Thursday 18 July 2013

நரசிம்மாவதாரம் 4

 
ஹிரணியகசிபுவுக்கு நான்கு புதல்வர்கள் இருந்தனர்.சம்ஹ்லாது,அனுஹலாது,ஹிலாது,பிரகலாது என்ற பெயர் பெற்றிருந்தனர்.பிரகலாது நான்காவது மகனாக இருந்தான்.பிரகலாது தான் அண்ணன்களைவிட முற்றிலும் குணங்கள் மாறுபட்டவனாக இருந்தான்.அண்ணன்கள் மிகவும் சுயநலவாதிகளாக இருந்தனர்.பிரகலாதன் பாலகனாக இருந்தாலும் பக்குவப்பட்ட பெரியோர் போல பெருந்தன்மையுடன் இருப்பான்.பிராமணர்களை மதிப்பான். புலனடக்கம் பெற்று சத்தியத்தை கடைபிடிப்பான். பிராணிகளிடம் அன்பு காட்டுவான்.பரோபகாரியாக இருப்பான். தன்னை விட அந்தஸ்து குறைந்தவர்களிடம் நட்பாக நடந்து கொள்வான். பெரியோர்களின் பாதங்களை தொட்டு வணங்குவான்.ராஜகுமாரனாக இருந்தும் பிறர் துன்பத்தை தன் துன்பம் போல நினைப்பான்.மனிதர்களுக்கோ அரக்கர்களுக்கோ இயல்பாக ஆசைப்படும் வாஸ்துக்கள் மீது ஆசைப்பட மாட்டான்.
          ஐந்து வயது பாலகனாக இருந்தும் தன் சகத்தோழர்களுடன் விளையாடாமல் விஷ்ணு பகவானை நினைத்து  தியானத்தில் ஆழ்ந்து இருப்பான்.சில சமயம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் இருப்பான். மொத்தத்தில் அவன் பகவானை நினைக்காத கணமே இருக்காது.பகவான் தன்னை மடியில் வைத்து ஆலிங்கனம் செய்வது போல உணர்வான். சில சமயம் எனக்கு தரிசனம் தராமல் எங்கே போனீர்கள் ஸ்வாமி? என்று கதறி அழுவான்.அல்லது தியான நிலையில் பகவானின் பரமானந்தத்தை  அனுபவிப்பான்.
          ராஜகுமாரர்களுக்கு கல்வி புகட்டுவதற்காக குருகுலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. சுக்கிராசாரியாரின் இரண்டு புத்திரர்கள் சண்டா,அமர்கா,என்ற பெயர் பெற்றவர்கள் அசுர புத்திரர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தனர்.அச்சமயம்ஹிரணியகசிபுவின் நான்கு ராஜகுமாரர்களும் குருகுலத்தில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு அரசியல்,நீதி,அர்த்தசாஸ்திரம்(பொருளாதாரம்)போர்க்கலை எல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டன. பகவத் விஷயங்களிலும் ஆத்மஞானம் பெரும் யோகத்திலும் நாட்டம் கொண்ட பிரகலாதனுக்கோ அதிகார பதவி,பெயர்,புகழ் ஐசுவர்யம் இவற்றுக்கு வழி வகுக்கும் உலகியல் விஷயங்கள், கற்றுத்தரும் பாடங்கள் பிடிக்கவில்லை.அவ்வாறு இருந்தும் குரு சொல்லிக்கொடுக்கும் விஷயங்களை கிரகித்துக்கொண்டான்.அவற்றில் தேர்ச்சியும் பெற்றான்.ஆனால் முழுமனதுடன் அதை விரும்பவில்லை.ஆசிரியர்கள் இவன் மிகவும் புத்திசாலியாக இருக்கிறான்.பாடங்களை கணப்பொழுதில் கற்று தேர்ச்சி பெற்று விடுகிறான்.என்று பாராட்டினார்கள்.ஹிரணியகசிபுவுக்கு இதை தெரிவித்தார்கள். 
          ஒரு நாள் ஹிரணியகசிபு பிரகலாதனை குருகுலத்தில் இருந்து வரவழைத்து அவனை தன் மடியில் வைத்து அப்பனே பிரகலாதா நீ கற்ற கல்வியில் எதை மேன்மையாக நினைக்கிறாயோ அதை எனக்கு எடுத்து உரைப்பாய்.என்றான். பிரகலாதன் கூறினான். இவ்வுலகில் உள்ள மனிதர்கள் நான் எனது என்று பற்றுக்களை விட்டோழித்து புற்களால் மூடப்பட்ட இருள் அடைந்த பாழும் கிணறு போலிருக்கும் உலக வாழ்க்கையை விட்டு துறந்து வனம் சென்று ஸ்ரீஹரியை சரண் அடைவதே சிறந்தது என்று கருதுகிறேன்.
          ஹிரணியகசிபு பயங்கரமாக சிரித்தான். இந்த சிறிய பாலகனுக்கு துறவறம் யார் சொல்லிக்கொடுத்தது. குருவின் ஆசிரமத்தில் யாரோ பிராமண வேடத்தில் நம் எதிரிகளுக்கு துணையாக செயல்படுகிறார்கள். ஆசிரியர்களை கூப்பிட்டு இவ்வாறு பாடம் புகட்டியவனை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கச்சொன்னான்.
          பிரகலாதனை குருகுலத்திற்க்கு அழைத்துச்சென்று குருமார்கள் பிரகலாதனை அன்புடன் பேசி விசாரித்தார்கள். அப்பனே பிரகலாதா உனக்கு மங்களம் உண்டாகட்டும். இங்கு நாங்கள் உனக்கு நன்றாக தானே பாடம் நடத்துகிறோம். நாங்கள் சொல்லித்தராத பாடத்தை நீ ஏன் உன் தந்தையிடம் வேறு ஏதோ விஷயங்களை சொல்கிறாய்.புத்தி கெட்டு போய் விட்டதா? குளவிளக்கே நாங்கள் சொல்லித்தராத பகவத் விஷயங்களை யார் உனக்கு உபதேசித்தது?அல்லது யாரும் உபதேசிக்காமல் அவ்வாறு உளறுகிறாயா?
          பிரகலாதன் கூறினான்: “நமது, பிறரது என்ற வேற்றுமை அறிவு பகவானின் மாயையால் ஏற்படுகிறது. நம்மிடம் இருக்கும் பரமாத்மாவை உணர்ந்து கொண்டால் பகை உணர்வு எங்கிருந்து வரும்? உங்கள் பாஷையில் அந்த பரம்பொருள் ஸ்ரீ நாராயணரே என் மதியை கெடுத்து விட்டார்.அதாவது ஆட்கொண்டு விட்டார். குருஸ்வாமி காந்தம் இரும்பை இழுப்பது போல சக்கரபாணி விஷ்ணுவின் இச்சா சக்தியால் என் மனம் தானாக இழுக்கப்படுகிறது. அவரை நினைத்தவுடன் தன்வசம் இழந்து விடுகிறேன்.”
                                                       .(தொடரும்)        
        
            

Tuesday 9 July 2013

நரசிம்மாவதாரம் 3

 
அஞ்சலி செய்து மிகப்பணிவாக அன்பு கலந்த பக்தியுடன் மனமுருகி கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக துதி பாடினான்.சுவாமி யுகங்கள் முடிந்து கல்ப கால இறுதியில் சிருஷ்டிக்கு முன் காலத்தின் சக்தியில் எல்லா இருளால் சூழப்பட்டிருக்க தன்னொளி பெற்ற தங்கள் தேஜசால் வெளிச்சம் ஏற்பட்டு சிருஷ்டி ஆரம்பமானது. தாங்களே ஜகத்தின் மூல காரணமாக இருக்கிறீர்கள்.பிராணன்,புலன்கள்,மனம்,புத்தி ஆகியவற்றால் தாங்களே தன்னை தோற்றுவித்துக்கொண்டீர்கள். ஜகத்தில் ஜீவன்களுக்கு உயிர் கொடுத்து அவர்களை ரட்சித்து வாழ வைக்கிறீர்கள்.வேதங்களும்,யாகங்களும் உங்களிடத்து தோன்றின.அகில பிரமாண்டமும் உமக்குள் அடக்கம் பெற்றிருக்கிறது.உங்கள் அருட்சக்தியால் அனைத்துயிர்களும் இயங்குகின்றன.
          பகவானே நீங்கள் வரம் தரும் தெய்வங்களில் வரத ராஜாவாக இருக்கிறீர்கள்.தாங்கள் வரம் தர விரும்பினால் நான் கேட்பவை அனைத்தும் தர வேண்டும். தங்களால் சிருஷ்டிக்கப்பட்ட எந்த உயிரினங்களாலும் எனக்கு மரணம் வரக்கூடாது. அவர்கள் மனிதனாக, மிருகமாக இருந்தாலும் சரி,உயிருள்ள, உயிரற்ற ஜடப்பொருள்களாலும், தேவர் இனத்தில் தேவ,அசுர, நாக, கின்னரர்களாலும் மரணம் வரக்கூடாது.வீடு,அரண்மனை அல்லது மாளிகைக்கு உள்ளே அல்லது வெளியே அல்லது பகலில் அல்லது இரவில் தங்களால் சிருஷ்டிக்கப்பட்ட ,சிருஷ்டிக்கப்படாத உயிருள்ள பிராணிகளாலும் உயிரற்ற ஜடப்பொருள்களாலும் எனக்கு மரணம் சம்பவிக்கக்கூடாது. மேலும் அஸ்திரங்களாலும் ஆயுதங்களாலும் தாக்கப்பட்டு நான் இறக்க கூடாது. ஆகாயம் பூமி எங்கும் நான் இறக்க கூடாது.யுத்ததில் என்னை எவரும் எதிர்த்து போர் செய்ய முடியாமல் போகட்டும்.அனைத்து உலகங்களையும் நானே ஆட்சி செய்ய வேண்டும். இந்திராதி தேவர்களும் லோக பால தேவர்களும் உங்கள் மகிமையால் அடிபணிவது போல் அந்த மகிமையை நானும் பெற்று அவர்கள் எனக்கு அடிபணிய வேண்டும். தவசிகளும் சித்த யோகிகளும் அடைந்திடும் தெய்வீக சித்துக்களும் என்னிடம் வர வேண்டும்.
          ஹிரணியகசிபு துர்லபமான இப்படிப்பட்ட வரங்களை கேட்டதும் அவன் தவத்தால் மகிழ்ந்து போன காரணத்தால் பிரம்மா கூறினார்.”அப்பனே நீ கேட்ட வரங்கள் அனைத்தும் மிக துர்லபமானவை.இருப்பினும் நான் அந்த வரங்கள் அனைத்தையும் தந்து விடுகிறேன்என்று கூறினார். ஹிரணியகசிபு அவரை பக்தியுடன் பூஜித்தான்.பிரம்மதேவர் இவ்வாறு வேண்டிய வரங்களை தந்துவிட்டு பிரமலோகம் சென்றார்.
          ஹிரணியகசிபு வரங்களை பெற்று விட்டு நாடு திரும்பினான். அவன் மனதில் அடித்தளத்தில் தம்பியை கொன்ற விஷ்ணுவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. முதலில் திக்விஜயத்தை தொடங்கினான்.பூலோகத்தில் இருந்த ராஜாக்களை வென்று பூவுலகை தன் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வந்தான்.அதன் பின் தேவர்கள்,அசுரர்கள்,தலைவர்கள்,கந்தர்வர்கள்,கருடன் நாக தேவர்கள்,சித்தர்கள்,சாரானர்கள், வித்யாதரர்கள்,ரிஷிகள்,பித்ருக்கள் மனுக்கள்,யட்ச ரக்ஷாசர்கள்,பூத பிரேத,பிசாசுக்கள் திசை காக்கும் தேவர்கள் அனைவரையும் வென்று விட்டு சொர்கபுரி அமராவதியையும் வென்று இந்திராதி தேவர்களையும் விரட்டி விட்டான். இந்திரன் மாளிகை சகல சம்பத்துக்களும் நிறைந்திருந்தன.பவள படிக்கட்டுக்கள்,கோமேதகம் பதித்த ஸ்படிக சுவர்களும் வைடூர்ய தூண்களும் மாணிக்க ஆசனங்களும் வண்ண வண்ண விதானங்களும் செல்வச்சிறப்புடன் இருந்தன. பால் நுரை போல மஞ்சங்களும் விரிப்புகளில் முத்துச்சரங்களும் வெகு அழகாக இருந்தன.அப்சரசுகள் பொற்சலங்கை அணிந்து அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தனர். ஹிரணியகசிபு அங்கு ஒரு காட்டமான மது பானத்தை அருந்திக்கொண்டு இருப்பான்.ஆகாயமும் பூமியும் கடல்களும் அவனுக்கு வேண்டிய செல்வங்களை வழங்கிக்கொண்டு இருந்தன.
          அவனது கொடுங்கோல் ஆட்சி எங்கும் நிலவியது.யாக வழிபாடுகளும் தேவ பூஜைகளும் தமக்கே உரித்தாக வேண்டும் என்று ஆணையிட்டான்.இவனது கொடுங்கோல் ஆட்சி பல காலம் நீடித்தது. தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் பூலோகத்தில் தவமியற்றும் சித்த மகா முனிவர்களும் இவனது சர்வாதிகார கொடுமைகளை பொறுக்க முடியாமல் பகவானை சரண் அடைந்தனர்.அவர்கள் நியமங்கள் மேற்கொண்டு உண்ணாமல் உறங்காமல் விரதம் இருந்து பகவானை ஆராதனை செய்து கெஞ்சும் வகையில் பிரார்த்தனை செய்தனர்.அப்போது ஓர் அசரீரி குரல் மேக கம்பீரமாக கேட்டது.”தேவர்களே முனிவர்களே நான் ஹிரணியகசிபு செய்யும் கொடுமைகளை அறிவேன். தேவர்கள் வேதம்,பசு,காளை,பிராமணர்கள்,சாதுக்கள்,தர்மம் இவர்களை நாசப்படுத்துபவர்கள் வெகு சீக்கிரமே அழிந்துபோவார்கள்.நீங்கள் கவலை பட வேண்டாம்.பகையில்லா சாந்த சொரூபியாக பிரகலாதன் ஹிரணியகசிபுவுக்கு மகனாக பிறப்பான்.என் பக்தனான பிரகலாதன் ஒரு பெரிய மகாத்மாவாக இருப்பான். அவனிடம் துவேஷம் வைத்து பகைத்துக்கொள்வான்.அப்போது நானே அவனை சம்ஹாரம் செய்து விடுவேன்.” இதனை கேட்டு அவர்கள் ஆறுதல் அடைந்தனர்.(தொடரும்)        

Tuesday 2 July 2013

நரசிம்மாவதாரம் 2


நரசிம்மாவதாரம்

லோகங்களின் அதிபதி! பிரம்மதேவரே ஹிரணியகசிபுவின் தவத்தீ ஜ்வாலையால் தகித்துக்கொண்டு இருக்கிறோம்.நீங்கள் படைத்த உயிர் வர்க்கம் சாம்பலாவதற்க்கு முன் ஏதாவது செய்யுங்கள்.தாங்கள் எல்லாம் அறிந்தவர்.இருந்தும் ஹிரணியகசிபுவின் அபிப்பிராயத்தை தெரியப்படுத்துகிறோம்.

          பகவானே அவனது லட்சியம் என்னவென்றால் தாங்கள் பெரும் தவத்தாலும் யோகசக்தியாலும் பிரபஞ்சத்தை சிருஷ்டித்து எல்லா லோகங்களுக்கும் மேலான சத்திய லோகத்தில் வீற்று இருக்கிறீர்கள்.அது போல தானும் உலகங்களையும் ஜீவராசிகளையும் தன் வயப்படுத்தி உங்களது மேலான இடத்தை கைப்பற்ற நினைக்கிறான்.எனது லட்சியம் நிறைவேறும் வரை ஓய மாட்டேன்,எத்தனை ஜன்மம் எடுத்தால் என்ன?காலத்திற்க்கு ஒரு முடிவில்லை.இந்த ஆத்மாவும் நாசப்பட்டு போவதில்லை,யுகங்கள் கழிந்தாலும் என்றோ ஒருநாள் என் லட்சியம் நிறைவேறும்.

          பாவ புண்ணிய கர்மங்களின் சட்ட திட்டங்களை மாற்றி அமைப்பேன்.எப்போதும் இல்லாத நியதியை கொண்டு வரப்போகிறேன்.வைகுண்டாதி லோகங்களுக்கு ஒருநாள் அழிவு ஏற்படத்தான் போகிறது.இவ்வாறு நினைத்துக்கொண்டு இருக்கிறான்.பிரபுவே தாங்கள் விதித்த விதிகள் அவன் கைக்கு போய்விட்டால் நல்லவர்களும் தேவர்களான நாங்களும் தொலைந்தோம்.

          தேவர்கள் இவ்வாறு வேண்டிக்கொண்டதும் பிருகு தட்ச பிரஜாபதி முதலிய பரிவாரங்களுடன் பிரம்மதேவர் அன்னவாகனத்தில் ஹிரணியகசிபுவின் தவமியற்றும் ஆசிரமத்திற்க்கு சென்றார்.அங்கு அவர் கண்ட காட்சி ஹிரணியகசிபுவை கரையான் புற்றும், புற்களும் மூங்கில் புதர்களுமாக மறைத்திருந்தன.அங்கிருந்த எறும்புகளும் பூச்சிகளும் மாமிச மேதை,மஜ்ஜை எல்லாவற்றையும் கபளீகரம் செய்து விட்டிருந்தன.மேகங்களால் மூடப்பட்ட சூரியன் போல புதர்களாலும் புற்று மண்ணாலும் மூடப்பட்டும் தவத்தின் தேஜஸால் உலகங்களை தகித்துக்கொண்டு இருந்தான்.

          அவனை கண்டு பிரம்மதேவர் கூறினார்.”அப்பனே ஹிரணியகசிபு உனக்கு மங்களம் உண்டாகட்டும்.கச்யப முனிவர் மகனே உன் தவம் சித்தி பெற்றுவிட்டது.தவத்தை விட்டு எழுந்து வா.தயக்கமின்றி என்ன வரம் வேண்டுமோ அதை கேள்.என்னே உனது மனோ பலம்!அற்புதமான மனோதிடம் கொண்டவன் நீ.எறும்பு முதலிய ஜந்துக்கள் உன் தேகத்தை தின்று விட்டன.அவ்வாறு இருந்தும் எலும்புக்கூட்டில் நீ பிராணனை தக்கவைத்துக்கொண்டு இருக்கிறாய்.இது பேரதிசியம்!இப்படிப்பட்ட கடும் தவத்தை எந்த ரிஷியும் செய்தது இல்லை.இனிமேல் எவரும் செய்யப்போவதும் இல்லை. தேவர்களின் நூறு வருடம் வரை (மனிதர்களின் ஒரு வருட காலம் தேவர்களின் ஒரு நாள் ஆகும். அந்த கணக்குப்படி 36500 வருடம் வரை ) நீர் அருந்தாமல் எவரால் உயிர் வாழ முடியும்? ஹிரணியகசிபு நீ மிக அரிதான செயலை தான் செய்திருக்கிறாய்.உன் தவத்தால் யாம் உன் வசப்பட்டு விட்டோம்.அசுர சிரோமணி, நீ எதை வேண்டுமானாலும் கேள்.உன் விருப்பப்படி எல்லாவற்றையும் தருவோம்,என் தரிசனம் வீண் போகாது”.

          இவ்வாறு கூறிவிட்டு பிரம்மதேவர் எலும்புக்கூடாக இருந்த சரீரத்தில் தன் கமண்டலத்தில் இருந்து தெய்வீக நீரை தெளித்தார்.விறகு சுள்ளிகளுக்குள் புகைந்துகொண்டிருத்த நெருப்பு திடீரென பிரகாசமாக வெளிப்படுவது போல புற்று மண் மூங்கில் புதருக்குள் இருந்து ஹிரணியகசிபு பேரொளியுடன் தோன்றினான்.அச்சமயம் திடகாத்திர சரீரத்துடன் வாலிபனாக வந்தான்.அவனது அங்கங்கள் புது பொலிவுடன் காணப்பட்டன.மனம் தெளிவு பெற்று புலன்களில்  புதிய சக்தி சஞ்சரிக்க குரல் கம்பீரமாக இருந்தது.வஜ்ரம் போல திட சரீரம் உருக்கிய பொன் போல பிரகாசித்துக்கொண்டு இருந்தது.அவன் ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் தேவர்கள் புடை சூழ பிரம்மா இருப்பதை கண்டு அவரை சாஷ்டாங்கமாக பூமியில் விழுந்து வணங்கினான்.(தொடரும்)