Monday 18 August 2014

மத்ஸ்யாசனம்


மத்ஸ்யாசனம்:
மத்ஸ்யம் என்றால் மீன். மத்ஸ்யாசனம் போட்டு தண்ணீரில்(மல்லாக்க) நீந்தலாம். பத்மாசனத்தில் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இந்த ஆசனத்தில் கிடைக்கும். கழுத்து பகுதியில் கொழுப்பு சேராமல் இருக்கும். மார்பு நுரையீரல் பலப்படும். ஜலதோஷம்,மூச்சிரைப்பு, டான்சில் எல்லாம் இருக்காது. இந்த ஆசனத்தில் கழுத்து அழுத்தப்படுவதால் தாயிராட்,பைராதைராய்ட் வராமல் தடுக்கும். கேன்சரும் தடுக்கப்படும். அனாவசிய சுரப்பிகள் சுரக்காமல் உடலில் அசுத்தம் சேராமல் இருக்கும். வயிற்றுக்கோளாறுகள் நீங்கும். சிறுகுடல், பெருங்குடல் வியாதிகள் குணமாகும். ஆசனவாய் குழாய் நன்கு செயல்படுவதால் மலச்சிக்கல் நீங்கும். அபான வாயு சீராகும்.
செய்முறை:
தூய காற்றோட்டமான இடத்தில் கீழே விரிப்பு விரித்து அமரவேண்டும். வலது பாதம் இடது தொடையிலும், இடது பாதம் வலது தொடை மீதும் வைக்கவேண்டும். நன்கு ஒட்டினாற்போல் இருக்கவேண்டும். இரண்டு பாதங்களின் குதிகால்கள் நாபியின் நேராக அடிவயிற்றை ஒட்டி இருக்கவேண்டும். பின் மெதுவாக முதுகை கீழே வைத்து படுக்கவேண்டும். படக்கென்று படுக்க கூடாது. இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு தலைக்கு கீழே வைத்துக்கொள்க. தலையிலும் முழங்காலிலும் தேகத்தின் முழுப்பாரம் இருக்க தேகத்தின் நடுப்பகுதியை மேலே உயர்த்திக்கொள்க. இடுப்புப்பகுதி பூமியை தொடக்கூடாது. வயிற்றையும் மேல்நோக்கி எழச்செய்யவேண்டும்.
          மத்ஸ்யாசனத்தை தினமும் ஒன்றிலிருந்து மூன்று நிமிடம் வரை செய்யலாம். மெதுவாக நேரத்தை கூட்டிக்கொண்டு போகலாம். பின்பு பத்து பதினைந்து நிமிடம் வரை செய்யலாம். பத்து பதினைந்து நிமிடம் வரை செய்தால் நோய் குணமாவதற்கு நல்ல பலன் கிடைக்கும். இதை சர்வாங்காசனத்திற்கு பின் செய்தால் மிகவும் நல்லது. அல்லது ஹலாசனமும் கர்ணபீடாசனமும் செய்பவர்கள் மத்ஸ்யாசனம் அவசியம் செய்யலாம்.  சிலர் இரண்டு கைகளையும் தலைக்கு கீழ் வைத்துக்கொள்ளாமல் இரண்டு கைகளால் கால் பெருவிரல்களை பிடித்துக்கொள்வார்கள். மத்ஸ்யாசனத்தில் இதுவும் ஒரு வகையாகும். இந்த ஆசனத்தினால் பூஜங்களிலிருந்து கைகள் வரை மிகவும் உறுதியாகும். மத்ஸ்யாசனத்திற்கு பின்பு சவாசனம் அவசியம் செய்ய வேண்டும். சவாசனத்தில் உடல் அங்கங்களை தளர்வாக விட்டு கண்களை மூடி மெதுவாக மூச்சு விட்டுக்கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும். இதனால் இறுக்கம் போகும்.

          தடிமனான சரீரம் உள்ளவர்கள் பத்மாசனம் போட முடியாது. வெறும் சம்மணமிட்டு இந்த ஆசனத்தை பழக வேண்டும். ஒருமாதம் நன்கு பழகியபின் பத்மாசனம் போடவரும். ஆரம்பத்தில் இதை பதினைந்து நொடிகள் செய்யலாம். பலநாள் பயிற்சிக்கு பின்   பத்து நிமிடம் செய்யலாம். இந்த ஆசனத்தில் சுவாசம் இயல்பாக போகவேண்டும். பிராணாயாமம் தேவையில்லை.

தொடரும்

Tuesday 5 August 2014

சவாசனம்

சவாசனம்

சவம் போல சகல அங்கங்களும் அசைவற்று கிடப்பது தான் சவாசனம். இதை சரியான முறையில் செய்தால் சரீரத்திற்க்கு உறக்கத்தை கொடுத்து ஆரோக்கியம் பெறுவதை விட அதிக பலன்களை தரக்கூடியது. தூக்கமின்மையால் மனிதன் அவதிப்படுகிறான். சரீரமும் மனதும் சோர்வடையும்போது இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். யோகசாஸ்திரம் இதை உயர்வாகவும், லாபகரமாகவும் கூறி இருக்கிறது.
          சாந்தமாக படுத்திருந்து என்ன பலன் கிடைக்கப்போகிறது என்ற கேள்வி எழலாம். ஆனால் மனிதன் விழித்திருக்கும்போது பல வேலைகளை செய்கிறான். நடக்கும்போது, ஓடும்போது, உடற்பயிற்சியாகிறது. படிப்பது, யோசிப்பது, அலுவலகவேலை,வியாபாரம்,தொழில் முதலிய துறைகளில் மன
அழுத்தம் ஏற்படுகிறது. நரம்புகளில் இறுக்கம்,உணர்ச்சிகளில் வேகம் உண்டாகிறது. உடம்பு உஷ்ணம் ஆகிறது. ரத்தக்கொதிப்பு வருகிறது. சவாசனத்தால் நாடி நரம்புகளில் இறுக்கம், நரம்புதளர்ச்சி,அழிந்து உடம்பில் உஷ்ணம் குறைகிறது. இதயம் சீராக துடித்து ரத்த சுத்தி ஆகிறது.
          எலும்பு முறிவு ஏற்பட்டால் மருத்துவர் சொல்லும் ஆலோசனை என்னவென்றால் அந்த பகுதியை ஆடாமல் அசையாமல் வைத்திருப்பது அவசியம். ரத்தம் சீராக எல்லா அவயங்களிலும் பாய வேண்டும். அதனால் ஆசனம் செய்பவர்கள் சவாசனத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
           சவாசனத்தால் மனம் அமைதி அடைகிறது. சவாசனத்திற்க்கு பின் சரீரத்திற்க்கு அதிக சக்தி கிடைக்கிறது.இந்த ஆசனம் செய்யும்போது சீராக மூச்சு பயிற்சி செய்தால் நுரையீரலுக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்கும். இதய நோயிலிருந்து விடுபட இந்த ஆசனம் நன்கு உதவி செய்கிறது. ராமபானம் போல செயல்படுகிறது என்று கூறுகிறார்கள்.
செய்முறை:
கீழே ஜமுக்காளம் விரித்து அதில் நேராக மல்லாக்க படுக்க வேண்டும். இரண்டு கைகளையும் இடுப்புடன் சேர்த்து வைக்க வேண்டும். விரல்களை சேர்க்காமல் தளர்வாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொண்டு உடம்பு முழுவதையும் தளர்வாக வைத்துக்கொள்ள வேண்டும். மனதால் இவ்வாறு நினைக்க வேண்டும். எனது கை,கால்கள்,விரல்கள், முழங்கால்கள், தொடைகள்,கழுத்து,வயிறு எல்லாம் செயலற்று மரத்துப்போனது போல ஆகிவிட்டன. அங்கமெல்லாம் லூசாகிவிட்டன. தேகத்தில் எங்கும் இறுக்கமில்லை. நான் மிகவும் அமைதியாக இருக்கிறேன். (அச்சமயம் கவலைகளை மறந்து விட வேண்டும்) இயற்கை அன்னை மடியில் ஆனந்தமாக கிடக்கிறேன் என்று நினைக்க வேண்டும். மேலே,கீழே எங்கும் சாந்தி நிலவுகிறது. நிர்மலமாக தூய காற்றை சுவாசித்து எங்கும் தூய்மையை உணரவேண்டும். மொத்தத்தில் சுத்தமாக யோசிப்பதை விட்டுவிடுங்கள். இதனால் பயம்,கோபம், வருத்தம் போன்ற உணர்ச்சிகள் மறைந்து போகும். மனதில் அபூர்வ அமைதி வந்துவிடும். மனதை காலியாக வைத்துக்கொண்டால் தலைபாரம்,தலைவலி எல்லாம் காணாமல் போகும்.
          உறக்கநிலையில் மனம் சிந்திப்பதில்லை. அதனால் மனதுக்கும் தேகத்துக்கும் நல்ல ஓய்வு கிடைக்கிறது. சவாசனம் செய்யும்போது மனதை லேசாக வைத்துக்கொள்ள வேண்டும். மனதில் சிந்தனைகள் வருவதை தடுப்பது இயலாத காரியம் தான். அவ்வாறு இருப்பினும் தியானத்தில் இருப்பது போல பாவிக்க வேண்டும். தொடர்ந்து அப்யாசம் செய்தால் மனம் அமைதியடையும்.
          சில சமயம் சவாசனத்தில் தூங்கிவிடுவார்கள். அதனால் தீயபலன் எதுவும் இல்லையென்றாலும் நல்ல ஆரோக்கியம் கிடைப்பது போல பாவனை செய்து தேகத்தையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளவேண்டும். வெட்டவெளியிலிருந்து பிராணசக்தி நமக்கு கிடைப்பது போல நினைக்க வேண்டும்.
          சவாசனம் என்பது சோம்பலாக படுத்துக்கொண்டிருப்பது அல்ல. சரீரத்தை லேசாக்கிக்கொண்டு மனதையும் லேசாக்கிக்கொள்ளவேண்டும்.  அல்லது மனம் கனத்திருக்க கூடாது. இந்த ஆசனம் மூளையின் உஷ்ணத்தை தணித்து அழுத்தத்தை குறைத்து நன்கு செயல்பட செய்கிறது. அதனால் ரத்தத்திற்க்கு நல்ல ஆக்ஸிஜன் கிடைக்கிறது.
          நீங்கள் எந்த ஆசனம் செய்து முடித்தாலும் அதன் பாதிநேரம் சவாசனம் செய்தால் நன்மை கிடைக்கும். மூன்று நிமிடம் குறைந்தபட்சம் செய்ய வேண்டும். வேறு ஆசனம் செய்து முடித்தபின் பதினைந்து நிமிடம் கூட செய்யலாம். இந்த ஆசனத்தை பிரதானமாக வைத்து செய்யும்போது மன அழுத்தம், இதய நோய் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற அரைமணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக செய்யலாம். மேலும் தினமும் ஒரு நாளில் இரண்டு, மூன்று முறை அல்லது பல முறையும் செய்யலாம்.
          சோர்வு, படபடப்பு, பயம், சோகம், பொறாமை, துவேஷம் ஆகியவற்றாலும், நரம்பு தளர்ச்சியாலும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆசனத்தை செய்தால் உடல் உஷ்ணம் தணியும். மனமும் அமைதி அடையும். மேற்சொன்ன துர் குணங்களும் தீமைகளும் சீராக மூச்சு விடும்போது அல்லது இதயதுடிப்புடன் சேர்த்து கணக்கு வைத்து சுவாசப்பயிற்சி செய்யும்போது ஒழிந்து போகும். சவாசனத்தில் கால் பாதத்திலிருந்து தலையில் மூளை வரை செயலற்று உணர்வற்று இருப்பதை உணரவேண்டும். சுவாசத்தை சீராக்கினால் மனதில் குழப்பங்கள் நீங்கும். மூன்று வாரத்திற்கு பின் சுவாசத்தின் நல்ல பலன் கிடைக்கும். எதையும் அவசரமாக படபடப்புடன் செய்யக்கூடாது. ஆசனங்களை ஆர்வமுடனும்,சிரத்தை, பக்தியுடனும் செய்யவேண்டும்.
(தொடரும்)        


Monday 4 August 2014

கர்ண பீடாசனம்

கர்ண பீடாசனம்

கர்ணபீடாசனத்தில் இரண்டு முழங்கால்களால் இரண்டு காதுகளையும் சேர்த்து அமுக்கி வைக்க வேண்டும். அதனால் இதற்கு கர்ணபீடாசனம் என்ற பெயர் வந்தது. இதற்கு முன் சொன்ன ஆசனங்களின் பலன் இதர்க்கும் உண்டு. கூடுதலாக இருமல், டான்ஸில்,ஜலதோஷம்,தொண்டைக்கட்டி,மூச்சு இளைப்பு வராது. மேலும் காது வலி,காதில் சீல்  வடிதல் ஆகிய நோய்கள் குணமாகும்.
செய்முறை:
கால்களை சற்று பரத்தி வைத்து படுக்க வேண்டும். இடுப்புக்கு மேலே இரண்டு கால்களை தூக்கியபின் தலைக்கு பின் கொண்டுபோகவேண்டும். இரண்டு பாதங்களை பூமியில் வைக்க வேண்டும். கைகளை நேராக கீழே வைக்க வேண்டும். அதன்பின் முழங்கால்களை மெதுவாக தலைப்பக்கம் மடக்கவேண்டும்.அதன் பின் தோள்களுடன் சேர்க்க வேண்டும். காதில் அழுத்தம் கொடுத்து பூமியை தொட வேண்டும். முழங்கால்களில் இருந்து பாதம் வரை (தலையிலிருந்து) ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். பின்பு மெதுவாக சகஜநிலைக்கு வரவேண்டும். இதை மூன்று முறை செய்யலாம். ஆரம்பத்தில் இந்த ஆசனத்தில் இரண்டு கைகளால் இடுப்பை பிடித்துக்கொள்வதால் தவறு ஏதுமில்லை. ஆரம்பத்தில் பத்து அல்லது பதினைந்து நொடிகள் வரை செய்யலாம். ஐந்து முறை செய்தபின் அபயாசத்தால் நேரத்தை அதிகப்படுத்தி இரண்டு நிமிடம் செய்யலாம்.
          இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் படக்கென்று வேகமாக கால்களை உயர்த்தி பின்னுக்கு கொண்டுபோகக்கூடாது. அதேபோல் பின்னாலிருந்து எடுத்து கால்களை கீழே வைக்க கூடாது. அதனால் தீய பலன் ஏற்படும். இடுப்பில் வலி ஏற்படும். அல்லது இடுப்பு பிடித்துக்கொள்ளும். இதுவும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களுக்கு நல்லதல்ல. முறையாக சர்வாங்காசனம், ஹலாசனம்,அதன்பின் கர்ணபீடாசனம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.    
 (தொடரும்)


Tuesday 22 July 2014

ஹலாசனம்

ஹலாசனம் 

ஹலாசனம் கலப்பையை நினைவு படுத்தும் ஆசனமாகும். முதுகுதண்டின் இறுக்கத்தை போக்கும். மார்பும் முதுக்கும் பலப்படும். சுத்த இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். வாயு பிடிப்பு ஏற்படாது. வயிற்று உபாதைகள் நீங்கும். சிறுகுடல், பெருகுடல் ஈரல் ஆகியவற்றில் அழுத்தம் ஏற்படுவதால் நன்கு செரிமானம் ஏற்பட்டு மலச்சிக்கல் நீங்கும். தாய்ராய்ட் பைராதாய்ராய்ட் முதலிய உறுப்புகள் பலப்பட்டு மனதையும் அறிவையும்(மூளை சுறுசுறுப்பு)ஆரோக்கியமாக வைக்கும். குடல் இறக்கம் வராமல் தடுக்கும். வயிற்றிலும் இடுப்பிலும் தேவையில்லாத கொழுப்புக்கள் நீங்கி மெலிதாக்கும். சர்க்கரை வியாதி தொலையும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
செய்யும் விதி   
கீழே ஜமுக்காளம் விரித்து நேராக படுக்க வேண்டும். முழங்கால் குதிகால் தொடை எல்லாம் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் தொடைகளை ஒட்டி வைக்க வேண்டும். இரண்டு கைகளையும் பூமியில் ஸ்திரமாக வைத்துக்கொண்டு கால்களை அதே சேர்த்த நிலையில் மெதுவாக தூக்கி இடுப்பை 90 டிகிரி கோணத்தில் கொண்டு போனவுடன் கால்களை தலைக்கு முன் நேராக கொண்டுபோய் கால்பெருவிரல் பூமியில் பதியும்படி வைக்க வேண்டும். முழங்காலை மடக்காமல் நேராக வைக்க வேண்டும். முகவாய்க்கட்டை கழுத்துடன் ஒட்டி இருக்கவேண்டும். சிறிது நேரம் அதே நிலையில் இருக்க வேண்டும்.பின்பு கால்களை தூக்கி முதலில் இருந்தவாறு படுத்த நிலைக்கு வர வேண்டும். சற்று ஓய்வு எடுத்த பின் முடிந்த வரை மீண்டும் மீண்டும் இந்த ஆசனத்தை செய்வது நல்ல பலனை அளிக்கும். ஆரம்பத்தில் இதை 20 நொடிகள் வரை செய்யலாம். வாரத்திற்க்கு ஒருமுறை நேரத்தை கூட்டிக்கொண்டு போகலாம். பின் நான்கு நிமிடம் வரை செய்யலாம். அவசரப்பட்டு கால்களை எடுத்து தூக்குவது கூடாது. நரம்புகள் பிசகி விடும். ஆசனம் செய்யும்போது கைகளை இடுப்பில் வைத்துக்கொள்ளலாம். அதனால் சுலபமாக இந்த ஆசனம் வரும். மற்ற ஆசனங்களுடன் சேர்த்து செய்யும்போது நான்கு நிமிடத்திற்க்கு அதிகமாக இதை செய்யவேண்டாம். பெண்கள் அதிகநேரம் இதை செய்யவேண்டாம்.
          இந்த ஆசனத்தில் இரு கைகளையும் பின்னால் கொண்டுபோய் கால் பெருவிரல்களை மடக்கலாம். ஹலாசனத்துடன் சர்ப்பாசனம், சலபாசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்களை செய்யலாம். இந்த ஆசனத்தை உயர் இரத்த அழுத்தம் இதய நோய் உள்ளவர்கள் செய்யக்கூடாது. இந்த ஆசனத்தை சிறிது நேரம் செய்தாலும் சுவாசத்தை வெளியேற்றிவிட்டு வயிற்றை ஒட்டவைத்தும் ஆசனவாயை சுருக்கி செய்தால் நன்றாக பசியெடுக்கும். இது முடிந்தவுடன் சவாசனம் அவசியம் செய்யவேண்டும். அதனால் சுத்த இரத்தம் சீராக சகல அங்கங்களில் ஓடும்.
(தொடரும்)


Monday 21 July 2014

சர்வாங்காசனம்


சர்வாங்காசனம் தேகமெங்கும் உறுதியாக்குகிறது.இதில் முழு தேகத்தையும் மேல்நோக்கி வைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தில் மூளை,கழுத்து, இதயம் நலம் பெறுகின்றன. இதயம் சீராக இயங்குகிறது. அதாவது கால் பாதத்திலிருந்து ரத்த ஓட்டத்தை தலை வரை அனுப்பும் பழுவான வேலை குறைந்து இதயம் சுலபமாக துடிக்கிறது. அதனால் ஓய்வும் கிடைக்கிறது.
         இந்த ஆசனத்தால் நரைமுடி கறுப்பாகும். ஆறுமாதம் அப்யாசம்செய்தால் நிச்சயம் நரைமுடி கறுப்பாகும். கண் பார்வை தெளிவாகும். உடல் நடுக்கம், தலைவலி, ரத்த சோகை குணமாகும். ஞாபக சக்தி விருத்தியாகும். இந்த ஆசனத்தால் கழுத்தில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.அதில் சுத்த ரத்த ஓட்டம் நன்கு ஏற்படும். கழுத்து நரம்புகள் பலப்படும்.
          இந்த ஆசனத்தால் முதுகுத்தண்டு இறுக்கம் இல்லாமல் திட்டமாகும். சோர்வு நீங்கும்.மாபெரும் காரியங்களை செயலாற்ற திறமை உண்டாகும். முதுமையில் வரும் பலவீனம், சொப்பன தோஷம்,வீரிய தோஷம் எல்லாம் நீங்கும். பெண்களுக்கு கர்பப்பை கோளாறுகள் நீங்கும். ரத்த சுத்தி ஏற்படும். தோல் வியாதியும் குணமாகும். சிரசாசனத்திற்கு அடுத்தபடியாக இதன் பலன் கிடைக்கும். இதை முறையாக அப்யாசம் செய்தால் வயிற்று கோளாறுகள், ஈரல் நோய்கள் குணமாகும். மேலும் தொண்டைவலி(டான்சில்)கண்நோய், மலச்சிக்கல், தலைவலி, உடல் பலவீனம் எல்லாம் சரியாகும்.
ஆசனம் செய்யும் விதி:
கீழே ஜமுக்காளம் அல்லது கம்பளி போர்வையை விரித்துக்கொள்ளவேண்டும். அதில் நேராக படுக்கவேண்டும். இரண்டு பாதங்களை சேர்த்து வைத்துக்கொள்க. மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் தூக்கவேண்டும். மெல்ல மெல்ல மேல் தூக்கி இடுப்பில் தொண்ணூறு டிகிரி கொண்டு போக வேண்டும். நான்கு, ஐந்து வினாடிகள் மூச்சை அடக்கிய பின் இரண்டு கைகளால் இடுப்பை பிடித்து உடம்பை மேல்நோக்கி வைக்க வேண்டும். அச்சமயம் நெஞ்சுப்பகுதி முகவாய்க்கட்டையை ஸ்பரிசிக்க வேண்டும்.
          மேற்ச்சொன்ன நிலையில் மூச்சை அடக்கிக்கொண்டு இருபது நொடிகள் ஸ்திரமாக இருக்க வேண்டும். அச்சமயம் கழுத்திலிருந்து கால்கள் வரை நேர்கோடாக இருக்க வேண்டும்.  தேகத்தின் முழு பாரமும் கழுத்து தோள்பட்டை, கைகள் இவற்றில் இருக்க வேண்டும். பார்வை மூக்கு நுனியில் அல்லது பாதங்களின் பெருவிரலில் இருக்க வேண்டும். அச்சமயம் தேகமும் மனமும் ஆரோக்கியம், பலம் பெற்றிருப்பதாக நினைக்க வேண்டும். அதன் பின் மூச்சை விட்டுக்கொண்டு மெதுவாக கால்களை கீழே கொண்டு வந்து இடுப்பை பூமியில் வைத்து முன்பு போல இடுப்பிலிருந்து கால்களை தொண்ணூறு டிகிரிக்கு கொண்டு போக வேண்டும். கைகள் இரண்டையும் நீட்டி பூமியில் வைக்க வேண்டும்.மூன்று வினாடி அதே நிலையில் இருந்து கால்களை மெதுவாக பூமியில் நீட்டி வைக்க வேண்டும்.
          இந்த ஆசனம் செய்தவுடன் வேகமாக கால்களை கீழே கொண்டு வரக்கூடாது.அதனால் சுளுக்கு பிடிக்கும் அபாயம் உள்ளது. மெதுவாக கால்களையும்  உடம்பையும் மேல் நோக்கி தூக்க வேண்டும். அதே போல கீழே வைக்க வேண்டும். இந்த ஆசனத்தை மூன்று முறை செய்யலாம். இந்த ஆசனத்துடன் ஹலாசனமும் கர்ணபீடாசனமும் செய்ய விருப்பம் உள்ளவர்கள் சர்வாங்காசனத்தை ஒருமுறை மட்டும் செய்தால் போதும்.
          இந்த ஆசனத்தை ஒரு நிமிடத்திலிருந்து அதிகமாக செய்ய விருப்பம் உள்ளவர்கள் பிரணாயாமத்துடன் செய்ய தேவையில்லை. வேறு எந்த ஆசனத்தையும் செய்ய விரும்பாதவர்கள் இதை அரைமணி நேரம் வரை கூட செய்யலாம். ஆனால் ஆரம்பித்தவுடன் அதிக நேரம் செய்ய வேண்டாம். இருபது நொடியிலிருந்து ஆரம்பித்து இருபது நொடிகளாக கூட்டிக்கொண்டே செல்ல வேண்டும்.
          இந்த ஆசனம் செய்யும்போது கைகளை பூமியில் நீட்டிக்கூட வைத்துக்கொள்ளலாம். ஆனால் நெஞ்சோடு கழுத்து ஒட்டி இடுப்பு அதே நிலையில் தூக்கி இருக்க வேண்டும். இந்த நிலையை நன்கு பழக்கப்பட்டவர்களே செய்ய முடியும்.
                     சர்வாங்காசனத்தை செய்து கொண்டிருக்கும் போது நன்கு பழக்கப்பட்டபின் ஒவ்வொரு காலையும் மாறி மாறி முன்னால் நீட்டி மேல் கொண்டு போய் பயிற்சியும் செய்வார்கள். அல்லது இரண்டு கால்களையும் மாறி மாறி தலைக்கு பின்னால் கொண்டு போய் பூமியில் வைத்து அதன் பின் மேல்நோக்கி வைப்பார்கள்.
                        சர்வாங்காசனத்தை கர்ணபீடாசனம் போல செய்வார்கள். அதாவது வலது முழங்கால் வலது காதை ஸ்பரிசித்து பாதத்தை பூமியில் வைப்பார்கள். இந்த நிலை கர்ணபீடாசனம் போல வரும்.

          இந்த  சர்வாங்காசனத்தை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் பலவீன இதயம் உள்ளவர்களும் செய்யக்கூடாது. இந்த ஆசனம் செய்து முடித்தபின் அவசியம் சவாசனம் செய்யவேண்டும். அப்போது தான் நல்ல பலன் கிடைக்கும். 

Sunday 13 April 2014

யோகாசனங்கள்

                       ஸ்ரீ கணேசாய நமஹ
யோகாசனங்கள்
யோகாசனம் என்றால் என்ன? யோகாசனம் ஏன் செய்ய வேண்டும்?
நம் தேகத்தினுள் இருக்கப்படும் இயற்கை சக்தியை நன்கு ஆராய்ந்து புரிந்து கொண்டு உடம்பின் இயக்கத்தை சமச்சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதற்கு யோகாசனங்கள் உருவாக்கபட்டிருக்கின்றன.
          செல்வம், சொத்து, வசதியான வாழ்க்கை, ருசியான உணவு, மற்ற இன்பம் தரும் விஷயங்கள் எல்லாம் மனதிற்கும் தேகத்திற்கும் நிச்சயம் சந்தோசம் உண்டாகும். ஆனால் அவை நிரந்தரமானவை அல்ல.தண்டால்,பஸ்கி,ஓடுவது, பந்தாடுவது ஆகிய உடற்பயிற்சிகளும் தற்காலிகமாக உடம்பை உறுதியாக பலமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. ஆனால் யோகாசனங்கள் வெறும் சரீரத்துடன் தொடர்பு கொண்டவை மட்டும்அல்லாமல் மனதையும் உறுதிப்படுத்துகின்றன. யோகாசங்களின் தாக்கம் சூட்சும சரீரம் வரை சென்று ஆத்மாவையும் தொடுகிறது. அதனால் மனதிற்கும் தேகத்திற்கும் நிரந்திரமாக சுகமும் ஆரோக்கியமும் கிடைக்கின்றன.
          பரம்பொருள் பரமாத்மாவை மனம் ஒன்றி தியானிப்பதற்கு யோகாசனங்கள் சிறந்த அஸ்திவாரமாக அமைகின்றன. “ஸ்திரசுகமாசனம்” என்று பதஞ்சலியோகம் கூறுகிறது. அதாவது ஸ்திரமாக சுகமாக ஒரு நிலையில் சரீரத்தை வைத்துக்கொள்வதே ஆசனம். ஆசனத்தால் அலை பாயும் மனம் ஒரு நிலைப்படுகிறது.

          இயற்கையாகவே மனிதனின் தேகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அது போல் விலங்கு, பறவைகள் ஆகிய ஜீவராசிகள் நோய் வாய்ப்படுவதில்லை. ஆரம்பத்தில் மருந்துகள் கண்டுபிடிக்காத காலத்திலும் மனிதன் ஆரோக்கியமாக தான் வாழ்ந்து வந்தான். காலப்போக்கில் மருந்துகள் குறைவாக எடுத்துக்கொள்ளப்பட்டன. இன்றைய யுகத்தில் மனிதன் மிக அதிகமாக மருந்துகள் எடுத்துக்கொள்கிறான்.அதனால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. உண்மையில் இயற்கையாகவே மனிதன் தேகத்தில் நோயை குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. அதனால் உட்கொள்ளப்படும் மருந்துகள் நோயை குணப்படுத்த உதவி தான் செய்கின்றன. அதனால் மருந்தில்லாமல் பல சந்தர்பங்களில் நோய் தாமாகவே சரியாகிவிட்டது என்று சொல்கிறோம். உடற்கூறு சாஸ்த்திரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் யோகாசனங்கள் மூலமாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அதனால் நோய் குணமாகிறது. சில மூச்சு பயிற்சிகளாலும் நோய்கள் குணமாகின்றன. யோகாசனப்பயிற்சிகளாலும் மூச்சு பயிற்சிகளாலும் நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.தேகத்தின் உள் உறுப்புகள் ஆரோக்கியம் பெறுகின்றன.நான் இதனுடன் ஆசனங்கள் வகைகள்,செய்முறைகள், பயன்கள் அனைத்தையும் கொடுத்துள்ளேன். சிறந்த ஒரு வழிகாட்டி உதவியுடன் தம் சரீரத்திற்கு ஏற்றவாறு ஆசனத்தை தேர்ந்தெடுத்து செய்யவும். (தொடரும்)
 

Saturday 2 November 2013

மன்னன் யயாதி4

  
       
யது முதுமையை மறுத்து விட்டது போல தேவயானியின் மற்றொரு மகன் துர்வசுவும் மறுத்து விட்டான். சர்மிஷ்டாவின் இரண்டு மூத்த மகன்களும் (த்ருஹ்யுவும், அனுவும்) முதுமையை ஏற்க மறுத்து விட்டார்கள். ஆனால் இளையவன் புரு முதுமையை ஏற்க முன்வந்தான். “ தந்தையே இந்த உயிர் நீங்கள் கொடுத்தது. தந்தையின் ஆசியை பெற்று மனிதன் உலகியல் க்ஷேமங்களையும், இறைவன் அருளையும் அடைவான். தந்தை செய்த நன்மைகளை பெற்று மீண்டும் ஒரு மகனால் நன்றிக்கடனாக இந்த ஜன்மத்தில் பெற்றவருக்கு எதையும் செலுத்த இயலாது. தந்தைக்கு எது தேவையோ அதை சொல்லாமல் செய்பவனே உத்தம புத்திரன். சொல்லிச்செய்பவன் மத்திம புத்திரன். ஆனால் தந்தை சொல் கேளாதவன் கீழ் மகன்.” இவ்வாறு கூறிவிட்டு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொண்டான்.
          யயாதி புதிய பலம் பெற்றவன், அரசு காரியங்களை செயலாற்றினான். அரசர்களை ஜெயித்து ஏழு தீவுகள் கொண்ட மேதினியை வெண் கொற்றக்கொடையின் கீழ் கொண்டுவந்து நல்லாட்சி புரிந்தான். மகனிடம் இளமை பெற்று வலிமை பெற்று அரச போகங்களை அனுபவித்தான். தேவயானியிடம் பிரியமாக நடந்து கொண்டான். பெரும் தட்சிணைகள் கொண்ட பல ராஜசூய யாகங்களை செய்தான். சர்வதேவ சொரூபனான அணுவிற்க்கு அணுவான சக்தி கொண்ட சர்வ வல்லமை பொருந்திய சர்வ வியாபியாக விளங்கும் ஸ்ரீமன் நாராயணனை மனதில் நிறுத்தி அவரை குறித்து பல யாகங்கள் செய்தான்.
          அரச போக வாழ்க்கை வாழ்ந்து யயாதி ஆயுளின் பெரும் பகுதி கழிந்து விட்டது. ஆயிரம் வருடங்கள் கழிந்த பின்பு மனம் முழுவதுமாக வைராக்கியம் அடையவில்லை என்பதை ஒரு நாள் உணர்ந்தான். ஆனால் ஆசை அடங்கவில்லை. அவன் தேவயானியிடம் கூறினான். “ஆசைகளுக்கு ஓர் எல்லையே இல்லை. தனம், தானியம், சொர்ண செல்வங்கள், மனைவி,மக்கள், ராஜ்யம் அனைத்தும் ஒருவன் பெற்றிருந்தாலும் அவற்றில் அவன் திருப்தி அடையாமல் இருக்கிறான். ஆசைத்தீயில் நெய் ஊற்றுவது போல ஆசைகளை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ளும் போதும் அவை அடங்குவதே இல்லை. கிழப்பருவம் அடைந்த பின்பும் ஆசை இளமையுடன் இருக்கிறது. ஆசைத்தீயை வைராக்கியம் என்ற தண்ணீரை ஊற்றி அணைக்க வேண்டும். பற்றையும் பகையையும் துறக்க வேண்டும். சமநோக்கு உள்ளவனாக இருக்கவேண்டும். என்னை பார். இது நாள் வரை எல்லா விஷய சுகங்களை அனுபவித்த பின்பும் ஆசை அடங்கவில்லை. இனி நான் இந்த இளமையை புருவுக்கு தந்துவிட்டு முதுமையை ஏற்று காடு சென்று தவம் செய்யப்போகிறேன். குளிர்,வெப்பம்,சுகம், துக்கம் எல்லாவற்றையும் சமமாக பாவித்து வனத்தில் தவம் செய்யப்போகிறேன். இக லோக சுகங்களும், இன்பங்களும் பொய்யானவை. அது போலவே பரலோக இன்பங்களும், சந்தோசங்களும் நிலைத்து நிற்பவை அல்ல. ஏனெனில் இகலோக பரலோகங்களில் பிறவாமை என்ற மோட்சத்திற்க்கு வழியில்லை. ஆனால் இப்பூவுலகில் பிறந்த பின் தியானம் செய்து, தவம் செய்து ஆத்மஞானம் பெற்று விட்டால் இறைவனடி சேர்ந்து விடலாம்.”
          இவ்வாறு தேவயானியிடம் கூறிவிட்டு யயாதி ஞானிகளையும் வீழ்த்தும் புலனின்பங்களையும், பகையையும் துறந்தான். சர்மிஷ்டா மகன் புருவை அழைத்து தன்னிடம் இருந்த இளமையை அவனுக்கு தந்து விட்டு முதுமையை ஏற்றுக்கொண்டான். தென்கிழக்கு நாடுகளை த்ருஹ்யுவுக்கும்,தென்திசை நாடுகளை யதுவுக்கும்,மேற்கு திசை நாடுகளை துர்வசுவுக்கும் வடதிசை நாடுகளை அனுவுக்கும் தந்தான்.அண்ணன்களை சிற்றரசர்களாக்கி சகல பூ மண்டலத்திற்க்கும்,சம்பத்து சொத்துக்களுக்கும் உரிமையாளன் சர்மிஷ்டா மகன் புருவுக்கு (தந்தைக்கு இளமை கொடுத்ததால்) பேரரசு பதவியை அளித்து பட்டாபிஷேகம் செய்து வைத்தான்.
          அரசன் யயாதி இது நாள் வரை அரச போக சுகங்களுடன் வாழ்ந்தான். அவ்வாறு இருந்தும் சிறகு முளைத்த பறவைக்குஞ்சுகள் கூட்டை துறந்து பறந்து விடுவது போல இல்லறந்துறந்து வனம் சென்றான். கணப்பொழுதில் எல்லாவற்றையும் முற்றிலும் துறந்து பரமாத்மாவில் மனதை லயிக்க செய்தான். வனத்தில் சில காலம் தவமிருந்து பரமகதியை அடைந்தான்.
          தேவயானி கணவர் கூறிய சத்திய வசனங்களை கேட்டு ஆத்ம தத்துவ விஷயங்களை பற்றி சிந்தித்தாள். பந்த பாசத்திற்க்கு காரணமான மனைவி மக்களும் உற்றார் உறவினரும் காலத்தின் கதியால் தண்ணீர் பந்தலில் சேருவது போல சேருவார்கள். பின்பு பிரிந்து போவார்கள். ஈஸ்வரன் திருவுள்ளப்படி நடக்கும் நிகழ்ச்சிகளை எவராலும் மாற்ற முடியாது. என்ற தத்துவ விசாரம் செய்தாள். மாயா உலகை தோற்றுவித்து சகல உயிர்களிலும் அந்தராத்மாவாக உறையும் எல்லாம் வல்ல ஈசன் பேரமைதியின் இருப்பிடமாம் முடிவில்லா பரம்பொருளிடம் இரண்டறக்கலந்து தியான சமாதியில் உயிர் துறந்தாள். 

சிற்றரசனாக்கப்பட்ட தேவயானியின் மகன் யதுவிலிருந்து யாதவகுலம் தோன்றியது. ஸ்ரீ கிருஷ்ண பகவான் யாதவ குலத்தில் தோன்றினார்.

சர்மிஷ்டா மகன் பேரரசன் புருவிலிருந்து சந்திர வம்சம் தோன்றியது. சந்திரவம்ஸத்திலிருந்து கௌரவர்களும், பாண்டவர்களும் தோன்றினார்.   ***