Friday 17 February 2012

தக்ஷன் செய்த யாகம் தொடர்ச்சி

தந்தை தக்ஷன் செய்த அவமரியாதையால் தன் மணாளன் மனம் வெறுத்துப்போய் இருப்பதை அறிந்தும் பழைய பகையை விட்டொழிப்பதற்கு சமாதானமாக பேசினாள். பிரபுவே தாங்கள் மாமனார் தக்ஷபிரஜாபதி சிறப்பு வாய்ந்த மாபெரும் யாகம் செய்கிறார்.தேவர்கள் அனைவரும் யாகத்தை காண அங்கு சென்று கொண்டு இருக்கின்றனர்.என் சகோதரிகள் அனைவரும் தம் கணவன்மார்களோடு வருகை தந்திருப்பார்கள்.என் தாய் தந்தையரையும், சகோதரிகளையும் காண வேண்டுமென ஆவல் கொண்டுள்ளேன்.நான் அங்கு சென்றால் என்னை அன்போடு உபசரித்து பட்டாடை ஆபரணங்களையும் வேறு பல வெகுமதிகளையும் தந்து கொண்டாடுவார்கள்.என் தாயின் பாசமுள்ள சகோதரிகள் என்னைக்கண்டால் மிகவும் சந்தோசம் அடைவார்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு என் தந்தை நடத்தும் யாக வைபவத்தை காணும் பாக்கியம் கிட்டும்.பிறப்பற்ற பரம்பொருளே, உலகை சிருஷ்டித்த இறைவா, முக்குணம் படைத்த மூவுலகம் எல்லாம் உங்கள் சகதிக்குள் அடக்கம்.இந்த தத்துவமெல்லாம் அறியாத பெண் நான்.அந்த பெண் இயல்பு என்னை பேச வைக்கிறது.நீலகண்ட நாயகரே இதோபாருங்கள்.என் தந்தை தக்ஷ பிரஜாபதியுடன் எந்த சம்பந்தமும் இல்லாத பெண்கள் தன்னை நன்கு அலங்கரித்துக்கொண்டு தத்தம் கணவன் மார்களோடு சந்தோசம் போங்க கூட்டம் கூட்டமாக போகிறார்கள்.பெருமானே தாய்,தந்தை,கணவர்,குரு,நண்பர்கள் ஆகியோர் நடத்தும் விழாக்களுக்கு அழைக்காமல் போனால் அதில் தவறு என்ன இருக்கிறது?தன்மானத்திற்கு குறைவு ஏதும் ஏற்படாது.பகவானே, கருணைக்கடலே என் விருப்பத்தை தாங்கள் நிறைவேற்றி வைக்கவேண்டும்.நீங்களும் என்னுடன் வர வேண்டும்.நீங்கள் பரம ஞானியாக இருந்தும் எனக்காக தன்னில் ஒரு பாகத்தை தந்து என் மீது அருள் புரிந்திருக்கிறீர்கள்.
            சசிதேவி இவ்வாறு சிவபெருமானை நோக்கி இவ்வாறு கேட்டுக்கொண்டதும் சிவபெருமான் தக்ஷனை பற்றி நன்கு அறிந்தவர். முன்பு சபிக்கப்பட்ட அவச்சொற்க்களை நினைத்து கூறலானார்.
பிரியே நீ சொன்னது போல அழைப்பு இல்லாமல் பந்துக்கள் விழாக்களில் பங்கேற்பது ஒன்றும் குற்றம் இல்லை தான்.அது பந்துக்களின் மனதில் பகையும் துவேசமும் இல்லாதிருந்தால் தான் அப்படி இருக்கவேண்டும்.ஆனால் ஆணவம் மிகுந்த தக்ஷன் என் மீது தீராத கோபமும் துவேசமும் கொண்டுள்ளான்.கல்வி,தவம்,செல்வம்,திடமான தேகம்,இளமை,உயர்குடிப்பிறப்பு இவையெல்லாம் நல்லவர்களுக்கு நற்குணங்களாக   இருப்பவை.ஆனால் பண்பற்ற நீசர்களுக்கு மேற்சொன்ன குணங்களே தீய குனங்கலாகிவிடுகின்றன.ஏனென்றால் அவற்றால் அவர்கள் ஆணவம் பெருகுகிறது.நல்லறிவும் நாசமடைகிறது.இதன் காரணமாகவே உயர்ந்த மனிதர்களின் நல்ல குணங்களையும் ஆற்றல்களையும் மதிக்கமாட்டார்கள்.வீட்டிற்க்கு வந்த பந்துக்களை அலட்சியப்படுத்தி அல்லது கோபப்பார்வையில் நோக்கி அவமானப்படுத்தும் சொந்த உறவினர்களிடம் போகாமல் இருப்பதே நல்லது.
           ஆயுதங்கள் கொண்டு பகைவர்களால் அடிபட்டாலும் வலி நீங்கிய பின் துக்கம் வரும்.ஆனால் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் கேட்டு காயம்பட்ட மனதுடன் இருந்தால் நெடுநாள் வரை தூக்கம் வராது.தேவ தக்ஷன் தான் பெற்ற மற்ற பெண்களை விட உன் மீது அதிக பாசமும் அன்பும் வைத்திருப்பவன் என்று நான் அறிவேன்.இருந்தாலும் நீ என்னை சார்ந்திருந்தால் உன்னை அன்புடன் வரவேற்க மாட்டான்.நாம் ஏன் சமாதானமாக போகக்கூடாது என்று நீ கேட்பாய்.அதற்க்கு வாய்ப்பே இல்லை.ஏனெனில் உன் தந்தை மனதில் துவேசம் என்ற தீ எரிந்து கொண்டு இருக்கிறது என்பதை நான் அறிவேன்.உண்மையில் பணிவன்புடன் நடந்துகொள்வது வணங்குவது எல்லாம் அனைத்துயிர்களுகுள் அந்தராத்மாவில் இருக்கும் பரம்பொருளை வணங்குவதற்காக செய்யப்படும் செயல்களாகும்.
           பிரஜாபதி யாகத்தில் எந்த குற்றமும் செய்யாதிருந்த போது உன் தந்தை வார்த்தைகளால் ஏசினான்.உனக்கு தந்தையானாலும் எனக்கு சத்ருவாகி விட்டான்.ஆதலால் நீ அங்கு போவது சரியல்ல.அங்கு சென்றால் நீ அவமானப்பட போகிறாய்.மான மரியாதையை இழப்பது நன்மையை தராது.
           சிவபெருமான் இவ்வாறு கூறிவிட்டு மௌனமானார்.சதி தேவி போகலாமா,வேண்டாமா என்று ஒரு முடிவுக்கு வராமல் தவித்தாள்.மனநிம்மதி இழந்தாள். பாசத்திற்கு அடிமையாகி தன் சொந்தபந்தங்களை காண துடித்தாள்.போகவேண்டாம் என்று தடுத்த சிவபெருமானை கோபமாக நோக்கினாள். சதி தேவிக்காக தன் இடப்பாகத்தை கொடுத்த சிவபெருமானிடம் ஏதும் சொல்லிக்கொள்ளாமல் தனியாக அங்கிருந்து புறப்பட்டாள்.
           தேவியார் தனியாக புறப்பட்டதை கண்டு மணிமான் முதலிய ஆயிரக்கணக்கான சிவனின் சேவகர்களும் சிவகணங்களும் அவளை பின்தொடர்ந்தனர்.அவளை நந்திகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் அமரச்செய்து அனைவரும் தக்ஷ யாகஸ்தலத்தை நோக்கி விரைந்தனர்.கொடை பிடித்து சாமரம் வீசினர்.சதி தேவி மைனாவும் கிளியும் தோளில் அமர கண்ணாடி,தாமரை மலர்களுடன் வைர ஆபரணங்கள் அணிந்து செல்வச்சிறப்புடன் பயணமானாள்.சிவகணங்கள் துந்துபி முழங்கி புல்லாங்குழல் முதலிய வாத்தியங்கள் முழங்க தாரை தப்பட்டையுடன் தேவியை பின் தொடர்ந்தனர்.(தொடரும்)

No comments:

Post a Comment