Sunday 1 April 2012

பக்தன் அம்பரீஷ மன்னன் தொடர்ச்சி

பிரம்மதேவர் தம்மால் ஏதும் செய்ய முடியாது என்று கூறியதும் சுதர்சன சக்கரத்தின் வெப்பம் தாங்காமல் கயிலாயத்தை நோக்கி ஓடினார்.அங்கு வீற்று இருந்த சிவபெருமானை சரண் அடைந்தார்.தன்னை காக்கும்படி வேண்டினார்.சிவபெருமான் கூறினார்:-- முனிவரே முடிவில்லா அனந்தன் பரம்பொருள் அவரிடத்து இந்த அண்டங்களும் அண்டவெளியும் தோன்றுகிறது.அழிவுக்காலம் வரும்போது எல்லாம் காணாமல் போய் விடுகின்றன.நான்,சனத் குமாரர்கள்,நாரதர்,பிரம்ம தேவர்,கபிலமுனிவர்,அபாந்தரதமர், தேவலர்,மரீசி ஆகிய சித்தேஸ்வரர்கள் விஷ்ணு பகவானின் மாயையை அறியாதவர்கள்.நாங்கள் அனைவரும் ஒரு வட்டத்திற்குள் தான் கட்டுண்டு இருக்கிறோம்.அவ்வாறு இருக்க விஷ்வேச்வரரின் சக்கரத்தை எங்களால் என்ன செய்ய முடியும்?நீங்கள் அந்த விஷ்ணுவிடமே சரண் அடையுங்கள். அவரால் உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்.சிவபெருமான் தன்னால் உதவி செய்ய முடியாது என்று கூறிய பின் சுதர்சன ஜுவாலையின்வெப்பத்தை தாங்க முடியாமல் விஷ்ணு பகவானிடம் சென்று புலம்பினார்.--- "பகவானே அச்சுதா அகில விசுவத்தையும் காக்கும் கடவுளே நான் தவறு செய்து விட்டேன்.என்னை ரட்சியுங்கள்.சான்றோர் போற்றும் தெய்வமே தங்கள் மகிமை அறியாத நான் தங்களுக்கு பிரியமான பக்தனுக்கு குற்றமிழைத்து விட்டேன்.தங்கள் திருநாமத்தை உச்சரித்தாலே போதுமே ஓடி வந்து ரட்சிப்பீர்களே" என்றார்.
ஸ்ரீ விஷ்ணு பகவான் கூறினார்-- " துர்வாசமுனிவரே நான் என்றென்றும் பக்தர்களுக்கு கட்டுப்பட்டவன்.சூதும் தீயதும் அறியாது என்மீது பிரேமை கொண்ட பக்தர்களின் அடிமை நான்.ஏனெனில் என் மனதை கொள்ளை கொண்டு விட்டவர்கள். என்னை தவிர எவரையும் அறியாதவர்கள்.நானும் அவர்களை தவிர எவரையும் விரும்ப மாட்டேன்.அவ்வளவு ஏன்? எனக்கு லக்ஷ்மி தேவி கூட எனக்கு அவ்வளவு பிரியமில்லை.எனது பக்தர்கள், மனைவி,மக்கள்,வீடு,சொத்து,குரு,பெரியோர்கள்,செல்வம்,இகலோக பரலோக மேன்மைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னிடம் வந்தவர்கள் தன் உயிர்மீதும் ஆசை இல்லாது என் மீது ஆசை வைத்து எனது சாலோக்ய,சாயுஜ்ய முதலிய வைகுண்ட பதவிகளை விரும்பாதவர்கள்.நானே அவர்கள் இதயமாக இருக்கிறேன்.அவர்களே என் இதயமாக இருக்கிறார்கள்.
           துர்வாசரே உங்கள் கஷ்டம் தீர ஒரு வழி சொல்கிறேன்.கேளுங்கள்.எந்த பக்தரை நீங்கள் வீழ்த்த நினைத்தீரோ அவரிடமே செல்லுங்கள்.ஏனெனில் நல்லவர்களுக்கு தீங்கு செய்தால் அந்த தீய பலன் அவர்களிடமே வந்து சேரும்.இதையும் கேட்டுக்கொள்ளுங்கள்.பிராமணர்களுக்காக தவமும் கல்வியும் வித்தையும் ஏற்பட்டவை.அவர்களே அவற்றில் முழு உரிமை பெற்றவர்கள்.ஆனால் அவற்றை துஷ்பிரயோகம் செய்து அநியாயம் செய்தால் அந்த தவமும் கல்வியும் அவர்களையே நாசம் செய்து விடும்.நீங்கள் அம்பரீச மன்னனிடமே மன்னிப்பு கேளுங்கள்.பகவான் இவ்வாறும் கூறியதும் அவரை வணங்கி விட்டு துர்வாசர் அங்கிருந்து விரைந்து சென்று அம்பரீஷன் பாதங்களில் விழுந்தார்.அம்பரீஷன் தன் பாதங்களில் விழுந்து வணங்குவதை தர்ம சங்கடத்துடன் தடுத்தான்.சுவாமி என் காலில் விழுந்து என்னை சங்கடத்திற்கு உள்ளாக்காதீர்கள்.என்று கூறி சுதர்சன சக்கரம் தணிந்து போக வேண்டும் என்று துதி செய்தான்.---"சுதர்சன பகவானே தீமைகளை வீழ்த்தி சகல லோகங்களையும் காப்பவரே, அசுர படைகளுக்குள் நுழைந்தால் அவர்களை வெட்டி வீழ்த்தி சம்ஹாரம் செய்யாமல் திரும்ப மாட்டீர்கள்.எங்கள் குலத்தின் க்ஷேமத்திற்காக துர்வாசருக்கு நன்மை உண்டாகட்டும்.நான் தான தர்மங்களும், யாகங்களும் பிழையின்றி செய்திருந்தால் சுதர்சன பகவானே துர்வாசர் வெப்பம் தணிந்து நலமாகட்டும்.என் வம்சத்தவர் பிராமணர்களையும் விஷ்ணு பகவானையும் ஆராதித்திருந்தால் துர்வாசர் வெப்பம் தணிந்து நலமாக வேண்டும்.நான் அனைத்து பிராணிகளிலும் பரம புருஷனை காண்பது 
உண்மையானால் துர்வாசர் வெப்பம் தணிந்து நலமாக வேண்டும்.இவ்வாறு சுதர்சன சக்கரத்தை வேண்டிக்கொண்டதும் சக்கரம் வெப்பம் தணிந்து மறைந்தது.துர்வாசர் தகிக்கும் வெப்பத்திலுருந்து விடுபட்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து நலம் பெற்றார்.அம்பரீஷன் பக்தியை கண்டு வியந்தார்.அவனை ஆசிர்வதித்து புகழ்ந்து பேசினார்.நான் தன்யனானேன்.இன்று பகவானின் பிரிய பக்தனின் மகிமையை கண்டேன்.மன்னரே உமக்கு தீங்கு செய்ததை மறந்து நான்,நலம் பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டீர்.உங்கள் பரந்த மனம் யாருக்கு கிடைக்கும்?ஹரியின் பக்த வத்சலன் நீங்கள் கொண்ட பக்தி ஈடு இணையில்லாதது.அதை புரிந்து கொள்ளாமல் தவறு செய்து விட்டேன்.இப்படிப்பட்ட பக்தர்கள் எதை தான் தியாகம் செய்ய மாட்டார்கள்?
          அம்பரீஷன் துர்வாசரின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து போஜனம் செய்யுமாறு வேண்டிக்கொண்டான்.விதவிதமான அறுசுவை விருந்து படைத்தான்.திருப்தியுடன் போஜனம் செய்த துர்வாசர் மன்னனையும் போஜனம் செய்ய சொன்னார்.அது வரை மன்னனும் உண்ணாமல் இருந்தார்.துர்வாசர் கூறினார்.---பகவானின் ஒப்பற்ற பிரியமான பக்தர் நீங்கள் உங்கள் தரிசன ஸ்பரிசத்தால் பேச்சுவர்த்தைகளால் , விருந்தோம்பல் உபசரிப்பால் பகவான் மீது எனக்கு அன்பு மேலும் பெருகுகிறது.உங்களால் மேலும் பெருமையடைகிறேன்.பெரும் பேரும்பெற்றேன்.சொர்கத்தில் தேவ மாதர்கள் உங்கள் புகழ் பாடுவார்கள்.மேதினி எங்கும் உமது தூய புகழ் பரவட்டும்.என்று ஆசிர்வதித்து சென்றார்.
            துர்வாசர் சக்கராயுதத்தால் துன்புற்று அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தபோது அவர் திரும்பி வரும் வரை போஜனம் செய்யாமல் நீரை மட்டும் மன்னன் பருகிக்கொண்டிருந்தான்.இறுதியில் துர்வாசர் போஜனம் செய்த பின்பே மன்னனும் போஜனம் செய்தான்.

No comments:

Post a Comment