Saturday 26 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 15

பக்தி பரவசமாக ஈசனை வழிபாடும் போது பக்தனுடைய நடவடிக்கை பிறருக்கு பித்து பிடித்தவன் செய்கை  போல தோன்றும்.உண்மை பக்தன் ஆவேசம் கொண்டு முறையும் கிரமமும் ஏதும் கவனிக்காமல் வழிபடுவான்.
          பாகவத புராணத்தில் பகவானே தன் பக்தர்களின் மகிமையை கூறுகிறார்:
என் மீது உயிரையே வைத்திருக்கும் என் பக்தர்களை விட பிரியமானவர்கள் எவருமில்லை.ப்ரம்மா,சங்கரர்,லக்ஷ்மி,பலராமர் இவர்களும் எனக்கு பிரியமானவர்கள் இல்லை. என் பக்தர்கள் பகை துறந்து மன அமைதி பெற்று அனைத்து உயிர்களையும் நேசிப்பவர்களாக எங்கும் என்னையே காண்பவர்களாக பற்று அற்று இருப்பார்கள்.என்னை நினைத்து பரமானந்தம் அடைபவர்களை மற்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.என்னையே தமக்கு சொந்தம் ஆக்கிகொண்டவர்களின் பக்தியே உயர்ந்தது.இதுவே நாரதர் கூறும் பக்தி.இவர்கள் பாத தூசி படாதா என்று இவர்கள் பின்னால் திரிந்து கொண்டு இருப்பேன்.
          " அஸ்த்யேவமேவம் "
            மேற்சொன்னவாறு ஸ்ரீ நாரதர் கூறும் பக்தியின் சொரூபம் இது தான்.
            " யதா வ்ரஜகோபிகானாம் "
            பக்தி என்பதற்கு சரியான உதாரணம் காட்ட வேண்டுமென்றால் கோகுலத்தில் கிருஷ்ணனையே தன் ஜீவிதமாக கொண்ட கோபிகை கண்ணிகள் செலுத்திய பக்தி ஒப்பற்றது.எந்த பக்தர்களும் அவர்களுக்கு ஈடாக மாட்டார்கள்.பாகவத புராணத்தில் கிருஷ்ண பகவானே கூறுகிறார்.:
          கோபிகா பெண்கள் தன்னையும் தன் குடும்பத்தையும் பற்றியும் சற்றும் சிந்திக்காமல் என்னையே உயிர் மூச்சாக கொண்டவர்களின் பக்தியை எப்படி விமர்சிப்பது? இவர்களுக்கு நான் எப்படி கைம்மாறு செய்வேன்?
          ஸ்ரீ கிருஷ்ணர் உத்தவரிடம் கூறுகிறார்:
கோகுலத்தை விட்டு நான் மதுரா வந்து துவாரகை வந்து விட்டேன்.அவர்கள் என்னை நினைத்து நினைத்து உருகிக்கொண்டு இருக்கிறார்கள்.விரக தாபத்தால் வியகுலமடைந்து யோகிகள் அடையும் பரமாத்மாவோடு ஒன்றிய நிலை அடைந்து விட்டார்கள்.நான் தொலைவில் விலகி இருந்தாலும் என்னை ஆத்மாவில் நிறுத்தி உலக வாழ்கையை மறந்து தியானத்தில் ஆழ்ந்து விட்டார்கள்.
          கோபிகை பெண்கள் பால் கறக்கும் போதும், உலக்கையால் தானியங்களை இடிக்கும் போதும் வீடு மெழுகி சுத்தப்படுத்தும் போதும் தாலாட்டு பாடி குழந்தைகளை தூளியில் தூங்கவைக்கும் போதும் சித்தமெல்லாம் கண்ணனை பக்தியில் நிரப்பி கசிந்து கண்ணீர் மல்க கண்ணனை நினைத்து பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.உத்தவர் கண்ணனிடம் கூறுகிறார்:- கண்ணா நான் கோகுலத்திற்கு பொய் நேரில் பார்த்ததை கூறுகிறேன்: கோபிகை பெண்கள் ஜென்மம் எடுத்ததற்கு மேலான பலன் கிடைத்து விட்டது.ஏனெனில் விசுவாசமான ஹரியுடன் இரண்டற கலந்து விட்டனர்.அந்த நிலை அடைய முனிவர்களும் தவசிகளும் யத்தனித்து கொண்டிருக்கிறார்கள்.யாகங்களாலும் தவத்தாலும் எட்ட முடியாத மேல் நிலையை பிரேமை பக்தியால் எட்டி விட்டார்கள்.திருமகளும் அந்த பாக்கியத்தை அடைய வில்லை.  (தொடரும்)

Friday 25 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 14

பகவான் காதலிக்க தக்கவன்,அந்த காதலை அனுபவித்து பிரிவினால் துயரம் கொண்டு அலைபவன் போல ஆழ்வார் பாடுகிறார்.
          ஆண், பெண்களுக்குள் அன்பு தோன்றி ஆர்வம் மேலிட்டால் காதல் ஆகிறது.பகவானிடம் செலுத்தும் அன்பு பக்தி ஆகிறது.பக்தன் பரவசமாகி, ,பெண் பாவம் கொள்கிறான்.நாரையையும்,குயில்களையும், அன்னம்களையும் ,கிளிகளையும்,வண்டுகளையும்,காற்றையும் தம் நெஞ்சையும் பல பாட்டுகளில் கேட்டு கொள்கிறார்.தம் நிலையை நாராயணனிடம் சென்று அறிவியுங்கள் என்று அவற்றை எல்லாம் இறைஞ்சுகிறார்.
         " நீர் அலையே சிறு பூவாய் நெடு மாலார்க்கு என் தூதாய் நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய். சாயலோடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது வாய் அலகில் இன் -அடிசில் வைப்பரை நாடயே."
          பணிக்காற்றுக்கு சொல்கிறார்.- அவள் நமக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டானாகில் அதையாவது வந்து சொல்லிவிட்டு என்னை முடித்து விடு.என் துயரம் தீர்ந்து விடும் என்கிறார்.
          "நாடாத மலர் நாடி நாள்தோறும் நாராயணன் தன வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் சொல்வதோ? ஊடாடு பனி வாடாய் உரைத்து ஈராய் எனது உடலே"
          பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்:
         எல்லா உயிர்களையும் நான் சரி சமமாகத்தான் பார்க்கிறேன். எனக்கு பகையும் இல்லை, பாசமும் இல்லை.ஆனால் பக்தியோடு வழிபடுகிறவர்கள் என்னில் கலந்து போவார்கள்.நானும் அவர்களில் கலந்து போகிறேன்.எனக்கு செய்ய வேண்டிய பூஜை ஓர் இலை,ஒரு புஷ்பம்,ஒரு பழம்,அல்லது ஒரு ஜலம், அதை பக்தியோடு படைத்தால் போதும் அதை விருந்தாக அருந்துவேன்.என்று கண்ணன் சொன்னதை ஆழ்வார் பாடுகிறார்.:
        " பரிவது இல் ஈசனை பாடி,விரிவது மேவல் உறுவீர் பிரிவகை இன்றி நல்நீர் தூய்புரிவதுவும் புகைபூவே"
          பட்ச பாதமற்ற சர்வேஸ்வரனை, ஆத்ம சொரூபத்தின் முழு மலர்ச்சியை அடைய உறுதி கொண்டவர்களே அகலாமல் ஒரே உறுதியுடன் வேறு விசயங்களில் மனம் செலுத்தி நில்லாமல் ஆண்டவனிடம் பக்தி செலுத்துவதை விட்டு பிரியாமல் ஏலம் முதலிய வாசனை பொருட்களின் கலப்பின்றி தண்ணிரே போதும்.  ஈசனுக்கு கொடுக்கும் அருட்கொடை நிவேதனம் ,புகைபூவே.: ஏதேனும் புகையும் பூவும் அன்புடன் அர்ப்பணம் செய்யலாம்.
          பகவானை ஆராதிக்கும் வழி மிக எளிது அதை பற்றி கவலையே வேண்டாம் என்பதை மேலும் பாடுகிறார்:
         " மதுவார் தண் அம் துழாயான் முது வேத முதல்வனுக்கு
          எது ஏது என் பணி என்னாது அதுவே ஆள் செய்யும் ஈடே ."
  பகவான் விஷ்ணு, சர்வேஸ்வரன் அவனுக்கு வேதத்தில் சொல்லப்பட்ட சர்வேஸ்வரன் அவனுக்கு என்னுடைய பணி என்ன, எது, எப்படி என்றெல்லாம் கவலையும் ஐயமும் வேண்டாம்.பூஜா கிரமங்களை பற்றி கவலை பாடவும் வேண்டாம்.அதுவே ஆட்செயும் ஈடே : அதுவே அவனுக்கு செய்ய வேண்டிய கைங்கர்யம் ,அந்த பக்தியே உனக்கு அதிகாரம் தரும் அதாவது பூஜை செய்யும் தகுதியை தரும்.
         " ஈடும் எடுப்பும் இல் ஈசன் மாடு விடாது என் மனனே
          பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே "
          தமக்கு உவமை இல்லாதவன் என்று வள்ளுவர் சொன்னபடி பகவானுக்கு சமமானதும் இல்லை. அப்படி இருக்கையில் மேற்பட்டது எப்படி இருக்கும்? என் மனம் அவனை அடுத்து நிற்பதை விடாது.- விடாமல் என் நா அவனை போற்றி பாடும்.என் அங்கம் உடல் மகிழ்ச்சி பரவசமாஹி ஆடும்.தெய்வம் ஏறியவர்கள் ஆடுவது போல என் உடல் ஆடி குதிக்கும். தேவர்களும் அவனை துதி செய்யும் போது பிதற்றி பிணங்கி கிரமம் தவறியே பாடுவார்கள்.அத்தகைய கல்யாண குணங்கள் நிறைந்த பகவானை துதி செய்யும் போது அங்கம் தெய்வம் ஏறினால் போல ஆடி ஆடி வணங்கி வழிபடுவேன்.(தொடரும்)



Thursday 24 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 13

"தல்ல க்ஷணானி  வாச்யந்தே நா நா மதபேதாத்"  
பிரேமை பக்தியின் லக்ஷணத்தை கூறுகிறார்கள்.பக்தியின் லக்ஷணங்களை பல ஆச்சாரியர்கள் பலவிதமாக கூறுகிறார்கள்.அவர்கள் கருத்தை கூறிவிட்டு
ஸ்ரீ நாரதர் அதன் பின்பு தன கருத்தை கூறி இருக்கிறார்கள்.
"பூஜாதிஷ் வனுராக  இதி பாராசர்யா:"
பராசர மாமுனிவர் புதல்வர் ஸ்ரீ வியாசபகவான் பகவானை பூஜிபபதன் மூலம் பக்தியை வெளிப்படுத்தலாம், அதில் மிகுந்த ஈடுபாடு தான் பக்தி என்று கூறுகிறார்.மனம்,வாக்கு,தேகம்,இவை மூன்றையும் பூஜை செய்யும் கருவிகளாக பிரயோகிக்கவேண்டும்.பகவானின் பிரதிமைக்கு (விக்ரஹத்திற்கு)பூஜை செய்ய வேண்டும்.அல்லது பகவானை விசுவாத்மாவாக நினைத்து அனைத்து உயிர்களிலும் உறைபவன் என்று அனைத்து உயிர்களையும் நேசிக்க வேண்டும்.இப்படிப்பட்ட பக்தன் முற்றிலும் பகையை துறந்து விடுவான்.ஆசைகளுக்கு அடிமையாக மாட்டான்.விஷ்ணு பகவானை பூஜை செய்பவர்கள் சாசுவதமான பரம பதத்தை அடைவார்கள் என்று விஷ்ணு ரகசியம் கூறுகிறது.
"கதா திஷ்விதி கர்க:"
ஸ்ரீ கர்காசாரியார் பகவானின் திருவிளையாடல் கதைகளில் பிரியமுள்ளவர்களே இறைவனிடம் உண்மை பக்தி செலுத்துபவர்கள் என்று கூறுகிறார்.
          பகவான் நிகழ்த்திய திருவிளையாடல் புராண கதைகள்,பகவானின் கல்யாண குணங்கள் ஆகியவற்றில் பிரியம் வைப்பார்கள்.திரு நாமங்களை பஜனை செய்வார்கள்.பாராயணம் செய்யும் இடத்திருக்கு சென்று கதை கேட்பார்கள்.
          உலகியல் விசயங்களில் உழன்று கொண்டிருப்பவர்களுக்கு பகவானின் கதைகளை கேட்டால் அதில் என்ன லாபம் வரப்போகிறது?என்று கேட்பார்கள்.அவர்கள் பணம்,பொருள் விசயத்தில் மட்டும் கவனம் செலுத்துவார்கள்.உண்மையான பக்தர்கள் பணத்தாசையை விட்டிருப்பார்கள்.
          உயிர் வாழ தேவையான பொருட் செல்வதை பகவானிடம் அர்ப்பணம் செய்துவிட்டு தமக்காக உபயோகிக்க மாட்டார்கள்.
பாகவத புராணம் கூறுகிறது:
          தவம்,வேத பாராயணம்,யாகம்,மந்திரம்,ஞானம் ,தானம் இவை அனைத்தும் பகவானின் திருநாமங்களையும் அவரது குணங்களையும் பக்தி கொண்டு பாடினால் தான் முழு பலன்களை தருகின்றன.
         " ஆத்ம ரத்ய விரோ தேனேதி சாண்டில்ய :"
தன்னுள் இருக்கும் சாத்தாத்மாவை உணர்வதும் அதற்க்கு சாதகமான விசயங்களில் அன்பு செலுத்துவதும் தான் உண்மையான பக்தி என்று சாண்டில்ய மகரிஷி கூறுகிறார்.
          சங்கராச்சாரியார் கூறுகிறார்:
          சகல உயிர்களுக்கும் இறைவன் ஆத்மாவாக வீற்று இருக்கிறார்.அந்த சர்வாத்மா மீது அன்பு செலுத்துவது தான் பக்தி.அந்த பக்தி குடி கொண்டு விட்டால் முக்தி நிச்சயம் கிடைக்கும்.
         " நாரதஸ்து ததர்பிதாகிலாசாரிதா தத்விஸ்மரணே பரமவ்யாகுலதேதி "
          நாரதர் தன் கருத்தை கூறுகிறார் :
          பிறவியெடுத்த தேகத்தால் செய்யப்படும் செயல் அனைத்தும் அவனுக்காகவே இருக்கும். அவனுக்கே அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும்.தன் காதல் நாயகன் போல இருக்கும் பகவானை நினையாத நொடி வீனனதே என்று வருந்துவதே உண்மையான பக்தி.பகவானை பூஜை செய்வது,அவர் குணங்களை பாடுவது,சர்வாத்மாவாக இருக்கும் பகவானிடம் அன்பு செலுத்துவது எல்லாமே பக்தியின் லக்ஷணங்கள் என்று அனைவரும் ஒப்புக்கொண்ட விஷயம்.ஆச்சாரியார்களின் கருத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக நாரதர் கூறுகிறார்.
          உடல் ,ஆத்மா,பொருள் எல்லாம் அவனுக்கே அர்ப்பணம் செய்துவிட்டு அவனை நினைத்துகொண்டு கர்மங்கள் செய்யவேண்டும்.எந்த சந்தர்பத்திலும் மனம் அவனை விட்டு நீங்காதிருக்க வேண்டும்.
ஆழ்வார் செய்த பக்தி மிகவும் உயர்ந்தது.
          ஆழ்வார் தம்மை ஒரு ஸ்திரியாக பாவித்து பகவானாகிய நாயகனை பிரிந்த தாபத்தை பல பாசுரங்களாக பாடியிருக்கிறார்.பகவானிடம் கொண்ட பாகவத பிரேமை வேகத்தை பாடும் இப்பாட்டுக்கள் காதலி தன் நாயகனை சேர ஆசை பட்டு சொல்லிய பிரிவு ஆற்றாமைச்சொற்களை  போலிருக்கும்.
இறைவன் கேட்கதக்கவன்,நினைக்கதக்கவன்,தியானம் செய்ய தக்கவன் ,பார்க்கதக்கவன் என்பது ஸ்ருதியின் வாக்கு.(தொடரும்)

Wednesday 23 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 12

"லோகே வேதேஷீ ததனுகூலாசரணம் தத் விரோதிஷீ தாஸினதா"
          தினசரி நடத்தும் தெய்வ வழிபாடுகளும் தான தர்மங்களும் குடும்பத்தை காப்பாற்றுவதும் லௌகிக கர்மங்கள் ஆகின்றன .
          தேவர்களையும் பித்ருக்களையும் பூஜித்து நீத்தார் கடன் செய்வது மந்திரங்கள் ஓதுவது இவையெல்லாம் பிரேமை பக்திக்கு துணையாக இருந்தால் மட்டும் பக்தன் அவற்றை கடைபிடிப்பான்.தன் கடமைகளாக இருந்தும் அவை எதிராக இருந்தால் பக்தியில் மூழ்கியவன் துறந்து விடுவான்.உதாரணமாக தந்தை சொல்படி நடக்கவேண்டும் என்பது மகனுக்கு கடமையாகிறது.
          பிரகலாதனோ தந்தை சொற்படி நடக்கவில்லை.ஸ்ரீ ராமனை தெய்வமாக கருதிய விபிஷணன் அண்ணனை துறந்தான்.பரதன் தன் அன்னை சொற்படி கேட்கவில்லை.மகாராஜா பலி தன் குருவையும் அலட்சியபடுதினான்.
         பக்தன் என்பவன் மனம்,வாக்கு,காயம்,ஆகியவற்றால் எதை செய்தாலும் அதை ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்துவிடுவான்.அவனது ஒவ்வொரு செயலும் ஆண்டவன் பிரீதிக்காகவே இருக்கும்.தனக்கு இன்பம் தரும் ஆசையின் அடிப்படையில் எந்த செயலும் செய்யமாட்டான்.ஏனெனில் அந்த செயல்கள் அவனை ஆண்டவன் சன்னதியில் கொண்டு போய் சேர்க்காது.வேத சாஸ்திரங்கள் தடை போட்ட, கூடாத செயல்கள் அனைத்தும் பாவ செயல்கள்.அவற்றில் பக்தன் ஒரு போதும் ஈடுபடமாட்டான்.  சுய நலத்தை கருதி செய்யும் செயல்கள் பெரும்பாலும் பாவச் செயல்களாகவே நிகழ்ந்து விடுகின்றன.
"பவது நிச்சய தார்ட்யா தூர்வம் சாஸ்த்ர ரக்ஷணம் "
          நாரதர் இதை கவனத்தில் கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறார்.பிரேமை பக்தியில் பக்தன் லயித்து போயிருந்தாலும் தன் கடமைகளை சாஸ்திர முறைப்படி செய்வதை தவற விட கூடாது.
         " எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவிக்கைமாறு எனது ஆவி
தந் தொழிந்தேன், இனி மீள்வது என்பது உண்டோ எனது ஆவி ஆவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய் , எனது ஆவி யார் யார் ஆர் தந்த நீ கொண்டாக்கினையே "
          ஆழ்வார் பாடிய இந்த பாட்டு பரவச நிலையின் உச்சகட்டத்தை எட்டுகிறது.இந்த உச்ச நிலைக்கு போன பின் கடமைகள் சம்பிரதாயங்கள் என்ற கட்டுக்கள் தாமாகவே சுழன்று விடுகின்றன.ஆனால் அது வரை சாஸ்திர விதிப்படி கடமைகளை செய்து கொண்டு தான் இருக்க வேண்டும்.
"அன்யதா பாதித்யாசங்கயா"
         தமக்குரிய கடமைகளை செய்யாமல் இருந்தால் பாவ தோஷங்கள் வந்து சேரும்.அவன் தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் துரோகம் செய்தவன் ஆவான்.பக்தி என்ற போர்வையில் கடமைகளை துறந்து வாழ்வியலில் மேம்பட்டு இருக்க முடியாது.
"லோகோபி தாவதேவ கிந்து போஜனாதிவ்யாபாரஸ் தவாச ரீர தாரணாவதி" 
லௌகீக இன்ப துன்பங்கள் கோபம்,சோகம்,ஆகியவற்றால் பக்தியில் திளைப்பவன் பாதிக்கப்பட மாட்டான்.உயிர் வாழ்வதற்கு பயன்படும் அனைத்து செயல்களை பற்றற்று செய்து கொண்டு உயிர் வாழும் ஒவ்வொரு துளியிலும் பரமனை நினைத்து எல்லாவற்றிலும் அவனையே காண்பான்.
          உலகில் ஒவ்வொரு உயிருக்கும் வாழ வழி வகுத்து உணவளிக்கும் இறைவன் பக்தர்களுக்கு உணவளிக்க தவறுவானா?சரீரம் தரிக்க எப்படி வாழ வேண்டுமோ அதற்க்கெல்லாம் வழி வகுத்து தருவான்.அதனால் பக்தர்கள் அதை பற்றி கவலை பட மாட்டார்கள்.அவை தாமாக எல்லாம் நடக்கும்.அதாவது இதுவரை இருந்த உலகியல் விசயங்களில் மிகுந்த ஈடுபாடு படிப்படியாக குறைந்து வரும்.உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு, உடை,எல்லாம் சரீரம் உள்ள வரை இறைவன் அருளால் தாமாக நடக்கும் என்று கூறுகிறார்கள். (தொடரும்)

Tuesday 22 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 11

கோபிகா பெண்கள் கூறுகிறார்கள்:
          கண்ணா உன்னை நினைத்தவுடன் எல்லாம் மறந்து விடுகிறோம்.வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை.கால்கள் நீ இருக்குமிடம் நோக்கி தாமாகவே நடக்கின்றன.
"தஸ்மின்னனன் யாதத்விரோதி ஷூ தாஸி னதா"
வேறு இடத்தில வைக்கபடாத பிரேமை பக்தி செய்யும் பக்தன் எதை செய்தாலும் பகவானுக்கே செய்வான்.மற்ற விசயங்களில் கவனம் செலுத்த மாட்டன்.உலகில் மேன்மையுடன் வாழ எத்தனையோ வழிமுறைகள் இருந்தும் அவற்றில் அவனுக்கு ஆர்வம் ஏற்படாது.
" அன்யாச் ரயாணாம் த்யாகோ அனன்யதா" 
தன் நாயகன் சம்பந்தபடாததை எல்லாம் துறந்து விடுவதே அனன்யதா எனப்படுகிறது.
            எள் கல்  தந்த எந்தாய் உன்னை எங்கனம் விடுகிறேன் என்று பாடுகிறார் ஆல்வார்.
          எள் கல் :உலகபோருள்கள் மேல் உள்ள ஆசையை நீக்கும் திறமை மற்ற பொருள்களை இகழ்ந்து தள்ளும் சக்தியை தந்தாய்.கோபியர்கள் எதிலும் எங்கும் கண்ணனையே கண்டார்கள்.
          சிவபெருமான் மேல் பக்தி கொண்ட பார்வதி தேவியாரின் மனதை சோதிப்பதற்காக சிவனை நோக்கி தவம் செய்வதை நிறுத்தி விடுமாறு சப்தரிஷிகள் கூறுகிறார்கள்.சிவன் ஒரு பித்தன் என்று பல வகையில் குற்ற பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் பரமன் மீது மாறாத பக்தி கொண்ட பார்வதி மிகவும் உறுதியுடன் இருக்கிறார்.நீரை துறந்த மீன்கள் கணப்பொழுதும் உயிர்வாழ்வதில்லை.அது போல அனன்ய பக்தி கொண்டவர்கள் கணப்பொழுதும் ஆண்டவன் நினைவை விட்டு நீங்கி உயிர் வாழ மாட்டார்கள்.
          சாதக பட்சி மழைநீர் மட்டும் அருந்தும். மதுசூதனா உன் அருளை நான் பெறுவதற்கு தடையாக நிற்கும் சத்ருக்கள் போன்ற தடைகளை எல்லாம் அழித்து விட்டவனே என்று ஆல்வார் பாடுகிறார்.
          வள்ளலே மதுசூதனா ,என் மரகதமலையே உனை நினைந்து வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிபாடி களித்து உகந்து உகந்து உள்ள நோய்களை எல்லாம் துரந்து உயந்து போந்திருந்தே (தொடரும் )



Monday 21 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 10

"நிரோதஸ்து லோகவேதவ்யாபாரன் யாஸ:"
பிரேமை பக்திக்கு அடிமையானவர்கள் செய்ய வேண்டிய தன் கடமைகளை துறந்து விடுவார்கள்.சிவபெருமானின் திருதொண்டரான குங் குலியகலயனாரை  
இதற்க்கு உதாரனமாக கூறலாம்.சிவபெருமானுக்கு குங்குலிய தூபமிடும் திருத்தொண்டை தவறாமல் நடத்திக்கொண்டு வருகையில் அவருடைய வறுமை மேலும் மேலும் அதிகரித்தது.அவர் தன் குடும்பத்தையும் பிள்ளைகளையும் கவனியாமல் தன் நிலங்களையும் சொத்துக்களையும் விற்று குங்குலியம் வாங்கி சிவபெருமானுக்கு தூபமிட்டு வனங்கினார். மனைவியும் மக்களும் உற்றாரும் உறவினரும் முழுப்பட்டினி கிடக்க நேரிட்டது.அவரது அன்பு மனைவி மனம் நொந்து ஒருநாள் தன் பொன் தாலியை கழற்றி அவர் கையில் கொடுத்து அதை விற்று நெல் வாங்கிவர சொன்னார்.தாலியை எடுத்துக்கொண்டு கலயனார் நெல் வாங்குவதற்காக கடைதெரு வீதிவழியாக சென்றார்.
          அப்போது வணிகன் ஒருவன் குங்குலிய பொதி ஒன்றை சுமந்து கொண்டு அவருக்கு எதிரே வந்தான்.அதை பார்த்த கலயனாரின் முகம் மலர்ந்தது.செஞ்சடைபெருமான் பூசைக்கேற்ற நறுமணம் பொருந்திய குங்குலியம் இது என்றால் நான் பெரும் பேற்றை இன்றே பெற்றேன்.இதை வாங்கி செல்வதை விட நல்ல பேரு வேறு உள்ளதோ?என்று பொங்கி எழும் விருப்பம் மிக கொண்டு தன் கையில் இருந்த பொன் தாலியை வணிகனிடம் கொடுத்தார்.வணிகன் குங்குலிய பொதியை அவரிடம் கொடுத்தான்.கலயனார் மனமெல்லாம் நிறைந்த மகிழ்ச்சி கொண்டு ஒரு கணமும் தாமதிக்காமல் விரைந்து சென்று வீரட்டான திரு கோவிலை அடைந்தார்.அங்கு எம்பெருமானுடைய வழிபாட்டிற்கு வைத்திருக்கும் பண்டக சாலையிலேயே எல்லா குங்குலியத்தையும் சேமித்து வைத்தார்.
         அதன் பிறகு தம் மனைவி மக்களின் பசி,வறுமை, துன்பம் எல்லாவற்றையும் மறந்து சிவதொண்டில் பேரன்பு பொங்க சிவபெருமானின் திருவடிகளை போற்றி தொழுது கொண்டு குங்குலிய பணி புரிந்து கொண்டு அங்கேயே இருந்தார்.
          கருணைக்கடலான சிவபெருமான் திருவருளை முன்னிட்டு அவர் மனைவி மக்கள் வாழ்ந்த வீட்டில் திடீரென ஒரே இரவில் குபேர செல்வம் நிறைந்து விட்டது.தேவர்களை வழிபடுதலும், பித்ருக்களை வழிபடுதலும்,  நித்ய நைமித்திய கர்மங்கள் எல்லாவற்றையும் அவன் மறந்து விடுகிறான்.
                                                                                    (தொடரும்)  

Saturday 19 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 9

"ஸா ந காமயானா நிரோத ரூபத்வாத் "  
          பிரேமை பக்தி எப்படிபட்டது? என்பதை கூறுகிறார்கள்.ஓளி வாங்கி கண்ணாடி ஒளியை வேறுபக்கம் சிதறடிக்காமல் ஒரே இடத்தில குவிக்கிறது.அதனால் அந்த ஒளிக்கு ஆற்றல் அதிகமாகிறது.அதுபோல உண்மையான பக்தி வேறு இடத்திற்கு போகாது. அதை அனன்ய பக்தி என்று கூறுவார்கள்.
          பிரேமை பக்தி வேறு ஆசையை வைத்து உருவாகாது. கோவிலுக்கு போகும் பக்தர்கள் இறைவனை பாடி துதித்து உலகில் தமக்கு புகழ் சேரவேண்டும்,நோயன்றி சுகமாக வாழ வேண்டும், அளவற்ற செல்வம் வேண்டும்,சத்ருக்களை ஜெயிக்கவேண்டும் என்று வேண்டி கொள்வார்கள்.நிச்சயமாக இதுவும் ஒரு பக்தியின் ஒரு நிலைப்பாடு தான்.கோரிக்கைகள் நிறைவேறாமல் போனால் சில பக்தர்களுக்கு முன்பு போல பக்தியின் தீவிரம் இருக்காது அல்லது கடவுளின் மீது கோபம் வரும்.
          அனன்ய பக்தி என்பது நீ எனக்கு இன்னல்களை கொடுத்தாலும் சோதித்தாலும் நெருப்பிலிட்ட தங்கம் போல நான் மின்னுவேன் என்ற மனபக்குவதுடன் இருப்பது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் எவ்வளவோ கஷ்டங்களை சந்தித்தார்கள் இருந்தும் இறைவன் பால் மாறாத பக்தி கொண்டார்கள். ஐந்து வகை முக்திகளையும் சிறந்த பக்தர்கள் விரும்ப மாட்டார்கள்.

  1. சாலோக்யம் : வைகுண்டம், கைலாசம் முதலிய லோகங்களுக்கு சென்று இறையவன் திருவடியை விட்டு பிரியாமல் இருப்பது.
  2. சார்ஷ்டி : வைகுண்டம் முதலிய லோகங்களில் கடவுளுக்கு சமமாக ஐஸ்வர்யம் பெற்றிருப்பது.
  3. சாமீப்யம்: வைகுண்டம்,கைலாசம் முதலிய லோகங்களில் இறைவனை விட்டு பிரியாமல் பக்கத்திலேயே இருப்பது.
  4. சாரூப்யம்: வைகுண்ட லோகங்களில் இறைவன் போலவே உருவெடுத்து வாழ்வது. அதாவது விஷ்ணு என்றால் சங்கு சக்கரங்கள் வைத்திருப்பது.சிவன் என்றால் சூலம்,டமரூகம்,சர்ப்பம் இவற்றுடன் அவரை போலவே உருவம் பெற்றிருப்பது.
  5. சாயுஜ்யம்:இறைவனிடம் இரண்டற கலப்பது.இந்த முக்திகளை கபில முனிவர் பாகவத புராணத்தில் கூறுகிறார்.(தொடரும்)