Sunday 15 January 2012

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 56

வாத்ஸல்யா ஸக்தி பக்தர்கள்:அதிதி,கச்யபர்,தசரதர்,கௌசல்யா,நந்தன்-யசோதா,வாசுதேவன்-தேவகி.
ஆத்ம நிவேதனா ஸக்தி பக்தர்கள்:   ஸ்ரீ ஹனுமான்,ராஜா அம்பரீஷன்,மகாராஜா பலி,விபீசனர்,சிபி மகாராஜா.
தன்மயதாஸக்தி பக்தர்கள்: யாக்ஞ்யவல்கியர்,சுகர்,சனாகதி முனிவர்கள்,ஞானிகள்,கெள்ண்டின்யர்,சுதீக்ஷனர், தண்டகாருன்ய முனிவர்கள்.
பரம விரஹா ஸக்தி பக்தர்கள்:  உதவார்,அர்ச்சுனன்,கோபிகை பெண்கள்.
          அனைத்து பக்தர்களிடமும் எல்லாவித பக்திகளும் இருந்தன.இருந்தாலும் மேற் கூறப்பட்டுள்ள பக்தர்களில் அந்த அந்த பக்திகள் பிரதானமாக இருந்தன என்பதை குறிப்பிடுவதற்காக அவர்கள் பெயரை கூறியிருக்கிறார்கள்.
"இத்யேவம் வதந்தி ஜனஜல்ப நிர்பயா: ஏகமதா:குமாரல்யாஸ சுக சாண்டில்ய கர்கவிஷ்ணு கௌண்டின்ய சேஷோத்த வாருணீ பலி ஹனுமத் விபிஷனாதையோ பக்த்யாசார்யா:"
சனத் குமாரர்,மகா முனிவர்கள்,வேத வியாசர்,சுக தேவர்,சாண்டில்யர்,கர்கர்,விஷ்ணு,ஆதிசேசன்,உத்தவர்,ஆருணி,பலி,ஹனுமான்,விபீசனர் ஆகிய பெரியோர் அனைவரும்,உலக மக்கள் என்ன சொல்வார்களோ பாராட்டுவார்களா அல்லது அவச்சொர்களால் அவமதிப்பார்களா என்று எதையும் பொருட்படுத்தாமல் பக்தியே சிறந்தது என்று ஒரு மனதாக கூறுகிறார்கள்.
          தேவரிஷி நாரதர் இங்கு அற நூல்களை எழுதி அதில் முதலிடம் பெற்ற ஆச்சாரியர்கள் பெயர்களை கூறி இருக்கிறார்கள்.இந்த மகா புருசர்கள் பக்தி தத்துவத்தை அறிந்தவர்கள்.சனத் குமாரர்கள் பகவான் பூலோகத்தில் அவதாரமெடுக்க காரணமானவர்கள்.
          ஒரு சமயம் இந்த பக்தர்களுக்கு பரிந்து பகவான் தன் துவார பாலகர்களையே அசுரர்களாக பிறக்கும்படி சபித்து விட்டார்.
          ஸ்ரீ வேத வியாசர் 18  புராணங்களையும் இயற்றி உள்ளார்.ஸ்ரீ சுகதேவர் பக்தி ரசத்தின் அமிர்தக்கடலான பாகவத புராணத்தில் கூறியிருக்கிறார்.
          சாண்டில்ய மகரிஷி பக்தி தத்துவத்தை வைத்து பக்தி சூத்திரங்களை இயற்றி இருக்கிறார்.மகரிஷி கர்கரும் கர்கசம்ஹிதை என்ற பக்தி நூலை எழுதி இருக்கிறார்.
          மகரிஷி விஷ்ணு என்பவர் விஷ்ணு ஸ்மிருதியை எழுதியிருக்கிறார்.கௌண்டின்யர் பக்தி மார்க்கத்தை பின்பற்றி சித்தி பெற்றவர்.
          ஆதிசேஷன் பற்றி சொல்லவே வேண்டாம்.பகவானுக்கு சேவை செய்ய லக்ஷ்மணராக பிறந்தவர்.எப்போதும் ஆயிரம் திருவாய்களால் பகவான் புகழை பாடிக்கொண்டு இருக்கிறார்.
         உத்தவர் பகவானிடம் நட்பு கொண்டு நண்பனாக இருந்தவர்.
          ஆருணீ என்ற நிம்பார்க்க மகரிஷி ராத கிருஷ்ண தத்துவத்தை உபதேசித்தவர்.
          பலி மகாராஜா தன் ஆட்சிக்கு கீழ் உள்ள அனைத்து சாம்ராஜ்யங்களையும் வாமன பகவானுக்கு தாரை வார்த்து தந்து இறுதியில் தன்னையும் அர்ப்பணம் செய்தவர்.இவர் மீது பகவான் மகிழ்ந்து பாதாள லோகத்தில் இன்றும் காவல் தெய்வமாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
          ஸ்ரீ ஹனுமானின் தாச பாவம் அனைவருக்கும் தெரிந்தது தான்.விபீசனரின் சரணாகதியும் ஸ்ரீ ராமரிடம் நட்பு கொண்ட பக்தியும் எல்லோரும் அறிந்த விஷயம்.
         இவர்கள் அனைவரும் யார் எது சொன்னாலும் கவலைப்படாமல் பக்தியே சிறந்தது என்று பக்தியோகத்தை பின்பற்றினார்கள்.ஸ்ரீ நாரதரோ பக்தி சூத்திரங்களை எழுதி பக்தி பிரசாரமே செய்கிறார்.
        "  ய இதம் நாரதப்ரேக்தம் சிவானுசாசனம் விச்வஸிதி ச்ரத்தத்தே ஸ ப்ரேஷ்டம் லபதே ஸ ப்ரேஷ்டம் லபதே "
பக்தி சாஸ்திரத்தை இயற்றி விட்டு அதற்க்கு நிறைவாக  ஸ்ரீ நாரதர் கூறுகிறார்.
எல்லா விதத்திலும் நன்மை தரும் பக்தியோகத்தை இங்கு உபதேசித்து இருக்கிறேன்.இது மங்களகரமானது.சிவம் என்றால் மங்களம்,சுபம் என்று அர்த்தம் கொள்ளலாம்.அல்லது பக்தி தத்துவத்தின் ஆதி ஆசான் சாட்சாத் சிவபெருமானே ஆவார்.மேலே கூறப்பட்ட உபதேசத்தில் நம்பிக்கையும் சிரத்தையும் கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன் ஆத்மாவிலும் சித்தத்திலும் இதை பதிய வைக்க வேண்டும்.வாழ்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.(சிரத்தை என்றால் நம்பிக்கை)நோய் தீர நம்பிக்கையுடன் மருந்து உண்பது போல நமது பக்தியின் பலனில் சந்தேகம் கொள்ளாமல் நாம் செய்யும் பக்தி உயர்வையும் எல்லா நலன்களையும் தரக்கூடியது என்ற நம்பிக்கை வைக்க வேண்டும்.அன்பான பக்தியை ஏற்றுக்கொண்டாலோ பகவானுக்கு அன்பனாகலாம்.நிச்சயம் அன்பனாகலாம்.
          சாதாரண மனிதர்களால் பக்தியின் உச்சக்கட்டத்திற்கு போக முடியாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போது அன்பொழுக பிரார்த்தனை செய்ய வேண்டும்.கஷ்டத்தில் வீழ்ந்து விட்டால் இறைவனை அழைக்க வேண்டும்.அழைத்தால் இறைவன் எந்த ரூபத்திலும் வந்து உதவி செய்வார்.அவரை அடைய முயற்சி செய்தாலும் கூட நம்மை கடைத்தேற்றுவார்.
                                        ஸ்ரீ சிவார்ப்பணம்  
                                        சுபம் 
          இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment