Sunday 8 January 2012

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 55

உலகில் இருக்கப்படும் அனைத்து விசயங்களும் ஆரம்பத்தில் இன்பமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் சலிப்பு உண்டாகிவிடும்.பகவானின் தெய்வீக உருவமும், கதைகளும் தெவிட்டாத தேன் அமுதம், அதை அனுபவ பூர்வமாக
உணர்ந்தவர்களுக்கு தான் தெரியும். பகவானின் திருஉருவ அழகில் பிரேமையும் பக்தியும் கலப்பதால் சுவையும் இன்பமும் கூடிக்கொண்டே போகும். ஒவ்வொரு நொடியும் புத்தம் புதிதாக தோன்றும்.மனதை பறி கொடுக்கும் இனிமையில் முற்றும் துறந்த முனிவர்களும் கரைந்து போவார்கள்.தெய்வீக சச்சிதானந்த அனுபவத்தில் தளைப்பார்கள். அந்த பேரின்பத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை.
"த்ரி சத்யஸ்ய பக்திரேவ கரீயஸீ பக்திரேவ கரீயஸீ "
மனம்,வாக்கு,காயம்-இந்த மூன்று வித சத்தியமான அனுபவத்தால் பக்தியே சிறந்தது என்று நாரதர் கூறுகிறார்.இதை அவரே அனுபவித்து இருக்கிறார்.
          மூன்று வித சத்தியம் என்றால் மூக்காலங்களின் சத்தியமான அனுபவத்தால் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.பக்தியே சிறந்தது என்று கூறுகிறார்.
          பகவானின் அவதாரமான கபில முனிவரின் தாயிடம் கூறுகிறார்.
சகல ஜீவராசிக்களுக்கும் ஆத்மாவாக இருக்கும் பகவானிடம் பக்தி செலுத்துவதை தவிர வேறு எந்த வழியும் சிறந்தது இல்லை.அது மிகவும் பாதுகாப்பான வழி என்றும் பரம்பொருளை தன்னுள் உணர்ந்து சித்தி பெற்ற யோகிகளும் கூறுகிறார்கள்.வேறு விசயங்களில் பற்றும் பாசமும் வைத்தால் அது பிறப்பு, இறப்பு சுழற்சியில் தள்ளி விடும்.அதே சமயம் பகவத் பக்தர்களிடம் தொடர்பு கொண்டால் நமக்கு மோட்சம் அடையும் வழி தெரியும்.
          பக்திக்கு முயற்சி செய்யும் பக்தனையும் பகவான் கைவிட மாட்டார்.சிறிதளவு கூட பக்தி செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் பகவான் கடைத்தேற்றி விடுவார்.அதனால் பக்தியை விட சிறந்தது எதுவும் இல்லை.
          நச்சுப்பால் கொடுத்த பூதனையும் ஒரு கணம் அவர் திரு உருவில் மயங்கினாள். அவளுக்கே மோட்ச சாம்ராஜ்யத்தை அளித்த கடவுள் அவரை தன் உயிராக உற்ற உறவாக அன்பனாக நினைத்த கோபிகை பெண்களுக்கும் யசோதைக்கும் என்ன கொடுக்க போகிறாய் கண்ணா! என்று கூறுவார்கள்.
"குண மா ஹாத்ம்யாஸக்தி ரூபாஸக்தி பூஜாஸக்தி ஸ்மரணா ஸக்தி,தாஸ்யா
ஸக்திஸக்யா  ஸக்தி ,காந்தா ஸக்தி,வாத்ஸல்யாஸக்தி,ஆத்மநிவேதனா ஸக்தி,தன்மயா ஸக்தி,பரமவிரஹா ஸக்தி ரூபா ஏகதாப்யேகாதசதா பவதி "
பிரேமை பக்தி ஒன்றாக இருந்தாலும் பக்தர்களின் சுபாவத்தை அடிப்படையாக கொண்டு பலவாக மாறுகிறது.ஆனால் இதில் ஏற்றதாழ்வுகள் இல்லை என்று கூறுகிறார்கள்.முக்கியமாக இதை 11 வகைகளாக பிரித்து இருக்கிறார்கள்.
 குண மா ஹாத்ம்யா ஸக்தி பக்தர்கள்: தேவரிஷி நாரத மகரிஷி பகவான் வேத வியாசர்,சுகதேவர்,ஆதி சேஷன்,பீஷ்மர்,அர்ச்சுனன்,பரீட்சீத்,அறுபத்துமூன்று நாயன்மார்கள் இதில் அடங்குவர்.
ரூபாஸக்தி பக்தர்கள்:தண்ட காருண்யா ரிஷிகள், கோபிகை பெண்கள் இதில் அடங்குவர்.
பூஜாஸக்தி பக்தர்கள்: அம்பரீஷன்,பரதன்,லக்ஷ்மி தேவி இதில் அடங்குவர்.
ஸ்மரணா ஸக்தி பக்தர்கள்: பிரகலாதன்,துருவன்,சூர்தாசர்,துளசிதாசர் இதில் அடங்குவர்.
தாஸ்யா ஸக்தி பக்தர்கள்:ஸ்ரீ ஹனுமான்,விதுரர்,மீரா,அக்ரூரர்,ஆழ்வார்கள் இதில் அடங்குவர்.
ஸக்யா  ஸக்தி பக்தர்கள்:அர்ச்சுனன்,உத்தவர்,சஞ்சயன்,ஸ்ரீ தாமன்,சுதாமன் ஆகியோர் இதில் அடங்குவர்.
காந்தா ஸக்தி பக்தர்கள்: பகவானின் 8 பட்ட ரிஷிகள்.(தொடரும்)

No comments:

Post a Comment