Tuesday 3 January 2012

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 52

பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்.
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷ மாமனுஸ்மர- என்றென்றும் இடை விடாது என்னை நினைத்துக்கொண்டிருந்தால் இறுதியில் நீ என்னையே அடைவாய்.
பாகவத புராணத்தில் கோகர்ணன் தன் தந்தையிடம் கூறுகிறார்.தந்தையே மாமிசமும் உதிரமும் சேர்ந்திருக்கும் இந்த தேகத்தின் மீது பற்று கொள்வதை விட்டு விடுங்கள்.தன் சொத்து தன் மனைவி மக்கள் என்ற பாச பந்தங்களை அறுத்து விட்டு இறைவனை அடைய சீக்கிரம் வழி தேடுங்கள்.ஏனெனில் இந்த உலகமும் உலக வாழ்க்கையும் நிலையற்றவை என்று புரிந்து கொண்டு வைராக்கியம் அடைய வேண்டும்.
         மீண்டும் கோகர்ணன் கூறுகிறார்:
சாரமில்லா இந்த உலக வாழ்க்கை நொடிப்பொழுதில் முடிந்து விடும்.இதில் மனிதன் பணம்,புகழ்,பதவி,சொத்து,சுகம் இவற்றில் அமிழ்ந்து விடுகிறான்.தன் க்ஷேமத்தை பற்றி அரை நொடியாவது அவன் யோசித்தானானால் சுக தேவர் பாடிய ஒப்பற்ற பாகவத கதையை அமுதம் போல் பருகி தன்னை கடைத்தேற்றிக்கொள்வான்.
பணத்தை சிறுக சிறுக சேமிப்பது போல பகவத் பக்தியை சிறுக சிறுக வளர்க்க வேண்டும்.பகவானை நினைக்காத நாள் வீணான நாள்.நாம் பகவானின் பிரேமை பக்தியை நழுவ விட்டு விட்டோம்.அறியாமையால் இருந்து விட்டோம்.நஷ்டப்பட்டு விட்டோம் என்று நினைக்க வேண்டும்.
"அஹிம்ஸா ஸத்ய சௌசாதயாஸ்திக்யாதி சாரித்ர்யாணி பரிபாலனியாணி"
பக்தியோக சாதகன் அஹிம்சை,சத்தியம்,தூய்மை,தயை,ஆதிக்கம் முதலிய நல்ல விசயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.இந்த தகுதிகளுடன் இருப்பவனே தெய்வ சம்பத்துள்ள நல்ல பக்தன்.பக்தனாக இருப்பவன் நற்குணங்களுடன் இருக்க தேவையில்லை என்று சொல்வது தவறு.ஏனெனில் பாவியாக இருப்பவன் பக்தனாக முடியாது.பக்தன் புண்ணியவந்தனாகவே இருப்பன்.பெரும்பாலும் உண்மையான பக்தனை வெளித்தோற்றத்தை   வைத்து சோதிக்க முடியாது.அதனால் சூத்திரத்தில் கூறப்பட்ட ஐந்து நல்ல விஷயங்கள் அவசியம் இருக்க வேண்டும்.என்று கூறுகிறார்கள்.அவை இல்லையென்றால் அவன் பக்தனே இல்லை.
          பகவான் மீது இயற்கையாகவே ஈடுபாடு ஏற்பட்டால் தெயவாம்சதுடன் இருப்பான் பக்தன்.அசுர சம்பத்துக்கள் வளர்ந்தால் பக்திக்கு தகுதியாக இருக்க மாட்டான்.
          சூத்திரத்தில் ஐந்து நற்குணங்களை கூறி இருக்கிறார்கள்.
அகிம்சை: மனம்,வாக்கு,சரீரத்தால் எவருக்கும் துன்பம் தராமல் இருப்பது,அனைவருக்கும் சுகம் தருபவனாக இருக்க வேண்டும்.
சத்தியம்:சத்தியமாக பேசுவது,சத்தியமாக நடப்பது,சத்தியமாக வாழுவது இவற்றை கலியுகத்தில் முற்றிலுமாக கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் சூதை துறந்து பிறரை ஏமாற்றாமல் வாழ்க்கை நடத்த வேண்டும்.
கூடுமானவரை சத்தியமாக பேசினாலும் இனிமையாக பேசவேண்டும்.பிறர் மனம் புண் படும்படி சத்தியம் பேசினாலும் சிலர் கவலைப்படுவதில்லை.பிறருக்கு நன்மை பயக்கும் விதம் சத்தியம் பேசவேண்டும்.
கெளசம்:அகத்துய்மை,புறததுய்மை.
புறத்தூய்மை - நல்ல சாத்வீக உணவு உண்டு தேகத்தை ஆரோக்கியமானதாகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்ளவேண்டும்.
          அநியாய வழியில் சம்பாதிப்பது பாவப்பட்ட பணம்.தமக்கு உடமையான சொத்தும் அனுபவிக்கும் செல்வமும் தூய்மையாக இருத்தல் வேண்டும்.செய்யும் தொழிலிலும் பிறருக்கு துன்பம் தராமல் நியாயமாக இருக்க வேண்டும்.
          தீயவர்கள் மத்தியில் வசிக்க கூடாது.பிறரை இம்சித்து பிற உயிரை கொன்று மாமிச உணவு கூடாது.உண்ணும் உணவும்,அன்னமும்,அனுபவிக்கும் பொருளும் பகவானுக்கு அர்ப்பணித்த பின்பே தமக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்.கள்ளம் கபடம் இல்லாமல் பழக வேண்டும்.(தொடரும்)

No comments:

Post a Comment