Saturday 26 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 15

பக்தி பரவசமாக ஈசனை வழிபாடும் போது பக்தனுடைய நடவடிக்கை பிறருக்கு பித்து பிடித்தவன் செய்கை  போல தோன்றும்.உண்மை பக்தன் ஆவேசம் கொண்டு முறையும் கிரமமும் ஏதும் கவனிக்காமல் வழிபடுவான்.
          பாகவத புராணத்தில் பகவானே தன் பக்தர்களின் மகிமையை கூறுகிறார்:
என் மீது உயிரையே வைத்திருக்கும் என் பக்தர்களை விட பிரியமானவர்கள் எவருமில்லை.ப்ரம்மா,சங்கரர்,லக்ஷ்மி,பலராமர் இவர்களும் எனக்கு பிரியமானவர்கள் இல்லை. என் பக்தர்கள் பகை துறந்து மன அமைதி பெற்று அனைத்து உயிர்களையும் நேசிப்பவர்களாக எங்கும் என்னையே காண்பவர்களாக பற்று அற்று இருப்பார்கள்.என்னை நினைத்து பரமானந்தம் அடைபவர்களை மற்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.என்னையே தமக்கு சொந்தம் ஆக்கிகொண்டவர்களின் பக்தியே உயர்ந்தது.இதுவே நாரதர் கூறும் பக்தி.இவர்கள் பாத தூசி படாதா என்று இவர்கள் பின்னால் திரிந்து கொண்டு இருப்பேன்.
          " அஸ்த்யேவமேவம் "
            மேற்சொன்னவாறு ஸ்ரீ நாரதர் கூறும் பக்தியின் சொரூபம் இது தான்.
            " யதா வ்ரஜகோபிகானாம் "
            பக்தி என்பதற்கு சரியான உதாரணம் காட்ட வேண்டுமென்றால் கோகுலத்தில் கிருஷ்ணனையே தன் ஜீவிதமாக கொண்ட கோபிகை கண்ணிகள் செலுத்திய பக்தி ஒப்பற்றது.எந்த பக்தர்களும் அவர்களுக்கு ஈடாக மாட்டார்கள்.பாகவத புராணத்தில் கிருஷ்ண பகவானே கூறுகிறார்.:
          கோபிகா பெண்கள் தன்னையும் தன் குடும்பத்தையும் பற்றியும் சற்றும் சிந்திக்காமல் என்னையே உயிர் மூச்சாக கொண்டவர்களின் பக்தியை எப்படி விமர்சிப்பது? இவர்களுக்கு நான் எப்படி கைம்மாறு செய்வேன்?
          ஸ்ரீ கிருஷ்ணர் உத்தவரிடம் கூறுகிறார்:
கோகுலத்தை விட்டு நான் மதுரா வந்து துவாரகை வந்து விட்டேன்.அவர்கள் என்னை நினைத்து நினைத்து உருகிக்கொண்டு இருக்கிறார்கள்.விரக தாபத்தால் வியகுலமடைந்து யோகிகள் அடையும் பரமாத்மாவோடு ஒன்றிய நிலை அடைந்து விட்டார்கள்.நான் தொலைவில் விலகி இருந்தாலும் என்னை ஆத்மாவில் நிறுத்தி உலக வாழ்கையை மறந்து தியானத்தில் ஆழ்ந்து விட்டார்கள்.
          கோபிகை பெண்கள் பால் கறக்கும் போதும், உலக்கையால் தானியங்களை இடிக்கும் போதும் வீடு மெழுகி சுத்தப்படுத்தும் போதும் தாலாட்டு பாடி குழந்தைகளை தூளியில் தூங்கவைக்கும் போதும் சித்தமெல்லாம் கண்ணனை பக்தியில் நிரப்பி கசிந்து கண்ணீர் மல்க கண்ணனை நினைத்து பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.உத்தவர் கண்ணனிடம் கூறுகிறார்:- கண்ணா நான் கோகுலத்திற்கு பொய் நேரில் பார்த்ததை கூறுகிறேன்: கோபிகை பெண்கள் ஜென்மம் எடுத்ததற்கு மேலான பலன் கிடைத்து விட்டது.ஏனெனில் விசுவாசமான ஹரியுடன் இரண்டற கலந்து விட்டனர்.அந்த நிலை அடைய முனிவர்களும் தவசிகளும் யத்தனித்து கொண்டிருக்கிறார்கள்.யாகங்களாலும் தவத்தாலும் எட்ட முடியாத மேல் நிலையை பிரேமை பக்தியால் எட்டி விட்டார்கள்.திருமகளும் அந்த பாக்கியத்தை அடைய வில்லை.  (தொடரும்)

No comments:

Post a Comment