Monday 28 October 2013

மன்னன் யயாதி3

  
       
தேவயானி கூறினாள். “ இன்று தெய்வாதீனமாக உங்கள் தரிசனம் கிடைத்தது. இதை பகவானின் விருப்பம் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் சுக்கிராசாரியாரின் மகள் பிராமணப்பெண்ணான என்னை எந்த பிராமணனும் மணந்து கொள்ள மாட்டான். என்று பிரகஸ்பதி மகன் கசன் முன்பு எனக்கு சாபமிட்டு விட்டான். ஏனெனில் அவனுக்கு. “நீ கற்ற வித்தையை மறந்துவிடுவாய்” என்று   நான் ஒரு சாபம் கொடுத்தேன்.
          பிராமணப்பெண்ணான என்னை க்ஷத்திரியன் மணப்பது முறையன்று என்று அறிந்திருந்தும் இதை தெய்வ சங்கல்பம் என்றே நினைத்தான். மேலும் தேவயானியை கண்டதும் அவன் மனம் காதல் வயப்பட்டது. தேவயானியை மணப்பதற்கு சம்மதம் தெரிவித்து விட்டு தன் தலைநகரம் சென்று அடைந்தான். தேவயானி கதறி அழுது கொண்டே வீட்டிற்கு வந்தாள்.தந்தையிடம் தமக்கு ஏற்பட்ட அவமானத்தையும் அநியாயத்தையும் சொல்லி அழுதாள். சுக்கிராசாரியார் அதை கேட்டு மனம் வருந்தி கூறினார்.  “பிறரை அண்டி பிழைக்கும் பிழைப்பு மோசமானது. அதற்கு பதில் வயலில் சிந்திக்கிடப்பதை புறா போல பொறுக்கி எடுத்து வந்து வாழ்க்கை நடத்தலாம்.” என்று நினைத்தார்.
          மன்னன் விருஷபர்வா, குரு சுக்கிரர் தன் ஆசிரமத்தை விட்டு மகளுடன் வெளியேறும் செய்தியை அறிந்து குரு தேவர் போய் விட்டால் தமக்கும் அசுர குலத்திற்க்கும் நல்லதல்ல என்று எண்ணி சுக்கிரரை சமாதானப்படுத்த அரண்மனையை விட்டு வந்து அவசரமாக அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். சுக்கிரர் கூறினார்.-“மன்னா எனக்கு என் மகள் தான் முக்கியம். அவளை சமாதானப்படுத்தி அவள் விருப்பப்படி நடந்தால் நான் ஆசிரமத்தை விட்டு செல்ல மாட்டேன்.” என்றார். மன்னர் விருஷபர்வா அப்படியே ஆகட்டும் என்றான்.
          தேவயானி கூறினாள். “ என் தந்தையால் எவருடன் நான் மணம் முடிக்கப்பட்டு எங்கு செல்கிறேனோ அங்கெல்லாம் சர்மிஷ்டா தன் ஆயிரம் தோழிகளோடு பணிப்பெண்ணாக வந்து எனக்கு சேவை செய்ய வேண்டும்.” என்றாள். தன் தந்தையின் இக்கட்டான நிலைமை அறிந்து அசுர குலத்தின் நலனையும் கருதி சர்மிஷ்டா தேவயானியின் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டாள்.
          சுக்கிராசாரியார் அரசன் யயாதியை அழைத்து திருமணம் பேசி முடித்தார். விருஷபர்வா ராஜ மரியாதைகளுடன் தேவயானியின் திருமணத்தை மிக விமரிசையாக நடத்தி வைத்தான். தேவயானியின் விருப்பப்படி சர்மிஷ்டா தன் ஆயிரம் தோழிகளுடன் பணிப்பெண்ணாக சென்றாள்.
          காலம் சென்ற பின் தேவயானி இரண்டு புதல்வர்களை பெற்றெடுத்தாள். தேவயானி புதல்வர்களை பார்த்து சர்மிஷ்டா தான் புதல்வர்களை பெற்றால் அவர்களும் அரசாள்வார்கள். என்று நினைத்தாள். யயாதி மன்னனை ரகசியமாக சந்தித்து அவனை மணந்து கொண்டாள். யயாதியும் க்ஷத்திரிய ராஜகுமாரியை மணப்பது தர்மத்திற்க்கு விரோதமானதல்ல என்று அவளை ஏற்றுக்கொண்டான். சர்மிஷ்டா மூன்று புதல்வர்களை பெற்றாள். அவர்கள் த்ருஹ்யு,அனு,புரு,என்று பெயர் பெற்று விளங்கினார்கள். இறுதியில் சர்மிஷ்டா தன் கணவரை மயக்கி விட்டாள் என்றறிந்து தேவயானி ஆத்திரம் அடைந்தாள். யயாதி பலமுறை சமாதானப்படுத்தியும் சாந்தமாகாமல் தந்தையிடம் சென்று முறையிட்டாள். சுக்கிரர் யயாதியை பார்த்து “பெண்பித்து பிடித்தவனே இப்பொழுதே நீ இளமை பருவத்தை இழந்து தொண்டு கிழவனாக மாற வேண்டும்” என்றார். யயாதி மிகவும் வருந்தி கூறினான். “பிரம்மரிஷியே அரசாங்கம் நடத்த முடியாத, எதையும் சாதிக்க முடியாத இந்த கிழப்பருவத்தை உங்கள் மகளும் விரும்பமாட்டாள்.” இதை கேட்டு சுக்கிரர் கூறினார். “அப்படியென்றால் எவராவது மனமுவந்து உன் கிழப்பருவத்தை ஏற்று தன் இளமை பருவத்தை கொடுத்தால் நீ மீண்டும் பழைய நிழையை அடைவாய்” என்றார்.
          யயாதி தேவயானியை அழைத்துக்கொண்டு தன் தலைநகரம் திரும்பினான்.   அங்கு சென்றதும் தேவயானி பெற்ற தன் மூத்த மகன் யதுவிடம் தன் முதுமையை ஏற்றுக்கொண்டு இளமையை தருமாறு கேட்டான். அதற்கு யது கூறினான். “ தந்தையே காலம் கடந்த பின் வரப்போகும் முதுமையை நான் இப்போதே ஏற்கமாட்டேன். புலனின்பங்கள் அனுபவிப்பதற்கு முன்னால் எப்படி வைராக்கியம் வரும்?  (தொடரும்)

  
           
  (தொடரும்)     



    


        
            


No comments:

Post a Comment