உலகத்தவர் வணங்கும் சியவன ரிஷியை கிழவன்,எதற்கும் பிரயோஜனப்படாதவன்,என்று துறந்து விட்டு இந்த வாலிபனுடன் இருக்கிறாய்? நீ உயர் குடியில் (க்ஷத்திரிய)ராஜாவின் மகளாக இருந்தும் கற்புநெறி தவறிவிட்டாய். நீ தந்தையின் வம்சத்தையும்,கணவரின் வம்சத்தையும் நரகத்திற்க்கு கொண்டு போய் சேர்க்க வழி வகுத்துவிட்டாய்”அதற்கு சுகன்யா “தந்தையே நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.இவர் உங்கள் மருமகன் சியவனரிஷி தான்” என்று கூறி வாலிப பருவம் கிடைத்த சங்கதியை விரிவாக கூறினாள்.அதனால் சந்தோஷமடைந்த சர்யாதி மகளை கட்டி அணைத்துக்கொண்டார்.
          சர்யாதி மன்னரின் யாகம் பிரமாதமாக தொடங்கியது.யாகத்தை நடத்தி வைக்கும் சியவனரிஷி மந்திரங்களை உச்சரித்து உரிய நேரத்தில் தாம் வாக்கு தந்தபடி அஸ்வினி குமாரர்களுக்கு சோமபானம் கிடைக்க செய்தார்.அதனால் கோபமடைந்த இந்திரன் வஜ்ராயுதமெடுத்து மன்னர் சர்யாதியை தாக்க வந்தான்.சியவனரிஷி தன் தபோபலத்தால் இந்திரனின் கையை ஸ்தம்பிக்க செய்து விட்டார்.வஜ்ராயுதமெடுத்து தாக்க வந்த கை அப்படியே செயலற்று நின்றது. அதன் பின் தேவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து சியவனரிஷியை சமாதானப்படுத்தினார்கள்.,இனி யாகங்களில் சோமபான உரிமையை அஸ்வினி குமாரர்கள் பெறுவார்கள் என்று வாக்களித்தனர்.இந்திரனின் ஸ்தம்பித்த கை சரியானது.சர்யாதி தாம் செய்த சோமயாகத்தை சுபமாக முடித்தார்.
  

Friday 15 February 2013

கற்புக்கரசி சுகன்யா

 
மனுவின் புதல்வர் சர்யாதி என்றொரு அரசர் நல்லாட்சி செய்து வந்தார்.அவர் வேதங்களை படித்து கரை கண்டிருந்தார்.அங்கிரஸ கோத்திர ரிஷிகளின் யாகத்தில் இரண்டாம் நாள் செய்ய வேண்டிய காரியங்களையும் மந்திரங்களையும் சொல்லித்தந்தார்.
         
 ஒரு நாள் சியவன ரிஷி ஆசிரமம் இருந்த காட்டிற்க்கு சென்று இருந்தார்.கூடவே தன் படைகளுடனும் மகள் அரசிளங்குமரியான சுகன்யாவும் விருப்பமுடன் வர இயற்கை எழில் ரசித்தபடி காட்டில் தாங்கினார்.சுகன்யா மரங்களையும் வனாந்திரத்தயும் ரசித்தபடி சியவன ஆசிரமம் வந்து சேர்ந்தாள்.அங்கு ஒரு கரயான் புற்று பெரிதாக இருந்தது.அதில் மின்மினி பூச்சி போல இரண்டு ஜோதி பிரகாசமுடன் தெரிந்தது.சுகன்யா குழந்தைதனமாக ஒரு குச்சி எடுத்து அந்த ஜோடிகளை குத்தினாள்.அதனால் அதிலிருந்து மிகையாக ரத்தம் வடிந்தது.அதன் விளைவால் படைவீரர்களின் சிறுநீரும்,மலமும் நின்று விட்டன.அரசன் பதற்றமடைந்து வினவினான்.இது என்ன கஷ்டகாலம்? உங்களில் யாராவது ஒருவர் சியவன ரிஷிக்கு குற்றமிழைத்தீரா?ரிஷியின் கோபத்திற்கு ஆளாகிவிட்டோம்.அச்சமயம் சுகன்யா நடந்ததை கூறினாள்.”தந்தையே நான்தான் கறையான் புற்றிலிருந்த ஜோதியை முனிவரின் கண் என்று தெரியாமல் குத்தி விட்டேன்.”
          அரசர் சியவன ரிஷியின் சாபத்திற்கு பயந்து ரிஷியை பணிந்து மன்னிப்பு கேட்டு (கண் தெரியாத) ரிஷிக்கு தன் மகளை மணம் முடித்து கொடுத்து தன்னயும் தன் நாட்டையும் காத்துக்கொண்டார்.
           சர்யாதி நாடு திரும்பியதும் சுகன்யா சியவன ரிஷிக்கு குறிப்பறிந்து சேவை செய்தாள்.அவர் மணம் கோணாமல் சிந்தை அறிந்து சேவை செய்தாள்.சில காலம் சென்றவுடன் சியவன ரிஷி ஆசிரமத்திற்க்கு தேவ மருத்துவார்களான  அஸ்வினிக்குமாரர்கள் இருவர் வந்தனர்.அவர்களை கண்டு  சியவனரிஷி கூறினார்.”நீங்கள் இருவரும் எதையும் சாதிக்க வல்லவர்கள்.என்னை பெண்கள் மனம் கவரும் கட்டழகனாக,வாலிபனாக மாற்றுங்கள்.யாகங்களில் உங்களுக்கு சோமரஸ பானம் அனுமதியில்லை என்பதை நான் அறிவேன்.இனிமேல் தேவர்,மானுடர்,ரிஷிகள் செய்யும் எல்லா யாகங்களிலும் சோமரஸ பானத்திற்க்கு தகுதி உள்ளவர்களாக செய்கிறேன்.அந்த உரிமையை உங்களுக்கு கிடைக்க செய்கிறேன்.” என்றார்.
          அஸ்வினி குமாரர்களும் அதற்க்கு சரி என்று ஒப்புக்கொண்டனர்.தொண்டு கிழவராக இருக்கும் சியவனரிஷியை அழைத்து வந்து அவர் கையை பிடித்து அஸ்வினி குமாரர்களும் சேர்ந்து சித்தர்கள் ஏற்படுத்திய ஒரு குளத்தில் மூழ்கினார்கள்.சியவனரும் அஸ்வினி குமாரர்களும் சேர்ந்து சித்தர் குளத்தில் மூழ்கி எழுந்தனர்.அச்சமயம் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.மூவரும் ஒன்று போல பட்டாடை உடுத்தி பொன்னாபரணங்கள் அணிந்து ரத்தின கிரீடம் ஜொலிக்க தாமரை மலர் மாலையும் அணிந்து மூன்று தேவ புருஷர்கள் போல அதிசுந்தர புருசர்களாக வெளிவந்தனர்.  ஆனால் முக ஜாடையிலும் ஆடை அலங்காரங்களிலும் ஒன்று போல இருந்தார்கள். திடகாத்திர அங்கங்களுடன் ,சூரியதேஜசுடனும் பிரகாசமாக இருந்தார்கள்.
                                   (தொடரும்)