Showing posts with label நாரத பக்தி சூத்திரம். Show all posts
Showing posts with label நாரத பக்தி சூத்திரம். Show all posts

Sunday 15 January 2012

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 56

வாத்ஸல்யா ஸக்தி பக்தர்கள்:அதிதி,கச்யபர்,தசரதர்,கௌசல்யா,நந்தன்-யசோதா,வாசுதேவன்-தேவகி.
ஆத்ம நிவேதனா ஸக்தி பக்தர்கள்:   ஸ்ரீ ஹனுமான்,ராஜா அம்பரீஷன்,மகாராஜா பலி,விபீசனர்,சிபி மகாராஜா.
தன்மயதாஸக்தி பக்தர்கள்: யாக்ஞ்யவல்கியர்,சுகர்,சனாகதி முனிவர்கள்,ஞானிகள்,கெள்ண்டின்யர்,சுதீக்ஷனர், தண்டகாருன்ய முனிவர்கள்.
பரம விரஹா ஸக்தி பக்தர்கள்:  உதவார்,அர்ச்சுனன்,கோபிகை பெண்கள்.
          அனைத்து பக்தர்களிடமும் எல்லாவித பக்திகளும் இருந்தன.இருந்தாலும் மேற் கூறப்பட்டுள்ள பக்தர்களில் அந்த அந்த பக்திகள் பிரதானமாக இருந்தன என்பதை குறிப்பிடுவதற்காக அவர்கள் பெயரை கூறியிருக்கிறார்கள்.
"இத்யேவம் வதந்தி ஜனஜல்ப நிர்பயா: ஏகமதா:குமாரல்யாஸ சுக சாண்டில்ய கர்கவிஷ்ணு கௌண்டின்ய சேஷோத்த வாருணீ பலி ஹனுமத் விபிஷனாதையோ பக்த்யாசார்யா:"
சனத் குமாரர்,மகா முனிவர்கள்,வேத வியாசர்,சுக தேவர்,சாண்டில்யர்,கர்கர்,விஷ்ணு,ஆதிசேசன்,உத்தவர்,ஆருணி,பலி,ஹனுமான்,விபீசனர் ஆகிய பெரியோர் அனைவரும்,உலக மக்கள் என்ன சொல்வார்களோ பாராட்டுவார்களா அல்லது அவச்சொர்களால் அவமதிப்பார்களா என்று எதையும் பொருட்படுத்தாமல் பக்தியே சிறந்தது என்று ஒரு மனதாக கூறுகிறார்கள்.
          தேவரிஷி நாரதர் இங்கு அற நூல்களை எழுதி அதில் முதலிடம் பெற்ற ஆச்சாரியர்கள் பெயர்களை கூறி இருக்கிறார்கள்.இந்த மகா புருசர்கள் பக்தி தத்துவத்தை அறிந்தவர்கள்.சனத் குமாரர்கள் பகவான் பூலோகத்தில் அவதாரமெடுக்க காரணமானவர்கள்.
          ஒரு சமயம் இந்த பக்தர்களுக்கு பரிந்து பகவான் தன் துவார பாலகர்களையே அசுரர்களாக பிறக்கும்படி சபித்து விட்டார்.
          ஸ்ரீ வேத வியாசர் 18  புராணங்களையும் இயற்றி உள்ளார்.ஸ்ரீ சுகதேவர் பக்தி ரசத்தின் அமிர்தக்கடலான பாகவத புராணத்தில் கூறியிருக்கிறார்.
          சாண்டில்ய மகரிஷி பக்தி தத்துவத்தை வைத்து பக்தி சூத்திரங்களை இயற்றி இருக்கிறார்.மகரிஷி கர்கரும் கர்கசம்ஹிதை என்ற பக்தி நூலை எழுதி இருக்கிறார்.
          மகரிஷி விஷ்ணு என்பவர் விஷ்ணு ஸ்மிருதியை எழுதியிருக்கிறார்.கௌண்டின்யர் பக்தி மார்க்கத்தை பின்பற்றி சித்தி பெற்றவர்.
          ஆதிசேஷன் பற்றி சொல்லவே வேண்டாம்.பகவானுக்கு சேவை செய்ய லக்ஷ்மணராக பிறந்தவர்.எப்போதும் ஆயிரம் திருவாய்களால் பகவான் புகழை பாடிக்கொண்டு இருக்கிறார்.
         உத்தவர் பகவானிடம் நட்பு கொண்டு நண்பனாக இருந்தவர்.
          ஆருணீ என்ற நிம்பார்க்க மகரிஷி ராத கிருஷ்ண தத்துவத்தை உபதேசித்தவர்.
          பலி மகாராஜா தன் ஆட்சிக்கு கீழ் உள்ள அனைத்து சாம்ராஜ்யங்களையும் வாமன பகவானுக்கு தாரை வார்த்து தந்து இறுதியில் தன்னையும் அர்ப்பணம் செய்தவர்.இவர் மீது பகவான் மகிழ்ந்து பாதாள லோகத்தில் இன்றும் காவல் தெய்வமாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
          ஸ்ரீ ஹனுமானின் தாச பாவம் அனைவருக்கும் தெரிந்தது தான்.விபீசனரின் சரணாகதியும் ஸ்ரீ ராமரிடம் நட்பு கொண்ட பக்தியும் எல்லோரும் அறிந்த விஷயம்.
         இவர்கள் அனைவரும் யார் எது சொன்னாலும் கவலைப்படாமல் பக்தியே சிறந்தது என்று பக்தியோகத்தை பின்பற்றினார்கள்.ஸ்ரீ நாரதரோ பக்தி சூத்திரங்களை எழுதி பக்தி பிரசாரமே செய்கிறார்.
        "  ய இதம் நாரதப்ரேக்தம் சிவானுசாசனம் விச்வஸிதி ச்ரத்தத்தே ஸ ப்ரேஷ்டம் லபதே ஸ ப்ரேஷ்டம் லபதே "
பக்தி சாஸ்திரத்தை இயற்றி விட்டு அதற்க்கு நிறைவாக  ஸ்ரீ நாரதர் கூறுகிறார்.
எல்லா விதத்திலும் நன்மை தரும் பக்தியோகத்தை இங்கு உபதேசித்து இருக்கிறேன்.இது மங்களகரமானது.சிவம் என்றால் மங்களம்,சுபம் என்று அர்த்தம் கொள்ளலாம்.அல்லது பக்தி தத்துவத்தின் ஆதி ஆசான் சாட்சாத் சிவபெருமானே ஆவார்.மேலே கூறப்பட்ட உபதேசத்தில் நம்பிக்கையும் சிரத்தையும் கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன் ஆத்மாவிலும் சித்தத்திலும் இதை பதிய வைக்க வேண்டும்.வாழ்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.(சிரத்தை என்றால் நம்பிக்கை)நோய் தீர நம்பிக்கையுடன் மருந்து உண்பது போல நமது பக்தியின் பலனில் சந்தேகம் கொள்ளாமல் நாம் செய்யும் பக்தி உயர்வையும் எல்லா நலன்களையும் தரக்கூடியது என்ற நம்பிக்கை வைக்க வேண்டும்.அன்பான பக்தியை ஏற்றுக்கொண்டாலோ பகவானுக்கு அன்பனாகலாம்.நிச்சயம் அன்பனாகலாம்.
          சாதாரண மனிதர்களால் பக்தியின் உச்சக்கட்டத்திற்கு போக முடியாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போது அன்பொழுக பிரார்த்தனை செய்ய வேண்டும்.கஷ்டத்தில் வீழ்ந்து விட்டால் இறைவனை அழைக்க வேண்டும்.அழைத்தால் இறைவன் எந்த ரூபத்திலும் வந்து உதவி செய்வார்.அவரை அடைய முயற்சி செய்தாலும் கூட நம்மை கடைத்தேற்றுவார்.
                                        ஸ்ரீ சிவார்ப்பணம்  
                                        சுபம் 
          இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Sunday 8 January 2012

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 55

உலகில் இருக்கப்படும் அனைத்து விசயங்களும் ஆரம்பத்தில் இன்பமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் சலிப்பு உண்டாகிவிடும்.பகவானின் தெய்வீக உருவமும், கதைகளும் தெவிட்டாத தேன் அமுதம், அதை அனுபவ பூர்வமாக
உணர்ந்தவர்களுக்கு தான் தெரியும். பகவானின் திருஉருவ அழகில் பிரேமையும் பக்தியும் கலப்பதால் சுவையும் இன்பமும் கூடிக்கொண்டே போகும். ஒவ்வொரு நொடியும் புத்தம் புதிதாக தோன்றும்.மனதை பறி கொடுக்கும் இனிமையில் முற்றும் துறந்த முனிவர்களும் கரைந்து போவார்கள்.தெய்வீக சச்சிதானந்த அனுபவத்தில் தளைப்பார்கள். அந்த பேரின்பத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை.
"த்ரி சத்யஸ்ய பக்திரேவ கரீயஸீ பக்திரேவ கரீயஸீ "
மனம்,வாக்கு,காயம்-இந்த மூன்று வித சத்தியமான அனுபவத்தால் பக்தியே சிறந்தது என்று நாரதர் கூறுகிறார்.இதை அவரே அனுபவித்து இருக்கிறார்.
          மூன்று வித சத்தியம் என்றால் மூக்காலங்களின் சத்தியமான அனுபவத்தால் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.பக்தியே சிறந்தது என்று கூறுகிறார்.
          பகவானின் அவதாரமான கபில முனிவரின் தாயிடம் கூறுகிறார்.
சகல ஜீவராசிக்களுக்கும் ஆத்மாவாக இருக்கும் பகவானிடம் பக்தி செலுத்துவதை தவிர வேறு எந்த வழியும் சிறந்தது இல்லை.அது மிகவும் பாதுகாப்பான வழி என்றும் பரம்பொருளை தன்னுள் உணர்ந்து சித்தி பெற்ற யோகிகளும் கூறுகிறார்கள்.வேறு விசயங்களில் பற்றும் பாசமும் வைத்தால் அது பிறப்பு, இறப்பு சுழற்சியில் தள்ளி விடும்.அதே சமயம் பகவத் பக்தர்களிடம் தொடர்பு கொண்டால் நமக்கு மோட்சம் அடையும் வழி தெரியும்.
          பக்திக்கு முயற்சி செய்யும் பக்தனையும் பகவான் கைவிட மாட்டார்.சிறிதளவு கூட பக்தி செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் பகவான் கடைத்தேற்றி விடுவார்.அதனால் பக்தியை விட சிறந்தது எதுவும் இல்லை.
          நச்சுப்பால் கொடுத்த பூதனையும் ஒரு கணம் அவர் திரு உருவில் மயங்கினாள். அவளுக்கே மோட்ச சாம்ராஜ்யத்தை அளித்த கடவுள் அவரை தன் உயிராக உற்ற உறவாக அன்பனாக நினைத்த கோபிகை பெண்களுக்கும் யசோதைக்கும் என்ன கொடுக்க போகிறாய் கண்ணா! என்று கூறுவார்கள்.
"குண மா ஹாத்ம்யாஸக்தி ரூபாஸக்தி பூஜாஸக்தி ஸ்மரணா ஸக்தி,தாஸ்யா
ஸக்திஸக்யா  ஸக்தி ,காந்தா ஸக்தி,வாத்ஸல்யாஸக்தி,ஆத்மநிவேதனா ஸக்தி,தன்மயா ஸக்தி,பரமவிரஹா ஸக்தி ரூபா ஏகதாப்யேகாதசதா பவதி "
பிரேமை பக்தி ஒன்றாக இருந்தாலும் பக்தர்களின் சுபாவத்தை அடிப்படையாக கொண்டு பலவாக மாறுகிறது.ஆனால் இதில் ஏற்றதாழ்வுகள் இல்லை என்று கூறுகிறார்கள்.முக்கியமாக இதை 11 வகைகளாக பிரித்து இருக்கிறார்கள்.
 குண மா ஹாத்ம்யா ஸக்தி பக்தர்கள்: தேவரிஷி நாரத மகரிஷி பகவான் வேத வியாசர்,சுகதேவர்,ஆதி சேஷன்,பீஷ்மர்,அர்ச்சுனன்,பரீட்சீத்,அறுபத்துமூன்று நாயன்மார்கள் இதில் அடங்குவர்.
ரூபாஸக்தி பக்தர்கள்:தண்ட காருண்யா ரிஷிகள், கோபிகை பெண்கள் இதில் அடங்குவர்.
பூஜாஸக்தி பக்தர்கள்: அம்பரீஷன்,பரதன்,லக்ஷ்மி தேவி இதில் அடங்குவர்.
ஸ்மரணா ஸக்தி பக்தர்கள்: பிரகலாதன்,துருவன்,சூர்தாசர்,துளசிதாசர் இதில் அடங்குவர்.
தாஸ்யா ஸக்தி பக்தர்கள்:ஸ்ரீ ஹனுமான்,விதுரர்,மீரா,அக்ரூரர்,ஆழ்வார்கள் இதில் அடங்குவர்.
ஸக்யா  ஸக்தி பக்தர்கள்:அர்ச்சுனன்,உத்தவர்,சஞ்சயன்,ஸ்ரீ தாமன்,சுதாமன் ஆகியோர் இதில் அடங்குவர்.
காந்தா ஸக்தி பக்தர்கள்: பகவானின் 8 பட்ட ரிஷிகள்.(தொடரும்)

Friday 6 January 2012

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 54

"ஸர்வதா ஸர்வபாவனே நிச்சிந்திதைர் பகவானேவ பஜனீய:" 
காலம் நேரம் பார்க்காமல் எப்போதுமே எதைப்பற்றியும் கவலைப்படாமல் சிந்தனை எல்லாம் இறைவன் பால் திருப்பிவிட்டு பஜனை செய்ய வேண்டும்.
          ஸர்வபாவென என்றால் பகவானின் அருளையும் ஆற்றலையும் உண்மையாக அறிந்து கொண்டு அல்லது சான்றோர் சொல்வதை கேட்டு மனம்,வாக்கு, சரீரத்தால் வழிபடுவதை கூறியிருக்கிறார்கள்.
          மகா மகிமை பொருந்திய இறைவன் அனைவருக்கும் அன்பன்,நண்பன். அவர் நம்மை அரவணைப்பதற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.இதை நன்கு அறிந்துகொண்டவன்,உலகியல் செல்வங்களை விரும்புகிறவனும் மோட்சம் விரும்பும் சித்தனும்,பகவானை மட்டும் விரும்பும் பக்தனும் அரை நொடியும் அவர் சிந்தனையை விட்டு விலக மாட்டான்.அவ்வாறு நெருங்காதவன் பகவானிடம் நம்பிக்கை கொள்ளவில்லை என்று அர்த்தம்.
          பகவத் கீதையில் பகவானே சத்தியம் செய்கிறார்.என் திருவடிகளை பற்றிக்கொண்டவனை என்றும் நான் கைவிட மாட்டேன்.
          என் மீது பிரேமை பக்தி கொண்டவனாக என்னையே சிந்தித்து என்னை வணங்குபவனாக இரு. என்னையே நீ அடைவாய்.என்று சத்தியம் செய்கிறேன்.ஏனெனில் நீ எனக்கு பிரியமானவன்.
          எந்த விவகாரங்களிலும் சிக்காமல் எல்லாவற்றையும் துறந்து விட்டு என்னையே நீ சரண் அடைந்து விடு.நான் எல்லா பாவங்களில் இருந்தும் உன்னை விடுவிப்பேன்.கவலைப்படாதே,வருந்தவும் வேண்டாம்.
          இவ்வாறு பகவானே உறுதியாக கூறும்போது அவரை தொழாமல் இருந்தால் நிச்சயம் துன்பத்தில் விழுந்து சாவோம்.
"ஸ கீர்த்தியமான சீக்ரமேவாவிர் பவதி அனுபாவயதி ச பக்தான்"
பகவானை பிரியமாக கீர்த்தனை செய்த பின் அவர் வெகு சீக்கிரமே பிரகடனமாகி விடுவார்.தன் தெய்வீகத்தை அனுபவிக்கச்செய்வார்.
          பிரகடனமாகிறார் என்றால் உவமையில்லா சௌந்தர்யத்துடன் தாபத்தை தணிக்கும் எல்லையில்லா ஆனந்தம் தரும் தன் இனிய சொரூபத்தை காண்பிக்கிறார்.
          பகவானின் திருமேனி மனிதருக்கோ அல்லது பிற உயிருக்கோ இருப்பது போல ரத்தமும் சதையும் சேர்ந்து உருவான தேகமல்ல.அது ஒளிமயமான தெய்வீக திரு உருவம்.கீதையில் கோடி சூரிய பிரகாசம் கொண்டது என்று சரியாக சொல்ல முடியாது என்று அர்ச்சுனன் கூறுகிறார்.
ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் பிருந்தாவனத்தில் இருந்து கம்சனை சந்திக்க மதுராபுரி வந்தடைந்தனர்.தன் தெய்வீக திருமேனியிலிருந்து ஜோதி வெள்ளம் எங்கும் பரவ இருவரும் மதுரா வீதிகளில் நடந்து வந்தனர்.கண்கள் பெற்ற பாக்கியத்தை முழுமையாக அடையவேண்டுமென்று மக்கள் வைத்த கண் வாங்காமல் அந்த அழகை பருகினர்.அவர்களில் சிலர் புசித்துக்கொண்டிருந்த உணவை துறந்து கிருஷ்ண பலராமர் அழகில் மயங்கி நின்றனர்.நீராடிக்கொண்டிருந்தவர்கள், தூங்கிகொண்டிருந்தவர்கள், குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்த தாய் மார்கள் ஓடி வந்து கிருஷ்ண பாலராமர்களை கண்டு தன்னையும் தன் கடமைகளையும் மறந்து அவர்கள் அழகில் சொக்கி போய் சிலையானார்கள்.இவை கடவுளின் திருமேனி பற்றி விளக்கப்பட்டவை. கடவுள் திருமேனியின் அருள் ஒளி பிரகாசமாக தோன்றுவதால் தேவர்களும் ஆத்மா ஞான முனிவர்களும் கூட தன்னை மறந்து பரவசமாகிறார்கள்.பகவானின் உருவம், மணம்,ஒளி,ஸ்பரிசம்,இனிய நாத ஒலி இவற்றால் உணர்வுகளை மறந்து சமாதி இன்பத்தை அடைகிறார்கள்.
(தொடரும்)

Wednesday 4 January 2012

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 53

கூடுமானவரை பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.கூட்டாக சேர்ந்து பஜனை செய்யலாம்.அதை தன் வீட்டில் செய்தால் மிகவும் நல்லது.சிராத்த கர்மங்களை தவறாமல் செய்ய வேண்டும்.தாய் தந்தையர்கள் சேவையை மறக்காமல் செய்ய வேண்டும்.
அகத்தூய்மை:கர்வம்,பற்று,பொறாமை,துவேசம்,சோகம்,பாவம் செய்வதை நினைப்பது,காமசிந்தனை இவற்றை எல்லாம் பகவானை சரணடைந்து விரட்ட வேண்டும்.இதற்க்கு பதிலாக நேர்மை,பிரேமை,பணிவு,வைராக்கியம்,சந்தோசம்,நிறைவு,பகவத் சிந்தனை,இவற்றை எல்லாம் உள்ளத்தில் புகுத்த வேண்டும்.
தயா:பிறர் துன்பப்படுவதை கண்டு அந்த துன்பத்தை போக்க முயற்சிக்க வேண்டும்.மித்ரனாக இருந்தாலும் சத்ரூவாக இருந்தாலும் பெரிய மனம் படைத்தது உதவ வேண்டும்.பிற உயிர்களை எப்போதும் கொல்லக்கூடாது. பிராணிகள் மீதும் விலங்குகள் மீதும் இரக்கம் கொள்ள வேண்டும்.சிறு புழு பூச்சியாக இருந்தாலும் உயிருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
          ஆறறிவு இல்லாத உயிரினங்களும் மரம் முதலிய தாவரங்களும் அழிவதை கவலைப்படாமல் தன் சுயநலத்திற்க்காக ஆதாயம் தேடுவது நல்லதல்ல.
கடவுள் நம்பிக்கை:வேதங்களையும் புராணங்களையும் நம்ப வேண்டும்.பரலோகம்,புனர்ஜென்மம் ஆகியவற்றை நம்பினால் தான் பாவம் செய்யாமல் வாழ முடியும்.இல்லையெனில் கண்டதே காட்சி,கொண்டதே கோலம் இருக்கிறவரை அனுபவித்து சாவோம். பிறர் எப்படி போனால் நமக்கு என்ன?என்று வாழ்ந்தால் அதில் பாவமே மிஞ்சும்.இதை விட சூது இல்லாத விலங்குகளும் பூச்சி புழுக்களும் மேலானவையே.
          எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் இருக்கிறான்.அவன் ஆற்றல் விசுவமெங்கும் பரவி இருக்கிறது.காரணமில்லாமல் காரியம் இல்லை, என்பதை உலகில் கண்கூடாக காண்கிறோம்.அவன் சர்வேஸ்வரன், சர்வக்ஞன், கருணைக்கடல். ஆத்மாவாக அனைவருக்கும் அன்பனாக இருக்கிறான்.பக்த வத்சலன்,ஏழைப்பங்காளன் என்று அறிந்து கொண்டால் வாழ்வில் அவனை துணையாக்கிக்கொள்ளலாம்.அவன் ஞானமும் வைராக்யமும் ,பக்தியும், பிரேமையும்,சந்தோசமும் தரக்காத்திருக்கிறான்.தனச்செல்வம் கேட்டால் அதையும் தருவான்.ஜகத்தின் எல்லா செல்வங்களுக்கும் தலைவியான லக்ஷ்மிதேவியை வைத்திருக்கிறான்.புகழ் வேண்டுமென்றால் நம்மை புகழின் உச்சிக்கே கொண்டு செல்வான்.உலகில் இருக்கும் சௌந்தர்யங்களும் இனிமையும்,பிரேமையும் ஞானமும் தனங்களும்,சுகபோகங்களும் புகழும் எல்லாம் சேர்ந்து அவனது மகாமஹிமையின் முன் தூசிக்கு சமம் கூட இல்லை.

உண்மையில் பிரகலாதனின் கடவுள் நம்பிக்கை மிகவும் மேம்பட்டு இருந்தது.இதை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.பாகவத புராணம் கூறுகிறது.ஹிரண்ய கசிபு தன் மகனை நோக்கி கூறுகிறான்.
மகனே பிரகலாதா இது நாள் வரை குருவிடம் கற்ற பாடத்தில் எதை சிறப்பாக கருதுகிறாயோ அதை கூறுவாய் என்றார். அதற்கு பிரகலாதன் தந்தையே விஷ்ணு பகவானின் பக்தியே மிக மென்மையாக கருதுகிறேன்.அது ஒன்பது வகையானது.பகவானின் திருவிளையாடல்களையும் பிறர் பாடும் திருநாமங்களையும் கேட்பது,பகவானின் பாத சேவை,பூஜை தொண்டு செய்தல்,தன்னையே அர்ப்பணம் செய்தல்,தாச பாவம் அல்லது தோழமை கொள்வது,அடியவர்களை வணங்குதல் ஆகியவை பக்தியின் அங்கங்கள்.இதை கேட்டு ஹிரண்யனுக்கு பயங்கர கோபம் வருகிறது.
ஹிரண்யன் பிரகலாதனுக்கு கல்வி புகட்டிய குருவை கடிந்த பின்பு கூறினான். உனக்கு இந்த புத்தி எங்கிருந்து வருகிறது? அதற்கு பிரகலாதன் பதிலளித்தான்.எவருடைய அறிவும் மனமும் பகவானின் பாத கமலங்களை தொடுகிறதோ அவரை பகவானே தன் வசம் இழுத்துக்கொள்கிறார்.உலக விசயங்களில் உழன்று கொண்டிருப்பவர்கள் மேலான பெரும் பேற்றினை அறிய மாட்டார்கள்.
          ஹிரண்ய கசிபு பிரகலாதனை கொல்வதற்காக அரக்கர்களுக்கு ஆணையிட்டான்.கோரை பற்கள் கொண்டு கொடூர குணம் படைத்த அரக்கர்கள் பயங்கரமாக கத்திக்கொண்டு சூலத்தால் தாக்க முற்ப்பட்டார்கள்.பிரகலாதனோ தன்னை பகவானிடம் முழுவதுமாக அர்ப்பணித்து விட்டு மனம் வாக்கு புலன்களுக்கு எட்டாத சர்வாத்மாவாக சகல சக்திகளுக்கும் ஆதாரமாக விளங்கும் பர பிரம்மமாக விளங்கும் பரமாத்மாவிடம் மனதை லயிக்கச்செய்து விட்டதால் அரக்கர்களின் தாக்குதல்கள் அவனை ஒன்றும் செய்ய வில்லை.ஹிரண்ய கசிபு மிகவும் ஆத்திரம் அடைந்து கூறுகிறான்.எமக்கு கீழ் படியாத அதிகப் பிரசிங்கியே, அசுர குலத்தை களங்கப்படுதுபவனே எனது கோபக்கண் அசைவினால் மூவுலகங்களும் நடுங்குமே , யாரை துணை கொண்டு அல்லது பலத்தினால்,தைரியத்தினால் நீ பயப்படாமல் இருக்கிறாய்? அதற்கு பிரகலாதன் பதிலளிக்கிறான்.உங்களுக்கும் எனக்கும் சக்தி அளிப்பவர் அந்த பரம புருஷனே ஆவார்.அவர் பலசாலிகளுக்கும் பலசாலி மட்டுமல்ல.தாவர ஜங்கமங்களுக்கெல்லாம் ஈசன்.தேவர்களுக்கெல்லாம் தலைவர்.காலத்தின் கடவுள்.அவரே தேஜஸாக இருக்கிறார்.அவரே புலன்களுக்கும் தேகத்திற்கும் சக்தி அளிப்பவர்.அவரே உயிர்களுக்கெல்லாம் ஆத்மாவாக இருக்கிறார்.என்று திட நம்பிக்கையோடு கூறினான்.(தொடரும்)  


Tuesday 3 January 2012

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 52

பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்.
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷ மாமனுஸ்மர- என்றென்றும் இடை விடாது என்னை நினைத்துக்கொண்டிருந்தால் இறுதியில் நீ என்னையே அடைவாய்.
பாகவத புராணத்தில் கோகர்ணன் தன் தந்தையிடம் கூறுகிறார்.தந்தையே மாமிசமும் உதிரமும் சேர்ந்திருக்கும் இந்த தேகத்தின் மீது பற்று கொள்வதை விட்டு விடுங்கள்.தன் சொத்து தன் மனைவி மக்கள் என்ற பாச பந்தங்களை அறுத்து விட்டு இறைவனை அடைய சீக்கிரம் வழி தேடுங்கள்.ஏனெனில் இந்த உலகமும் உலக வாழ்க்கையும் நிலையற்றவை என்று புரிந்து கொண்டு வைராக்கியம் அடைய வேண்டும்.
         மீண்டும் கோகர்ணன் கூறுகிறார்:
சாரமில்லா இந்த உலக வாழ்க்கை நொடிப்பொழுதில் முடிந்து விடும்.இதில் மனிதன் பணம்,புகழ்,பதவி,சொத்து,சுகம் இவற்றில் அமிழ்ந்து விடுகிறான்.தன் க்ஷேமத்தை பற்றி அரை நொடியாவது அவன் யோசித்தானானால் சுக தேவர் பாடிய ஒப்பற்ற பாகவத கதையை அமுதம் போல் பருகி தன்னை கடைத்தேற்றிக்கொள்வான்.
பணத்தை சிறுக சிறுக சேமிப்பது போல பகவத் பக்தியை சிறுக சிறுக வளர்க்க வேண்டும்.பகவானை நினைக்காத நாள் வீணான நாள்.நாம் பகவானின் பிரேமை பக்தியை நழுவ விட்டு விட்டோம்.அறியாமையால் இருந்து விட்டோம்.நஷ்டப்பட்டு விட்டோம் என்று நினைக்க வேண்டும்.
"அஹிம்ஸா ஸத்ய சௌசாதயாஸ்திக்யாதி சாரித்ர்யாணி பரிபாலனியாணி"
பக்தியோக சாதகன் அஹிம்சை,சத்தியம்,தூய்மை,தயை,ஆதிக்கம் முதலிய நல்ல விசயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.இந்த தகுதிகளுடன் இருப்பவனே தெய்வ சம்பத்துள்ள நல்ல பக்தன்.பக்தனாக இருப்பவன் நற்குணங்களுடன் இருக்க தேவையில்லை என்று சொல்வது தவறு.ஏனெனில் பாவியாக இருப்பவன் பக்தனாக முடியாது.பக்தன் புண்ணியவந்தனாகவே இருப்பன்.பெரும்பாலும் உண்மையான பக்தனை வெளித்தோற்றத்தை   வைத்து சோதிக்க முடியாது.அதனால் சூத்திரத்தில் கூறப்பட்ட ஐந்து நல்ல விஷயங்கள் அவசியம் இருக்க வேண்டும்.என்று கூறுகிறார்கள்.அவை இல்லையென்றால் அவன் பக்தனே இல்லை.
          பகவான் மீது இயற்கையாகவே ஈடுபாடு ஏற்பட்டால் தெயவாம்சதுடன் இருப்பான் பக்தன்.அசுர சம்பத்துக்கள் வளர்ந்தால் பக்திக்கு தகுதியாக இருக்க மாட்டான்.
          சூத்திரத்தில் ஐந்து நற்குணங்களை கூறி இருக்கிறார்கள்.
அகிம்சை: மனம்,வாக்கு,சரீரத்தால் எவருக்கும் துன்பம் தராமல் இருப்பது,அனைவருக்கும் சுகம் தருபவனாக இருக்க வேண்டும்.
சத்தியம்:சத்தியமாக பேசுவது,சத்தியமாக நடப்பது,சத்தியமாக வாழுவது இவற்றை கலியுகத்தில் முற்றிலுமாக கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் சூதை துறந்து பிறரை ஏமாற்றாமல் வாழ்க்கை நடத்த வேண்டும்.
கூடுமானவரை சத்தியமாக பேசினாலும் இனிமையாக பேசவேண்டும்.பிறர் மனம் புண் படும்படி சத்தியம் பேசினாலும் சிலர் கவலைப்படுவதில்லை.பிறருக்கு நன்மை பயக்கும் விதம் சத்தியம் பேசவேண்டும்.
கெளசம்:அகத்துய்மை,புறததுய்மை.
புறத்தூய்மை - நல்ல சாத்வீக உணவு உண்டு தேகத்தை ஆரோக்கியமானதாகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்ளவேண்டும்.
          அநியாய வழியில் சம்பாதிப்பது பாவப்பட்ட பணம்.தமக்கு உடமையான சொத்தும் அனுபவிக்கும் செல்வமும் தூய்மையாக இருத்தல் வேண்டும்.செய்யும் தொழிலிலும் பிறருக்கு துன்பம் தராமல் நியாயமாக இருக்க வேண்டும்.
          தீயவர்கள் மத்தியில் வசிக்க கூடாது.பிறரை இம்சித்து பிற உயிரை கொன்று மாமிச உணவு கூடாது.உண்ணும் உணவும்,அன்னமும்,அனுபவிக்கும் பொருளும் பகவானுக்கு அர்ப்பணித்த பின்பே தமக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்.கள்ளம் கபடம் இல்லாமல் பழக வேண்டும்.(தொடரும்)

Monday 2 January 2012

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 51

"பக்தி சாஸ்த்ராணி மானனீயானி ததுத்போதக கர்மாண்யபி கரணியாணி"
தர்க்க வாதங்களை தவிர்த்து பக்தியை வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
பிரேமை பக்தியை அதிகமாக தூண்டும் பகவத் சாஸ்திரங்களை படிக்க வேண்டும்.பக்தியை வளர்க்கும் கர்மங்களை செய்ய வேண்டும்.அதற்காக மற்ற நூல்களை படிக்க கூடாது,அரிய விசயங்களை சொல்லும் புத்தகங்களை படிக்ககூடாது என்பதில்லை. எல்லாவற்றையும் படித்து அறிந்து கொண்டாலும் பக்தி சாஸ்திரங்கள் சொல்லும் கருத்துக்களை பின்பற்ற வேண்டும்.பகவானின் புண்ணிய கதைகளை படிக்க வேண்டும்.அவர் குணங்களை வர்ணிக்கும் பாடல்களை பாட வேண்டும்.சான்றோர்கள் எழுதிய நூல்களையும் படிக்க வேண்டும்.அதனால் பிரேமை பக்தியில் நம்பிக்கை ஏற்படும்.
          பக்தியை கண்டனம் செய்யும் நூல்களையும் பக்திக்கு எதிரான புத்தகங்களையும் படிக்க கூடாது.உலகியல் விசயங்களை வர்ணிக்கும் இலக்கியங்களையும் காமக்குரோதாதிகளை தூண்டும் விஷயங்கள் அடங்கிய கதைகளையும் படிக்ககூடாது.அவற்றை புகழ் பெற்ற நூலாசிரியர் எழுதியதாக இருந்தாலும் வாசிக்கக்கூடாது. கீழே கூறப்பட்டுள்ள அறக்கட்டளைகளை பின்பற்ற வேண்டும்.
          பாவப்படாத தொழில் செய்து இல்லறத்தை நல்லறமாக்கவேண்டும். தன்னை சார்ந்திருக்கும் தாய்,தந்தையர்,மனைவி,மக்கள் ஆகியோரை மரியாதையுடனும்,அன்புடனும் நடத்தி காப்பாற்றவேண்டும்.
          தன்னை நம்பி வந்தவர்களையும் காத்து தர்ம நியாயத்துடன் பொருளீட்டவேண்டும். பூஜை, துதி, நாமஜபம்,தியானம் எல்லாம் செய்ய வேண்டும்.சான்றோர்களை சேவித்து புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செய்ய வேண்டும்.
          பசுக்களை பராமரிக்க உதவி செய்ய வேண்டும்.வறியவருக்கு உதவி செய்ய வேண்டும்.
          தெய்வ காரியங்களுக்காக பொருளுதவி செய்ய வேண்டும்.இவற்றையெல்லாம் செய்தால் பகவத்பக்தி நிச்சயம் உண்டாகும்.
என்று பாகவத புராணம் கூறுகிறது.
          அதன் பின் பக்தியின் உச்சக்கட்டத்திற்கு போன பின் சாதாரண மனிதர்களை விட வேறுபட்டு போய்விடுவான்.அந்த நிலையில் சப்த பிரம்மத்தை (ஓம்)உபாசித்து சித்தி பெற்ற குருவை தேடி ஞானம் பெறுவதற்காக போக வேண்டும்.குருவிடம் நன்கு சேவை செய்த பின் அனைத்தையும் கற்று தேர்ந்து பகவான் மகிழும்படி பாகவத தர்மங்களை உபதேசிக்க வேண்டும்.மனதில் பற்றை அகற்றி சகல உயிர்களில் நட்பும் இரக்கமும் அன்பும் கொள்ள வேண்டும்.
          தன் ஆத்மாவை புனிதப்படுத்த தூய்மை,தவம்,பொறுமை,மௌனம்,நேர்மை,வேத அத்தியயனம், பிரம்மச்சர்யம்,அகிம்சை,சமத்துவம் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.சகல உயிர்களிடம் இறைவனை காண வேண்டும்.இவ்வாறு இல்லறம் நடத்தலாம்.அல்லது துறந்து தனித்து வாழலாம். துவர் ஆடை,மரப்பட்டை உடுத்தி எது கிடைத்தாலும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
          மனதையும் வாக்கையும் கட்டுப்படுத்தி சத்தியத்தையும் சாந்தத்தையும் கடைபிடித்து கட்டுப்பாடாக வாழ வேண்டும்.ஜென்மம் எடுத்ததே அவனுக்காக எனவும் செய்வதெல்லாம் அவனுக்காகவே என்று எண்ணிகொண்டு இஷ்டமாக இருப்பதையும் தானம் செய்து புண்ணியங்களையும் ஜபம் செய்த பலனையும் மற்றும் தமக்கு பிரியமாக இருக்கப்படும் பொருளையும் மனைவி மக்களையும் வீடுகளையும் தன் உயிரையும் ஆண்டவனுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும்.மகான்களுக்கும் சாதுக்களுக்கும் சேவை செய்து பக்தர்களுடன் கூட்டு சேர்ந்து பகவானின் புண்ணிய கதைகளையும் தூய புகழையும் பாடி பரஸ்பரம் இன்புற வேண்டும்.அதில் நிறைவும் காண வேண்டும்.அவ்வாறு பக்தி மேலும் உச்சக்கட்டத்தை அடையும் சமயம் பகவானுடன் இரண்டறக்கலந்து புளகாங்கித பரவசநிலையும், பேரின்ப நிலையும் கிடைக்கும்.
"ஸுகதுக்கேச்சாலாபாதித்யக்தே காலே ப்ரதிக்ஷயமானே  க்ஷனார்த்தமபி வ்யர்த்தம் ந நேயம் "
சுகம்,துக்கம் ,ஆசை,லாபம்,முதலியவை தாமாக கழன்று விடைபெற்ற பின் இது தான் நல்ல தருணம் என்று அரை நொடியும் (பஜனை ஜபமில்லாமல்) வீணாக்க கூடாது.
         மேற்சொன்னவாறு எல்லாம் தாமாக தன்னிடமிருந்து விடைபெற்ற பின் பகவானை அடைவதற்கு பல சாதனங்கள் இருக்கும் போது நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும்?
         சிலர் வயதான பின் பக்தியில் ஈடுபட்டுக்கொள்ளலாம்.உலகில் பல கடமைகளை ஆற்ற வேண்டி உள்ளது.என்று கூறுவார்கள்.ஆனால் அவர்கள் கூறுவது சரியல்ல.கடமைகளும் தொல்லைகளும் எப்போதுமே ஓயாது.உலகியல் விவகாரங்கள் அலை எப்போதும் ஓயப்போவது இல்லை.நாம் தான் அவற்றில் இருந்து விடுபட வேண்டும்.மேலும் தேகம் நன்கு ஆரோக்யத்துடன் இருக்கும் போதே பகவத் பக்தியில் ஈடுபட வேண்டும்.மரணமும் வியாதியும் சொல்லிக்கொண்டு வருவதில்லை.(தொடரும்)

Saturday 31 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 50

"யதஸ்ததீயா:"
பக்தர்களின் ஜாதி வித்தியாசமோ மற்ற ஏற்ற தாழ்வுகளோ ஏன் பார்க்ககூடாது?ஏனென்றால் அவர்கள் இறைவனின் அடியார்கள்.பகவானுக்கு சொந்தமானவர்கள்.
"வாதோ நாவலம்ப்ய : "
பக்தியோக சாதகர்கள் வாத விவாதங்களில் ஈடுபட கூடாது.அதற்க்கு அவசியமும் இல்லை.தாம் பகவானை பக்தி செய்வதிலேயே, பஜனை செய்வதிலேயே பொழுதை போக்க வேண்டுமே அன்றி வாத விவாதங்களில் ஈடுபட்டு பொன்னான நேரத்தை வீணாக்க கூடாது.
          உன் வாதம் சரியில்லை.நான் சொல்வது தான் சரி என்று நாத்திக வாதம் அல்லது பிற மனிதர்கள் கருத்துக்களை முறியடித்து தர்க்க வாதங்களை வளர்க்க கூடாது.பகவானின் பிரேமை பக்தியை மறந்து வேறு பல விசயங்களில் சிக்கிக்கொள்ள கூடாது.
          தர்க்கம் செய்யும்போது இரு தரப்பினரும் தன் கருத்துக்களை நிலை நாட்ட பிடிவாதமாகவே இருப்பார்கள்.இறுதியில் சண்டையாக கூட மாறலாம்.
"தர்க்கா பிரதிஸ்தாத் " என்று பிரம்மா சூத்திரம் கூறுகிறது.
           விசிச்டாத்வைத கருத்துக்களை பிரதானமாக கொண்டு எழுதிய ராமானுஜா சாரியார் பக்திக்கு தர்க்கவாதத்திற்கு இடமில்லை என்று பாஷ்யம் எழுதியுள்ளார்.கடோபநிசத் கூறுகிறது.
"நைஷா தர்கேன மதிராபனேயா"
தர்க்க வாதத்தால் பிரம்ம தத்துவத்தை புரிய வைக்க முடியாது.இந்த சத்திய தத்துவம் தூய சித்தம் படைத்த சாத்வீக மனிதனுக்கு தாமாகவே உணரப்படுகிறது.
          தர்க்க வாதம் செய்து சாஸ்திர தத்துவங்கள் அறியப்படலாம் தான்.ஆனால் அதை குருவிடம் சந்தேகத்தை தீர்த்துக்கொள்வதற்காக தர்க்க ரீதியாக அணுகலாம்.அதில் குற்றமில்லை.
          பிற மனிதரோடு பிடிவாதமாக ஒருவர் கருத்தை ஒருவர் வலியுறுத்த வாதம் செய்யும் போது கோபம் வரும். ஒருவரை ஒருவர் திட்டிக்கொல்வார்கள்.பகை என்ற தீ பெரிதாக வளர்ந்து கை கலப்பில் முடியும்.தவிர்க்க முடியாத வாதம் செய்யும் சந்தர்பம் ஏற்பட்டாலும் அதை சுமுகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும்.எதிராளி மிக பிடிவாதக்காரனாக இருந்தால் வாதத்தை தவிர்த்து விட வேண்டும்.
          அவர்கள் கருத்து தன் பக்திக்கு, வழிபாட்டிற்கு எதிராக சந்தேகப்படும்படி இருந்தால் அவர்களுடன் தொடர்பு கொள்ள கூடாது.வார்த்தைகளை வளர்க்க கூடாது.தனது கருத்தை புகழ கூடாது.வாதம் செய்யும் நோக்கம் கொண்டு பேசக்கூடாது.பிறர் குற்றங்களை சுட்டிக்காட்டி அவர் மனம் புண் படும்படி பேசக்கூடாது.தன் கருத்தை மதிக்காதவர்களிடம், ஒப்புக்கொள்ளாதவர்களிடம்தன் கருத்தை திணிப்பதற்காக அவர்களின் கருத்தை வெட்டிவிட்டு அழுத்தமாக பேசக்கூடாது.ஏனெனில் அப்படி பேசினால் எதிர் வாதம் செய்பவர்கள் எதையும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.ஆனால் சிரத்தையுடன் கேள்வி கேட்கப்படும் போது நிச்சயம் பகவத் விசயங்களை பற்றி கூற வேண்டும்.பிறரை கேலி செய்வது போல பேசக்கூடாது.பக்தியில் இருக்கும் நம்பிக்கையை தகர்க்க கூடாது. தானும் கடைத்தேற்றி பிறரையும் கடைத்தேற்றவேண்டும். என்ற எண்ணம் இருக்க வேண்டும். பக்தியில் நன்மை பயக்கும் சொற்களை இனிமையாக அன்பாக கூற வேண்டும்.
           தர்க்க வாதங்கள் நிச்சயமாக பகவத் பிரேமையை அளிக்காது.இறைவனடி சேர்க்காது.ஞானத்தையும் உண்டாக்காது.தர்க்கவாதம் நடக்கும் இடத்தில அகந்தை,துவேசம்,கோபம்,பகை,இம்சை எல்லாம் கூட்டம் கூடி அமர்ந்துவிடும்.
"பாஹூல்யாவகாசாதநியதத்வாச்ச "
வாத விவாதங்கள் செய்துகொண்டே இருந்தால் அவை நீண்டு கொண்டே போகும்.தத்தம் கருத்துக்களை நிலை நாட்ட வார்த்தை ஜாலங்கள் சிக்கலை ஏற்படுத்தும்.மேலும் தர்க்க வாதத்தால் எந்த பயனும் இல்லை.தர்க்க வாதம் செய்து சித்தாந்தத்தை நிலை நாட்டி வென்று விட்டாலும் பலனில்லை.பேசுவது என்பது எதுவும் நடைமுறைக்கு பயன்படாது.
பேசுவதை சுலபமாக பேசலாம்.வாழ்கையில் உண்மையை கடைப்பிடிப்பதே சரியான அணுகுமுறையாகும்.வாழ்கையில் சூதின்றி பகவானை தொழுவது சிரத்தையுடன் திருநாமங்களை ஜபம், பஜனை செய்வது மேலான கடமையாகும்.(தொடரும்)

Friday 30 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 49

"நாஸ்தி தேஷு ஜாதிவித்யா ரூபகுல தனக்ரியாதி பேத:" 
மேற்சொன்னவாறு பிறந்த அனன்ய பக்தர்கள் எவராகவும் இருக்கலாம். அவருக்கென்ற அடையாளமும் இருக்காது.பக்தி யோகத்தில் பக்தன் பகவான் மீது பிரேமை செலுத்தும் தகுதி பெற்றவனாக மட்டும் தான் இருப்பான்.மற்ற எந்த தகுதியும் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை.என்று கூறுகிறார்கள்.
          பக்தர்களிடம் ஜாதி வித்தியாசம் பார்க்ககூடாது.பக்தனின் ஜாதி,கல்வித்தகுதி,அழகு,குலம்,பணவசதி,அவன் செய்யும் தொழில் அனைத்தையும் வைத்து அவனை வித்தியாசப்படுத்த கூடாது.தாழ்வாக நினைக்க கூடாது.இதை வைஷ்ணவ கிரந்தத்தில் கூறியிருக்கிறார்கள்.
         வைஷ்ணவ பக்தி கிரந்தத்தில் பகவானுக்கு செய்யும் அபசாரங்கள் 64 உள்ளன.அவற்றில் ஒரு அபசாரம் பக்தர்களில் ஜாதி வித்தியாசம் பார்ப்பது.
ஏழை என்று புறக்கணிப்பது.அவன் செய்யும் தொழிலை இழிவு படுத்தி பேசுவது.பிரேமையால் பகவானையே வசப்படுத்திய பக்தன் மரியாதைக்கு உரியவன்.
        குகன் உயர்ந்த குலத்தவன் அல்ல.கொக்கை எரித்த முனிவனுக்கு, மாமிசம் விற்று பிழைக்கும் குலத்தொழிலை கொண்ட தர்ம வியாதன் தர்மோபதேசம் செய்தான்.வேடுவ குல பெண்ணான சபரி ஸ்ரீ ராமரிடம் அதீத பக்தி கொண்டவர்.அரக்க குலத்தில் பிறந்த பிரகலாதன்,வானரன் ஹனுமான், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த விதுரன்,படிப்பறிவு இல்லாத கோபிகை பெண்கள்,இவர்கள் அனைவரும் எந்த தகுதியும் இல்லாதவர்களானாலும் உள்ளத்தில் பகவானின் பிரேமை பக்தி அபரிதமாக இருந்தது.
         வைஷ்ணவ சம்பிரதாயங்களில் 64 அபசாரங்களையும் ஜாதி வித்யாசமில்லா எல்லா மக்களும் குற்றங்கள் போல தவிர்க்க வேண்டும்.
அபசாரங்கள் சிலவற்றை கீழே குறிப்பிட்டுள்ளோம்:
          வேதங்களை மதிக்காமல் இருப்பது,பகவானின் ஓவியம் அல்லது விக்ரஹத்தை கல்,மண் என்று நினைப்பது,குருவை அவமதிப்பது,நைவேதம் செய்யப்பட்ட பிரசாதத்தை சாப்பிடும் தின்பண்டமாக நினைப்பது,தீர்த்தத்தை சாதாரண நீராக நினைப்பது,துளசி அல்லது வில்வ இலையை சாதாரண இலையாக மதிப்பது,பகவானின் திருவிளையாடல்களை மனிதர்கள் வாழும் முறைக்கு ஒப்பிட்டு கேவலமாக பேசுவது,பகவான் இருக்கிறாரா இல்லையா என்று விவாதிப்பது,அவர் அருளை சந்தேகிப்பது,கிராம தெய்வங்களை அவமதிப்பது,நிந்திப்பது,சாதுக்கள் மீது குற்றம் காண்பது,குலதெய்வத்தை அற்பமாக நினைப்பது,கோவிலில் அல்லது வீட்டில் பகவான் மூர்த்திக்கு முன்னால் காலை நீட்டுவது,கோவிலுக்குள் கையில் கம்பை எடுத்துக்கொண்டு போவது,கோவிலில் பெரிய மனிதர்களை கண்டால் அவர்களை வணங்குவது,கோவிலில் பகவானுக்கு முன்னால் உரக்க சிரிப்பது,அர்ச்சகரிடம் கோபம் கொள்வது,பெண்கள் தலை கேசத்தை முடியாமல் கேசத்தை விரித்துக்கொண்டு போவது,கோவிலுக்கு போதை வஸ்துக்களை உட்கொண்டு அல்லது மாமிசம் சாப்பிட்டு விட்டு போவது,கோவிலில் பிற மனிதர்களிடம் தர்க்க வாதம் செய்வது,பொய் பேசுவது,பகவான் துணை செய்வதில்லை என்று கூறுவது,பிரசாத்தை விற்பது,கோவிலில் பிற மனிதர்களுடன் சண்டை போடுவது அழுக்கு ஆடை அணிந்து தலை ஸ்நானம் செய்யாமல் கோவிலுக்குள் போவது
 கோவிலில் தமக்கு பிரியமுள்ள நபரை பார்த்து நீங்கள் தான் கடவுள் என்று கூறி காலில் விழுந்து வணங்குவது,கை கால்களை கழுவிக்கொள்ளாமல் போவது,கைகளை வீசி நடந்து கொண்டு பிரகாரம் சுற்றுவது,ஆகியவை மன்னிக்க முடியாத அபசாரங்கள்.(தொடரும்)           

Thursday 29 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 48

                                                                     
தீய பழக்க வழக்கங்களால் துந்துகாரி என்றொருவன் மகா பாவியாகிவிட்டான்.ஒருநாள் தீயவர்கள் ஒன்று சேர்ந்து அவனை கொலை செய்து விட்டனர்.அவனது வீட்டிலேயே அவனை கொலை செய்து அவனை அங்கேயே புதைத்தும் விட்டனர்.அதன் விளைவாக துந்துகாரி பேயாக மாறிவிட்டான்.கோகர்ணன் என்ற தம்பி துந்துகாரிக்கு இருந்தான்.அவன் மிகவும் நல்லவன்.கடவுள் பக்தி கொண்டவன்.தம்பி தீர்த்தயாத்திரை சென்ற போது அண்ணனை கொலை செய்தார்கள்.தம்பி வீட்டிற்கு வந்து உறங்கிக்கொண்டிருக்கும் போது துந்துகாரி பேய் உருவில் தோன்றி தம்பியை எழுப்பினான்.தான் கொலையுண்டு துர்கதி அடைந்ததை கூறி அழுதான்.கோகர்ணன் மனம் வருந்தி அண்ணனை தூய்மைபடுத்தி கடைத்தேற என்ன வழி என்று யோசித்தான்.பின்பு பெரியோர்களையும் மகான்களையும் சந்தித்து பேசினான்.அவர்கள் பாகவத புராண கதையை நீ படிக்கவேண்டும், மக்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களையும் நீ கேட்கவைக்க வேண்டும்,உன் அண்ணனும் பாகவத கதையை கேட்க வேண்டும் என்றார்கள்.கோகர்ணன் ஒரு விழா போல எடுத்து பாகவத கதையை பாராயணம் செய்தான்.அதன் விளைவாக துந்துகாரி பேய் உருவம் துறந்து தூய்மை அடைந்தான்.இறுதியில் தேவ உருவம் பெற்று சுவர்க்கம் சென்றான்.துந்துகாரி கோகர்ணனை நோக்கி உன்னைப்போல பக்தர்கள் பாவிகளையும் தூய்மை படுத்தி கடைத்தேற்றுவார்கள் என்று கூறி சென்றான்.
         பாகவத புராணத்தில் உத்தவர் கோபிகை பெண்களின் கிருஷ்ண பக்தியை கண்டு மிகவும் வியந்து போனார்கள்.-கல்வி அறிவு இல்லாதவர்களாக, தவம் ,ஞானம் பெற்று மேதாவிகளாக இல்லாதவர்களாக இந்த கோபியர்கள் இருந்தும் வேதங்கள் தேடும் பரம்பொருள் ஸ்ரீ கிருஷ்ணன் மீது ஒப்பற்ற பிரேமை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.கிருஷ்ண பிரேமை அடைவதற்காக பந்த பாசங்களை துறந்து விட்டார்கள்.நான் பகவானிடம் இதை மட்டும் வேண்டிக்கொள்கிறேன்.இந்த பிருந்தாவனத்தில் நான் புல்லாகவோ, செடிகொடியாகவோ அல்லது புதராகவோ ஜென்மமெடுத்து இந்த கோபியரின் பாத தூசி என் மீது பட்டு பெரும் பேரு பெற்றவனாகிவிட வேண்டும்.என்று கூறுகிறார்.
"தன்மயா:"
பஜனை அல்லது தியானம் செய்யும் பக்தர்கள் தாம் எங்கே இருக்கிறோம்,என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறார்கள்.அனன்ய பக்தர்கள் இறைவனோடு ஒன்றிவிடுகிரர்கள். அதுபோல பக்தனும் மனம்,அறிவு,நான் என்ற தன்மை,தேகம் எல்லாம் பகவானுக்கே அர்ப்பணம் செய்து பகவானுடன் ஒன்றி விடுவான்.பகவானுக்கும் அவனுக்கும் பேதமற்று போவதால் அவன் இருக்கும் இடமும் சூழ்நிலையும் தூய்மையாகிறது.
         இப்படிப்பட்ட பக்தர்களால் பகவானும் அவரது திருநாமங்களும் பகவத் பக்தியும் மகா மகிமையுடன் விளங்குகின்றன.
"மோதந்தே பிதரோ ந்ருத்யந்தி தேவதா: ஸநாதா சேயம் பூர்பவதி " 
இவ்வுலகில் பிறவியெடுத்து உண்மையான அனன்ய பக்தர்களாகிவிட்டால் அவனது முன்னோர்கள் மிகவும் சந்தோசப்படுவார்கள்.அவன் இவ்வுலகிற்கு வந்து மக்களை நல்வழிப்படுத்தி தர்மம் தழைத்தோங்க செய்வான், என்று தேவர்கள் மகிழ்ச்சியால் நடனமாடுவார்கள்.அந்த மகான் அவதரிப்பதால் பாவங்களால் துன்பப்பட்ட பூமி பாவங்களை அழிக்க வந்த தலைவன் என்று மகிழ்ந்து போகுமாம்.
          அந்த மகான் மக்களை நல்வழிப்படுத்தி பாவங்களை குறைப்பான்.அவன் செயல்களும் புகழத்தக்க மாபெரும் சேவையாக இருக்கும்.மக்களின் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.யாகங்கள் நடக்கும்.பித்ரு கடன்கள் மீது சிரத்தை ஏற்படும்.அவனை பின்பற்றும் பக்தர்கள் திருப்பணிகள் பல செய்து பக்தி மார்க்கத்தை பரப்புவார்கள்.
          இங்கு பாகவத புராணத்தில் கூறப்பட்டதை கவனத்தில் கொண்டுவர வேண்டும்.
          பிரகலாதன் ஸ்ரீ நரசிம்ம பகவானை நோக்கி கூறுகிறான்."தேவாதி தேவனே என்ன வரம் வேண்டும் என்று கேட்டீர்கள்?ஜகத்குருவான தாங்கள் தேஜஸையும் ஐஸ்வர்யதயும் என்தந்தை ஆத்திரமடைந்து இழிவாக பேசினார்.தம்பியை கொன்றவன் நாராயணன் என்று தவறாக நினைத்து அவர் தங்கள் பக்தனான என்னை இம்சித்து கொடுமைகள் பல செய்தார். மேலும் மன்னிக்க முடியாத குற்றங்கள் பலவற்றை செய்து இருக்கிறார்.தயாநிதியே பாவியான என் தந்தை பயங்கர பாவத்தில் இருந்து விடுபட வேண்டும்.இதுவே நான் கேட்கும் வரம்".உண்மையில் எனக்காக நரசிம்மாவதாரம் எடுத்து தங்களது பார்வை பட்டவுடனேயே என் தந்தை பரமாத்மாவாகிவிட்டார்.
நரசிம்மபகவான் கூறுகிறார்."அப்பனே உன் தந்தையும், முன்னோர்களான பித்ருக்களும் முன்னும் பின்னும் முப்பத்தி ஏழு தலைமுறைகள் சேர்ந்து எனது வைகுண்ட பதவியை அடைந்து விட்டார்கள்.ஏனெனில் பக்தனான நீ இந்த குலத்தில் வந்து பிறந்தாய் அல்லவா?  உன்போன்ற சாந்தமான பக்தர்கள் சமநோக்குடையவர்களாக   இருக்குமிடம் தூய்மையாகிவிடும்.பாலை நிலமும் பசுமையாகிவிடும். நீ இன்றில் இருந்து பக்தர்களுக்கெல்லாம் உதாரணமாக பேசப்படுவாய்.தந்தைக்கு இனி நீ இறுதி சடங்குகளை செய்வாயாக.உன் போன்ற மகனை பெற்றவன் என் அங்கங்கள் ,ஸ்பரிசம் பட்டு தூய்மையாகிவிட்டான் என்று கூறினார்.(தொடரும்)

Wednesday 28 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 47

தாச பாவ பக்தியாக இருந்தாலும் பதி பக்தியாக இருந்தாலும் தன் நாயகனை தவிர எவரையும் அறிய மாட்டார்கள்.அவர்கள் மனம்,தேகம்,செல்வம்,அறிவு,வாழ்வு ,உயிர், தர்மம்,மோட்சம், நற்கதி அனைத்தும் எங்கள் இறைவன் தான் என்று நினைப்பார்கள்.
"பக்தா ஏகாந்தினோ முக்யா:"
          அனன்ய பக்தர்களே முதலிடம் பெறுவார்கள்.முன் சொன்ன சூத்திரத்தில் சிறந்த பக்தி லட்சணத்தை கூறியிருந்தார்கள்.அந்த சிறந்த பக்தி அதாவது வேறு இடத்தில வைக்காத அன்பு கலந்த பக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
          அனன்ய பக்தியானது ஒப்பற்றது.தமக்கு சொந்தமான செல்வம்,குடும்பம் எல்லாம் பரமாத்மாவுக்கே சொந்தமாகி விடுகிறது.பக்தனோ பரமனின் சேவகன் போல உலகில் செயல்படுகிறான்.எதையும் பரமாத்மா சொரூபமாகவே காண்கிறான்.
"கண்டாவரோத ரோமாஞசாச்ரூபி: பரஸ்பரம் லபமானா: பாவயந்தி குலானிப்ருதிவீம் ச "
பகவானின் திருவிளையாடல்களை பாராயணம் செய்யும் போது, கேட்கும் போது அல்லது பஜனை பாடும் போது அவரை நினைத்து நடனமாடும்போது பரவசத்தின் உன்னத நிலைக்கு போய்விடுவார்கள்.அச்சமயம் பாடும்போது தொண்டை அடைக்கும்.ஆனந்த கண்ணீர் பெருகும்போது ரோமாஞ்சனம் உண்டாகும்.இப்படிப்பட்ட அனன்ய பக்தர்கள் முன் வந்த தலைமுறைகளையும்  வரப்போகும் தலைமுறைகளையும் புனிதப்படுதுவார்கள். பூமியை சுற்றுச்சூழலை புனிதப்படுதுவார்கள்.லயிப்புடன் பஜனை செய்யும் போது சுற்றுச்சூழலில் உள்ள தீய சக்திகள் பறந்தோடிவிடும்.கலகமும் கேடும் ஒழிந்து மனிதர்கள் மனதில் சாந்தி கிடைக்கும்.இப்படிப்பட்ட தூய பக்தர்களின் அருகாமை கிடைப்பதே பெரும் பாக்கியம்.
"தீர்த்தீ குர்வந்தி தீர்த்தானி ஸுகர்மீ குர்வந்தி கர்மாணி ஸச்சாஸ்த்ரீ குர்வந்தி சாஸ்த்ரானி "
புண்ணிய க்ஷேத்திரங்களையும் அவர்கள் புன்னியமாக்குவார்கள்.பாவச்செயல்களால் பாவியானவர்களையும் தரிசன,ஸ்பரிசங்களால் அல்லது பாத சேவையால் புனிதப்படுதுவார்கள்.அவர்கள் செய்யும் செயல்கள் மற்றவருக்கு எடுத்துக்காட்டாக மாறுகின்றன.பாவிகளும் புநிதப்படுதப்படுகிறார்கள் என்பதற்கு பின்வரும் கதை கூறப்பட்டுள்ளது.(தொடரும்)

Tuesday 27 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 46

இவ்வாறு பக்தர்கள் காமம் என்ற ஆசையை இறைவனை நோக்கி திருப்பி விட்டு ஆசைகளை வெல்கிறார்கள்.கோபத்தை பகவானிடம் எப்படி காட்டுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
"தகவிலை தகவிலையே நீ கண்ணா 
தடமுலை புனர்தோறும் ,புணர்ச்சிக்கு ஆராச்-
சுக வெள்ளம் விசும்பு இறந்து,அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து,அது கனவு என நீங்கி ஆங்கே 
அக உயிர் அகம்-அகம் தோறும் உள் புக்கு 
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ!
மிக மிக இனி உன்னைப்பிரிவை ஆமால் 
வீவ நின் பசு-நிறை மேய்க்கப் போக்கே " 
          கண்ணா நீ மிகக் கொடியவன்.உன்னோடு அனுபவித்த இன்ப வெள்ளம் வானை கடந்து என் அறிவை அழித்து கனவை போல மறந்து போயிற்று.என் உயிருக்குள் புகுந்து பொறுக்க முடியாத ஆசை நிலையில் என்னை வீழ்த்துகிறது.நீ இந்த பசுக்களை மேய்க்கப்போவது ஒழிக.காமம்,குரோதம்,சிநேகம்,ஐக்கியம்,நட்பு ஆகிய அனைத்து பாவங்களையும் நிதமும் ஹரியில் செலுத்தினால் இறைவனோடு இரண்டற கலந்து விடும் யோகம் வரும்.
          சூத்திரத்தில் கூறிய கர்வம் என்ற பாவத்தை பகவான் மீது செலுத்த வேண்டுமானால் அந்த உன்னத நிலையை ராதை தான் அடைந்திருந்தாள். அவ்வாறு இதுவரை எந்த பக்தனாலும் அடைய முடியவில்லை.இனி அடையபோவதுமில்லை. ராதை பிரேமை மிகுதியால் கண்ணனோடு கோபம் கொண்டு தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தாள். இது பக்தியின் அதி உச்சகட்ட நிலையாகும்.
"த்ரி ரூப பங்க பூர்வகம் நித்யதாஸ நித்யகாந்த
பஜனாத்மகம் வா,ப்ரேமைவ கார்யம் ப்ரேமைகார்யம்" 
இறைவனை பிரேமை பாவத்துடன் பூஜிப்பதே சிறந்தது என்று கூறுகிறார்கள்.அதாவது எஜமானன்-சேவகன் -சேவை இம்மூன்றையும் துறந்து அல்லது மூன்றையும் கடந்து தாஸ பாவம் அடைய வேண்டும்.அல்லது அன்பானாக நினைக்கவேண்டும்.மாணிக்கவாசகரும் ஆழ்வாரும் பெண் பாவம் அடைந்து இறைவனை தொழுதார்கள்.மாணிக்கவாசகர் இறைவனான பசுபதி ஒருவரே ஆண்,மற்ற ஜீவாத்மாக்கள் எல்லாம் பெண்ணாக இருப்பவைகள்,ஆதலால் ஆத்மாக்கள் எல்லாம் பதியான பசுபதியே நாட வேண்டும்.என்றார்.இங்கு ஸ்ரீ நாரதபெருமான் அதையே காந்தா பாவம் என்று கூறுகிறார்.(தொடரும்)

Monday 26 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 45

"அபிமான தம்பாதிகம் த்யாஜ்யம் "
கர்வமும் பகட்டும் துறக்கவேண்டும். இதற்க்கு முன் சொன்ன சூத்திரத்தில் காமகுரோத லோபங்களையும் நாத்திகத்தையும் துறக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.இந்த நான்கையும் துறந்து விட்டால் யாம் புலன்களை ஜெயித்து விட்டோம் என்று கர்வப்பட்டு கொண்டு இருக்க கூடாது.என்று கூறுகிறார்கள். கர்வம் அறிவுக்கண்ணை மறைக்கும்.அனைவரிடமும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.பணிவு கர்வத்தை அழிக்கும். 
          தன்னிடம் இல்லாததை பிறர் புகழ வேண்டும் என்று பகட்டாக காண்பிக்க கூடாது.பணம் புகழுக்காகதான் பெரிய தர்மாத்மாவாகவும் பெரிய பக்தனாகவும் படம் காட்டிக்கொண்டு பகவானுக்கு தொண்டு செய்வது போல பாவனை செய்து கொண்டு திரிய கூடாது.பிறருக்காக   அல்லது அவர்கள் கவனத்தை திருப்புவதற்காக நாம் செய்யும் செயல்கள் நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும்.கற்ற கல்வியும் அறிவும்,வித்தையும் மேம்படாது.நேர்மையும் பணிவும் பக்திக்கு சாதகமாக இருக்கும்.புராண காலத்தில் அசுரர்கள், இனி நம்மை எவராலும் வெல்ல முடியாததென்று எண்ணி வீழ்ச்சி அடைந்தார்கள்.அதனால் இதை அசுரத்தன்மை வாய்ந்த துர்குனமாக கர்வத்தை கூறி இருக்கிறார்கள்.
"ததர்பிதாகிலாசார: ஸன் காமக்ரோதாபிமானாதிகம் தன்மின்னேவ கரணீயம் "   
அனைத்து கர்மங்களையும் பகவானுக்கு சமர்ப்பணம் செய்த பின் என்ன மீதமிருக்கிறது?தன்னில் இருக்கும் காம குரோத அபிமாங்கலால் தீங்கு வராமல் அவரே தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.என்று அவர் பொறுப்பிலேயே விட்டு விட வேண்டும்.ஆனால் பக்குவப்பட்ட உண்மையான பக்தர்களிடம் காமக்குரோத அபிமாங்கள் பகை எல்லாம் துளியும் இருக்காது.அவர்களோ பிரேமை பக்தியில் தன்னையே 
கரைத்துக்கொள்வார்கள். அவர்கள் கௌரவம்,மானம்,வேகம்,குலம்,நற்குனசீலம்,தேகம்,செல்வம்,போகம்,மோட்சம் அனைத்தும் பகவானிடம் ஆரம்பத்திலேயே சமர்ப்பித்து விட்டார்கள்.பகவான் மட்டும் விரும்பக்கூடிய பொருளாக இருக்கும்.முனிவர்களும் இப்படிப்பட்ட பக்தர்களை பாராட்டுவார்கள்.
          பகவானின் திருமேனி அழகு அலாதியானது.அது அணிந்த ஆபரனங்களுக்கும் அழகை சேர்க்ககூடியது. மூவுலகங்களையும் மயக்கும் ஜெகன் மோகன ரூபம் சௌந்தர்யமும் இனிமையும் அமிர்தமும் கலந்த பரமானந்த பேரழகு.அவரது இனிய இசை குளிர் நிலவு போல சாந்தியை தரும்.அந்த ஜோதியை கண்டு தவத்தால் சித்தி பெற்று தெய்வத்தன்மை அடைந்த மகாமுனிவர்களும் தன் நிலை இழந்த வார்த்தைகளால் அளிக்க முடியாத ஒரு பரவச நிலை அடைகிறார்கள்.(தொடரும்)

Sunday 25 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 44


  1. பெண்கள் மீது அதிக  மோகம் கொண்டவர்களுக்கு வேறு விஷயங்கள் பிடிக்காது.பெண்களை பற்றி பேசவும், பார்க்கவும்,படிக்கவும் தான் பிடிக்கும்.அங்கு இறைவனை பற்றி சிந்திக்க இடமிருக்காது.பக்தி யோகத்திற்கு இது மாபெரும் தடை என்றே நினைக்க வேண்டும்.பெண்களை பற்றி காதல் பாட்டுக்கள் பாடவும் நாடகங்கள் பார்க்கவும் தவிர்க்க வேண்டும்.உண்மையான பக்தனுக்கு இயற்கையாகவே இவற்றுள் ஈடுபாடு இருக்காது.கிரஹஸ்த ஆசிரமத்தில் இருந்தாலும் அற வழியில் சென்று இல்லறம் நடத்த வேண்டும்.அதாவது மனைவியுடன் சேர்ந்து இறை வழிபாடு நடத்த வேண்டும்.தான தர்மங்கள் செய்ய வேண்டும்.மனைவியுடன் சேர்ந்து பக்தி பஜனைகளில் கலந்து கொள்ள வேண்டும்.மனைவியும் உலக ஆசைகளை துறந்து கணவனோடு சேர்ந்து பகவானின் அருளை நாட வேண்டும்.பொருளாசையும் பொன்னாசையும் துறந்து இறைவன் அருளை பெற ஒத்துழைக்கவேண்டும்.
  2. பேராசைக்கோ ஓர் அளவும் இல்லை.எல்லையும் இல்லை.பணம்,பதவி,மோகம் கொண்டவர்கள் என்றும திருப்தியுடன் வாழ மாட்டார்கள்.மேலும் மேலும் உயரே போக விரும்புவார்கள்.ஆசையில் தேவராஜன் இந்திரனுக்கும் திருப்தியில்லை என்று கூறுவார்கள்.ஆசை கண்களை மறைக்க அநியாய வழியிலும் பணம் சம்பாதிக்க துணிவார்கள்.தனவந்தர்களிடம் நட்பு வைத்து அவர்களது சுகபோக வாழ்கையை கண்டும்,சமுதாயத்தில் அவர்களின் செல்வாக்கை கண்டும் நாம் மதி மயங்கி விடக்கூடாது.செல்வ சுக போகம் கேவலம் தூசிக்கு சமமாக நினைக்க வேண்டும்.அது இக லோகத்தில் முடிந்து விடும்.இறை அருள் தான் என்றும் நம்மை தொடரும்.இதை நினைத்து மனதை ஜெயிக்க வேண்டும்.அதற்க்கு மாறாக பணத்திற்கு பின்னால் நாம் அடிமை போல ஓடிக்கொண்டிருந்தால் எப்போது தான் இறைஅருளை பெற ஓடுவதை நிறுத்தி திரும்பி வருவோம்?ஆயுள் முடிந்தவுடன் செல்வ சுகங்களும் இத்துடன் முடிந்து விடும்.சாரமற்ற இவ்வுலக வாழ்வில் என்ன மேன்மையடைந்தோம்? எதை தான் சாதித்தோம்?
  3. பிரத்யட்சமாக காண்பது இந்த உலக வாழ்க்கை தான்.அதை விட்டு விட்டு காணாத ஒரு பொருளுக்காக ,வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய விசயங்களை துறந்து நேரத்தையும் வாழ்கையையும் வீணாக்குவதா, என்று நாத்திகம் பேசுபவர்களோடு கண்டிப்பாக நட்பு கொள்ள கூடாது.கடன் வாங்கியாவது நாவுக்கு ருசியாக நெய் சோறு உண்டு பட்சணங்கள் சாப்பிட்டு இன்பமாக வாழ்வாயாக,உயிரோடு இருக்கும் வரை பிறரை ஏமாற்றி இன்பமாக வாழ்வாயாக.இறந்த பின் யார் உன்னை என்ன செய்யா முடியும்?பரலோகம்,இறைவன் என்பதெல்லாம் சுத்த பொய், என்று நாத்திகம் பேசுவார்கள்.இவர்களுடன் உறவு கொண்டால் நாமும் கலங்கபட்டவர்கள் போல மாறி விடுவோம்.அது நம்மை அதோ கதிக்கு கொண்டு போய் விடும். மேற்சொன்ன மற்ற தீமைகளுக்கு அடிமையாகிவிட்டாலும் ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்டு பக்தியில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.ஆனால் நாத்திகனாக மாறிவிட்டாலோ மீண்டும் ஆத்திகனாக மாறினால் தான் இறைவன் பக்தி வழிக்கு வர முடியும்.இதுவும் பெரும் ஆபத்தானது.
  4. பொதுவாக உண்மையான பக்தன் எவரையும் விரோதியாக கருத மாட்டான்.ஏனெனில் அவன் பகையை துறந்தவன்.அவ்வாறு இருக்க சகல உயிர்களையும் பரமாத்மாவின் மக்களாகவே பார்பான். இந்த உன்னத நிலை அடையாத பக்தன் தமக்கு எதிராக செயல்படும் அல்லது துவேசிக்கும் நபரிடம் பதிலுக்கு அதே போல பகை பாராட்ட கூடாது.அவனை பற்றி விமர்சிக்கவும் கூடாது.ஏனெனில் பகையும் கோபமும் துவேசமும் பழி வாங்கும் என்னத்தை உண்டாக்குகிறது.பக்தனோ பகவானை அன்பொழுக ஆராதிப்பவன்.தானும் அன்பு மயமானவன்.ஆதலால் அனைவரிடமும் கூடுமானவரை மனதில் அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.அன்பும் நட்பான எண்ணங்களும் மனதிலிருந்து வெளியே பரவும்போது எதிர் திசையிலிருந்து வரும் கோபமும் பகையும் தணிந்து போகும்.அதற்க்கு மாறாக அதே போல நாமும் கோபமும் துவேசமும் வளர்த்து எண்ணங்கள் மூலமாக பரவசெய்தால் இரண்டும் மோதிக்கொண்டு வெடிக்கும்.இவ்வாறு பக்தி யோகத்தில் இருப்பவன் காம,குரோத,லோபங்களை ஜெயிக்க வேண்டும்.(தொடரும்)

Saturday 24 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 43

ரிஷி முனிவர்கள் வியாசர்,நாரதர்,சுகதேவர் ஆகியோர் உருவமற்ற பரப்ரம்மத்தை உணர்ந்தவர்கள்.தியான சமாதியில் பரமானந்த பேரின்பத்தை அடைந்தவர்கள்.ஆயினும் இவர்களில் பகவானின் தெய்வீக குணங்கள் ,தெய்வீக இசை,ஆகியவற்றில் தன்னை இழந்து விட்டார்கள்.ஏனெனில் பகவானின் திருமேனி மாயையோடு கூடியது அல்ல.இது தெய்வீக ஜோதி சொரூபமானது.பகவத் கீதையில் அர்ச்சுனன் வியந்து தரிசித்த ரூபம்.இதை சொல்லிலடங்கா பரம சாந்தியாக ஆனந்த கடலாக வர்ணித்தாலும் நிறைவாகாது.அந்த பரஞ்சோதியின் பிரேமையும் அப்படிபட்டதேயாகும்.
" லோகஹானௌ சிந்தா ந கார்யா நிவேதி தாத்ம லோகவேதத்வாத் "
பக்தர்கள் உலகியல் விசயங்களின் லாப நஷ்டங்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.ஏனெனில் சிந்தை எல்லாம் சிவமயமாக அல்லது ஹரி மயமாக இருக்கும் போது அங்கு வேறு விசயங்களுக்கு இடமேது? உலகியல் கடமைகளையும் வேத சாஸ்திரங்களை பின்பற்றி வாழும் முறைகளையும் முன்பே அவன் அர்ப்பணம் செய்து விடுகிறான்.பக்தியின் உச்சகட்டத்திற்கு போன பின் தன்னையும் தன் கடமைகளையும் கூட மறந்து விடுகிறான்.மற்ற சிந்தனைகள் அவனை விட்டு தாமாகவே விடைபெற்று விடுகின்றன.தன்னையே அர்ப்பணித்து விட்ட பின் அவனை சார்ந்த மனைவி, மக்கள்,சொத்து சுகங்கள் எல்லாம் தாமாக பகவான் திருவடியில் சேர்ந்து விடுகின்றன.அவன் உயிர் வாழ்வதற்காக மட்டும் பட்டற்று கடமைகளை செய்கிறான்.
"ந ததஸித்தௌ லோகவ்யவ ஹாரோ ஹேய :
 கிந்து பலத்யாகஸ்தத் ஸாதனம் ச கார்யமேவ " 
மேற்சொன்னவாறு உலகியல் விசயங்களும் வேத சாஸ்திர கடமைகளும் பக்தியின் மேல்நிலையில் தாமாக விடுபடாவிட்டால் கடமைகளை அவசியம்
செயலாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.நல்ல கர்மங்களின் புண்ணிய பலனை ஆண்டவனுக்கே கொடுத்து விட வேண்டும்.பகவானுக்காகவே சேவை செய்வது போல பிற உயிர்களுக்கு நன்மை செய்து வாழ வேண்டும். அவ்வாறு செய்தால் தற்பெருமை ஒழியும். பக்தியின் ஆரம்பபடியில் இருப்பவர்கள் தீமையிலிருந்து விலகி சுயநலமின்றி தேவ பூஜைகளையும் பித்ரு கடனையும் சாஸ்திரங்கள் கூறியபடி செய்வார்கள்.
"ஸ்திரிதன நாஸ்திக வைரி சரித்ரம் நச்ரவணியம்"
முன் சொன்ன சூத்திரங்களில் உலகில் வாழ்வதற்கு உதவும் கடமைகளை, பக்தியை ஒரு சாக்காக வைத்து துறக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்கள்.இருப்பினும் பக்தி மார்க்கத்தில் செல்பவர்கள் சில தீமைகளில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
          பெண் முஹம பிடித்த நபர்களுடன் நட்பு கொள்ள கூடாது.பேராசை பட்டு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்க கூடாது.நாத்திகம் பேசும் நபர்களிடம் சகவாசம் கூடாது.தமக்கு எதிராக செயல்படும் நபர்களிடம் தீராத பகையும் வேண்டாம்.அவர்களை பற்றி புறம் பேசவும் வேண்டாம்.அவர்கள் வரலாற்றினை கேட்கவும் வேண்டாம்.
          ஆண்களை வசியபடுத்தும் சுபாவமுடைய பெண்களிடம் நட்பு கொள்வது மரணத்தை தழுவுவதற்கு சமமானது.ஏனென்றால் யானைகூட்டத்திற்க்கு தலைமை தாங்கும் யானையை மற்ற யானைகள் வந்து அதனுடன் சண்டையிட்டு வீழ்த்திவிடும். அதனால் தன் ஆத்மாவை மேன்மை அடைய செய்து பக்தி யோக வழியை பின் பற்றி வாழ விரும்புகிறவன் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.(தொடரும்)


Friday 23 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 42

                                                              

ஒரு கோடை காலத்தில் காட்டில் உள்ள யானை கூட்டம் அதிக வெப்பத்தால் துன்புற்று நீர் நிலையை நோக்கி சென்றது.ஓர் இடத்தில ஒரு பெரிய ஏரியை கண்டு மிக உற்சாகமாக யானைகள் நீருக்குள் இறங்கி தண்ணீர் பருகி தாமரை தண்டுகளை பிடுங்கி தின்றன.இஷ்டம் போல நீராடின.ஏரி நீரை யானைகள் கலக்கி கொண்டிருக்கும் போது திடீரென்று நீருக்கடியில் ஒரு முதலை வந்து யானை தலைவன் காலை பற்றிக்கொண்டது.நிலை தடுமாறிய யானை தலைவன் பலம் கொண்டு காலை இழுத்தது.மற்ற யானைகளும் யானை தலைவனை இழுத்தன.முதலிடம் சிக்கிகொண்ட யானையை பார்த்து மற்ற யானைகள் பிளிறின.அவைகளின் முயற்சி பலிக்காமல் போனது.நெடுநாள் கழித்து முதளையிடம் சிக்கிய யானை தலைவனை விட்டு விட்டு யானை கூட்டம் அனைத்தும் சென்று விட்டன.முதலைக்கோ நீரில் பலம் கூடிக்கொண்டே இருந்தது.
           யானைக்கும் முதலைக்கும் நடந்த இழுபறி போராட்டம் வருடக்கணக்கில் தொடர்ந்தது.யானை பலவீனமடைய தொடங்கியது.அச்சமயம் யானைக்கு கர்மவினைபயனாக முன்ஜென்ம நினைவு வந்தது.நாம் இந்த பிறவியில் வீழ்ந்து ஆசா பாசங்களில் சிக்குண்டு ஆண்டவனை மறந்தோமே என்று நினைத்தது.சரண் அடையும் அடியாட்களை காப்பாற்றும் இயல்புடைய ஸ்ரீ நாராயணர் தாம் எம்மை காப்பாற்ற வேண்டும் அவரே யம பயம் போக்கி பக்தருக்கு நற்கதி அளிப்பார் என்று நினைத்து ஆதிமூலமே ஸ்ரீ நாராயணா என்னை காத்தருள்வீர் பெருமானே இந்த தாவர ஜங்கமம் அடங்கிய வையகமும் வானகமும் காக்கும் பரம் பொருளே என்மீது தயை புரிய வேண்டும் என்று பகவானை அழைத்து. சர்வசக்தி படைத்த விஷ்ணு பகவானுக்கு யானையின் பிரார்த்தனை குரல் விஷ்ணு பகவானுக்கு கேட்டது.அவர் மனமிரங்கி கருடன் மீதேறி அங்கு வந்தார்.சுதர்சன சக்ராயுதம் ஏவி முதலையின் தலையை வெட்டினார்.யானையை இழுத்து கரையில் கொண்டு வந்தார்.அவர் ஸ்பரிசம் பட்டு யானை தன உடல் துறந்து தேவனாக மாறியது.முதலையும் சாபம் நீங்க பெற்றது.இருவரும் தேவர்களாக மாறி விஷ்ணுபகவானுடன் சேர்ந்து வைகுண்ட பதவியை அடைந்தார்கள்.
 "ப்ரமாணாந்தர்ஸயான பேக்ஷத்வாத் ஸ்வயம் பரமாணத்வாத் "
பக்தியை நிருபிக்க எந்த பிரமாணமும் தேவையில்லை.ஏனெனில் அதுவே பிரத்யட்ச பிரமாணமாக இருக்கிறது.பக்தியின் பிரேமை ஆனந்தம் தாமாக உணரப்படுகிறது.அந்த இறை இன்பம் பக்தனாக இருப்பவனுக்கே தெரியும்.மனமுருகி நினைக்கும் போதே பரவசமடைந்து நடனமும் ஆடுவார்கள்.
"சாந்திரூபாத் பரமானந்தரூபாச்ச "
பக்தி ஏன் பிரத்யட்ச பிரமாணமாக நிருபிக்கபடுகிறது?ஏனென்றால் அது சாந்தி ரூபமானது.பரமானந்த ரூபமானது.பக்தி செலுத்தினால் பக்தனுக்கு சாந்தி கிடைக்கிறது.பகவான் தன மஹா மகிமையை விட்டு இறங்கி வந்து பக்தர்கள் முன் தன் திவ்ய சக்தியுடன் பிரகடனமாகிறார்.பகவான் ஆனந்தமானவன் என்று நிரூபிக்கிறார்.இது முக்குணங்களுடன் சேர்ந்த சகுண பிரம்ம சொருபமில்லை என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.(தொடரும்)

Thursday 22 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 41

பகவத் கீதை கூறுகிறது.-
           ஆர்த்த பக்தன், ஜிக் ஞாஸு பக்தன்  பக்தன்,அர்த்தார்த்தீ பக்தன் ஆகிய மூன்று வகை பக்தர்கள் தனி தனி இயல்பு உடையவர்கள்.
           ஆர்தபக்தன்: ஆபத்து வியாதி போன்ற தன் கஷ்டங்களையும் பாவங்களையும் அழிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் பகவானை தொழுது பஜனை செய்வது கோவில் திருப்பணிகளை செய்வது ஆகிய வழிகளால் இறைவனை ஆராதிப்பான்.
            ஜிக் ஞாஸு பக்தன்: பகவான் என்றால் அவருடைய ஆற்றல் என்ன ? பகவானை தத்துவார்த்தமாக எப்படி அறிய முடியும் எங்கும் நிறைந்த ஈசன் எப்படி அருள் பாலிக்கிறார்?என்று பகவானை பற்றி நன்கு அறிய விரும்பும் வேட்கை கொண்டவன் தன் அரிய பிரேமை பக்தியால் உபாசனை செய்து நெருங்குகிறவன் ஜிக் ஞாஸு பக்தன் பக்தன் ஆகிறான்.
             அர்த்தார்த்தீ பக்தன்:இவன் புராண காலத்து அசுரர்கள் போல தவமிருந்து நாம ஜபம்,தியானம் செய்து வரங்களை கேட்பான்.மென்மையான வாழ்வு ,பெயர்,புகழ்,செல்வம் எல்லாம் பகவானிடம் விரும்புவான்.
           உலகத்தின் நிலையில்லா வாழ்வில் நிலையில்லா அற்ப சுகங்களுக்கும் சந்தோசங்களுக்கும் பகவானிடம் கையேந்துவது எப்படி இருக்கிறதென்றால் -பொன்னும் பொருளும் ரத்தினங்களும் வழங்கும் பெரும் செல்வந்தனிடம் போய் எனக்கு தவிடு வேண்டும் என்று கேட்பது போல உள்ளது.
           உண்மையில் செல்வதினுள் பெரும் செல்வம் இறைவன் அன்றோ அந்த செல்வதை அடைந்த பின் வேறு எந்த செல்வம் பெரிதானது?அல்லது வேறு செல்வதை எதற்காக விரும்ப வேண்டும்?
"உத்தரஸ்மாதுத்தரஸ்மாத் பூர்வ பூர்வா ச்ரேயாய பவதி "
முக்குண பகதிகளில் சாத்வீக பக்தியே சிறந்ததாக முதலிடம் பெறுகிறது.அதுபோல ஆர்த்த பக்தி-அர்த்தார்த்த பக்தி,  ஜிக் ஞாஸு பக்தி ஆகிய வற்றில்  ஜிக் ஞாஸு பக்தியே சிறந்ததாக முதலிடம் பெறுகிறது.
"அன்யஸ்மாத் சௌலப்யம் பக்தௌ"
இறைவனை அடைய வேண்டிய மற்ற வழிகளை விட பக்தியோக வழியே சுலபமானது.கர்ம,ஞான, தியான யோகங்கள்,அனுஷ்டானம் செய்வதற்கு கடினமானவை.பக்தியோகத்தின் பலனோ எந்த பாதிப்புமின்றி கிடைத்து விடும்.மற்ற சாதனைகளில் சிறிய தவறு ஏற்பட்டாலும் அதன் பலன்கள் எதிர்மாறாக இருக்கும்.அல்லது சாதகர்களை பாதிக்க கூடியதாக இருக்கும்.
பகவான் மீது நம்பிக்கை கொண்டு முக்காலத்திலும் எங்கும் அவர் அருளை உணர்ந்தவன் நிச்சயம் பக்திக்கு பாத்திரமாகி விடுவான்.அக்கணமே அவன் பாவங்கள் எல்லாம் நாசப்பட்டு விடும்.இதற்காக எதையும் தியாகம் செய்ய தேவையில்லை.
             விலங்குகளும் பறவைகளும் பக்தி செய்து ஆண்டவனை தரிசித்த வரலாறும் உள்ளது. கஜேந்திரன் யானை, தவளை,பல்லி, சிலந்தி,வானரர்,ஆகியோர் செய்த வரலாறு கோவில்களில் சிற்பங்களால் ஓவியங்களால் பேசப்படுகிறது.பக்தி செய்த பக்தர்களிடம் பகவான் தன் மகாமஹிமையை விட்டு இறங்கி வந்து விடுவார்.(தொடரும்)

Wednesday 21 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 40

ஆசைகளை அடிப்படையாக கொண்டு உலகில் பெயருடன் புகழுடன் வாழ வேண்டும்.இஸ்வர்யங்கள் பெற்று வசதியாக, சுகமாக வாழ வேண்டும்.என்று ஆராதனை செய்வது(அதாவது இதில் விக்ரஹ  ஆராதனையும் கோவில் வழிபாடும் இருக்கும்)இதுவே ராஜச பக்தி எனப்படுகிறது.
           கோவிலை கட்டி பிறர் புகழ வேண்டும் என்பதற்காக போலியான பக்தி பஜனை செய்வது,அல்லது கோவிலில் விளக்கு போட்டு உபயம் என்று எழுதி வைப்பது,அல்லது கோவிலுக்கு தேவையான பொருள் உதவி செய்யும் போதும் பண உதவி செய்யும் போதும் தன் பெயரை பொறிக்கசெய்து உபயம் என்று எழுதி வைப்பது ராஜச பக்தி எனப்படுகிறது.
         பிறருக்கு கஷ்டத்தை கொடுத்து இம்சித்து பக்தி பஜனை எல்லாம் செய்வது தாமச பக்தியாகும்.இந்த வரிசையில் உயிர் பலி கொடுத்து இம்சித்து பூஜைகளை நடத்துவதும் தாமச பக்தியை சேர்ந்தது.பிறருடன் போட்டி போட்டுக்கொண்டு வழிபாடு செய்வதும் ஆடம்பரமாக செலவு செய்து விழா எடுப்பதும் பொருட்களை கோவிலுக்கு தானமாக தந்ததை பெருமையாக பேசிக்கொள்வதும் தாமச பக்தியை சேர்ந்தவை.
          தாமச பக்திக்கு எடுத்துக்காட்டாக மூர்க்க நாயனார் என்ற ஒரு சிவ பக்தர் ஒருவர் இருந்தார்.அவர் திருவேற்காட்டில் அமர்ந்துள்ள சிவபெருமானுக்கு சிவதொண்டு புரிந்து வந்தார்.அவர் சிவனடியாருக்கு உணவளித்து அதை பார்த்து மகிழ்ந்த பின் தான் உண்பது வழக்கம்.
          அவர் நாள் தோறும் தூய்மையான சோறு நெய் சுவை மிகுந்த கறி வகைகள் முதலியவற்றை நன்றாக சமைக்க செய்து தம்மிடம் வந்த சிவனடியார்களை வணங்கி உபசரித்து அவர்களுக்கு உணவளித்து அவர்களுக்கு வேண்டிய பொருட்களை கொடுத்துதவி அத்தொண்டில் பெரிதும் மகிழ்ந்து வந்தார்.இப்படி இருக்க நாளுக்கு நாள் அடியவர்கள் கூட்டம் பெருகலாயிற்று.நாயனாரிடம் இருந்த பொருட்கள் எல்லாம் செலவாயின.அவர் தம்மிடம் இருந்த அடிமைகளோடு பரம்பரை உரிமையான நிலம் அணிகலன்கள் முதலிய பொருட்கள் எல்லாம் விற்று சிவனடியாருக்கு விருந்து படைக்கும் திருத்தொண்டில் மகிழ்ந்து வந்தார்.முடிவில் எவ்வகை பொருளும் இல்லாத நிலை ஏற்பட்டது.மேலும் மேலும் விருந்து படைக்க வழியில்லாமல் அவர் வறுமையில் வாடி இனி பொருளுக்கு என்ன செய்வது என்று மனம் சோர்ந்தார்.பிறகு முன்னாளில் கற்ற சூதாட்டத்தினால் பொருளீட்ட கருதினார்.அவ்வூரில் சூதாடுவோர் இல்லாததால் அவ்வூரில் இருந்து புறப்பட்டார்.
          அவர் சூதாடும்போது முதல் ஆட்டத்தில் தோற்று பணய பொருளை இழப்பார்.ஆனால் பின் ஆட்டங்களில் எல்லாம் வெற்றி பெற்று பெரும் பணய பொருளை அள்ளிக்கொள்வார். எதிர் ஆட்டம் ஆடுபவர் வாக்கு மாறினால் தமது உடை வாளால் அவரை குத்துவார்.  சூதாட்டத்தில் தாம் வெற்றி பெற்ற பொருளை தம் கையாளும் தீண்ட மாட்டார்.தமக்காகவும் பயன்படுத்த மாட்டார்.அவற்றை சமையல் செய்வோரிடம் கொடுப்பார்.அவர்கள் அமுதாகுவார்கள்.அடியார்கள் யாவரும் விருந்துன்டபின் கடைசி பந்தியில் தாமும் அமர்ந்து அமுது செய்வார்.
          மூர்க்க நாயனார் இவ்வுலகை விடுத்த பின் சிவ புண்ணிய பேற்றால் பூத கணங்கள் சூழ்ந்து இசை பாட ஆனந்த தாண்டவம் செய்தருளும் சிவபெருமானது உலகமாகிய சிவபுரம் அடைந்து பேரின்பமடைந்தார்.
         கௌணீ பக்தர்கள் முறையாக பகவானை உபாசிப்பதில்லை என்றாலும் இவர்கள் நிச்சயம் பகவானை நெருங்க முயற்சி செய்கிறார்கள்.படிப்படியாக இவர்களும் அகத்தூய்மை பெற்று நிச்சயம் பகவானை அடைவார்கள்.
          கருணைக்கடலான பகவான் அவரை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தாலும் அவர் நம்மை நோக்கி நான்கு அடி எடுத்து வைக்கிறார்.இவர்களும் இறுதியில் பகவானின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.இவர்களையும் புண்ணிய ஆத்மாக்களாக மகா புருசர்கள் பக்தி செலுத்தி ஊக்குவிப்பார்கள்.ஏனெனில் பக்தியால் மட்டும் பகவானை சார்ந்து சரண் அடைவது பகவத் தியானம் பஜனை எல்லாம் தாமாகவே வந்துவிடும்.ஆனால் எப்படியும் பகவானை அடையவேண்டும் என்ற லட்சியம் வேண்டும்.வேறுவிதமாக மூன்று வகை பக்தர்கள் இருக்கிறார்கள்(தொடரும்)

Tuesday 20 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 39

உன் தாமரை கண்கள் என் உள்ளத்தை பிளக்கின்றனவே.உனக்கு கருணை என்பது கிடையாது.நீ மிக்க கொடுமைக்காரன் என்று பாடி வருந்துகிறார்.
          மேலும் விளக்கமாக கூற வேண்டுமென்றால், காடு ,மலை அடங்கிய இந்த மேதினி எங்கும் தன் பிரபுவான இதயத்தின் நாயகனை காண்பார்கள்.காதுகளால் எல்லா சங்கீதங்களையும் அவன் புகழ் கீதமாக கேட்பார்கள்.இனிய நறுமணத்தில் நாயகனின் துளசி மணத்தை நுகர்வார்கள். இறைவன் திருநாமங்களை இனிக்க இனிக்க உச்சரிப்பார்கள்.தேகத்தால் பகவானை பூஜை செய்வார்கள்.
          ஆகாயத்தில் ஓம் என்ற ஒலி ஆண்டவனின் குரலாக கேட்கிறது.உலகில் ஒலிக்கும் ஒலியெல்லாம் ஓங்கார ஒலியின் வடிவங்களே.வாயுவில் பகவானின் தெய்வீக  மணமும் ஸ்பரிசமும் உணரப்படுகின்றன.அக்னியில் இருக்கும் ஜோதி பரஞ்சோதியாக தெரிகிறது.பூமியில் இருக்கும் மணம் எல்லாம் நறுமணமாக இறைவன் உணரப்படுகிறான்.பறவைகளின் குரல்களும் சலசலக்கும் தாவரங்களும் ஹரிசிவா,ஹரிசிவா,என்றே ஒலி எழுப்புகின்றன.என்று மகான்கள் கூறுகிறார்கள்.உலகமனைத்தும் பேரின்பமயமாக இருக்கிறது.எங்கும் ஆனந்த மயமாக ஆருயிர் கண்ணன் அமுத மயமான இறைவன் சௌந்தர்யமும் மாதுர்யமும் நிறைந்து உணரப்படுகிறான்.பார்ப்பவன் பார்க்கப்படும் காட்சி ஜீவராசிகளின் அதிசயங்கள் எல்லாம் மதுரமாக தெரிகின்றன.
          வேதம் கூறுகிறது: -"பகவானின் அருள் எங்கும் நிறைந்து இனிமையான காற்று வீசட்டும்.சமுத்திரங்கள் இனிய ஓசை கிளப்பட்டும்.மதுவை பொழியட்டும்.பயிர் பச்சைகளும் தாவரங்கள் ஒளசதங்களும் அமிர்தம் பொழிந்து பூமியின் ஒவ்வொரு மண் துகளும் புனிதமாக இனிமையாக இருக்கட்டும்"
           இவ்வாறு பக்தனின் பார்வையில் எல்லாம் இன்பமயமாக இருக்கும்.
பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
          என்னை எங்கும் காணும் பக்தன் என்னில் சகலத்தையும் காண்கிறான்.அவன் மனக்கண் முன்னிருந்து நான் மறைவதில்லை.அவனும் என் சிந்தையில் இருந்து மறைவதில்லை.
          சாந்தோக்ய உபநிஷத் கூறுகிறது:
யத்ர நான்யத் பச்யதி ----- பிரம்மத்தை தவிர அவன் எதையும் அறிய மாட்டான்.அவன் அமரத்தன்மை வாய்ந்தவன்.பிரம்மத்தை மறந்து எதையும் பார்ப்பவன்,கேட்பவன்,அற்பமானவன் அவனே இறப்பவன்.எல்லையற்ற பிரமாண்டமாக இருக்கும் பிரம்மம் அமிர்தமயமானது,சாத்தியமானது,மதுரமானது,அது போல பிரேமையும் அதே தன்மையுடன் இருக்கிறது.
"கெளணீ த்ரிதா குணபேதாதார்தாதி பேதாத்வா" 
          இதுவரை மேலான மேன்மை தரும் பக்தியை பற்றி விவரமாக கூறினார்கள்.அதற்க்கு சற்று கீழ்தளத்தில் உள்ள பக்தி குண பேதங்களால் மூன்று வகைப்படும் அல்லது ஆர்த்த பக்தியின் பேதங்களாலும் மூன்று வகைப்படும்.
          மேல்நிலை பக்தியில் திளைத்தவர்கள் சீக்கிரமே பகவானின் பிரேமை அன்பில் கலந்து விடுவார்கள்.பகவத் கீதையில் இதை ஞானியின் பக்தி என்றும் நிர்குண பக்தி என்றும் காரணமில்லா பக்தி என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த காரணமில்லா பக்தியில் பக்தனின் சித்தமும் செயல்பாடுகளும் இடைவிடாமல் தன்னிச்சையாக பகவானை நோக்கி பிரவாகமாக ஓடும்.சித்தம் அனன்ய பிரேம பாவம் கொண்டு பகவானை விட்டு விலகாமல் இருக்கும்.
         கெளணி பக்தி என்பது முக்குணங்களை கொண்டது.அதாவது சாத்வீகம்,ராஜசம்,தாமசம்,ஆகிய மூன்று குண பேதங்களுடன் இருக்கிறது.அனைத்து கர்மபலன்களும் பகவானுக்கே அர்ப்பணம் செய்து எதற்கும் ஆசைபடாமல் பகவானை ஆசையுடன் வழிபட்டு வருவது சாத்வீக பக்தியாகும்.(தொடரும்) 

Monday 19 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 38

"ப்ரகாசதே க்வாபி பாத்ரே "
சில பக்தர்களிடம் மட்டும் பிரேமை வெளிப்படையாக தெரியும்.பகவான் அருள் அவர்கள் தேகத்தில் இறங்கும்.ரோமாஞ்சனம் உண்டாகும்.பிரேமையின் உச்சகட்டத்தில் அவர்கள் ஆடுவார்கள்.பித்து பிடித்தவர்கள் போல நடந்து கொள்வார்கள்.
           உதாரணமாக கோபிகை பெண்கள் பிரேமையின் உச்ச கட்டத்தில் தன்னை கிருஷ்ணனாகவே பாவித்தார்கள்.ஒரு பெண் மற்றொரு பெண் மீது ஏறி உறியிலிருந்து வெண்ணை திருடுவது போல பாவனை செய்தாள். ஒரு பெண் காளியநாகமாக மாறி நடித்தாள். மற்றொரு பெண் அவள் மீது ஏறி "ஏ காளிய நாகமே உனக்கு பாடம் புகட்டவே நான் வந்திருக்கிறேன் " என்று கூறினால். இவ்வாறு அந்த பிரேமை வெளிப்படுகிறது.
" குணரஹிதம் காமனாரஹிதம் ப்ரதிக்ஷண வர்தமான மவிச்சின்னம் சூக்ஷமதரமனுபவரூபம் " 
         உண்மையான அன்பு குணத்தை பார்த்து வருவதில்லை.அது தாமாகவே இயற்கையாக வரும்.குணத்தை பார்த்து வந்தால் அந்த நபரின் குணம் மாறுபடும்போது அன்பு இருக்காது.அன்பு என்றும் மாறாதது.குணங்களையும் குற்றங்களையும் கண்டால் அன்பு செலுத்த முடியாது.உண்மை பிரேமை என்ற அன்பு குணங்களின் வட்டத்தில் அடங்காதது.
         உண்மையான பிரேமை என்ற அன்பு ஆசையின் அடிப்படையிலோ லாபத்தை வைத்தோ வராது.
         பிரேமைக்கு பாத்திரமான நபர் நலமாக மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதை தவிர தமக்கு ஒரு லாபம் வர வேண்டும் என்று அன்பு செலுத்துபவர்கள் கருத மாட்டார்கள்.அன்பில் சுய நலம் கலந்தால் அந்த அன்பு களங்கப்படுகிறது.அன்பு எந்த சூழலிலும் குறையாது.அது பிரதிக்ஷனமும் பெருகிக்கொண்டே போகும்.
         பக்தன் அந்த பெருகிக்கொண்டே போகும் பிரேமையை நிச்சயம் உணர்வான்.அந்த பிரேமை ஒருபோதும் எந்த சூழலிலும் அறுபடாது.
         பிரேமை என்பது இதயம் என்ற குகைக்குள் நம்மையும் அறியாமல் உதயமாகிறது.அதனால் அது மிகவும் நுண்ணியமானது.என்று சூத்திரத்தில் கூறுகிறார்கள்.இதயத்தில் அது முளை விடும்போது படிப்படியாக வளர்கிறது.
அதன் பின் ஆனந்தமயமாக மாறுகிறது.அது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் மாறுகிறது.ஸ்ரீ ராமனின் பிரேமை பக்தி சக்தியால் ஹனுமான் மலையையும் தூக்கிவிட்டான்.பிரேமை அன்பை அனுபவித்து செயல்பட்டான்.
"தத்ப்ராப்ய ததேவாவலோகயதி ததேவ ச்ருனோதி ததேவ பாஷயதி ததேவ சிந்த்யதி"  
பிரேமையின் தெய்வீக ஆனந்த ரசத்தில் மூழ்கி விட்டவனுக்கு எல்லா பொருள்களும் உயிர்களும் தன் இனிய தலைவன் பகவானின் ரூபங்களாகவே தெரியும்.எதை கேட்டாலும் பகவானின் குரலாகவே கேட்கும்.எதை பேசினாலும் தன் பிரபுவான பகவானை பற்றியே பேசுவான்.சிந்திப்பதெல்லாம் தன் அன்புக்குரிய நாயகன் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்.மற்ற நபருக்கோ பொருளுக்கோ இடமிருக்காது.பக்தன் பகவானை நினைத்து பித்தன் போல நடந்து கொள்கிறான்.என்பதையே ஆழ்வார் பாசுரம் விளக்குகிறது.
 வேய் மருதோள்-இணை மெலியும்-ஆலோ !
மெலிவும் என் தன்மையும் யாதும் நோக்காக் -
காமரு குயில்களும் கூவும் ஆலோ !
கண மயில் -அவை கலந்து ஆலும் ஆலோ !
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு 
ஒரு பகல் ஆயிரம் ஊழி,ஆலோ!
தாமரை கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ!
தவவலை தகவிலையே நீ,கண்ணா!
கோகுலத்து இடைப்பெண்ணாக பாவித்து பாடுகிறார் ஆழ்வார்.-
உன்னை பிரிந்து விரக தாபத்தால் மூங்கில் போன்ற என் கைகள் இரண்டும் மெலிந்து போகின்றனவே.என் விரகதாபத்தை கண்டு கொஞ்சமும் இரக்கம் கொள்ளாமல் இந்த அழகிய குயில்கள் சந்தோசமாக கூவுகின்றனவே கூவி என் விரகதாபத்தை அதிகப்படுத்துகின்ற்னவே இந்த மயில் கூட்டங்களும் அவ்வாறே கூடிக்கூடி நடனம் ஆடுகின்றனவே,நீ பசுக்களை மேய்க்க காடு சென்று விட்டாய்.ஒரு பகல் ஆயிரம் ஊழிகாலமாக நீள்கிறதே.நீ எப்போது திரும்பி வருவாய்.(தொடரும்)

Sunday 18 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 37

"ய: கர்மபலம் த்யஜதி கர்மாணி ஸன்யஸ்யதி ததோ நிர்த்வந்த்வோ பவதி "
யோக ஷேமங்கள் பற்றி கவலை படாமல் தாம் செய்து வந்த பூஜை வழிபாடு அல்லது நல்ல காரியங்களின் புண்ணிய பலன்கள் தம்மை சேர வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு அவற்றை ஆண்டவனுக்கே அர்ப்பணம் செய்ய  வேண்டும். 
பகவான் சம்பந்தப்பட்ட காரியங்கள் அல்லாத காரியங்களையும் துறக்கவேண்டும்.எல்லாவற்றையும் துறந்துவிட்டு சுக துக்கங்களை சமமாக நினைக்க வேண்டும்.மனம் ,வாக்கு,சரீரத்தால் எந்த கர்மங்கள் செய்தாலும் அதை பகவானுக்காக செய்ய வேண்டும்.அதன் பலனை பகவானுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும்.இன்பம்,துன்பம்,லாபம்,நஷ்டம்,தனது,பிறரது என்ற இரண்டு விசயங்களையும் ஒன்றாக பாவிக்கவேண்டும்.
           பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
வேதங்களும் முக்குணங்கள் கொண்டவை. அதாவது முக்குணங்களை வெளிப்படுத்தும் உலகியல் விசயங்களையே பேசுகின்றன.ஆதலால் அர்ச்சுனா நீ முக்குணங்கள் வலையில் சிக்காமல் இருக்க வேண்டும்.நிதமும் தூய சத்துவ சித்தமுடன் சுக துக்கங்களால் பாதிக்கபடாமல் யோக க்ஷேமங்களை சிந்திக்காமல் பரமாத்மா சொரூபத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
"வேதானபி ஸன்ன்யஸ்யதி கேவலம விச்சின்னானு ராகம்லபதே " 
          வேதங்கள் உலகியல் விசயங்களையே பகர்கின்றன.அவற்றில் ஞானகாண்டம் தான் ஆத்மா,பரமாத்மா தத்துவங்களை விமர்சிக்கிறது.வேதங்கள் சொல்லும் சில முக்கியமான கடமைகளை மட்டும்
செய்யலாம்.சொர்கத்திற்கு வழிகாட்டும் யக்ஞயாகங்கள் செய்யதேவையில்லை என்பதை உணர்த்தும் வகையில் வேதங்களில் சொல்லப்பட்ட கர்மங்களை துறக்க வேண்டும் என்று சூத்திரத்தில் கூறி இருக்கிறார்கள்.
          பக்தர்களோ பகவான் பிரேமையில் மூழ்கி மற்ற விசயங்களை மறந்து விடுவார்கள்.இதில் வேதங்களில் சொல்லப்பட்ட கர்மங்களை சரிவர செய்ய முடியாமல் போக எல்லா கர்மங்களும் தாமாக விடுபட்டு விடும்.அவன் வேதங்களை கடந்து உபநிசதங்கள் கூற்றுப்படி இறைவனில் இரண்டற கலந்து விடுகிறான்.என்றென்றும் மனதில் இறைவனை குடி வைத்து அவனை விட்டு இணை பிரியாமல் பேரின்பம் அடைகிறான்.
"ஸ தரதி ஸ தரதி ஸ லோகான்ஸ்தாரயதி "
இப்படிப்பட்ட பக்திமான் பிறவி பெருங்கடலில் இருந்து கரை சேர்கிறான்.தான் மட்டுமில்லாமல் தன்னிடம் வந்தவர்களையும் கரை சேர்த்து விடுகிறான்."மத் பக்தி யுக்தோ புவனம் புனாதி "என்று பாகவதம் கூறுகிறது.அதாவது தூய பக்திமான் இறைவனோடு உண்மை,பிரேமை கொண்டவன் ,தான் இருக்கும் சுற்று சூழலை தூய்மை ஆக்குகின்றான்.உலக மக்களையும் கரை சேர்ப்பதால் அகில உலகையும் தூய்மை படுத்துவான்.
          பிரேமை எப்படி லட்சங்களுடன் இருக்ககூடியது என்பதை அடுத்த சூத்திரத்தில் கூறுகிறார்கள்.
   "அனிர்வசனீயம் பிரேமாஸ்வரூபம் "
பகவானிடம் இருக்கப்படும் பிரேமை காதல் எல்லாம் வார்த்தைகளால் விளக்க முடியாது.அதை அனுபவிப்பவர்களே பாக்கியசாலிகள். "அன்பே சிவம்" என்ற கூற்று படி பகவான் அன்பு மயமானவர்.பிரேமைக்கும் பகவானுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.பகவானை நினைத்தால் இனிக்கும் அனுபவம் ஏற்படுகிறது. உள்ளம் உருகி பரவசமாகிறது.பரபிரம்மம் வாக்குக்கு அப்பாற்பட்டது என்று உபநிசதங்கள் கூறுகின்றன.
          உலகில் நெடுநாள் பிரிந்து போன, தமக்கு அன்புக்குரிய மகன், உற்றவர்,தாய் தந்தை,நண்பர் மீண்டும் சந்திக்கும் போது அளவில்லா ஆனந்தம் உண்டாகிறது.அவர்களுடன் பேசுவதிலும் தொடுவதிலும் அலாதியான அன்பு சுரந்து இன்பம் உண்டாகிறது.அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
ராமாயணத்தில் இலங்கையில் இருக்கும் சீதைக்கு ஸ்ரீ ராமர் செய்தி அனுப்புகிறார்.
"பிரியே உனக்கும் எனக்கும் இருக்கும் அன்புக்காதலை என் மனம் மட்டும் தான் அறியும். என் மனம் எநநேரமும் உன் நினைவில் தான் உருகுகிறது.அந்த பிரீத்தி ரகசியத்தை நான் மட்டும் தான் அறிவேன்.
           மனம் எந்நேரமும் பகவானின் பிரேமை என்ற நீருக்குள் மூழ்கி விட்டால் பேச முடியாது. ஆனந்த அனுபவம் மட்டும் தான் இருக்கும்.
"மூகாஸ்வாதனாவத் " 
          இனிப்பின் ருசியை சுவைத்து சாப்பிட்டு பார்த்தால் தான் உணரமுடியும்.அது எப்படி இருக்கிறது என்று கேட்டால் வாய் பேச தெரிந்த நாம் இனிக்கிறது என்று கூறுவோம்.இனிக்கிறது என்றால் என்ன ? இதற்க்கு பதில் கூற முடியாது.ஊமை ஒருவன் இனிப்பை சாப்பிட்டு அந்த ருசியை அவனால் கூற முடியாது.அந்த நிலை தான் பிரேமையை உணர்ந்த பக்தர்களுக்கு உண்டாகிறது.அவர்களும் அதை வர்ணிக்க இயலாமல் ஊமையாகி விடுவார்கள்.
பிரகலாதன் கூறுகிறார்:
          காந்தம் அருகில் இருக்கும் இரும்பை இழுப்பது போல சக்கரதாரி விஷ்ணு பகவான் என்மனதை கவர்ந்து இழுக்கிறார்.அதன் காரணத்தை யான் அறியேன்.
அவரை நினைத்த மாத்திரத்தில் என்னையே நான் மறந்து விடுகிறேன்.வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பரவச நிலை ஒன்று என்னை ஆட்கொள்கிறது.(தொடரும்)