Saturday 24 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 43

ரிஷி முனிவர்கள் வியாசர்,நாரதர்,சுகதேவர் ஆகியோர் உருவமற்ற பரப்ரம்மத்தை உணர்ந்தவர்கள்.தியான சமாதியில் பரமானந்த பேரின்பத்தை அடைந்தவர்கள்.ஆயினும் இவர்களில் பகவானின் தெய்வீக குணங்கள் ,தெய்வீக இசை,ஆகியவற்றில் தன்னை இழந்து விட்டார்கள்.ஏனெனில் பகவானின் திருமேனி மாயையோடு கூடியது அல்ல.இது தெய்வீக ஜோதி சொரூபமானது.பகவத் கீதையில் அர்ச்சுனன் வியந்து தரிசித்த ரூபம்.இதை சொல்லிலடங்கா பரம சாந்தியாக ஆனந்த கடலாக வர்ணித்தாலும் நிறைவாகாது.அந்த பரஞ்சோதியின் பிரேமையும் அப்படிபட்டதேயாகும்.
" லோகஹானௌ சிந்தா ந கார்யா நிவேதி தாத்ம லோகவேதத்வாத் "
பக்தர்கள் உலகியல் விசயங்களின் லாப நஷ்டங்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.ஏனெனில் சிந்தை எல்லாம் சிவமயமாக அல்லது ஹரி மயமாக இருக்கும் போது அங்கு வேறு விசயங்களுக்கு இடமேது? உலகியல் கடமைகளையும் வேத சாஸ்திரங்களை பின்பற்றி வாழும் முறைகளையும் முன்பே அவன் அர்ப்பணம் செய்து விடுகிறான்.பக்தியின் உச்சகட்டத்திற்கு போன பின் தன்னையும் தன் கடமைகளையும் கூட மறந்து விடுகிறான்.மற்ற சிந்தனைகள் அவனை விட்டு தாமாகவே விடைபெற்று விடுகின்றன.தன்னையே அர்ப்பணித்து விட்ட பின் அவனை சார்ந்த மனைவி, மக்கள்,சொத்து சுகங்கள் எல்லாம் தாமாக பகவான் திருவடியில் சேர்ந்து விடுகின்றன.அவன் உயிர் வாழ்வதற்காக மட்டும் பட்டற்று கடமைகளை செய்கிறான்.
"ந ததஸித்தௌ லோகவ்யவ ஹாரோ ஹேய :
 கிந்து பலத்யாகஸ்தத் ஸாதனம் ச கார்யமேவ " 
மேற்சொன்னவாறு உலகியல் விசயங்களும் வேத சாஸ்திர கடமைகளும் பக்தியின் மேல்நிலையில் தாமாக விடுபடாவிட்டால் கடமைகளை அவசியம்
செயலாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.நல்ல கர்மங்களின் புண்ணிய பலனை ஆண்டவனுக்கே கொடுத்து விட வேண்டும்.பகவானுக்காகவே சேவை செய்வது போல பிற உயிர்களுக்கு நன்மை செய்து வாழ வேண்டும். அவ்வாறு செய்தால் தற்பெருமை ஒழியும். பக்தியின் ஆரம்பபடியில் இருப்பவர்கள் தீமையிலிருந்து விலகி சுயநலமின்றி தேவ பூஜைகளையும் பித்ரு கடனையும் சாஸ்திரங்கள் கூறியபடி செய்வார்கள்.
"ஸ்திரிதன நாஸ்திக வைரி சரித்ரம் நச்ரவணியம்"
முன் சொன்ன சூத்திரங்களில் உலகில் வாழ்வதற்கு உதவும் கடமைகளை, பக்தியை ஒரு சாக்காக வைத்து துறக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்கள்.இருப்பினும் பக்தி மார்க்கத்தில் செல்பவர்கள் சில தீமைகளில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
          பெண் முஹம பிடித்த நபர்களுடன் நட்பு கொள்ள கூடாது.பேராசை பட்டு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்க கூடாது.நாத்திகம் பேசும் நபர்களிடம் சகவாசம் கூடாது.தமக்கு எதிராக செயல்படும் நபர்களிடம் தீராத பகையும் வேண்டாம்.அவர்களை பற்றி புறம் பேசவும் வேண்டாம்.அவர்கள் வரலாற்றினை கேட்கவும் வேண்டாம்.
          ஆண்களை வசியபடுத்தும் சுபாவமுடைய பெண்களிடம் நட்பு கொள்வது மரணத்தை தழுவுவதற்கு சமமானது.ஏனென்றால் யானைகூட்டத்திற்க்கு தலைமை தாங்கும் யானையை மற்ற யானைகள் வந்து அதனுடன் சண்டையிட்டு வீழ்த்திவிடும். அதனால் தன் ஆத்மாவை மேன்மை அடைய செய்து பக்தி யோக வழியை பின் பற்றி வாழ விரும்புகிறவன் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.(தொடரும்)


Friday 23 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 42

                                                              

ஒரு கோடை காலத்தில் காட்டில் உள்ள யானை கூட்டம் அதிக வெப்பத்தால் துன்புற்று நீர் நிலையை நோக்கி சென்றது.ஓர் இடத்தில ஒரு பெரிய ஏரியை கண்டு மிக உற்சாகமாக யானைகள் நீருக்குள் இறங்கி தண்ணீர் பருகி தாமரை தண்டுகளை பிடுங்கி தின்றன.இஷ்டம் போல நீராடின.ஏரி நீரை யானைகள் கலக்கி கொண்டிருக்கும் போது திடீரென்று நீருக்கடியில் ஒரு முதலை வந்து யானை தலைவன் காலை பற்றிக்கொண்டது.நிலை தடுமாறிய யானை தலைவன் பலம் கொண்டு காலை இழுத்தது.மற்ற யானைகளும் யானை தலைவனை இழுத்தன.முதலிடம் சிக்கிகொண்ட யானையை பார்த்து மற்ற யானைகள் பிளிறின.அவைகளின் முயற்சி பலிக்காமல் போனது.நெடுநாள் கழித்து முதளையிடம் சிக்கிய யானை தலைவனை விட்டு விட்டு யானை கூட்டம் அனைத்தும் சென்று விட்டன.முதலைக்கோ நீரில் பலம் கூடிக்கொண்டே இருந்தது.
           யானைக்கும் முதலைக்கும் நடந்த இழுபறி போராட்டம் வருடக்கணக்கில் தொடர்ந்தது.யானை பலவீனமடைய தொடங்கியது.அச்சமயம் யானைக்கு கர்மவினைபயனாக முன்ஜென்ம நினைவு வந்தது.நாம் இந்த பிறவியில் வீழ்ந்து ஆசா பாசங்களில் சிக்குண்டு ஆண்டவனை மறந்தோமே என்று நினைத்தது.சரண் அடையும் அடியாட்களை காப்பாற்றும் இயல்புடைய ஸ்ரீ நாராயணர் தாம் எம்மை காப்பாற்ற வேண்டும் அவரே யம பயம் போக்கி பக்தருக்கு நற்கதி அளிப்பார் என்று நினைத்து ஆதிமூலமே ஸ்ரீ நாராயணா என்னை காத்தருள்வீர் பெருமானே இந்த தாவர ஜங்கமம் அடங்கிய வையகமும் வானகமும் காக்கும் பரம் பொருளே என்மீது தயை புரிய வேண்டும் என்று பகவானை அழைத்து. சர்வசக்தி படைத்த விஷ்ணு பகவானுக்கு யானையின் பிரார்த்தனை குரல் விஷ்ணு பகவானுக்கு கேட்டது.அவர் மனமிரங்கி கருடன் மீதேறி அங்கு வந்தார்.சுதர்சன சக்ராயுதம் ஏவி முதலையின் தலையை வெட்டினார்.யானையை இழுத்து கரையில் கொண்டு வந்தார்.அவர் ஸ்பரிசம் பட்டு யானை தன உடல் துறந்து தேவனாக மாறியது.முதலையும் சாபம் நீங்க பெற்றது.இருவரும் தேவர்களாக மாறி விஷ்ணுபகவானுடன் சேர்ந்து வைகுண்ட பதவியை அடைந்தார்கள்.
 "ப்ரமாணாந்தர்ஸயான பேக்ஷத்வாத் ஸ்வயம் பரமாணத்வாத் "
பக்தியை நிருபிக்க எந்த பிரமாணமும் தேவையில்லை.ஏனெனில் அதுவே பிரத்யட்ச பிரமாணமாக இருக்கிறது.பக்தியின் பிரேமை ஆனந்தம் தாமாக உணரப்படுகிறது.அந்த இறை இன்பம் பக்தனாக இருப்பவனுக்கே தெரியும்.மனமுருகி நினைக்கும் போதே பரவசமடைந்து நடனமும் ஆடுவார்கள்.
"சாந்திரூபாத் பரமானந்தரூபாச்ச "
பக்தி ஏன் பிரத்யட்ச பிரமாணமாக நிருபிக்கபடுகிறது?ஏனென்றால் அது சாந்தி ரூபமானது.பரமானந்த ரூபமானது.பக்தி செலுத்தினால் பக்தனுக்கு சாந்தி கிடைக்கிறது.பகவான் தன மஹா மகிமையை விட்டு இறங்கி வந்து பக்தர்கள் முன் தன் திவ்ய சக்தியுடன் பிரகடனமாகிறார்.பகவான் ஆனந்தமானவன் என்று நிரூபிக்கிறார்.இது முக்குணங்களுடன் சேர்ந்த சகுண பிரம்ம சொருபமில்லை என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.(தொடரும்)

Thursday 22 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 41

பகவத் கீதை கூறுகிறது.-
           ஆர்த்த பக்தன், ஜிக் ஞாஸு பக்தன்  பக்தன்,அர்த்தார்த்தீ பக்தன் ஆகிய மூன்று வகை பக்தர்கள் தனி தனி இயல்பு உடையவர்கள்.
           ஆர்தபக்தன்: ஆபத்து வியாதி போன்ற தன் கஷ்டங்களையும் பாவங்களையும் அழிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் பகவானை தொழுது பஜனை செய்வது கோவில் திருப்பணிகளை செய்வது ஆகிய வழிகளால் இறைவனை ஆராதிப்பான்.
            ஜிக் ஞாஸு பக்தன்: பகவான் என்றால் அவருடைய ஆற்றல் என்ன ? பகவானை தத்துவார்த்தமாக எப்படி அறிய முடியும் எங்கும் நிறைந்த ஈசன் எப்படி அருள் பாலிக்கிறார்?என்று பகவானை பற்றி நன்கு அறிய விரும்பும் வேட்கை கொண்டவன் தன் அரிய பிரேமை பக்தியால் உபாசனை செய்து நெருங்குகிறவன் ஜிக் ஞாஸு பக்தன் பக்தன் ஆகிறான்.
             அர்த்தார்த்தீ பக்தன்:இவன் புராண காலத்து அசுரர்கள் போல தவமிருந்து நாம ஜபம்,தியானம் செய்து வரங்களை கேட்பான்.மென்மையான வாழ்வு ,பெயர்,புகழ்,செல்வம் எல்லாம் பகவானிடம் விரும்புவான்.
           உலகத்தின் நிலையில்லா வாழ்வில் நிலையில்லா அற்ப சுகங்களுக்கும் சந்தோசங்களுக்கும் பகவானிடம் கையேந்துவது எப்படி இருக்கிறதென்றால் -பொன்னும் பொருளும் ரத்தினங்களும் வழங்கும் பெரும் செல்வந்தனிடம் போய் எனக்கு தவிடு வேண்டும் என்று கேட்பது போல உள்ளது.
           உண்மையில் செல்வதினுள் பெரும் செல்வம் இறைவன் அன்றோ அந்த செல்வதை அடைந்த பின் வேறு எந்த செல்வம் பெரிதானது?அல்லது வேறு செல்வதை எதற்காக விரும்ப வேண்டும்?
"உத்தரஸ்மாதுத்தரஸ்மாத் பூர்வ பூர்வா ச்ரேயாய பவதி "
முக்குண பகதிகளில் சாத்வீக பக்தியே சிறந்ததாக முதலிடம் பெறுகிறது.அதுபோல ஆர்த்த பக்தி-அர்த்தார்த்த பக்தி,  ஜிக் ஞாஸு பக்தி ஆகிய வற்றில்  ஜிக் ஞாஸு பக்தியே சிறந்ததாக முதலிடம் பெறுகிறது.
"அன்யஸ்மாத் சௌலப்யம் பக்தௌ"
இறைவனை அடைய வேண்டிய மற்ற வழிகளை விட பக்தியோக வழியே சுலபமானது.கர்ம,ஞான, தியான யோகங்கள்,அனுஷ்டானம் செய்வதற்கு கடினமானவை.பக்தியோகத்தின் பலனோ எந்த பாதிப்புமின்றி கிடைத்து விடும்.மற்ற சாதனைகளில் சிறிய தவறு ஏற்பட்டாலும் அதன் பலன்கள் எதிர்மாறாக இருக்கும்.அல்லது சாதகர்களை பாதிக்க கூடியதாக இருக்கும்.
பகவான் மீது நம்பிக்கை கொண்டு முக்காலத்திலும் எங்கும் அவர் அருளை உணர்ந்தவன் நிச்சயம் பக்திக்கு பாத்திரமாகி விடுவான்.அக்கணமே அவன் பாவங்கள் எல்லாம் நாசப்பட்டு விடும்.இதற்காக எதையும் தியாகம் செய்ய தேவையில்லை.
             விலங்குகளும் பறவைகளும் பக்தி செய்து ஆண்டவனை தரிசித்த வரலாறும் உள்ளது. கஜேந்திரன் யானை, தவளை,பல்லி, சிலந்தி,வானரர்,ஆகியோர் செய்த வரலாறு கோவில்களில் சிற்பங்களால் ஓவியங்களால் பேசப்படுகிறது.பக்தி செய்த பக்தர்களிடம் பகவான் தன் மகாமஹிமையை விட்டு இறங்கி வந்து விடுவார்.(தொடரும்)

Wednesday 21 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 40

ஆசைகளை அடிப்படையாக கொண்டு உலகில் பெயருடன் புகழுடன் வாழ வேண்டும்.இஸ்வர்யங்கள் பெற்று வசதியாக, சுகமாக வாழ வேண்டும்.என்று ஆராதனை செய்வது(அதாவது இதில் விக்ரஹ  ஆராதனையும் கோவில் வழிபாடும் இருக்கும்)இதுவே ராஜச பக்தி எனப்படுகிறது.
           கோவிலை கட்டி பிறர் புகழ வேண்டும் என்பதற்காக போலியான பக்தி பஜனை செய்வது,அல்லது கோவிலில் விளக்கு போட்டு உபயம் என்று எழுதி வைப்பது,அல்லது கோவிலுக்கு தேவையான பொருள் உதவி செய்யும் போதும் பண உதவி செய்யும் போதும் தன் பெயரை பொறிக்கசெய்து உபயம் என்று எழுதி வைப்பது ராஜச பக்தி எனப்படுகிறது.
         பிறருக்கு கஷ்டத்தை கொடுத்து இம்சித்து பக்தி பஜனை எல்லாம் செய்வது தாமச பக்தியாகும்.இந்த வரிசையில் உயிர் பலி கொடுத்து இம்சித்து பூஜைகளை நடத்துவதும் தாமச பக்தியை சேர்ந்தது.பிறருடன் போட்டி போட்டுக்கொண்டு வழிபாடு செய்வதும் ஆடம்பரமாக செலவு செய்து விழா எடுப்பதும் பொருட்களை கோவிலுக்கு தானமாக தந்ததை பெருமையாக பேசிக்கொள்வதும் தாமச பக்தியை சேர்ந்தவை.
          தாமச பக்திக்கு எடுத்துக்காட்டாக மூர்க்க நாயனார் என்ற ஒரு சிவ பக்தர் ஒருவர் இருந்தார்.அவர் திருவேற்காட்டில் அமர்ந்துள்ள சிவபெருமானுக்கு சிவதொண்டு புரிந்து வந்தார்.அவர் சிவனடியாருக்கு உணவளித்து அதை பார்த்து மகிழ்ந்த பின் தான் உண்பது வழக்கம்.
          அவர் நாள் தோறும் தூய்மையான சோறு நெய் சுவை மிகுந்த கறி வகைகள் முதலியவற்றை நன்றாக சமைக்க செய்து தம்மிடம் வந்த சிவனடியார்களை வணங்கி உபசரித்து அவர்களுக்கு உணவளித்து அவர்களுக்கு வேண்டிய பொருட்களை கொடுத்துதவி அத்தொண்டில் பெரிதும் மகிழ்ந்து வந்தார்.இப்படி இருக்க நாளுக்கு நாள் அடியவர்கள் கூட்டம் பெருகலாயிற்று.நாயனாரிடம் இருந்த பொருட்கள் எல்லாம் செலவாயின.அவர் தம்மிடம் இருந்த அடிமைகளோடு பரம்பரை உரிமையான நிலம் அணிகலன்கள் முதலிய பொருட்கள் எல்லாம் விற்று சிவனடியாருக்கு விருந்து படைக்கும் திருத்தொண்டில் மகிழ்ந்து வந்தார்.முடிவில் எவ்வகை பொருளும் இல்லாத நிலை ஏற்பட்டது.மேலும் மேலும் விருந்து படைக்க வழியில்லாமல் அவர் வறுமையில் வாடி இனி பொருளுக்கு என்ன செய்வது என்று மனம் சோர்ந்தார்.பிறகு முன்னாளில் கற்ற சூதாட்டத்தினால் பொருளீட்ட கருதினார்.அவ்வூரில் சூதாடுவோர் இல்லாததால் அவ்வூரில் இருந்து புறப்பட்டார்.
          அவர் சூதாடும்போது முதல் ஆட்டத்தில் தோற்று பணய பொருளை இழப்பார்.ஆனால் பின் ஆட்டங்களில் எல்லாம் வெற்றி பெற்று பெரும் பணய பொருளை அள்ளிக்கொள்வார். எதிர் ஆட்டம் ஆடுபவர் வாக்கு மாறினால் தமது உடை வாளால் அவரை குத்துவார்.  சூதாட்டத்தில் தாம் வெற்றி பெற்ற பொருளை தம் கையாளும் தீண்ட மாட்டார்.தமக்காகவும் பயன்படுத்த மாட்டார்.அவற்றை சமையல் செய்வோரிடம் கொடுப்பார்.அவர்கள் அமுதாகுவார்கள்.அடியார்கள் யாவரும் விருந்துன்டபின் கடைசி பந்தியில் தாமும் அமர்ந்து அமுது செய்வார்.
          மூர்க்க நாயனார் இவ்வுலகை விடுத்த பின் சிவ புண்ணிய பேற்றால் பூத கணங்கள் சூழ்ந்து இசை பாட ஆனந்த தாண்டவம் செய்தருளும் சிவபெருமானது உலகமாகிய சிவபுரம் அடைந்து பேரின்பமடைந்தார்.
         கௌணீ பக்தர்கள் முறையாக பகவானை உபாசிப்பதில்லை என்றாலும் இவர்கள் நிச்சயம் பகவானை நெருங்க முயற்சி செய்கிறார்கள்.படிப்படியாக இவர்களும் அகத்தூய்மை பெற்று நிச்சயம் பகவானை அடைவார்கள்.
          கருணைக்கடலான பகவான் அவரை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தாலும் அவர் நம்மை நோக்கி நான்கு அடி எடுத்து வைக்கிறார்.இவர்களும் இறுதியில் பகவானின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.இவர்களையும் புண்ணிய ஆத்மாக்களாக மகா புருசர்கள் பக்தி செலுத்தி ஊக்குவிப்பார்கள்.ஏனெனில் பக்தியால் மட்டும் பகவானை சார்ந்து சரண் அடைவது பகவத் தியானம் பஜனை எல்லாம் தாமாகவே வந்துவிடும்.ஆனால் எப்படியும் பகவானை அடையவேண்டும் என்ற லட்சியம் வேண்டும்.வேறுவிதமாக மூன்று வகை பக்தர்கள் இருக்கிறார்கள்(தொடரும்)

Tuesday 20 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 39

உன் தாமரை கண்கள் என் உள்ளத்தை பிளக்கின்றனவே.உனக்கு கருணை என்பது கிடையாது.நீ மிக்க கொடுமைக்காரன் என்று பாடி வருந்துகிறார்.
          மேலும் விளக்கமாக கூற வேண்டுமென்றால், காடு ,மலை அடங்கிய இந்த மேதினி எங்கும் தன் பிரபுவான இதயத்தின் நாயகனை காண்பார்கள்.காதுகளால் எல்லா சங்கீதங்களையும் அவன் புகழ் கீதமாக கேட்பார்கள்.இனிய நறுமணத்தில் நாயகனின் துளசி மணத்தை நுகர்வார்கள். இறைவன் திருநாமங்களை இனிக்க இனிக்க உச்சரிப்பார்கள்.தேகத்தால் பகவானை பூஜை செய்வார்கள்.
          ஆகாயத்தில் ஓம் என்ற ஒலி ஆண்டவனின் குரலாக கேட்கிறது.உலகில் ஒலிக்கும் ஒலியெல்லாம் ஓங்கார ஒலியின் வடிவங்களே.வாயுவில் பகவானின் தெய்வீக  மணமும் ஸ்பரிசமும் உணரப்படுகின்றன.அக்னியில் இருக்கும் ஜோதி பரஞ்சோதியாக தெரிகிறது.பூமியில் இருக்கும் மணம் எல்லாம் நறுமணமாக இறைவன் உணரப்படுகிறான்.பறவைகளின் குரல்களும் சலசலக்கும் தாவரங்களும் ஹரிசிவா,ஹரிசிவா,என்றே ஒலி எழுப்புகின்றன.என்று மகான்கள் கூறுகிறார்கள்.உலகமனைத்தும் பேரின்பமயமாக இருக்கிறது.எங்கும் ஆனந்த மயமாக ஆருயிர் கண்ணன் அமுத மயமான இறைவன் சௌந்தர்யமும் மாதுர்யமும் நிறைந்து உணரப்படுகிறான்.பார்ப்பவன் பார்க்கப்படும் காட்சி ஜீவராசிகளின் அதிசயங்கள் எல்லாம் மதுரமாக தெரிகின்றன.
          வேதம் கூறுகிறது: -"பகவானின் அருள் எங்கும் நிறைந்து இனிமையான காற்று வீசட்டும்.சமுத்திரங்கள் இனிய ஓசை கிளப்பட்டும்.மதுவை பொழியட்டும்.பயிர் பச்சைகளும் தாவரங்கள் ஒளசதங்களும் அமிர்தம் பொழிந்து பூமியின் ஒவ்வொரு மண் துகளும் புனிதமாக இனிமையாக இருக்கட்டும்"
           இவ்வாறு பக்தனின் பார்வையில் எல்லாம் இன்பமயமாக இருக்கும்.
பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
          என்னை எங்கும் காணும் பக்தன் என்னில் சகலத்தையும் காண்கிறான்.அவன் மனக்கண் முன்னிருந்து நான் மறைவதில்லை.அவனும் என் சிந்தையில் இருந்து மறைவதில்லை.
          சாந்தோக்ய உபநிஷத் கூறுகிறது:
யத்ர நான்யத் பச்யதி ----- பிரம்மத்தை தவிர அவன் எதையும் அறிய மாட்டான்.அவன் அமரத்தன்மை வாய்ந்தவன்.பிரம்மத்தை மறந்து எதையும் பார்ப்பவன்,கேட்பவன்,அற்பமானவன் அவனே இறப்பவன்.எல்லையற்ற பிரமாண்டமாக இருக்கும் பிரம்மம் அமிர்தமயமானது,சாத்தியமானது,மதுரமானது,அது போல பிரேமையும் அதே தன்மையுடன் இருக்கிறது.
"கெளணீ த்ரிதா குணபேதாதார்தாதி பேதாத்வா" 
          இதுவரை மேலான மேன்மை தரும் பக்தியை பற்றி விவரமாக கூறினார்கள்.அதற்க்கு சற்று கீழ்தளத்தில் உள்ள பக்தி குண பேதங்களால் மூன்று வகைப்படும் அல்லது ஆர்த்த பக்தியின் பேதங்களாலும் மூன்று வகைப்படும்.
          மேல்நிலை பக்தியில் திளைத்தவர்கள் சீக்கிரமே பகவானின் பிரேமை அன்பில் கலந்து விடுவார்கள்.பகவத் கீதையில் இதை ஞானியின் பக்தி என்றும் நிர்குண பக்தி என்றும் காரணமில்லா பக்தி என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த காரணமில்லா பக்தியில் பக்தனின் சித்தமும் செயல்பாடுகளும் இடைவிடாமல் தன்னிச்சையாக பகவானை நோக்கி பிரவாகமாக ஓடும்.சித்தம் அனன்ய பிரேம பாவம் கொண்டு பகவானை விட்டு விலகாமல் இருக்கும்.
         கெளணி பக்தி என்பது முக்குணங்களை கொண்டது.அதாவது சாத்வீகம்,ராஜசம்,தாமசம்,ஆகிய மூன்று குண பேதங்களுடன் இருக்கிறது.அனைத்து கர்மபலன்களும் பகவானுக்கே அர்ப்பணம் செய்து எதற்கும் ஆசைபடாமல் பகவானை ஆசையுடன் வழிபட்டு வருவது சாத்வீக பக்தியாகும்.(தொடரும்) 

Monday 19 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 38

"ப்ரகாசதே க்வாபி பாத்ரே "
சில பக்தர்களிடம் மட்டும் பிரேமை வெளிப்படையாக தெரியும்.பகவான் அருள் அவர்கள் தேகத்தில் இறங்கும்.ரோமாஞ்சனம் உண்டாகும்.பிரேமையின் உச்சகட்டத்தில் அவர்கள் ஆடுவார்கள்.பித்து பிடித்தவர்கள் போல நடந்து கொள்வார்கள்.
           உதாரணமாக கோபிகை பெண்கள் பிரேமையின் உச்ச கட்டத்தில் தன்னை கிருஷ்ணனாகவே பாவித்தார்கள்.ஒரு பெண் மற்றொரு பெண் மீது ஏறி உறியிலிருந்து வெண்ணை திருடுவது போல பாவனை செய்தாள். ஒரு பெண் காளியநாகமாக மாறி நடித்தாள். மற்றொரு பெண் அவள் மீது ஏறி "ஏ காளிய நாகமே உனக்கு பாடம் புகட்டவே நான் வந்திருக்கிறேன் " என்று கூறினால். இவ்வாறு அந்த பிரேமை வெளிப்படுகிறது.
" குணரஹிதம் காமனாரஹிதம் ப்ரதிக்ஷண வர்தமான மவிச்சின்னம் சூக்ஷமதரமனுபவரூபம் " 
         உண்மையான அன்பு குணத்தை பார்த்து வருவதில்லை.அது தாமாகவே இயற்கையாக வரும்.குணத்தை பார்த்து வந்தால் அந்த நபரின் குணம் மாறுபடும்போது அன்பு இருக்காது.அன்பு என்றும் மாறாதது.குணங்களையும் குற்றங்களையும் கண்டால் அன்பு செலுத்த முடியாது.உண்மை பிரேமை என்ற அன்பு குணங்களின் வட்டத்தில் அடங்காதது.
         உண்மையான பிரேமை என்ற அன்பு ஆசையின் அடிப்படையிலோ லாபத்தை வைத்தோ வராது.
         பிரேமைக்கு பாத்திரமான நபர் நலமாக மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதை தவிர தமக்கு ஒரு லாபம் வர வேண்டும் என்று அன்பு செலுத்துபவர்கள் கருத மாட்டார்கள்.அன்பில் சுய நலம் கலந்தால் அந்த அன்பு களங்கப்படுகிறது.அன்பு எந்த சூழலிலும் குறையாது.அது பிரதிக்ஷனமும் பெருகிக்கொண்டே போகும்.
         பக்தன் அந்த பெருகிக்கொண்டே போகும் பிரேமையை நிச்சயம் உணர்வான்.அந்த பிரேமை ஒருபோதும் எந்த சூழலிலும் அறுபடாது.
         பிரேமை என்பது இதயம் என்ற குகைக்குள் நம்மையும் அறியாமல் உதயமாகிறது.அதனால் அது மிகவும் நுண்ணியமானது.என்று சூத்திரத்தில் கூறுகிறார்கள்.இதயத்தில் அது முளை விடும்போது படிப்படியாக வளர்கிறது.
அதன் பின் ஆனந்தமயமாக மாறுகிறது.அது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் மாறுகிறது.ஸ்ரீ ராமனின் பிரேமை பக்தி சக்தியால் ஹனுமான் மலையையும் தூக்கிவிட்டான்.பிரேமை அன்பை அனுபவித்து செயல்பட்டான்.
"தத்ப்ராப்ய ததேவாவலோகயதி ததேவ ச்ருனோதி ததேவ பாஷயதி ததேவ சிந்த்யதி"  
பிரேமையின் தெய்வீக ஆனந்த ரசத்தில் மூழ்கி விட்டவனுக்கு எல்லா பொருள்களும் உயிர்களும் தன் இனிய தலைவன் பகவானின் ரூபங்களாகவே தெரியும்.எதை கேட்டாலும் பகவானின் குரலாகவே கேட்கும்.எதை பேசினாலும் தன் பிரபுவான பகவானை பற்றியே பேசுவான்.சிந்திப்பதெல்லாம் தன் அன்புக்குரிய நாயகன் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்.மற்ற நபருக்கோ பொருளுக்கோ இடமிருக்காது.பக்தன் பகவானை நினைத்து பித்தன் போல நடந்து கொள்கிறான்.என்பதையே ஆழ்வார் பாசுரம் விளக்குகிறது.
 வேய் மருதோள்-இணை மெலியும்-ஆலோ !
மெலிவும் என் தன்மையும் யாதும் நோக்காக் -
காமரு குயில்களும் கூவும் ஆலோ !
கண மயில் -அவை கலந்து ஆலும் ஆலோ !
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு 
ஒரு பகல் ஆயிரம் ஊழி,ஆலோ!
தாமரை கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ!
தவவலை தகவிலையே நீ,கண்ணா!
கோகுலத்து இடைப்பெண்ணாக பாவித்து பாடுகிறார் ஆழ்வார்.-
உன்னை பிரிந்து விரக தாபத்தால் மூங்கில் போன்ற என் கைகள் இரண்டும் மெலிந்து போகின்றனவே.என் விரகதாபத்தை கண்டு கொஞ்சமும் இரக்கம் கொள்ளாமல் இந்த அழகிய குயில்கள் சந்தோசமாக கூவுகின்றனவே கூவி என் விரகதாபத்தை அதிகப்படுத்துகின்ற்னவே இந்த மயில் கூட்டங்களும் அவ்வாறே கூடிக்கூடி நடனம் ஆடுகின்றனவே,நீ பசுக்களை மேய்க்க காடு சென்று விட்டாய்.ஒரு பகல் ஆயிரம் ஊழிகாலமாக நீள்கிறதே.நீ எப்போது திரும்பி வருவாய்.(தொடரும்)

Sunday 18 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 37

"ய: கர்மபலம் த்யஜதி கர்மாணி ஸன்யஸ்யதி ததோ நிர்த்வந்த்வோ பவதி "
யோக ஷேமங்கள் பற்றி கவலை படாமல் தாம் செய்து வந்த பூஜை வழிபாடு அல்லது நல்ல காரியங்களின் புண்ணிய பலன்கள் தம்மை சேர வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு அவற்றை ஆண்டவனுக்கே அர்ப்பணம் செய்ய  வேண்டும். 
பகவான் சம்பந்தப்பட்ட காரியங்கள் அல்லாத காரியங்களையும் துறக்கவேண்டும்.எல்லாவற்றையும் துறந்துவிட்டு சுக துக்கங்களை சமமாக நினைக்க வேண்டும்.மனம் ,வாக்கு,சரீரத்தால் எந்த கர்மங்கள் செய்தாலும் அதை பகவானுக்காக செய்ய வேண்டும்.அதன் பலனை பகவானுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும்.இன்பம்,துன்பம்,லாபம்,நஷ்டம்,தனது,பிறரது என்ற இரண்டு விசயங்களையும் ஒன்றாக பாவிக்கவேண்டும்.
           பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
வேதங்களும் முக்குணங்கள் கொண்டவை. அதாவது முக்குணங்களை வெளிப்படுத்தும் உலகியல் விசயங்களையே பேசுகின்றன.ஆதலால் அர்ச்சுனா நீ முக்குணங்கள் வலையில் சிக்காமல் இருக்க வேண்டும்.நிதமும் தூய சத்துவ சித்தமுடன் சுக துக்கங்களால் பாதிக்கபடாமல் யோக க்ஷேமங்களை சிந்திக்காமல் பரமாத்மா சொரூபத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
"வேதானபி ஸன்ன்யஸ்யதி கேவலம விச்சின்னானு ராகம்லபதே " 
          வேதங்கள் உலகியல் விசயங்களையே பகர்கின்றன.அவற்றில் ஞானகாண்டம் தான் ஆத்மா,பரமாத்மா தத்துவங்களை விமர்சிக்கிறது.வேதங்கள் சொல்லும் சில முக்கியமான கடமைகளை மட்டும்
செய்யலாம்.சொர்கத்திற்கு வழிகாட்டும் யக்ஞயாகங்கள் செய்யதேவையில்லை என்பதை உணர்த்தும் வகையில் வேதங்களில் சொல்லப்பட்ட கர்மங்களை துறக்க வேண்டும் என்று சூத்திரத்தில் கூறி இருக்கிறார்கள்.
          பக்தர்களோ பகவான் பிரேமையில் மூழ்கி மற்ற விசயங்களை மறந்து விடுவார்கள்.இதில் வேதங்களில் சொல்லப்பட்ட கர்மங்களை சரிவர செய்ய முடியாமல் போக எல்லா கர்மங்களும் தாமாக விடுபட்டு விடும்.அவன் வேதங்களை கடந்து உபநிசதங்கள் கூற்றுப்படி இறைவனில் இரண்டற கலந்து விடுகிறான்.என்றென்றும் மனதில் இறைவனை குடி வைத்து அவனை விட்டு இணை பிரியாமல் பேரின்பம் அடைகிறான்.
"ஸ தரதி ஸ தரதி ஸ லோகான்ஸ்தாரயதி "
இப்படிப்பட்ட பக்திமான் பிறவி பெருங்கடலில் இருந்து கரை சேர்கிறான்.தான் மட்டுமில்லாமல் தன்னிடம் வந்தவர்களையும் கரை சேர்த்து விடுகிறான்."மத் பக்தி யுக்தோ புவனம் புனாதி "என்று பாகவதம் கூறுகிறது.அதாவது தூய பக்திமான் இறைவனோடு உண்மை,பிரேமை கொண்டவன் ,தான் இருக்கும் சுற்று சூழலை தூய்மை ஆக்குகின்றான்.உலக மக்களையும் கரை சேர்ப்பதால் அகில உலகையும் தூய்மை படுத்துவான்.
          பிரேமை எப்படி லட்சங்களுடன் இருக்ககூடியது என்பதை அடுத்த சூத்திரத்தில் கூறுகிறார்கள்.
   "அனிர்வசனீயம் பிரேமாஸ்வரூபம் "
பகவானிடம் இருக்கப்படும் பிரேமை காதல் எல்லாம் வார்த்தைகளால் விளக்க முடியாது.அதை அனுபவிப்பவர்களே பாக்கியசாலிகள். "அன்பே சிவம்" என்ற கூற்று படி பகவான் அன்பு மயமானவர்.பிரேமைக்கும் பகவானுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.பகவானை நினைத்தால் இனிக்கும் அனுபவம் ஏற்படுகிறது. உள்ளம் உருகி பரவசமாகிறது.பரபிரம்மம் வாக்குக்கு அப்பாற்பட்டது என்று உபநிசதங்கள் கூறுகின்றன.
          உலகில் நெடுநாள் பிரிந்து போன, தமக்கு அன்புக்குரிய மகன், உற்றவர்,தாய் தந்தை,நண்பர் மீண்டும் சந்திக்கும் போது அளவில்லா ஆனந்தம் உண்டாகிறது.அவர்களுடன் பேசுவதிலும் தொடுவதிலும் அலாதியான அன்பு சுரந்து இன்பம் உண்டாகிறது.அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
ராமாயணத்தில் இலங்கையில் இருக்கும் சீதைக்கு ஸ்ரீ ராமர் செய்தி அனுப்புகிறார்.
"பிரியே உனக்கும் எனக்கும் இருக்கும் அன்புக்காதலை என் மனம் மட்டும் தான் அறியும். என் மனம் எநநேரமும் உன் நினைவில் தான் உருகுகிறது.அந்த பிரீத்தி ரகசியத்தை நான் மட்டும் தான் அறிவேன்.
           மனம் எந்நேரமும் பகவானின் பிரேமை என்ற நீருக்குள் மூழ்கி விட்டால் பேச முடியாது. ஆனந்த அனுபவம் மட்டும் தான் இருக்கும்.
"மூகாஸ்வாதனாவத் " 
          இனிப்பின் ருசியை சுவைத்து சாப்பிட்டு பார்த்தால் தான் உணரமுடியும்.அது எப்படி இருக்கிறது என்று கேட்டால் வாய் பேச தெரிந்த நாம் இனிக்கிறது என்று கூறுவோம்.இனிக்கிறது என்றால் என்ன ? இதற்க்கு பதில் கூற முடியாது.ஊமை ஒருவன் இனிப்பை சாப்பிட்டு அந்த ருசியை அவனால் கூற முடியாது.அந்த நிலை தான் பிரேமையை உணர்ந்த பக்தர்களுக்கு உண்டாகிறது.அவர்களும் அதை வர்ணிக்க இயலாமல் ஊமையாகி விடுவார்கள்.
பிரகலாதன் கூறுகிறார்:
          காந்தம் அருகில் இருக்கும் இரும்பை இழுப்பது போல சக்கரதாரி விஷ்ணு பகவான் என்மனதை கவர்ந்து இழுக்கிறார்.அதன் காரணத்தை யான் அறியேன்.
அவரை நினைத்த மாத்திரத்தில் என்னையே நான் மறந்து விடுகிறேன்.வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பரவச நிலை ஒன்று என்னை ஆட்கொள்கிறது.(தொடரும்)