Tuesday 22 July 2014

ஹலாசனம்

ஹலாசனம் 

ஹலாசனம் கலப்பையை நினைவு படுத்தும் ஆசனமாகும். முதுகுதண்டின் இறுக்கத்தை போக்கும். மார்பும் முதுக்கும் பலப்படும். சுத்த இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். வாயு பிடிப்பு ஏற்படாது. வயிற்று உபாதைகள் நீங்கும். சிறுகுடல், பெருகுடல் ஈரல் ஆகியவற்றில் அழுத்தம் ஏற்படுவதால் நன்கு செரிமானம் ஏற்பட்டு மலச்சிக்கல் நீங்கும். தாய்ராய்ட் பைராதாய்ராய்ட் முதலிய உறுப்புகள் பலப்பட்டு மனதையும் அறிவையும்(மூளை சுறுசுறுப்பு)ஆரோக்கியமாக வைக்கும். குடல் இறக்கம் வராமல் தடுக்கும். வயிற்றிலும் இடுப்பிலும் தேவையில்லாத கொழுப்புக்கள் நீங்கி மெலிதாக்கும். சர்க்கரை வியாதி தொலையும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
செய்யும் விதி   
கீழே ஜமுக்காளம் விரித்து நேராக படுக்க வேண்டும். முழங்கால் குதிகால் தொடை எல்லாம் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் தொடைகளை ஒட்டி வைக்க வேண்டும். இரண்டு கைகளையும் பூமியில் ஸ்திரமாக வைத்துக்கொண்டு கால்களை அதே சேர்த்த நிலையில் மெதுவாக தூக்கி இடுப்பை 90 டிகிரி கோணத்தில் கொண்டு போனவுடன் கால்களை தலைக்கு முன் நேராக கொண்டுபோய் கால்பெருவிரல் பூமியில் பதியும்படி வைக்க வேண்டும். முழங்காலை மடக்காமல் நேராக வைக்க வேண்டும். முகவாய்க்கட்டை கழுத்துடன் ஒட்டி இருக்கவேண்டும். சிறிது நேரம் அதே நிலையில் இருக்க வேண்டும்.பின்பு கால்களை தூக்கி முதலில் இருந்தவாறு படுத்த நிலைக்கு வர வேண்டும். சற்று ஓய்வு எடுத்த பின் முடிந்த வரை மீண்டும் மீண்டும் இந்த ஆசனத்தை செய்வது நல்ல பலனை அளிக்கும். ஆரம்பத்தில் இதை 20 நொடிகள் வரை செய்யலாம். வாரத்திற்க்கு ஒருமுறை நேரத்தை கூட்டிக்கொண்டு போகலாம். பின் நான்கு நிமிடம் வரை செய்யலாம். அவசரப்பட்டு கால்களை எடுத்து தூக்குவது கூடாது. நரம்புகள் பிசகி விடும். ஆசனம் செய்யும்போது கைகளை இடுப்பில் வைத்துக்கொள்ளலாம். அதனால் சுலபமாக இந்த ஆசனம் வரும். மற்ற ஆசனங்களுடன் சேர்த்து செய்யும்போது நான்கு நிமிடத்திற்க்கு அதிகமாக இதை செய்யவேண்டாம். பெண்கள் அதிகநேரம் இதை செய்யவேண்டாம்.
          இந்த ஆசனத்தில் இரு கைகளையும் பின்னால் கொண்டுபோய் கால் பெருவிரல்களை மடக்கலாம். ஹலாசனத்துடன் சர்ப்பாசனம், சலபாசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்களை செய்யலாம். இந்த ஆசனத்தை உயர் இரத்த அழுத்தம் இதய நோய் உள்ளவர்கள் செய்யக்கூடாது. இந்த ஆசனத்தை சிறிது நேரம் செய்தாலும் சுவாசத்தை வெளியேற்றிவிட்டு வயிற்றை ஒட்டவைத்தும் ஆசனவாயை சுருக்கி செய்தால் நன்றாக பசியெடுக்கும். இது முடிந்தவுடன் சவாசனம் அவசியம் செய்யவேண்டும். அதனால் சுத்த இரத்தம் சீராக சகல அங்கங்களில் ஓடும்.
(தொடரும்)


Monday 21 July 2014

சர்வாங்காசனம்


சர்வாங்காசனம் தேகமெங்கும் உறுதியாக்குகிறது.இதில் முழு தேகத்தையும் மேல்நோக்கி வைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தில் மூளை,கழுத்து, இதயம் நலம் பெறுகின்றன. இதயம் சீராக இயங்குகிறது. அதாவது கால் பாதத்திலிருந்து ரத்த ஓட்டத்தை தலை வரை அனுப்பும் பழுவான வேலை குறைந்து இதயம் சுலபமாக துடிக்கிறது. அதனால் ஓய்வும் கிடைக்கிறது.
         இந்த ஆசனத்தால் நரைமுடி கறுப்பாகும். ஆறுமாதம் அப்யாசம்செய்தால் நிச்சயம் நரைமுடி கறுப்பாகும். கண் பார்வை தெளிவாகும். உடல் நடுக்கம், தலைவலி, ரத்த சோகை குணமாகும். ஞாபக சக்தி விருத்தியாகும். இந்த ஆசனத்தால் கழுத்தில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.அதில் சுத்த ரத்த ஓட்டம் நன்கு ஏற்படும். கழுத்து நரம்புகள் பலப்படும்.
          இந்த ஆசனத்தால் முதுகுத்தண்டு இறுக்கம் இல்லாமல் திட்டமாகும். சோர்வு நீங்கும்.மாபெரும் காரியங்களை செயலாற்ற திறமை உண்டாகும். முதுமையில் வரும் பலவீனம், சொப்பன தோஷம்,வீரிய தோஷம் எல்லாம் நீங்கும். பெண்களுக்கு கர்பப்பை கோளாறுகள் நீங்கும். ரத்த சுத்தி ஏற்படும். தோல் வியாதியும் குணமாகும். சிரசாசனத்திற்கு அடுத்தபடியாக இதன் பலன் கிடைக்கும். இதை முறையாக அப்யாசம் செய்தால் வயிற்று கோளாறுகள், ஈரல் நோய்கள் குணமாகும். மேலும் தொண்டைவலி(டான்சில்)கண்நோய், மலச்சிக்கல், தலைவலி, உடல் பலவீனம் எல்லாம் சரியாகும்.
ஆசனம் செய்யும் விதி:
கீழே ஜமுக்காளம் அல்லது கம்பளி போர்வையை விரித்துக்கொள்ளவேண்டும். அதில் நேராக படுக்கவேண்டும். இரண்டு பாதங்களை சேர்த்து வைத்துக்கொள்க. மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் தூக்கவேண்டும். மெல்ல மெல்ல மேல் தூக்கி இடுப்பில் தொண்ணூறு டிகிரி கொண்டு போக வேண்டும். நான்கு, ஐந்து வினாடிகள் மூச்சை அடக்கிய பின் இரண்டு கைகளால் இடுப்பை பிடித்து உடம்பை மேல்நோக்கி வைக்க வேண்டும். அச்சமயம் நெஞ்சுப்பகுதி முகவாய்க்கட்டையை ஸ்பரிசிக்க வேண்டும்.
          மேற்ச்சொன்ன நிலையில் மூச்சை அடக்கிக்கொண்டு இருபது நொடிகள் ஸ்திரமாக இருக்க வேண்டும். அச்சமயம் கழுத்திலிருந்து கால்கள் வரை நேர்கோடாக இருக்க வேண்டும்.  தேகத்தின் முழு பாரமும் கழுத்து தோள்பட்டை, கைகள் இவற்றில் இருக்க வேண்டும். பார்வை மூக்கு நுனியில் அல்லது பாதங்களின் பெருவிரலில் இருக்க வேண்டும். அச்சமயம் தேகமும் மனமும் ஆரோக்கியம், பலம் பெற்றிருப்பதாக நினைக்க வேண்டும். அதன் பின் மூச்சை விட்டுக்கொண்டு மெதுவாக கால்களை கீழே கொண்டு வந்து இடுப்பை பூமியில் வைத்து முன்பு போல இடுப்பிலிருந்து கால்களை தொண்ணூறு டிகிரிக்கு கொண்டு போக வேண்டும். கைகள் இரண்டையும் நீட்டி பூமியில் வைக்க வேண்டும்.மூன்று வினாடி அதே நிலையில் இருந்து கால்களை மெதுவாக பூமியில் நீட்டி வைக்க வேண்டும்.
          இந்த ஆசனம் செய்தவுடன் வேகமாக கால்களை கீழே கொண்டு வரக்கூடாது.அதனால் சுளுக்கு பிடிக்கும் அபாயம் உள்ளது. மெதுவாக கால்களையும்  உடம்பையும் மேல் நோக்கி தூக்க வேண்டும். அதே போல கீழே வைக்க வேண்டும். இந்த ஆசனத்தை மூன்று முறை செய்யலாம். இந்த ஆசனத்துடன் ஹலாசனமும் கர்ணபீடாசனமும் செய்ய விருப்பம் உள்ளவர்கள் சர்வாங்காசனத்தை ஒருமுறை மட்டும் செய்தால் போதும்.
          இந்த ஆசனத்தை ஒரு நிமிடத்திலிருந்து அதிகமாக செய்ய விருப்பம் உள்ளவர்கள் பிரணாயாமத்துடன் செய்ய தேவையில்லை. வேறு எந்த ஆசனத்தையும் செய்ய விரும்பாதவர்கள் இதை அரைமணி நேரம் வரை கூட செய்யலாம். ஆனால் ஆரம்பித்தவுடன் அதிக நேரம் செய்ய வேண்டாம். இருபது நொடியிலிருந்து ஆரம்பித்து இருபது நொடிகளாக கூட்டிக்கொண்டே செல்ல வேண்டும்.
          இந்த ஆசனம் செய்யும்போது கைகளை பூமியில் நீட்டிக்கூட வைத்துக்கொள்ளலாம். ஆனால் நெஞ்சோடு கழுத்து ஒட்டி இடுப்பு அதே நிலையில் தூக்கி இருக்க வேண்டும். இந்த நிலையை நன்கு பழக்கப்பட்டவர்களே செய்ய முடியும்.
                     சர்வாங்காசனத்தை செய்து கொண்டிருக்கும் போது நன்கு பழக்கப்பட்டபின் ஒவ்வொரு காலையும் மாறி மாறி முன்னால் நீட்டி மேல் கொண்டு போய் பயிற்சியும் செய்வார்கள். அல்லது இரண்டு கால்களையும் மாறி மாறி தலைக்கு பின்னால் கொண்டு போய் பூமியில் வைத்து அதன் பின் மேல்நோக்கி வைப்பார்கள்.
                        சர்வாங்காசனத்தை கர்ணபீடாசனம் போல செய்வார்கள். அதாவது வலது முழங்கால் வலது காதை ஸ்பரிசித்து பாதத்தை பூமியில் வைப்பார்கள். இந்த நிலை கர்ணபீடாசனம் போல வரும்.

          இந்த  சர்வாங்காசனத்தை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் பலவீன இதயம் உள்ளவர்களும் செய்யக்கூடாது. இந்த ஆசனம் செய்து முடித்தபின் அவசியம் சவாசனம் செய்யவேண்டும். அப்போது தான் நல்ல பலன் கிடைக்கும். 

Sunday 13 April 2014

யோகாசனங்கள்

                       ஸ்ரீ கணேசாய நமஹ
யோகாசனங்கள்
யோகாசனம் என்றால் என்ன? யோகாசனம் ஏன் செய்ய வேண்டும்?
நம் தேகத்தினுள் இருக்கப்படும் இயற்கை சக்தியை நன்கு ஆராய்ந்து புரிந்து கொண்டு உடம்பின் இயக்கத்தை சமச்சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதற்கு யோகாசனங்கள் உருவாக்கபட்டிருக்கின்றன.
          செல்வம், சொத்து, வசதியான வாழ்க்கை, ருசியான உணவு, மற்ற இன்பம் தரும் விஷயங்கள் எல்லாம் மனதிற்கும் தேகத்திற்கும் நிச்சயம் சந்தோசம் உண்டாகும். ஆனால் அவை நிரந்தரமானவை அல்ல.தண்டால்,பஸ்கி,ஓடுவது, பந்தாடுவது ஆகிய உடற்பயிற்சிகளும் தற்காலிகமாக உடம்பை உறுதியாக பலமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. ஆனால் யோகாசனங்கள் வெறும் சரீரத்துடன் தொடர்பு கொண்டவை மட்டும்அல்லாமல் மனதையும் உறுதிப்படுத்துகின்றன. யோகாசங்களின் தாக்கம் சூட்சும சரீரம் வரை சென்று ஆத்மாவையும் தொடுகிறது. அதனால் மனதிற்கும் தேகத்திற்கும் நிரந்திரமாக சுகமும் ஆரோக்கியமும் கிடைக்கின்றன.
          பரம்பொருள் பரமாத்மாவை மனம் ஒன்றி தியானிப்பதற்கு யோகாசனங்கள் சிறந்த அஸ்திவாரமாக அமைகின்றன. “ஸ்திரசுகமாசனம்” என்று பதஞ்சலியோகம் கூறுகிறது. அதாவது ஸ்திரமாக சுகமாக ஒரு நிலையில் சரீரத்தை வைத்துக்கொள்வதே ஆசனம். ஆசனத்தால் அலை பாயும் மனம் ஒரு நிலைப்படுகிறது.

          இயற்கையாகவே மனிதனின் தேகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அது போல் விலங்கு, பறவைகள் ஆகிய ஜீவராசிகள் நோய் வாய்ப்படுவதில்லை. ஆரம்பத்தில் மருந்துகள் கண்டுபிடிக்காத காலத்திலும் மனிதன் ஆரோக்கியமாக தான் வாழ்ந்து வந்தான். காலப்போக்கில் மருந்துகள் குறைவாக எடுத்துக்கொள்ளப்பட்டன. இன்றைய யுகத்தில் மனிதன் மிக அதிகமாக மருந்துகள் எடுத்துக்கொள்கிறான்.அதனால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. உண்மையில் இயற்கையாகவே மனிதன் தேகத்தில் நோயை குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. அதனால் உட்கொள்ளப்படும் மருந்துகள் நோயை குணப்படுத்த உதவி தான் செய்கின்றன. அதனால் மருந்தில்லாமல் பல சந்தர்பங்களில் நோய் தாமாகவே சரியாகிவிட்டது என்று சொல்கிறோம். உடற்கூறு சாஸ்த்திரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் யோகாசனங்கள் மூலமாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அதனால் நோய் குணமாகிறது. சில மூச்சு பயிற்சிகளாலும் நோய்கள் குணமாகின்றன. யோகாசனப்பயிற்சிகளாலும் மூச்சு பயிற்சிகளாலும் நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.தேகத்தின் உள் உறுப்புகள் ஆரோக்கியம் பெறுகின்றன.நான் இதனுடன் ஆசனங்கள் வகைகள்,செய்முறைகள், பயன்கள் அனைத்தையும் கொடுத்துள்ளேன். சிறந்த ஒரு வழிகாட்டி உதவியுடன் தம் சரீரத்திற்கு ஏற்றவாறு ஆசனத்தை தேர்ந்தெடுத்து செய்யவும். (தொடரும்)
 

Saturday 2 November 2013

மன்னன் யயாதி4

  
       
யது முதுமையை மறுத்து விட்டது போல தேவயானியின் மற்றொரு மகன் துர்வசுவும் மறுத்து விட்டான். சர்மிஷ்டாவின் இரண்டு மூத்த மகன்களும் (த்ருஹ்யுவும், அனுவும்) முதுமையை ஏற்க மறுத்து விட்டார்கள். ஆனால் இளையவன் புரு முதுமையை ஏற்க முன்வந்தான். “ தந்தையே இந்த உயிர் நீங்கள் கொடுத்தது. தந்தையின் ஆசியை பெற்று மனிதன் உலகியல் க்ஷேமங்களையும், இறைவன் அருளையும் அடைவான். தந்தை செய்த நன்மைகளை பெற்று மீண்டும் ஒரு மகனால் நன்றிக்கடனாக இந்த ஜன்மத்தில் பெற்றவருக்கு எதையும் செலுத்த இயலாது. தந்தைக்கு எது தேவையோ அதை சொல்லாமல் செய்பவனே உத்தம புத்திரன். சொல்லிச்செய்பவன் மத்திம புத்திரன். ஆனால் தந்தை சொல் கேளாதவன் கீழ் மகன்.” இவ்வாறு கூறிவிட்டு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொண்டான்.
          யயாதி புதிய பலம் பெற்றவன், அரசு காரியங்களை செயலாற்றினான். அரசர்களை ஜெயித்து ஏழு தீவுகள் கொண்ட மேதினியை வெண் கொற்றக்கொடையின் கீழ் கொண்டுவந்து நல்லாட்சி புரிந்தான். மகனிடம் இளமை பெற்று வலிமை பெற்று அரச போகங்களை அனுபவித்தான். தேவயானியிடம் பிரியமாக நடந்து கொண்டான். பெரும் தட்சிணைகள் கொண்ட பல ராஜசூய யாகங்களை செய்தான். சர்வதேவ சொரூபனான அணுவிற்க்கு அணுவான சக்தி கொண்ட சர்வ வல்லமை பொருந்திய சர்வ வியாபியாக விளங்கும் ஸ்ரீமன் நாராயணனை மனதில் நிறுத்தி அவரை குறித்து பல யாகங்கள் செய்தான்.
          அரச போக வாழ்க்கை வாழ்ந்து யயாதி ஆயுளின் பெரும் பகுதி கழிந்து விட்டது. ஆயிரம் வருடங்கள் கழிந்த பின்பு மனம் முழுவதுமாக வைராக்கியம் அடையவில்லை என்பதை ஒரு நாள் உணர்ந்தான். ஆனால் ஆசை அடங்கவில்லை. அவன் தேவயானியிடம் கூறினான். “ஆசைகளுக்கு ஓர் எல்லையே இல்லை. தனம், தானியம், சொர்ண செல்வங்கள், மனைவி,மக்கள், ராஜ்யம் அனைத்தும் ஒருவன் பெற்றிருந்தாலும் அவற்றில் அவன் திருப்தி அடையாமல் இருக்கிறான். ஆசைத்தீயில் நெய் ஊற்றுவது போல ஆசைகளை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ளும் போதும் அவை அடங்குவதே இல்லை. கிழப்பருவம் அடைந்த பின்பும் ஆசை இளமையுடன் இருக்கிறது. ஆசைத்தீயை வைராக்கியம் என்ற தண்ணீரை ஊற்றி அணைக்க வேண்டும். பற்றையும் பகையையும் துறக்க வேண்டும். சமநோக்கு உள்ளவனாக இருக்கவேண்டும். என்னை பார். இது நாள் வரை எல்லா விஷய சுகங்களை அனுபவித்த பின்பும் ஆசை அடங்கவில்லை. இனி நான் இந்த இளமையை புருவுக்கு தந்துவிட்டு முதுமையை ஏற்று காடு சென்று தவம் செய்யப்போகிறேன். குளிர்,வெப்பம்,சுகம், துக்கம் எல்லாவற்றையும் சமமாக பாவித்து வனத்தில் தவம் செய்யப்போகிறேன். இக லோக சுகங்களும், இன்பங்களும் பொய்யானவை. அது போலவே பரலோக இன்பங்களும், சந்தோசங்களும் நிலைத்து நிற்பவை அல்ல. ஏனெனில் இகலோக பரலோகங்களில் பிறவாமை என்ற மோட்சத்திற்க்கு வழியில்லை. ஆனால் இப்பூவுலகில் பிறந்த பின் தியானம் செய்து, தவம் செய்து ஆத்மஞானம் பெற்று விட்டால் இறைவனடி சேர்ந்து விடலாம்.”
          இவ்வாறு தேவயானியிடம் கூறிவிட்டு யயாதி ஞானிகளையும் வீழ்த்தும் புலனின்பங்களையும், பகையையும் துறந்தான். சர்மிஷ்டா மகன் புருவை அழைத்து தன்னிடம் இருந்த இளமையை அவனுக்கு தந்து விட்டு முதுமையை ஏற்றுக்கொண்டான். தென்கிழக்கு நாடுகளை த்ருஹ்யுவுக்கும்,தென்திசை நாடுகளை யதுவுக்கும்,மேற்கு திசை நாடுகளை துர்வசுவுக்கும் வடதிசை நாடுகளை அனுவுக்கும் தந்தான்.அண்ணன்களை சிற்றரசர்களாக்கி சகல பூ மண்டலத்திற்க்கும்,சம்பத்து சொத்துக்களுக்கும் உரிமையாளன் சர்மிஷ்டா மகன் புருவுக்கு (தந்தைக்கு இளமை கொடுத்ததால்) பேரரசு பதவியை அளித்து பட்டாபிஷேகம் செய்து வைத்தான்.
          அரசன் யயாதி இது நாள் வரை அரச போக சுகங்களுடன் வாழ்ந்தான். அவ்வாறு இருந்தும் சிறகு முளைத்த பறவைக்குஞ்சுகள் கூட்டை துறந்து பறந்து விடுவது போல இல்லறந்துறந்து வனம் சென்றான். கணப்பொழுதில் எல்லாவற்றையும் முற்றிலும் துறந்து பரமாத்மாவில் மனதை லயிக்க செய்தான். வனத்தில் சில காலம் தவமிருந்து பரமகதியை அடைந்தான்.
          தேவயானி கணவர் கூறிய சத்திய வசனங்களை கேட்டு ஆத்ம தத்துவ விஷயங்களை பற்றி சிந்தித்தாள். பந்த பாசத்திற்க்கு காரணமான மனைவி மக்களும் உற்றார் உறவினரும் காலத்தின் கதியால் தண்ணீர் பந்தலில் சேருவது போல சேருவார்கள். பின்பு பிரிந்து போவார்கள். ஈஸ்வரன் திருவுள்ளப்படி நடக்கும் நிகழ்ச்சிகளை எவராலும் மாற்ற முடியாது. என்ற தத்துவ விசாரம் செய்தாள். மாயா உலகை தோற்றுவித்து சகல உயிர்களிலும் அந்தராத்மாவாக உறையும் எல்லாம் வல்ல ஈசன் பேரமைதியின் இருப்பிடமாம் முடிவில்லா பரம்பொருளிடம் இரண்டறக்கலந்து தியான சமாதியில் உயிர் துறந்தாள். 

சிற்றரசனாக்கப்பட்ட தேவயானியின் மகன் யதுவிலிருந்து யாதவகுலம் தோன்றியது. ஸ்ரீ கிருஷ்ண பகவான் யாதவ குலத்தில் தோன்றினார்.

சர்மிஷ்டா மகன் பேரரசன் புருவிலிருந்து சந்திர வம்சம் தோன்றியது. சந்திரவம்ஸத்திலிருந்து கௌரவர்களும், பாண்டவர்களும் தோன்றினார்.   ***

  
           



    


        
            


Monday 28 October 2013

மன்னன் யயாதி3

  
       
தேவயானி கூறினாள். “ இன்று தெய்வாதீனமாக உங்கள் தரிசனம் கிடைத்தது. இதை பகவானின் விருப்பம் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் சுக்கிராசாரியாரின் மகள் பிராமணப்பெண்ணான என்னை எந்த பிராமணனும் மணந்து கொள்ள மாட்டான். என்று பிரகஸ்பதி மகன் கசன் முன்பு எனக்கு சாபமிட்டு விட்டான். ஏனெனில் அவனுக்கு. “நீ கற்ற வித்தையை மறந்துவிடுவாய்” என்று   நான் ஒரு சாபம் கொடுத்தேன்.
          பிராமணப்பெண்ணான என்னை க்ஷத்திரியன் மணப்பது முறையன்று என்று அறிந்திருந்தும் இதை தெய்வ சங்கல்பம் என்றே நினைத்தான். மேலும் தேவயானியை கண்டதும் அவன் மனம் காதல் வயப்பட்டது. தேவயானியை மணப்பதற்கு சம்மதம் தெரிவித்து விட்டு தன் தலைநகரம் சென்று அடைந்தான். தேவயானி கதறி அழுது கொண்டே வீட்டிற்கு வந்தாள்.தந்தையிடம் தமக்கு ஏற்பட்ட அவமானத்தையும் அநியாயத்தையும் சொல்லி அழுதாள். சுக்கிராசாரியார் அதை கேட்டு மனம் வருந்தி கூறினார்.  “பிறரை அண்டி பிழைக்கும் பிழைப்பு மோசமானது. அதற்கு பதில் வயலில் சிந்திக்கிடப்பதை புறா போல பொறுக்கி எடுத்து வந்து வாழ்க்கை நடத்தலாம்.” என்று நினைத்தார்.
          மன்னன் விருஷபர்வா, குரு சுக்கிரர் தன் ஆசிரமத்தை விட்டு மகளுடன் வெளியேறும் செய்தியை அறிந்து குரு தேவர் போய் விட்டால் தமக்கும் அசுர குலத்திற்க்கும் நல்லதல்ல என்று எண்ணி சுக்கிரரை சமாதானப்படுத்த அரண்மனையை விட்டு வந்து அவசரமாக அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். சுக்கிரர் கூறினார்.-“மன்னா எனக்கு என் மகள் தான் முக்கியம். அவளை சமாதானப்படுத்தி அவள் விருப்பப்படி நடந்தால் நான் ஆசிரமத்தை விட்டு செல்ல மாட்டேன்.” என்றார். மன்னர் விருஷபர்வா அப்படியே ஆகட்டும் என்றான்.
          தேவயானி கூறினாள். “ என் தந்தையால் எவருடன் நான் மணம் முடிக்கப்பட்டு எங்கு செல்கிறேனோ அங்கெல்லாம் சர்மிஷ்டா தன் ஆயிரம் தோழிகளோடு பணிப்பெண்ணாக வந்து எனக்கு சேவை செய்ய வேண்டும்.” என்றாள். தன் தந்தையின் இக்கட்டான நிலைமை அறிந்து அசுர குலத்தின் நலனையும் கருதி சர்மிஷ்டா தேவயானியின் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டாள்.
          சுக்கிராசாரியார் அரசன் யயாதியை அழைத்து திருமணம் பேசி முடித்தார். விருஷபர்வா ராஜ மரியாதைகளுடன் தேவயானியின் திருமணத்தை மிக விமரிசையாக நடத்தி வைத்தான். தேவயானியின் விருப்பப்படி சர்மிஷ்டா தன் ஆயிரம் தோழிகளுடன் பணிப்பெண்ணாக சென்றாள்.
          காலம் சென்ற பின் தேவயானி இரண்டு புதல்வர்களை பெற்றெடுத்தாள். தேவயானி புதல்வர்களை பார்த்து சர்மிஷ்டா தான் புதல்வர்களை பெற்றால் அவர்களும் அரசாள்வார்கள். என்று நினைத்தாள். யயாதி மன்னனை ரகசியமாக சந்தித்து அவனை மணந்து கொண்டாள். யயாதியும் க்ஷத்திரிய ராஜகுமாரியை மணப்பது தர்மத்திற்க்கு விரோதமானதல்ல என்று அவளை ஏற்றுக்கொண்டான். சர்மிஷ்டா மூன்று புதல்வர்களை பெற்றாள். அவர்கள் த்ருஹ்யு,அனு,புரு,என்று பெயர் பெற்று விளங்கினார்கள். இறுதியில் சர்மிஷ்டா தன் கணவரை மயக்கி விட்டாள் என்றறிந்து தேவயானி ஆத்திரம் அடைந்தாள். யயாதி பலமுறை சமாதானப்படுத்தியும் சாந்தமாகாமல் தந்தையிடம் சென்று முறையிட்டாள். சுக்கிரர் யயாதியை பார்த்து “பெண்பித்து பிடித்தவனே இப்பொழுதே நீ இளமை பருவத்தை இழந்து தொண்டு கிழவனாக மாற வேண்டும்” என்றார். யயாதி மிகவும் வருந்தி கூறினான். “பிரம்மரிஷியே அரசாங்கம் நடத்த முடியாத, எதையும் சாதிக்க முடியாத இந்த கிழப்பருவத்தை உங்கள் மகளும் விரும்பமாட்டாள்.” இதை கேட்டு சுக்கிரர் கூறினார். “அப்படியென்றால் எவராவது மனமுவந்து உன் கிழப்பருவத்தை ஏற்று தன் இளமை பருவத்தை கொடுத்தால் நீ மீண்டும் பழைய நிழையை அடைவாய்” என்றார்.
          யயாதி தேவயானியை அழைத்துக்கொண்டு தன் தலைநகரம் திரும்பினான்.   அங்கு சென்றதும் தேவயானி பெற்ற தன் மூத்த மகன் யதுவிடம் தன் முதுமையை ஏற்றுக்கொண்டு இளமையை தருமாறு கேட்டான். அதற்கு யது கூறினான். “ தந்தையே காலம் கடந்த பின் வரப்போகும் முதுமையை நான் இப்போதே ஏற்கமாட்டேன். புலனின்பங்கள் அனுபவிப்பதற்கு முன்னால் எப்படி வைராக்கியம் வரும்?  (தொடரும்)

  
           
  (தொடரும்)     



    


        
            


Wednesday 23 October 2013

மன்னன் யயாதி2

  

அசுர குலத்தவருக்கு அரசனாக விருஷபர்வா என்பவன் அறம், நீதி,நெறி தவறாமல் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு ஒரு மகள் சர்மிஷ்டா என்பவள் அழகும் குணங்களும் நிறைந்திருந்தாள். சுக்கிராசாரியார் மன்னன் விருஷபர்வாவிடம் ராஜகுருவாக இருந்தார். அதனால் தேவயானி சர்மிஸ்டாவின் தோழியாக இருந்தார்.
          ஒரு நாள் அரண்மனை நந்தவனத்தில்  சர்மிஷ்டா, தேவயானியுடன் ஆயிரம் தோழிகள் சூழ மலர்கள்,செடிகொடிகள் பக்கம் உலவிக்கொண்டிருந்தாள். அங்கே அரண்மனை பக்கம் தாமரைகள் பூத்த ஒரு குளத்தில் நீராட மனம் கொண்டாள். தேவயானியுடன் நீருக்குள் இறங்கி ஒருவர் மீது ஒருவர் நீரை அடித்து நீராட முனைந்தனர். அரண்மனையிலிருந்து தோழிகள் பட்டாடைகளை கொண்டுவந்து கரையில் வைத்தனர். அச்சமயம் அன்னியர் யாரோ வருவது போல சப்தம் கேட்க தேவயானியும் சர்மிஷ்டாவும் அவசர அவசரமாக கரைக்கு வந்து பட்டுச்சேலைகளை உடுத்திக்கொண்டனர். அவசரத்தில் தவறுதலாக சர்மிஷ்டா தேவயானியின் ஆடைகளை உடுத்திக்கொண்டாள். இதைக்கண்டு தேவயானி கொந்தளித்து பேசினாள்.
          “எங்கள் வீட்டு வேலைக்காரிக்கு எவ்வளவு திமிர்? என் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாளே. இந்த அடாத செயலை என்னவென்று சொல்வேன். இச்செயல் யாகத்தில் இடவேண்டிய ஹவிஸ் பாயாச பாத்திரத்தை  நாய் தூக்கிக்கொண்டு போவது போலிருக்கிறது. பிராமணர்களின் தவ வலிமையால் இவ்வுலகம் க்ஷேமமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் பரமாத்மாவின் முகத்திலிருந்து சிருஷ்டிக்கப்பட்டவர்கள். மக்கள் நெறி தவறாமல் வாழ்வதற்காக வேதங்களை பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள்.
          நாங்களோ பிராமணர்களில் சிறந்தவர்களான பார்கவ வம்ஸத்து பிராமணர்கள். இவள் தந்தையோ ஓர் அரக்கன்.  எப்படியோ என் தந்தையின் சிஷ்யனாகிவிட்டான்.” தேவயானி இவ்வாறு அவமானப்படுத்தி பேசியதை கேட்டு சர்மிஷ்டா மனம் கொதித்து கம்பால் அடிபட்ட நாக சர்பம் போல சீறி மூச்சிறைக்க பேசினாள். “தேவயானி என்ன உளறுகிறாய்! உன் நிலைமை அறிந்து தான் பேசுகிறாயா? காக்கையும் நாயும் அன்னத்திற்காக வெளி வாசலில் காத்திருப்பது போல நாங்கள் கொடுப்பதை வாங்கி கொள்ள வாசலில் நிற்கும் பிச்சைக்காரி தானே நீ! என் தந்தை உன் தந்தைக்கு சம்பளம் கொடுக்காவிட்டால் உன் தந்தைக்கு புகலிடம் எது?” என்று கொடுஞ்சொற்களால் ஏசி விட்டு தேவயானியின் வஸ்திரங்களை பறித்துக்கொண்டு  அவளை பிடித்து இழுத்து அங்கு பக்கத்தில் இருந்த ஒரு பாழுங்கிணற்றில் தள்ளி விட்டு தன் ஆயிரம் தோழிகளுடன் அரண்மனை போய் சேர்ந்தாள்.  ஒரு சமயம் இந்திரன் விருதாசுரன் என்ற அரக்கனை கொன்றதால் பிரம்ம ஹத்தியா பாவ தோஷத்திற்கு ஆளானான். அதனால் இந்திர பதவியை இழந்து தாமரை தண்டிற்குள் நுழைந்து வாசம் செய்தான். தேவலோகத்தில் ஆட்சி செய்வதற்காக தகுந்த தேவராஜாவை தேவர்கள் பூலோகமெங்கும் தேடினார்கள். அச்சமயம் அறம் வழுவாமல் நஹூஷன் என்பவன் பூமியில் நல்லாட்சி செய்து வந்தான். தேவலோகத்திற்கு அரசனாக தேவர்கள் கேட்டுக்கொண்டபடியால் நஹூஷன் இந்திரனானான். சிறிது காலம் சென்ற பின் நஹூஷனுக்கு கர்வம் தலைக்கேறியது.அவன் இந்திரன் மனைவி மீது ஆசைப்பட ஆரம்பித்தான். தமக்கு இந்திராணியாக வரவேண்டும் என்று இந்திராணியை ஓயாது கேட்டுக்கொண்டு இருந்தான். அதற்கு இந்திராணி நஹூஷனிடம் கூறினாள். “ தாங்கள் ஸப்தரிஷிகள் தூக்கிக்கொண்டு வரும் பல்லக்கில் என் இல்லம் வருவீர்களானால் நான் உமக்கு இந்திராணி ஆவேன். இதை கேட்டு சப்தரிஷிகளை அழைத்து அவர்களை பல்லக்கு தூக்கவைத்து அதில் ஏறி அமர்ந்து பயணப்பட்டான். நடு வழியில் அகஸ்தியர் குள்ளமாக இருந்ததால் பல்லக்கு சரி சமமாக இல்லாமல் ஆடியது. அதனால் பல்லக்கு ஏன் சரிசமமாக தூக்கப்படவில்லை என்று நஹூஷன் அகஸ்திய முனிவரை காலால் எட்டி உதைத்தான். அதனால் கோபம் கொண்ட அகஸ்தியர் நஹூஷனை நீ மலைபாம்பாக போய் விடுவாய் என்று சபித்தார். அந்த புகழ் மிக்க இந்திர பதவியை அடைந்த நஹூஷன் மகன் யயாதி பூலோகத்தில் பட்டத்திற்க்கு வந்தான். தந்தையின் நிலைமையை அறிந்து மிக கவனமாக அறம் வழுவாமல் ஆட்சி புரிந்து வந்தான்.   
          ஒருநாள் யயாதி மன்னன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். தாகம் அதிகமாக தண்ணீரை தேடி வந்தவன் கிணற்றுக்குள் பார்த்தான். அங்கு ஒரு அழகான பெண் குறைந்த வஸ்திரம் அணிந்து பரிதாபமாக இருப்பதை கண்டான். யயாதி முதலில் அவளுக்கு தன் அங்கவஸ்த்திரத்தை கொடுத்தான். பின் அவளை கிணற்றில் இருந்து கை தூக்கி விட்டான்.    

தேவயானி கூறினாள்.-“வீரரே உங்களை பார்த்தால் அரசனை போல தெரிகிறது. நீங்கள் என் கரத்தை பற்றி தூக்கி விட்டீர்கள். இனி நான் வேறு எவர் கரத்தையும் பிடிக்க மாட்டேன். என்றாள். மன்னன் தான் யயாதி என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்.    
  (தொடரும்)    
                  



    


        
            


Thursday 26 September 2013

மன்னன் யயாதி



  


முன்னொரு காலத்தில் பாற்கடலில் அமுதம் கடையப்பட்டு அசுரர்களை ஏமாற்றி தேவர்கள் அமுதத்தை பருகிவிட்டார்கள். இதனால் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்டது. போரில் பல பலசாலி அரக்கர்கள் மாண்டனர். அசுரர்களின் அரசன் பலிச்சக்கரவர்த்தி  போரில் இறந்து போனான். பார்கவரிஷ சுக்கிராசாரியார்(அரக்ககுரு) இறந்தவர்களை பிழைக்கவைக்கும் மிருத சஞ்சீவினி மந்திரத்தை அறிந்திருந்தார்.அசுரர்கள் தம் தலைவன் உயிர் பெற்று எழ வேண்டும் என்று சுக்கிராசரியாரை கேட்டுக்கொள்ள, சுக்கிரர் மிருத சஞ்சீவினி வித்தையை பயன்படுத்தி அசுரத்தலைவன் பலியை பிழைக்கச்செய்து விட்டார்.

          இந்த நிகழ்ச்சியை கண்டவுடன் தேவர்கள் நமக்கும் அந்த மிருதசஞ்சீவினி வித்தை சித்திக்க வேண்டும் என்று எண்ணி தேவகுரு பிரகஸ்பதியிடம் சென்றனர். பிரகஸ்பதி ஒரு உபாயத்தை கூறினார். என் மகன் கசன் சுக்கிராசாரியாரிடம் சென்று சிஷ்யனாக இருந்து குரு சேவை செய்து அந்த வித்தையை கற்றுக்கொண்டு வரட்டும் என்றார். தேவர்களின் திட்டப்படி கசன் சுக்கிராசாரியாரிடம் வந்து கூறினான்.

“பகவானே நான் பிரகஸ்பதியின் புதல்வன். பலவித சாஸ்திரங்களை கற்றவர்,ஆயினும் கற்க வேண்டிய கல்விக்கோ எல்லையே இல்லை. முற்றிலும் கற்றவர் எவரும் இல்லை. நான் தங்களிடம் விசேச வித்தையை கற்க வந்திருக்கிறேன். கற்பதில் ஆர்வம் கொண்ட மாணவனை நல்லாசிரியர்கள் புறக்கணிக்க மாட்டார்கள். தங்கள் மாணாக்கனாக சேர்ந்து நான் குருசேவை செய்ய விரும்புகிறேன். தாங்கள் மறுக்காமல் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று சுக்கிரரை சரண் அடைந்தான். சுக்கிராசாரியார் அப்படியே ஆகட்டும் என்று அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டார். கசன் குருவுக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தான். காட்டிற்க்கு சென்று மாடுகளை மேய்த்துக்கொண்டு வருவான்.         

       

          கசன் சிஷ்யனாக சேர்ந்த செய்தியை அசுரர்கள் அறிந்து கொண்டனர். அசுரகுலத்திற்கு ஆபத்து வரும் என்று நினைத்தனர். ஒருநாள் அவர்கள் காட்டில் விறகு வெட்டிக்கொண்டிருந்த கசனை கண்டந்துண்டமாக வெட்டிப்போட்டனர். சுக்கிரரின் மகள் தேவயானி கசன் மீது அன்பும் காதலும் கொண்டிருந்தாள். அவன் தந்தையிடம் கூறினாள். காட்டிற்கு சென்ற தங்கள் சிஷ்யன் கசன் திரும்பவில்லையே அவன் ஆபத்தில் சிக்கிக்கொண்டான் போலும்” என்றாள். சுக்கிரர் ஞானதிருஷ்டியில் அனைத்தையும் அறிந்து மிருத சஞ்சீவினி வித்தையை உபயோகித்து கசனை பிழைக்க வைத்து விட்டார்.

          சமித்துகளை சேகரிக்க,மாடுகளை மேய்க்க,விறகு வெட்ட,பழங்கள் பறிக்க,அல்லது பூஜைக்கு மலர்கள் கொண்டு வர காட்டிற்க்கு சென்ற போது ஒவ்வொரு முறையும் கசனை அரக்கர்கள் கொன்றனர். கசன் மீது வைத்த காதலால் தேவயானி கசன் திரும்பவில்லை என்று அழுவாள். சுக்கிராசரியார் மகள் மீது இருந்த பாசத்தினால் ஒவ்வொரு முறையும் மிருத சஞ்சீவினி வித்தையை கொண்டு கசனை பிழைக்கவைத்துக்கொண்டு இருந்தார். இறுதியில் ஒருநாள் கசன் காட்டிற்கு சென்றிருந்தபோது அவனை வெட்டி அசுரர்கள் தீயிட்டு எரித்தார்கள். அந்த சாம்பலை எடுத்து வந்து சுக்கிரருக்கு தெரியாமல் மதுவில் கலந்து கொடுத்து விட்டனர். சுக்கிரரும் அதை குடித்து விட்டார். தேவயானி வழக்கம் போல் கசனை நினைத்து அழுதாள். அவர் சஞ்சீவினி மந்திரத்தை ஜபிக்க மதுவுடன் கலந்த சாம்பலுடன் வயிற்றில் சென்ற கசன் பேசினான். “குரு நான் இங்கு உமது வயிற்றில் உயிர் பெற்று இருக்கிறேன். நான் வெளியில் வயிற்றை கிழித்துக்கொண்டு வந்தால் தாங்கள் இறந்து விடுவீர்கள். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றான்.

          சுக்கிராசாரியார் வேறு வழியின்றி வயிற்றில் இருக்கும் கசனுக்கு மிருத சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். கசன் சுக்கிரர் வயிற்றை கிழித்துக்கொண்டு வந்தான். கசன் இறந்து போன சுக்கிரரை குறித்தும் மிருத சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்தான். சுக்கிரர் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார். இந்த நிகழ்ச்சியால் மனம் திருந்திய சுக்கிரர் வானகத்து தேவர்கள் கேட்டுக்கொண்டிருக்க பஞ்ச பூதங்கள் சாட்சியாக தர்ம சாஸ்திர சட்டப்பூர்வமாக வாக்கு கொடுத்தார். “இன்றிலிருந்து பிராமணர்கள் மது அருந்த கூடாது. மாமிசம் புசிக்க கூடாது. அவ்வாறு மீறி நடந்தால் அவர்கள் பிராமண தன்மையை இழந்து பெரும் பாவத்திற்குள்ளாவார்கள்” என்றார். இதனை தேவர்களும் ரிஷிகளும் ததாஸ்து(அப்படியே ஆகட்டும்) என்று ஆமோதித்தனர்.

          தேவயானி கசனை நோக்கி கூறினாள். “பிருகஸ்பதி மகனாரே இது நாள் வரை உங்களை நான் காதலித்து வந்தேன். அதை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருந்தீர்கள். இப்போது நீங்கள் என்னை மணந்து கொள்ள வேண்டும். நான் பலமுறை உங்களை உயிர் பிழைக்க வைத்தேன்.” தேவயானி திடீரென இவ்வாறு கூறியதும் கசன் கூறினான். “ குருவின் மகளே இது வரை உன்னை மணக்கும் நோக்கம் எனக்கு இருந்ததில்லை. நான் உன்னை காதலிக்கவும் இல்லை. மேலும் நான் இப்போது உன் தந்தையின் வயிற்றிலிருந்து மறுபிறவி எடுத்து விட்டேன். சுக்கிரர் எனக்கு தந்தை முறை ஆகி விட்டார். ஆதலால் நான் உன்னை மணக்க முடியாது.”

          கசன் இவ்வாறு கூறியதும் தேவயானி கோபமாக கூறினாள். தேவகுரு மகனே எந்த லட்சியத்திற்காக இங்கு வந்தீர்களோ (கற்ற மிருதசஞ்சீவினி வித்தை)உமக்கு மறந்து போக்கக்கடவது” என்று சபித்தாள். இதை கேட்டு கசன் பதிலுக்கு சாபமிட்டான். “ தேவயானி நீ பிராமணப்பெண்ணாக இருந்தாலும் உன்னை எந்த பிராமணனும் மணந்துகொள்ள மாட்டான். என்று சபித்து விட்டு தேவலோகம் போய் சேர்ந்தான்.  (தொடரும்)