Sunday 4 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 22

அந்த அம்மையாருக்கு ஓர் உபாயம் தோன்றியது.உடனே அவர் தம் கணவரை நோக்கி" நம் வறுமை நீங்குவதற்காக இன்று பகல் பொழுதெல்லாம் வயலில் செந்நெல் விதைத்தோமே அவவிதைகள் இப்போது சேற்றில் ஊறி முளை விட்டிருக்கும் அவற்றை ஒரு கூடையில் அள்ளிக்கொண்டு வந்தால் அவற்றை கொண்டு கூடியவரை சோறு சமைக்கலாம்.இதை தவிர வேறு வழி எனக்கு தோன்றவில்லை".என்றார்.
          தம் மனைவி கூறிய வார்த்தைகளை கேட்டதும் நாயனாருக்கு பெருஞ்செல்வம் பெற்றது போன்றதொரு பெரு மகிழ்ச்சி போங்க வயலில் விதைத்த செந்நெல்லை தோண்டி எடுத்துவர புறப்பட்டார்.
        (விதை நெல்லை விதைக்கே வேளாளர்கள் பயன் படுத்துவார்களே தவிர விதையை குத்தி சாப்பிடும் வழக்கம் இல்லை)
         வானம் பெருகி பெருமழை பொழிந்து கொண்டிருந்த அந்த நள்ளிரவில் எங்கும் ஒரே இருள் சூழ்ந்திருந்தது.வழி திசை கண் மண் எதுவும் தெரியாத கும்மிருட்டு சூழ்ந்த உலகத்தவர் அஞ்சி நடுங்கும் படியான அந்த நடு சாமத்தில் மாறனாரோ உள்ளூர சிவனடியார் அன்பு ஊக்க தூண்டுவதால் ஓர் கூடையை தமது தலையில் கவிழ்த்திக்கொண்டு வயலை நோக்கி நடந்தார்.திசை தெரியாத கருமிருள் படலதினூடே மாறனார் தமக்கு பழக்கமான வழித்தடத்தை குறிப்பால் உணர்ந்து காலினால் தட்டி தடவியவாறு வயலை அடைந்தார்.அங்கு வயலில் மலை நீரில் மிதக்கும் செந்நெல் முளைகளை தம் கையினால் சேகரித்து அள்ளி அள்ளி தம் கூடை நிறைய நிரப்பினார்.பிறகு அந்த பெருங்கூடையை தம் தலை மீது தூக்கி சுமந்து கொண்டு வீடு நோக்கி வேகமாக திரும்பி வந்தார்.
         அவர் வருகையை பேராவலுடன் எதிர்பார்த்து அவர் மனைவியார் தம் வீட்டு வாசலிலேயே காத்திருந்தார்.நாயனார் வந்ததும் அவரது தலையிலுள்ள கூடையை அன்புடன் வாங்கிகொண்டார்.நெல் முளைகளில் படிந்திருந்த சேறு போகும்படி அவற்றை நன்றாக நீரில் கழுவி ஊற்றினார்.நாயனாரை நோக்கி அடுப்பில் தீ மூட்ட விறகு இல்லையே என்றார்.மாறனாரோ தம் வீட்டின் கூரையோடு சேர்த்து கட்டப்பட்டிருந்த கிலமான வரிச்சு கொம்புளை வெட்டி அடுப்பில் தீ மூட்ட கொடுத்தார்.அதன் பின் தம் வீட்டு விருந்துக்கு வந்திருக்கும் சிவனடியார் வழி நடந்த இளைப்போடும் வருந்தும் பசியோடும் துன்புருவாரே என்று நினைத்து அன்புடன் தன் வீட்டு கொல்லை புறத்திற்கு சென்று அங்கு குழிகளில் முளைத்திருக்கும் சிறு கீரைகளையும் பூசணி முதலியவற்றின் புன்செய் குரும்பயிர்களையும் கையினால் தடவி வேரோடு பறித்துக்கொண்டு வந்து மன மகிழ்வோடு மனைவியாரிடம் தந்தார்.அவர் சுத்தமான நீர் விட்டு கழுவி புனிதமான பாத்திரத்தில் வைத்து தன் கைதிறமையினால் வகையாக கறி சமைத்தார். இனி சிவனடியாருக்கு இங்கே விருந்து பரிமாறி திருப்தியாக அமுது செய்விப்போம் என்றார்.
           சிவனடியாரோ ஒருபுறம் உறங்குபவர் போல படுத்திருந்தார்.எவராலும் உணர முடியாத ஒருவரான அப்பெருமானுக்கு விருந்து தயாராகிவிட்டதை உணர்த்த விரும்பி மாற நாயனார் அடியாரின் முன்னே சென்று துயிலை நீக்கினார்.
         பெரியவரே எழுந்தருள்க மாயை இருளில் அழுத்திக்கிடக்கும் அடியேன் உய்யும் படி எழுந்தருளி இங்கு திருவமுது செய்ய அருள்க என்று மாற நாயனார் அன்புடன் அழைத்தார்.உடனே சிவனடியார் வேடந்தாங்கிவந்த சிவபெருமான் சோதி வடிவமாய் எழுந்தருளினார். அந்த சோதி வடிவமான காட்சியை கண்ட நாயனாரும் அவரது மனைவியாரும் திகைத்து மயங்கி குழம்பினார்கள்.சிவபெருமான் மனம் மகிழ்ந்து ரிஷப வாஹனத்தில் உமாதேவியாருடன் அவர்களுக்கு காட்சி தந்தருளினார்.(தொடரும்)

Saturday 3 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 21

இதற்க்கு உதாரணமாக அரிவாட்டாய நாயனார் கதையும் இளையான்குடி மாற நாயனார் கதையும் கூறலாம்.உளவு தொழில் புரியும் வேளாளர் குலத்தில்,அக்குலத்தினர்  செய்த தவத்தினால் மாறனார் என்னும் பெயருடன் ஒருவர் சிறந்து விளங்கினார்.மாறனார் படிப்பறிவும் ஞானமும் இல்லாதவர்.பக்தியால் மட்டும்இவருக்கு  இறைவனருள் எப்படி கிடைத்தது என்பதை இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.

                                            

          மாற நாயனார் தம் இல்லத்திற்கு எந்த நேரத்தில் சிவனடியார்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு கொடுப்பதையே பெருந்தொண்டாகவும் தம் பிறவி பயனாகவும் கருதி வாழ்ந்து வந்தார்.இவ்வாறு அவர் வாழும் நாளில் சிவபெருமான் ஓர் எண்ணம் கொண்டார்.சிவனடியாருக்கு உணவிடும் திருத்தொண்டை மாறனார் செல்வம் மிகுந்திருக்கும் காலத்தில் செய்வதோடல்லாமல் வறுமை வந்தடைந்து துன்புறுத்தும் காலத்திலும் அத்திருதொண்டை தளராது செய்யும் வல்லமை கொண்டவர் என்பதை உலகுக்கு உணர்த்த கூத்த பெருமான் விரும்பினார்.அதனால் மாறனாரின் செல்வ வளம் மெல்ல மெல்ல தேய்ந்து மறைந்து போகும்படி திருவுல்லம்  கொண்டார். வளமான செல்வம் நாள் தோறும் மாறி மாறி மறைந்ததும் வாட்டும் வறுமை நிலை மாறனாரை வந்தடைந்தது.ஆயினும் அடியார்களுக்கு சோறிடும் தொண்டில் அவர் சிறிதும் சலிப்பும் தளர்ச்சியும் கொள்ளாமல் குறைவற செய்து வந்தார்.நாளுக்கு நாள் வறுமை வளர வளர அவர் தம் வீட்டிலுள்ள பொருட்களை விற்றும் பிறகு தம்மையே விற்று கொடுக்கத்தக்க அளவுக்கு கடன்கள் வாங்கியும் சிவனடியார்களுக்கு உணவிடும் திருத்தொண்டை சிறிதும் வழுவாமல் அன்போடு செய்து வந்தார்.
          இவ்வாறு நிகழ்ந்து வரும் நாளில் மாறனார் திருத்தொண்டின் பெருமை இத்தகையதென இவ்வுலகிற்கு எடுத்து காட்டுவதற்க்காக சிவபெருமான் ஒரு சிவயோகி போல திருவேடம் தாங்கி ஒரு மழை காலத்தில் நள்ளிரவில் மாற நாயனார் வீட்டுக்கதவை தட்டினார்.அச்சமயம் மாறனார் எந்த உதவியும் கிடைக்காததால் உண்ணுவதற்கு கூட உணவில்லாமல் பல நாள் பட்டினி கிடந்தாலும் பெரும் பசியை சமாளித்துக்கொண்டு இரவில் வெகுநேரம் வரை கண் விழித்திருந்தார். 
          தம் இல்லத்திற்கு சிவனடியார் வருகையை உணர்ந்து கதவை திறந்தார்.சிவனடியார் நிற்பதை கண்டு உள்ளம் மகிழ்ந்து வரவேற்று விருந்தினராக அன்போடு உள்ளே அழைத்து சென்றார்.பின்பு மழையால் நனைந்திருக்கும் சிவயோகியாரின் உடம்பிலுள்ள ஈரத்தை துடைத்து நல்லதொரு இடத்தில அடியாரை அமர செய்தார்.
          நாயனார் தம் மனைவியாரிடம் சென்று தம் வீட்டிற்க்கு வந்திருக்கும் சிவனடியார் மிகவும் பசித்திருக்கிறார் என்ன செய்வது? என்று கேட்டார்.நமக்கு உண்ண உணவில்லை என்றாலும் அம்மையப்பருக்கு இனியவரான சிவனடியாருக்கு நாம் இனிமையாக உணவிட வேண்டுமே அதற்க்கு என்ன வழி என்று கேட்டார்.அவரது மனைவியாரோ இன்னும் வருத்ததோடு நம் வீட்டில் எதை வைத்து எப்படி சமைப்பது?விற்பதர்க்கோ வீட்டில் ஒரு பொருளும் இல்லை.அண்டை அயலாரிடம் கடன் வாங்கலாமென்றால் அதற்கும் வழி இல்லை.இனியும் நமக்கு கடன் தருவார் யாரும் இல்லை.பொழுதும் போய் இரவு வெகு நேரம் ஆகிவிட்டது என்று கூறி திகைத்தார்.  (தொடரும்)
          

Friday 2 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 20

பகவத் பக்தனான பிரகலாதன் கூறுகிறார்:
          தேவரிஷி முனிவர்களாலும் தன் புலமை மிக்க தெய்வீக துதிகள் மூலமாகவும் பகவானை மகிழ்விக்கமுடியவில்லை என்றால் அசுர குணம் படைத்த என்னால் எப்படி பகவானை துதிக்க முடியும்?
         உண்மையில் செல்வம்,உயர்குடியில் பிறப்பு, அழகு,தவம்,கல்வி,மிகுந்த ஆற்றல்,செல்வாக்கு,பலம்,பேரறிவு,பௌருஷம் என்ற ஆண்மை,யோகம் இவை எல்லாம் ஒரு மனிதனிடம் இருந்தாலும் பகவானை ஆராதனை செய்து மகிழ்விக்க முடியாது.பக்தியால் மட்டும் தான் பகவான் மனமிரங்கி வருவார்.அறிவில்லாத கஜேந்திரனுக்கும் கருணையுடன் அவர் அருள் புரிந்தவர் அல்லவா?உண்மையில் பகவான் பற்று பகை அற்றவர். அவருக்கு அனைவரும் சமமானவர்கள்.பாமரர்,படித்தவர் அனைவரையும் கடைதேற்றுபவர்.கல்வியிலும் வலிமையிலும் கர்வம் கொண்ட அசுர குணம் படைத்தவர்களை தண்டித்து தன்னுடன் சேர்த்துக்கொள்வார்.எளிய பக்தனுக்கோ சீக்கிரம் அருள் கிடைத்து விடும்.ஏனெனில் நீயே கதி என்று அவன் சரண் அடைந்து விடுகிறான்.அவனுக்காக மகா வல்லவனான இறைவன் தன் மகா மகிமையை விட்டு இறங்கி வந்து சிறுமை அடைந்து பக்தனுக்கு சமமான எளியவனாகி விடுகிறார்.
          இறைவன் முன் பக்தன் கதியில்லாமல் ஏழையாக இரக்கதிற்குரியவனாக நினைத்து அவர் முன் மண்டியிட்டு கதறுகிறான்.அவன் தன்னை பாவியாகவும் இழிவாகவும் நினைத்து பிரார்த்தனை செய்கிறான்.இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்து ஊன் உருக உள்ளம் உருக பக்தி செய்கிறானென்றால் அவனே பரம பக்தன், உண்மையான பக்தனிடம் ஆணவம் இருக்காது.பகவானின் தரிசனம் கிடைக்க வேண்டும என்று ஏங்குபவனிடமே பகவான் நிச்சயம் வருவார்.
         " தஸ்யா க்ஞானமேவ ஸாதன மித்யேகே "  
          பக்தி எப்படி ஏற்படுகிறது? அதற்கு காரணம் என்ன? உலகில் ஒருவர் மீது காரணமின்றி அன்பு உண்டாகிறது என்று கூறினாலும் அவசியம் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.பக்திக்கு ஞானமே காரணமாகிறது என்று சில ஆச்சாரியர்கள் கூறுகிறார்கள்.இறைவனை பற்றி நன்கு அறிந்து கொள்வதே ஞானம்.அந்த ஞானமே இயக்கம் கருவி என்று கூறுகிறார்கள்.
          என்னுடைய நாதன் அனைத்திற்கும் ஆதாரமாக மகேஸ்வரனாக இருப்பவர்.அருள் நிறைந்தவர்.இந்த ஞானம் உண்டாகும்போது மரியாதையும் பிரேமை பக்தியும் உண்டாகிறது.பிரியம் வரும் போது பக்தி ஏற்படுகிறது என்பதோ உண்மை தான்.
         பக்தி மனதில் ஏற்படுவதற்கு ஞானம் அவசியம் இல்லை. என்று நாரதர் கூறுகிறார்.
         "அன்யோன்யாச்ரயத்வமித்யன்யே"  
வேறு பல ஆச்சாரியர்கள் கூறுகிறார்கள்:
          ஞான தத்துவத்தை அறிந்த பின் இறைவன் மீது பக்தி உண்டாகிறது.அதனால் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது.அன்பால் பக்தி பெருக்கெடுத்து வரும் போது ஞானமும் தத்துவமும் அங்கு முக்கியத்துவம் அடைவதில்லை.அவற்றை சிந்திக்க வாய்ப்பில்லாமல் போகிறது.அன்பால் விளைந்த பக்தி செய்யும் பக்தனும் ஞானியாக இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. (தொடரும்)

Thursday 1 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 19

         பக்தி செய்ய எந்த தகுதியும் வேண்டியதில்லை.உதாரணமாக வால்மீகி முனிவர் ஒரு கொள்ளைக்காரராக இருந்தார்.கண்ணப்பநாயனார் ஒரு வேடுவனாக இருந்தார்.இவர்கள் செய்த பக்தி, தவம் செய்த முனிவர்களையும் மிஞ்சக்கூடியது.துளசிதாசர் செய்த ராம பக்தியை விட,ராம நாமத்தை விட சிறந்தது எதுவும் இல்லை.
        பல காலம் சிரமப்பட்டு ஞானம் பெற வேண்டும்.யாகம் செய்வதற்கோ பொருள் செல்வம் வேண்டும்.கடினமான யோக பயிற்சியில் வெற்றி பெற யோகாசனம், பிரணாயாமம் முதலியவற்றை சரியாக செய்ய வேண்டும்.பக்தி யோகத்தில் இவை எதுவும் தேவை இல்லை.அன்புடன் ஒரு பூவை சாற்றினால் போதும்,அல்லது தமக்கு கிடைத்த உணவை படைத்தாலே போதும்,பிரார்த்தனை செய்தாலே போதும். பாகவத புராணத்தில் பகவானே கூறுகிறார்:
"ந ஸாதயதி மாம் யோகோ ந ஸாங்க்யம் தர்ம உத்தவ
நஸ்வாத் யாய ஸ்த பஸ்த்யாகோ யதா பக்திர் மமொர்ஜிதா 
பக்த்யா ஹமேகயா க்ராஹ்ய:ச்ரத்தயாத்ம பிரிய: ஸதாம் பக்தி 
புனாதி மன்னிஷ்டா,ச்வபாகானபி ஸம்பவாத் "
யோகம்,ஞானயோகம்,தர்மம்,ஸ்வாத் யாயம் (வேதங்களை படித்து தத்துவார்த்தமாக பாராயணம் செய்வது)யாகம்,தவம்,தியாகம் ஆகியவற்றால் கூட நான் சீக்கிரம் வசப்பட மாட்டேன்.சான்றோர்களின் பிரிய ஆத்மாவாக இருக்கும் நான் சிரத்தை பிரேமையுடன் அன்பான பக்திக்கு மட்டும் கட்டுப்படுவேன்.பக்தன் அவன் புலயனாக இருந்தாலும் தூய பக்தியால் சித்தி பெற்று விடுவான்.இதற்க்கு உதாரணம்:
   ஸ்ரீ கண்ணப்ப நாயனார் அவர்கள் பன்றிக்கறியை சமைத்து பிரசாதமாக சிவபெருமானுக்கு படைத்தார்.அவர் செய்த பக்தி ஈடு இணையற்றது.
           பகவத்கீதையில் அர்ச்சுனனுக்கு மட்டுமே  தன் விசுவரூப தரிசனத்தை தரிசிக்க செய்து கூறுகிறார்.:
          அர்ச்சுனா நீ கண்ட எனது விசுவரூபதரிசனம்காணக்கிடைக்காதது.மிகவும் அரிது.வேதங்களை பாடி உணர்ந்து பாராயணம் செய்தாலும் யாகங்கள் பல செய்தாலும் தவத்திலும் தானத்திலும் நீ இப்போது கண்டது போல காண முடியாது.ஆனால் என் மீது அனன்ய பக்தி கொண்டால் தான் இது போல் தரிசனத்தை பெற முடியும்.எனது உண்மை தத்துவத்தை அறிய முடியும்.என்னுள் பிரவேசிக்க முடியும்.
         " பல ரூபத்வாத் "
          பக்தி என்பது முழுமையாக பிரதானமாக இருந்து பலன் தர கூடியது.அதாவது இங்கு பிரேமை பக்தியே முழுமையாக இருக்கிறது.இங்கு பக்தி சாதனமாக இல்லை.
      புனிததலயாத்திரை,ஞானம்,வைராக்கியம்,யோகம்,கடமை,தர்மம்(அறம்)விரதம்,உபாசனை,தானம்,புலனடக்கம்,யம நியமங்கள்,ஜபம்,தபம்,யாகம்,அஹிம்சை, குருசேவை,கல்வி, பணிவு,விவேகம்,புகழ்,வேதங்களை கற்று உணர்தல்,இவை எல்லாம் ஆண்டவனை அடைவதற்காக துணை புரியும் சாதனங்கள். பக்தியை அடிப்படையாக கொண்டு தான் இந்த சாதனங்கள் பலன் தருகின்றன.ஆனால் பக்தி இந்த அனுஷ்டானங்களில் துணையாக இருக்கிறது.பக்தி இல்லாமல் எந்த ஜப தபங்களிலும் வெற்றி அடையாது.அவ்வாறு இருப்பதனால் இங்கு நாரதர் மற்ற சாதனங்களுக்கு முக்கயத்துவம் கொடுக்காமல் பக்திக்காகவே பிரேமை பக்தியை உருவாக்க வலியுறுத்துகிறார்.ஆதலால் இங்கே கூறப்படும் பக்தி எந்த துணை சாதனமும் அல்லாமல் முழுமையான பக்தியாகவே கூறப்படுகிறது.
 "ஈச்வரஸ்யாப்யபிமானத்வேஷித்வாத் தைன்யப்ரியத்வாச்ச"   
          பக்தி எப்படி சிறந்ததாக உருவெடுக்கிறது என்பதை கூறுகிறார்கள்.
         யோக சாதனை செய்யும் சாதகர்கள்,சாதரணமாக கீழ் நிலையில் இருக்கும் மனிதர்களை விட நாம் மேம்பட்டவர்கள் வலிமை உள்ளவர்கள் என்று கர்வப்பட்டு கொள்வார்கள்.ஆனால் பகவான் நாமத்தை பக்தியுடன் பஜனை செய்யும் பக்தர்களோ கர்வமில்லாமல் இருப்பார்கள்.(தொடரும்)

Wednesday 30 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 18

ஸ்ரீகிருஷ்ணன் பதிலுரைக்கிறார்:
         பிரிய சகிகளே ஒருவர் அன்பை காட்டினால் தான் மற்றவர் அன்பாக இருப்பது அது சுய நலத்தின் அடிப்படையில் உருவாகிறது.அது ஒன்றை கொடுத்து ஒன்றை வாங்குவது போல வியாபாரமாகிறது.அதில் உள்ளார்ந்த நட்பும் இருக்காது.தர்மமும் இருக்காது.அந்த அன்பு நிலைத்தும் இருக்காது.ஏனெனில் காரியம் முடிந்தவுடன் அவர்கள் விலகிசெல்வார்கள்.
         இரண்டாவது ரகத்தினர் அன்பு செலுத்தாமல் இருந்தும் அன்பாக இருப்பார்கள்.சான்றோர்,குரு,தாய்,தந்தையர்கள் இவர்கள்.சுபாவத்திலேயே பாசமுள்ளவர்கள் இதயத்தில் அன்பு சுரந்து கொண்டே இருக்கும்.அன்பு செலுத்தாவிட்டாலும் அவர்கள் நன்மைக்காக பாடுபடுபவர்கள்.மகான்கள் அல்லது உண்மையான நண்பர்களும் இருக்கலாம்.இவர்களின் அன்பில் சத்தியமும் தர்மமும் இருக்கும்.
          மூன்றாவதாக எவ்வளவு அன்பு செலுத்தினாலும் அன்புடன் இருக்க மாட்டார்கள்.முற்றும் துறந்த யோகிகளுக்கு அன்பும் கருணையும் கூட தடையாக இருக்கும்.அவர்கள் இறைவனை அனைத்துயிர்களிலும் காண்பார்கள்.அவர்கள் அன்பு பாசம் ஆகிய வலையில் விழாமல் பற்றற்று இருப்பார்கள்.இவர்களும் யோகா சாதனையில் ஈடுபட்ட சாதகர்களும் எவரிடமும் எதையும் விரும்பாமல் பற்று என்ற அன்பை பிறரிடம் காட்ட மாட்டார்கள்.
          வேறொரு ரகத்தினர் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள்.தம்மிடம் யார் அன்பு செலுத்துகிறார்கள் என்பதை அறிய மாட்டார்கள்.மற்றொரு ரகத்தினர் உபகாரம் செய்து தன்மீது அன்பு கொண்டவர்களிடமும் பிரியமாக இருக்க மாட்டார்கள்.இவர்கள் கல் நெஞ்சக்காரர்கள்.அல்லது துரோகிகள்.நெஞ்சில் பகை வளர்த்துக்கொண்ட பகையாளிகள் அல்லது திருடர்களாகவும் தீயவர்களாகவும் இருப்பார்கள்.
          கோபியர்களே மேற்சொன்ன எல்லாவித அன்பும் என்னில் பொருந்தாது.இறைவன் உயிர்களிடம் செலுத்தும் அன்பு என்ற அருள் ஒப்பற்றது.அதற்க்கு எதுவும் ஈடாகாது.இறைவன் அருள் எங்கும் ஒரே மாதிரி தான் பொழிகிறது.இறைவன் அருளை பெறுவதற்காக பக்குவப்படுவதர்க்காக வைரம் போல பக்தர்கள் பட்டை தீட்டப்படுகிரர்கள்.நான் உங்களை விட்டு பிரியும் போது அது உண்மையான பிரிவு அல்ல.என்னில் மேலும் மேலும் அதிக அன்பும் ஏக்கமும் பெருகத்தான் நான் திடீரென்று மறைந்து போகின்றேன்.
"பொக்கிசத்தை அடைந்த பின் அது தொலைந்து போனதும் அதில் மிகுந்த பற்று ஏற்படுகிறதல்லவா?அது போல நீங்கள் என்னை மறக்காமல் இருப்பீர்கள்.எனக்காக நீங்கள் குடும்பத்தையும் வேத சாஸ்திர கடமைகளையும், ஆசைகளையும், உறவினர்களையும் கூட துறந்து என்னிடம் சரணடைந்து விட்டீர்கள்.மேலும் தன் அதிஷ்டத்தை பற்றியும் அழகை பற்றியும் கர்வம் கொள்ளாமல் இருக்க உங்கள் எதிரில் நானும் என் அருளும் சுலபமானவை அல்ல என்று அறிவுருத்துவதர்காகவே நான் மறைந்து போனேன்.ஆதலால் நீங்கள் என் அன்பில் குற்றம் காணாதீர்கள்.எனக்காக சாஸ்திர சம்பிரதாயங்களை தகர்தெறிநதீர்கள்.யோகிகளாலும் அறுக்க முடியாத குடும்ப பந்த பாசங்களை அறுத்தெறிந்து விட்டீர்கள்.என் மீது தூய அன்பை வைத்தீர்கள்.சித்தத்தில் இமை பொழுதும் நீங்காது எனது இனிய நினைவில் வாழ்ந்து அளவு கடந்த பக்தி செய்து தியாகம் செய்து என்னை கடனாளியாக்கி விட்டீர்கள்.அந்த கடனை இறவா வாழ்வு  பெற்று தெய்வீகதாலும் முடிவில்லா காலத்திலும் என்னால் தீர்க்க முடியாது.பரந்த மனம் கொண்டு எல்லையற்ற பிரேமையினால் என்னை ஆட்கொண்டு நீங்கள் தான் என்னை கடனில் இருந்து விடுவிக்க வேண்டும்.
" ஸாது கர்மக்ஞான யோகேப்யோ அப்யதிகதரா "
அந்த பிரேமை பக்தி,கர்ம யோகத்தை விட, ஞான யோகத்தை விட சிறந்தது.எளிதானது.நிச்சம ஞானயோகமும் கர்மயோகமும் யோகமும் மற்ற எல்லா வழிகளும் ஆண்டவனிடம் கொண்டு சேர்கின்றன.ஆனால் இவற்றை சரியாக அனுஷ்டிககாமல் நடுவில் சில தவறு நடந்தாலும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியது தான்.மேலும் இவற்றை கடைபிடிக்க பல யம நியமங்களை அனுசரிக்க வேண்டும்.(தொடரும்)

Tuesday 29 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 17




தவசிகளுக்கு எல்லாம் உன் திருவடிகளை தந்தாய். லக்ஷ்மி தேவிக்கும் உன் திருவடிகளை தந்தாய்.என்று உன் திருவடிகளை தொட்டு வணங்கினோமோ அன்றே எம்மை ஆட்கொண்டாய்.மற்ற விசயங்களை எம்மால் சிந்திக்க முடியவில்லை.லக்ஷ்மி தேவி உன் திருமார்பில் இடம் பெற்று வீற்றிருந்தாலும் துளசியும் மற்ற பக்தர்களும் பெரும் பாக்யமுடன் கொண்டாடும் நிந்தன் பாட தூசி யை நமக்கு கிடைக்காதா என்று விரும்புகிறார்கள்.நாங்கள் அதை விரும்பினால் என்ன தவறு?உன் கருணை கடாட்சம் நம் மீது விழாதா என்று தேவர்களும் ஏங்குகிறார்கள்.
          நீ நிச்சயம் இடையர் குலத்தில் பிறந்த நந்தகோபன் மகான் அல்ல.நீ சகல உயிர்களின் தேகத்தில் உறையும் அந்தராத்மாவாக, சர்வசாட்சியாக இருப்பவன்.நீ பிரம்ம தேவர் கேட்டுக்கொண்டதால் மாந்தர்களை கடைதேற்ற வந்த தெய்வம் நீ.
        இவ்வாறு கோபிகை பெண்களுக்கு இறைவன் மீது கொண்ட பக்தி மிகுதியால் ஞான திருஷ்டியும் வந்து விடுகிறது.
   "தத் விஹீனம் ஜாராணாமிவ" 
         உலகியலில் ஒரு பெண்ணோ ஆணோ ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டினால் அதன் பின்னால் பல விசயங்கள் ஒளிந்து இருக்கும்.எந்த அன்பும் பலனை எதிர்பாராமல் உருவாகாது.பெண் ஒரு ஆணை காதலித்தால் அவன் தன்னை ஆதரிக்க வேண்டும் .ஆசைகளை நிறைவேற்றி வைக்க வேண்டும்.வாழ்நாள் எல்லாம் தமக்கு துணையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பல பலன்களை எதிர்பார்ப்பாள். அது போல ஆணும் அவனுக்கு தகுந்த பல லாபங்களை எதிர்பார்ப்பான்.இது போல உலகியல் காதலுக்கு முற்றிலும் எதிரானது இறைவன் மீது செலுத்தப்படும் பக்தி அல்லது பிரியம்.அதையே கோபிகை பெண்கள் செய்தார்கள்.ஸ்ரீ கிருஷ்ணனால் அவர்களுக்கு ஆகவேண்டியது எதுவும் இல்லை.அந்த தூய பிரேமை பக்திக்கு உலகியல் காதல் ஈடாகாது.அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணனை நினைத்தாலே பரவச நிலை ஏற்பட்டது.அந்த பரவச நிலை ஏற்பட்டது.அந்த பரவசநிலை யோகிகளுக்கு மட்டும் கிடைக்க கூடியது.கோபிகை பெண்கள் மோட்சத்தையும் விரும்பவில்லை.இந்த கிருஷ்ண பக்தி தான் சுக தேவ முனிவர் பரீட்சித் மன்னன் முக்தியடைய,நற்கதியடைய பாகவத புராண கதை மூலமாக சொன்னார்.
          "நாஸ்த்யேவ தஸ்மின்ஸ்தத்ஸுகஸுகித்வம் "
உலகில் மக்கள் தன் சொந்த லாபத்தை வைத்து ஒருவர் மீது ஒருவர் அன்பு கொள்வார்கள்.மற்றவர் க்ஷேம லாபத்தை பற்றி நினைக்க மாட்டார்கள்.கண்ணப்ப நாயனார் போல கோபிகை பெண்கள் கிருஷ்ணனுக்காக அவனை மகிழ்விக்க எதையும் இழக்க தயாராக இருந்தார்கள்.அதில் தான் சந்தோசம் அடைந்தார்கள்.அவர்கள் மனம்,தேகம்,அறிவு,செல்வம்,உயிர் அழகு எல்லாம் தன் அன்பன் கிருஷ்ணனின் பூஜை பொருள்களாக கருதினார்கள்.பாகவத புராணத்தில் கோபியர்க்கும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் இடையே நடந்த சம்பாஷனை அனைவரும் அறியக்கூடிய ஓர் உண்மையை வெளிப்படுத்துகிறது.
கோபிகை பெண்கள் கூறுகிறார்கள்:" கிருஷ்ணா எங்கள் கேள்விகளுக்கு முதலில் நீ பதில் கூறவேண்டும்.உலகில் சில பேர் அன்பு செலுத்தினால் தான் பதிலுக்கு அன்பு செலுத்துகிறார்கள்.சிலர் அன்பு செலுத்தாவிட்டாலும் அவர்களை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள்.சிலர் இருவரில் எவருமே அன்பை பரிமாறிக் கொள்வதில்லை. இந்த மூன்று ரகமானவர்கள் யாரை உனக்கு பிடிக்கும்? யாருடைய அன்பை உயர்வாக எண்ணுகிறாய்? (தொடரும்)
 

"

Monday 28 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 16




கிருஷ்ணா ஒரு வேண்டுதலை நிறைவேற்ற எனக்கு நீ அருள் புரிய வேண்டும்.அது என்னவென்றால் நான் பிருந்தாவனத்தில் ஒரு கொடியாக செடியாக பிறக்க வேண்டும்.அல்லது புல்லாக பிறந்து கோபிகை பெண்களின் பாதாஸ்பரிசம் பட்டு நான் பாக்கியம் அடைய வேண்டும்.கோபிகை பெண்களை நோக்கி நான் கூறினேன். "நீங்கள் கண்ணன் பிரிவினால் துயரம் அடையாதீர்கள்.யோகம் செய்தால் துக்கத்தை வெல்லலாம்.". அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்:
          "கண்ணனை விட்டு பிரிந்தவர்களுக்கே யோகத்தை பற்றி கற்று கொடுங்கள்,நாங்கள் கண்ணனை விட்டு எங்கே பிரிந்தோம்.அவன் எங்கள் ஆத்மாவாக இருக்கிறார்."
           ஆழ்வார் வெளிப்படுத்தும் பிரேமை பக்தியும்,கோபிகா பெண்கள் செலுத்திய பக்தியை சேர்ந்தது.
         யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன்  தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல்வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்விக்கவே?
         அவனாகவே என்னை ஆட்கொண்டான், என் சம்மதம் இதற்க்கு காரணம் இல்லை.அவனே என்னை வசீகரித்து,வஞ்சித்து,என் சரீரத்தில் ஒட்டி நின்று என் உயிரோடு உயிராக கலந்து விட்டான்.இப்போது நான் அவனை விட்டு பிரிந்து போவேன் என்றாலும் அவன் என்னை விடான் என்கிறார்.
          என்னை பிரிந்தாலும் கூட என்னுடைய நன் நெஞ்சத்தை அவன் ஏமாற்ற முடியாது.அதை விட்டு பிரிந்துபோக அவனாலும் முடியாது.
         என் உயிரும் அவனும் ஒரே பொருளாக போன பின் அந்த உயிரை விட்டுப்பிரிந்து அதனின்று அவன் விலகுவது அசாத்தியம்,என் ஆவி அவனை கிட்டிச் செறிந்தது.அவனை முற்றிலும் அனுபவித்து அவனும் அதுவும் ஒரே பொருள் என்று சொல்லும்படி யாகிகலந்துவிட்டது.இனி அது அகலாது.காதலில் சிக்கிய பெண்ணின் பேச்சாக பாடுகிறார்.ஆழ்வார் பாட்டு மிக உயர்ந்த செய்யுட் பாணியில் சொல்கிறது.அதில் பக்தி காதலாகி விடுகிறது.
          "காமமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
          நீ முற்றக்கண் துயிலாய் நெஞ்சு உருகி ஏங்குதியால்
          தீ முற்றத்தேன் இலங்கை ஊட்டினான் தாள் நயந்த
          யாம் உற்றது உற்றாயோ வாழி கனை கடலே ".
          ஒலி செய்யும் கடலே நீ விரும்பிய பொருள் கையில் கிடைக்கபெறாத காரணத்தால் இரவும் பகலும் முற்றும் தூங்குகிறாயில்லை , மனம் உருகி ஏங்குகிறாய்.தென்னிலங்கை முழுதினையும் நெருப்புக்கு இரையாக்கின ஸ்ரீ ராமபிரானுடைய திருவடிகளை விரும்பும் நான் படும் துன்பத்தை நீயும் படுகிறாயோ? என்று கேட்கிறார்.
" தத்ராபி மஹாத்ம்யக் ஞான விஸமருத்திய பவாத:"  
          கோபிகை பெண்கள் கிருஷ்ணனின் தெயவாம்சத்தை அறிந்திருந்தார்கள்.அவன் ஆற்றலையும் குணங்களையும் அறிந்து தான் காதலித்தார்கள்.சில பேர், கோபிகை பெண்கள் கிருஷ்ணனை பரமாத்மா என்று அறியவில்லை.மனிதனாக நினைத்து காதலித்தார்கள் என்று கூறுகிறார்கள்.அது சரியல்ல.அவனை புருஷோதம பகவானாகவே நினைத்தார்கள்.பாகவத புராணம் இதையே வலியுறுத்துகிறது.
         கோபிகை பெண்கள் இறைவன் கிருஷ்ணனை நோக்கி இறைஞ்சு கூறுகிறார்கள்.
         எங்கும் நிறைந்த பரம் பொருளே உங்கள் கடமைகளை போய் செய்யுங்கள் என கூறாதீர்கள்.ஏனெனில் நாங்கள் எல்லாவற்றையும் துறந்து உங்கள் திருவடிகளில் சரண் அடைந்து விட்டோம். மோட்சத்தை விரும்பும் தவ சீலர்களை ஆதி பகவான் ஏற்றுகொள்வது போல எங்களையும் ஏற்றுகொள்ள வேண்டும்.கணவருக்கு சேவை செய்ய வேண்டும்.மக்களை கவனிக்க வேண்டும்.பந்துக்களை ஆதரிக்க வேண்டும்.,பெண்களின் கடமைகளை,தர்மத்தை அறிந்து உபதேசித்தீர்கள் , வாஸ்தவம் தான்.ஆனால் இறைவனான நீங்கள் சகல உயிர்களுக்கும் ஆத்மாவிற்கும் அன்பனாக இருக்கிறீர்கள் அல்லவா? தாங்கள் மீது எப்படி பிரியம் செலுத்தாமல் இருக்க முடியும்?(தொடரும் )