Tuesday 13 March 2012

பரீட்சித்மன்னன் அடைந்த மோட்சம்

           பரிட்சித் மன்னன் கலியுக புருஷனை தன் ஆட்சியில் வரவிடாமல் தடுத்திருந்தான்.அதன் விளைவால் பொய்,சூது,களவு,கொலை,இம்சை ஆகிய கலியுக தோஷங்கள் அவன் ஆட்சியில் இல்லாமல் போயிருந்தன.இவ்வாறு நல்லாட்சி புரிந்து கொண்டு இருக்கும் போது ஒரு நாள் பரீட்சித்மன்னன் காட்டிற்கு வேட்டையாட சென்றிருந்தான்.
           நாள் முழுவதும் காட்டில் மிருகங்களை அடித்து விரட்டி அலைந்து திரிந்து மன்னன் மிகவும் சோர்வடைந்தான்.பசி தாகத்தால் வாடினான்.தாகத்தை தணிக்க பக்கத்தில் நீர் நிலை எதுவும் இல்லாததால் ஓர் ஆசிரமத்தை நோக்கி போனான்.அங்கு சமிக முனிவர் கண்களை மூடி தவத்தால் ஆழ்ந்து இருந்தார்.
தியான யோகத்தில் புலன்களால் வெளி உலக தொடர்பு இல்லாமல் பிராண வாயுவை அடக்கி மனதையும் அறிவையும் நிறுத்தி விழிப்பு, சொப்பனம்,ஆழ நித்திரை அனைத்தையும் துறந்து பிரம்ம ரூப இறை நிலையில் ஒன்றி போயிருந்தார்.மொத்தத்தில் இவ்வுலக நினைவை துறந்திருந்தார்.இந்த நிலையில் மன்னன் நாவரட்சியில் துன்புற்று தாகத்திற்கு தண்ணீர் கேட்டான்.முனிவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை."வாருங்கள்" என்று வரவேற்று ஆசனம் அளித்து அமரச்செய்து பசியாற பழம் தந்து தாகத்திற்கு தண்ணீர் தந்து உபசரிக்க அங்கு வேறு யாரும் இல்லை.தாகத்தால் சோர்வுற்ற மன்னன் தான் அவமானப்பட்டு விட்டவன் போல உணர்ந்து மிகவும் கோபம் அடைந்தான்.இப்படிப்பட்ட அவமானத்தை இதுவரை அடைந்ததில்லை என்று மனதில் நினைத்தான்.முனிவர் நம்மை பார்த்தவுடன் கண்களை மூடிக்கொண்டு பாசாங்கு செய்கிறாரா?அல்லது இந்த மன்னர்களால் நமக்கு ஆவது என்ன என்று நினைக்கிறாரா? என்று அறியாது கோபம் மேலிட்டு அங்கு இறந்து கிடந்த ஒரு பாம்பை வில் முனையால் எடுத்து அவர் கழுத்தில் போட்டு விட்டு நகரை நோக்கி பயணப்பட்டான்.
           
  சமிக முனிவரின் புதல்வன் சிருங்கி என்பவன் சிறுவனாக இருந்தும் மிகுந்த ஆற்றல் படைத்தவனாக இருந்தான்.அவன் சற்று தொலைவில் சக முனி குமாரர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தான்.பரீட்சித்மன்னன் செத்த பாம்பை தந்தை மீது போட்ட சேதியை அறிந்தவன் ஆத்திரமடைந்து கூறினான்.--- நாட்டையும் தர்மத்தையும் காக்கும் அரங்க்காவலர்கலான அரசர்கள் தவ சீலர்களான பிராமணர்கள் மீது கோபம் கொள்வதா?உலக நன்மைக்காக தவமும் யாகமும் செய்யும் பிராமணர்களின் பாதுகாப்பாக இருக்க வேண்டிய மன்னர்கள் அவர்களை அடக்கி ஆள முற்படுவது அநியாயத்திலும் அநியாயம்.இவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட போகிறேன் என்று கூறிவிட்டு கெளசிகி நதி நீரை அருந்திவிட்டு பயங்கர சாபமிட்டான்.--
"இன்றிலிருந்து ஏழாவது நாள் என் தந்தையை அவமானப்படுத்திய பரீட்சித்மன்னனை பயங்கர விஷமுள்ள தக்ஷன் என்ற ராஜநாகம் கடித்து சாம்பலாகட்டும்." 
           இவ்வாறு சபித்து விட்டு அவன் ஆசிரமம் வந்தான்.தந்தை கழுத்தில் இறந்த பாம்பை தரித்திருப்பதை பார்த்து துக்கம் மேலிட்டு சப்தமிட்டு அழுதான்.
சமிக முனிவர் திடீரென சுய நினைவு அடைந்தார்.தன் மீது இருந்த இறந்த பாம்பை அப்புறப்படுத்திவிட்டு கூறினார்--- "மகனே ஏன் அழுகிறாய்? உனக்கு யார் தீங்கு இழைத்தார்கள்?என்று வினவினார்.மகன் அதற்க்கு பரீட்சித்மன்னன் செய்த செயலை விரிவாக கூறினான்.முனிவர் அதற்க்கு "மகனே நீ பாவம் செய்துவிட்டாய்!சிறிய தவறுக்கு பெரிய தண்டனை கொடுத்து விட்டாய்.நாட்டை காக்கும் அரசன் சாதாரண மனிதன் அல்ல.அவன் இறைவனுக்கு சமமானவன்.அரசனின் அடக்கு முறை இல்லையெனில் கொள்ளையர்கள் பெருகி போவார்கள்.நாட்டு மக்களை அடித்துக்கொன்று செல்வங்களை சூறையாடுவார்கள்.வேத தர்மங்கள் சீரழிந்து விடும்.மனிதர்கள் கட்டுப்பாடின்றி வாழ்வார்கள்.குரங்குகள் போல நாய்கள் போல தம் இஷ்டப்படி திரிவார்கள்.பரீட்சித் சக்கரவர்த்தி பல அஸ்வமேத யாகங்கள் செய்தவர்.தர்மத்தின் தலைவர் ஸ்ரீ கிருஷ்ணபகவானின் பக்தர்.பசி தாகத்தால் துன்புற்று நமது ஆசிரமத்திற்கு வந்திருந்தார்.நீ அவரை சபித்திருக்க கூடாது.அறியாமையால் நீ செய்த குற்றத்தை அந்த சர்வாத்மாவான பகவான் உன்னை மன்னிக்க வேண்டும்.பரீட்சித் போன்ற பகவானின் பக்தர்கள் என்றும் பழி வாங்க மாட்டார்கள்.
           அவர் தம் மகன் செய்த குற்றத்தை நினைத்து மிகவும் வருந்தினான்.சமிக ரிஷி போன்ற மகாத்மாக்கள் பிறர் செய்த தீங்குகளை பெரிதாக நினைக்க மாட்டார்கள்.உலகில் பிறர் அவர்களை சுக துக்கங்களில் வீழ்த்தினாலும் எதையும் சமமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்கள்.
             பரீட்சித்மன்னன் தன் தலை நகரம் திரும்பி அரண்மனைக்கு சென்ற பின் தான் செய்த காரியத்தை நினைத்து மிகவும் வருத்தமுற்றான்.குற்றமற்ற சமிக முனிவர் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது நான் அநாகரீகமாக நீசர்கள் போல நடந்து கொண்டேன்.தவ சீலரின் கோபாக்னி இன்றே என் ராஜ்யத்தையும் படைகளையும் அரசாங்க கருவூலத்தையும் எரித்து சாம்பலாக்க போகிறது.எனக்கு தக்க தண்டனை கிடைத்தால் தான் எனக்கு நல்லறிவு வரும். என்று வருந்தினான்.அச்சமயம் ரிஷி குமாரன் சிருங்கி, சாபமிட்ட செய்தியை கேள்வியுற்றான்.அதை அவன் பகவானின் அனுக்கிரகமாக கருதி சிந்தித்தான்.நான் வாழ்நாள் முழுவதும் உலக இன்ப விசயங்களிலேயே பற்று கொண்டிருந்தேன்.அந்த பற்றுக்களை அறுத்து வைராக்கியம் அடைய ஒரு வழிபிறந்து விட்டது.இந்த ஏழு நாட்களை பொன்னான நாட்களாக கழிக்க போகிறேன்.மரணம் வரை உண்ணா நோன்பு ஏற்று ஸ்ரீ ஹரியின் கதையா கேட்க போகிறேன் என்று முடிவெடுத்தான்.பரீட்சித் மன்னன் சிறு பிராயத்திலிருந்தே ஸ்ரீ ஹரியின் மீது மிகுந்த பக்தியும் அன்பும் கொண்டு பகவத் சேவையில் ஈடுபாட்டுடன் இருப்பான்.அக்கணமே ராஜ்யத்தையும் அரண்மனையையும் துறந்து கங்கை நதிக்கரையில் உண்ணா நோன்பு ஏற்று அமர்ந்து கொண்டான்.
            பரீட்சித் மன்னன் கங்கை கரையில் வந்து அமர்ந்தவுடன் அவன் மோட்ச கதி அடைவதற்கு துணை புரிய அநேக பிரம்ம ரிஷிகளும் ,தேவரிஷிகளும்,புகழ் பெற்ற சப்தரிஷிகளும் அங்கு வந்து கூடினர்.மன்னன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பூசித்தான்.மகாத்மாக்களே தங்கள் தரிசனம் கண்டு இன்று நான் பெரும் பேரு பெற்றேன்.எந்நேரமும் சுக போகங்களில் திளைத்திருக்கும் ராஜாக்களுக்கு இறைவனடி சேர வழிகாட்டும் மகா புருசர்கள் தரிசனம் கிடைப்பது அரிதிலும் அரிது.நான் பாக்யவான் ஆனேன். பிராமணரிஷியின் சாபம் நான் இறைவனடி சேர ஒரு காரணமாகி விட்டது.நான் என் மனதை ஸ்ரீ ஹரியின் திருவடி மலர்களில் சமர்ப்பித்து விட்டேன்.இனி தக்ஷகன் வந்து தீண்டினாலும் கவலைப்பட மாட்டேன்.மகாரிஷிகளே நான் அனைத்துயிர்களிலும் பரமாத்மாவை காண வேண்டும்.அதற்க்கு அருள் புரிய வேண்டும்.என்று வணங்கினான்.அச்சமயம் தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர்.(தொடரும்)

No comments:

Post a Comment