Friday 28 June 2013

நரசிம்மாவதாரம்

 
கச்யப முனிவருக்கும் அசுர குல பெண் திதி என்ற மனைவிக்கும் ஹிரணியாக்ஷன்,ஹிரணியகசிபு என்ற இரட்டை மகன்கள் பிறந்தார்கள்.
          அச்சமயம் கல்ப காலம் முடிந்து கடல் வெள்ளம் பூமியை சூழ்ந்திருந்தது. நிலமெல்லாம் கடலுக்குள் மூல்கிவிட்ட நிலையில் ஹிரணியாக்ஷன் கடலுக்குள் திரிந்து கொண்டிருந்தான். எவராவது தன்னுடன் போர் செய்ய வர மாட்டார்களா என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தான். அச்சமயம் உயிர்கள் வாழ்வதற்காக கடலுக்கடியில் இருந்து நிலத்தை வெளியில் கொண்டு வந்து வைப்பதற்காக விஷ்ணு பகவான் வராக அவதாரம் எடுத்தார்.  ஹிரணியாக்ஷன் நிலத்தை கடலில் மூல்கி இருக்கும்படி செய்து கொண்டிருந்தான்.இறுதியில்  ஹிரணியாக்ஷனுக்கும் வராக பகவானுக்கும் பலத்த போர் மூண்டது.வராக மூர்த்தி அவனுடன் பயங்கர யுத்தம் செய்து இறுதியில் கொன்று விட்டார். அதன் பின் கடலில் இருந்து பூமியை வெளியில் கொண்டு வந்து ஸ்தாபிதம் செய்தார்.
          தம்பியை கொன்ற விஷ்ணு பகவானை பழிவாங்க நினைத்தான் ஹிரணியகசிபு. தன் குலத்தை நாசம் செய்தவர் விஷ்ணு என்று கருதி அவர் மீது தீராத பகை கொண்டான். அவரை மனதால் நினைப்பதையும் வெறுத்தான்.பெரும் தவம் இயற்றி விஷ்ணுவை விட பெரிய கடவுளாக மாற வேண்டும் என்று நினைத்தான்.
         ஹிரணியாக்ஷனின் மனைவியும் அவன் புதல்வர்களும் அழுது புலம்பிக்கொண்டு இருந்தார்கள்.அச்சமயம் தவிர்க்க முடியாத மரணத்தை பற்றி கூறும்போது போர்முனையில் வீழ்ந்து கிடந்தஉசிநர மன்னரின் சுற்றத்தாரும், மனைவி மக்களும் மீளா துயரில் இருந்த போது சாட்ஷாத் யமதர்மராஜன் சிறுவனாக வந்து அவர்களை எப்படி தேற்றினான் என்ற கதையை அவர்களுக்கு கூறினான்:
          சிறுவனாக மாறிய யமதர்மராஜா கூறினார்: “பந்துக்களே ஜீவராசிகள் எங்கிருந்து வந்ததோ அங்கு திரும்பி போய்தான் ஆகவேண்டும்.என்னை பாருங்கள் சிறுவனாக அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருக்கிறேன்.என் மீது ஆபத்து ஏதும் வரவில்லை. பாதையில் தவறா விட்ட பொருள் அப்படியே இருக்கிறது.ஆனால் வீட்டில் பெட்டியில் பூட்டி வைத்த பொருள் காணாமல் போகிறது.அதாவது மரணம் எந்த சூழலில் எவரை நெருங்கும் என்று தெரியாது. அதாவது வீட்டில் பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளைக்கு ஆபத்து வருகிறது. ஆனால் காட்டில் திரிந்த்து விட்டு க்ஷேமமாக வீடு திரும்பும் மனிதன் இருக்கிறான்.தம்பி மனைவிக்கும் புத்திரர்களுக்கும் இவ்வாறு ஆறுதல் கூறிவிட்டு ஒரு முடிவெடுத்தான்.
          நான் மரணமில்லா பெரு வாழ்க்கைபெற மூப்பு இறப்பு அற்றவனாக எவராலும் வெல்ல முடியாதவனாக ஆக வேண்டும்.மூவுலகங்களை ஆட்சி செய்யும் கடவுளாக மாற வேண்டும். அதற்கு தவம் ஒன்று தான் சிறந்த வழியாகும் என்று நிச்சயித்து சுக்கிராசரியாரிடம் ஆசி பெற்று தன் பட்டத்து ராணியிடமும் விடை பெற்றுக்கொண்டு மந்திரசல மலைச்சாரலில் கடும் தவம் மேற்கொண்டான். ஆகாயத்தை நோக்கி கைகளை மேலே தூக்கி ஒரு கால் பெரு விரலால் பூமியில் நின்ற படி உண்ணாமல் உறங்காமல் கோர தவம் செய்தான்.அவனுடய ஜடாமுடிகள் பிரளய கால சூரிய கதிர்கள் போல பிரகாசித்தன. தேவர்கள் தற்காலிகமாக நிம்மதி கிடைத்தது என்று அவர்,அவர் இடத்திற்க்கு சென்றனர்.
          ஹிரணியகசிபு நீண்ட நாள் தவத்தில் இருந்தான். திடீரென தவத்தின் வெப்பம் தலையில் இருந்து நெருப்பும் புகையுமாக கிளம்பி நான்கு திசைகளிலும் மேலும் கீழும் பரவி லோகங்களை எல்லாம் எரிக்க ஆரம்பித்தது.அந்த தீ ஜ்வாலையில் நதிகளும் சமுத்திரங்களும் கொதிகலன்ங்களானது.காடு மலை தீவுகளுடன் பூமி நடுங்கியது.தாரகையில் நட்சத்திரங்கள் உடைந்து விழுவது போல தீப்பொறி கிளம்பின.
            இறுதியில் ஹிரணியகசிபுவின் தவ தீ ஜ்வாலை தேவலோகத்தை தகிக்க ஆரம்பித்தது.தேவர்கள் பதற்றமடைந்து பிரம்மலோகத்தை அடைந்து பிரம்மாவை பிரார்தித்தார்கள்.(தொடரும்) 
                
            

Thursday 30 May 2013

அஜாமிளன் 4

 
அஜாமிளன் யமதூதர்களுக்கும் பாகவத சேவகர்களுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்தான்.நோயுற்று படுக்கையில் கிடந்தவன் திடீரென சொஸ்தமாகி விட்டான். பகவானின் பார்ஷத சேவகர்களை நோக்கி கண்ணீர் வடித்து வணங்கி ஏதோ சொல்ல வந்தான். பகவானின் பார்ஷத சேவகர்கள் அதை அறிந்து மாயமாய் மறைந்தனர்.யமதூதர்கள் சொன்ன வேத நெறிகளையும் தர்மத்தை பற்றி நிகழ்த்திய சொற்பொழிவையும் கேட்டு தன் வாழ்நாளை எப்படி வீணாக்கி விட்டோம் என்று நினைத்து அழுதான்.அவன் அப்போது தான் தர்மத்தை பற்றி சிந்தித்தான்.
          தான் வாழ்ந்த கடந்த கால வாழ்க்கையை பற்றி நினைத்து தன்னை தூற்றிக்கொண்டான்.ஒரு பிராமணனாக இருந்தும் கேவலம் தாசியுடன் வாழ்க்கை நடத்தி விட்டேன்.அப்பாவியான சொந்த மனைவியை துறந்தேன்.தாய் தந்தையரை கவனிக்கவில்லை. அவர்களையும் அனாதையாக்கி துறந்தேன்.
          போன ஜன்மத்தில் நான் என்ன புண்ணியம் செய்தேனோ?மரணத்தின் இறுதிக்காலத்தில் விஷ்ணு பகவானின் தெய்வ தூதர்களை கண்டேன்.அவர்கள் என்னை நரகத்தில் இருந்து காப்பாற்றினார்கள்.அவர்களின் தரிசனத்தால் என் மனம் தூய்மையாகி விட்டது.நான் மகா பாவியாகி விட்டேன்.இறைவன் கொடுத்த நல்ல தூய்மையான வாழ்க்கையை விட்டு விட்டு பாவ மூட்டையாகி விட்டேனே?ஏதோ நான் செய்த எந்த புண்ணியமோ?என்னை பவித்திரமான நாராயணனின் திருநாமத்தை உயிர் பிரியும் போது உச்சரிக்க வைத்தது.அஜாமிளன் இப்படி பலவாறு புலம்பி அழுதான்.அக்கணமே தன் வீட்டையும் மனைவி மக்களையும் துறந்தான்.கால் நடையாக யாத்திரை செய்து ஹரித்வார் என்ற புனித தலத்தை அடைந்தான்.அங்கு கங்கை நீரை மட்டும் பருகிக்கொண்டு பகவானை தியானம் செய்து தவமிருந்தான்.எல்லா பற்றுக்களையும் அறவே ஒழித்துவிட்டு தியானம் செய்தான்.சில நாட்கள் கழித்து அந்திம காலம் வந்தபோது முன்பு தரிசனம் செய்த விஷ்ணு சேவகர்களை கண்டான்.அவர்கள் தாள் தொட்டு வணங்கினான்.அவர்கள் அஜாமிளனை வைகுண்டலோகம் கொண்டு சென்றனர்.
         இந்த அஜாமிளன் கதையை படித்தவர்கள் நரகத்திற்க்கு செல்ல மாட்டார்கள்.அவர்கள் பாவிகளாக இருந்தாலும் அவர்கள் பகவானின் பக்தியில் கரைந்து விடுவார்கள்.இறுதியில் வைகுண்டம் செல்வார்கள்.அஜாமிளன் பகவானை நினைக்காமல் அவன் மகனின் பெயரை உச்சரித்தான்.அது நாராயணனின் திரு நாமமாக இருந்தது.ஆனால் பகவானை நினைத்து உள்ளன்புடன் பக்தியில் ஒன்றிப்போய் அவர் பெயரை உச்சரித்தால் அதன் பலனை சொல்வதற்கோ வார்த்தைகள் இல்லை.
          யமதூதர்கள் யமதர்ம ராஜாவிடம் போய் கேட்டனர். பகவானே உலகில் ஜீவன்கள் பாவ புண்ணிய கர்மங்களை சேர்ந்தே செய்கின்றன.மிக அபூர்வமான மகாத்மாக்கள் மட்டும் புண்ணியங்கள் செய்து அதில் புண்ணிய பலனை எதிர்பாராமல் கர்மம் செய்வார்கள்.எங்களுக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால் பாவ புண்ணிய கர்மங்களுக்கு பலனாக தண்டனை தருபவர் யார்? யார் இந்த ஜீவலோகத்தை ஆட்சி செய்கிறார்கள்?ஏனெனில் எங்களுக்கு தெரிந்து நீங்கள் தானே செய்த பாவ புண்ணியங்களுக்கு நற்பலனை அல்லது தண்டனையை தருகிறீர்கள்.இன்று உங்கள் ஆணை மீறப்பட்டு விட்டது.தண்டனை தருபவர்கள் ஒன்றுக்கு மேல் இருந்தால் அங்கு ஒரே தர்ம நெறி ஒரே நியாயம் என்று இருக்காது. இன்று வரை தங்கள் ஆணை மீறப்பட்டது இல்லை.நாங்கள் அறிந்த வரை தர்மநியாயத்தை காப்பவர்நீங்கள் தான். உங்களை தவிர  ஜீவராசிகளை அடக்கி ஆள்பவர் வேறு ஒருவர் இருக்கிறாரா?ஏனெனில் இன்று வாழ்நாள் முழுவதும் பஞ்சமாபாதகங்களை செய்த ஒரு பாவியை நரகத்திற்க்கு இழுத்து வர சென்று இருந்த போது அந்த பாவி நாராயணா!நாராயணா!என்று கூவினான். அந்த க்ஷணமே நான்கு தெய்வ புருஷர்கள் தோன்றி அந்தபாவியை காப்பாற்றி எம் பணி செய்யவிடாமல் தடுத்து விட்டனர்.
          யமதர்மராஜா கூறினார்- என்னை விட மகா பெரியவர் எல்லாம் வல்லவர் ஒருவர் இருக்கிறார்.அவரே பிரம்மா,விஷ்ணு, ருத்திரர் என்று திருமூர்த்திகளாக பிரிந்து பிரபஞ்சத்தை படைத்து காத்து அழித்து அருள் புரிகிறார்.விவசாயி ஒருவன் தன் எருதுகளை முதலில் சிறிய கயிறுகளால் கட்டி பின்பு எல்லா கயிரையும் சேர்த்து ஒரு பெரிய கயிரால் இழுத்து செல்வது போல மனிதர்களின் வர்ணாசிரம தர்மம் மற்றும் பற்பல அறநெறிகள் வேத தர்மம் என்ற பெரிய கயிற்றால் கட்டப்பட்டிருக்கின்றன.பகவானே வேத சொரூபமானவர்.யமதூதர்களே இந்திரன் நைர்ரிதிகாலன், வருணன்,சந்திரன்,அக்னி,சிவன்,வாயு,சூரியன்,பிரம்மா,பன்னிரெண்டு ஆதித்யர்கள்,சாத்ய தேவர்கள்,சித்தர்கள்,பிருகு,பிரஜாபதி இந்த சக்தி வாய்ந்த தேவர்களும் இறைவனது திருவுள்ளப்படி என்ன நடக்கும் என்று அறியாதவர்கள்.அந்த இறைவனால்வஸ்த்திரத்திற்கு நூல் காரணமாக இருப்பது போல் இப்பிரபஞ்சம் முழுவதும் அவர் ஆற்றல் பரவி இருக்கிறது.பாகவத தர்மத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்.அவர் மன்னிக்கும் சுபாவமுள்ளவர்.அவர் திருநாமம் சகல பாவங்களில்இருந்தும் விமோசனம் அளிக்கும் சக்தி வாய்ந்தது.
          பகவானின் திருநாமம் பற்றுக்களை அறுத்து மனதை தூய்மையாக்கி இறுதியில் மோட்சத்தை கொடுக்க சக்தி படைத்தது.ஆனால் பாவங்களை நாசப்படுத்த மற்ற வழிகளான பூஜை விரதம்,சாந்த்ராயண விரதம்,ஹோமம்,தியானம்,தானம்,தவம் ஆகியவற்றால் ஆசைகளை ஒழிக்க முடியாது.மோட்சமும் எளிதாக கிடைக்காது.பகவானின் திருநாமம் மட்டுமே மேலானது.
ஆதலால் யம தூதர்களே பகவானின் திருநாமங்களை சொல்லும் பக்தர்களை நெருங்காதீர்கள்.அஜாமிளனை காக்கும் பொருட்டு பகவானின் பார்ஷத சேவகர்களை எதிர்த்து பேசியதற்காக நான் பகவானிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.அவர் மகாமகிமை பொருந்திய பரந்த மனம் கொண்டவர்.அதனால் என்னை நிச்சயம் மன்னிப்பார்.
          யம தூதர்கள் யமதர்மராஜாவிடம் விஷ்ணு பகவானின் அருமை பெருமைகளை அவர் திருநாமத்தின் மகிமையை கேட்டு ஆச்சர்யம் அடைந்தனர்.அன்று முதல் அவர்கள் பகவானின் பக்தர்களை நெருங்குவதில்லை.ஏறெடுத்தும் பார்பதில்லை.       
.

Wednesday 15 May 2013

அஜாமிளன் 3

அந்த சூட்சும சரீரமே எல்லா ஜன்மங்களில் மகிழ்ச்சி,சோகம்,பயம்,பீடை,எல்லாம் அனுபவித்துக்கொண்டு பிறப்பு,இறப்பு,சுழற்சியில் சிக்கிக்கொண்டு இருக்கிறது.அதன் காரணம் காமம்,குரோதம்,லோபம்,மோகம்,மத மாத்ஸர்யம் ஆகிய  சத்ருக்களை ஜெயிக்காமல் விருப்பு வெறுப்பு என்ற வாசனைகள் மனதின் அடித்தளத்தில் தேங்கி விடுகின்றன.அவற்றுக்கு அடிமையாகி மேலும் மேலும் கர்மங்கள் செய்து அவற்றின் பலன்கள் என்ற நூலால் பட்டுபுழு போல தன்னையே சுற்றிக்கொள்கிறான்.பூர்வ ஜென்மத்தின் கர்மங்களுக்கு தக்கவாறு அவனுக்கு தேகம் கிடைக்கிறது.ஆணாகி,பெண்ணாகி பிறக்கிறான்,மடிக்கிறான்..பர லோகங்களில் பாவங்களை அனுபவிக்கிறான்.
பிறப்பு இறப்புகளில் இருந்து விடுதலை பெற இறைவனருள் வேண்டும்.இறைவனருள் புண்ணியாத்மாக்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்.
         தெய்வங்களே இதோ பாருங்கள். இவன் தன் சொந்த சுகத்திற்காக, சொந்த சந்தோசத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாவத்தையே செய்திருக்கிறான்.ஆதலால் இவனை யமலோகத்திற்க்கு அழைத்துச்சென்று யமதர்ம ராஜாவின் தீர்ப்புபடி இவனுக்கு தண்டனை வழங்குவோம்.இவன் பாவத்திற்க்கு தக்க தண்டனை அனுபவித்து விட்டு பின்பு தான் சுத்தமாவான்.யமதூதர்களின் சொற்பொழிவை கேட்டு ஸ்ரீவிஷ்ணுவின் சேவகர்கள் கூறினார்கள்.
          வருத்ததிர்க்குறிய விஷயம் என்னவென்றால் நியாயம் நடக்க வேண்டிய இடத்தில் அநியாயம் எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. தண்டிக்க தகாதவர்கள் தண்டிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. பிரஜைகளின் ரட்சகர்களே பிரஜைகளுக்கு துரோகம் செய்வதா?யமதூதர்களே இவன் மரணதருவாயில் பகவானின் மோட்சம் தரும் திருநாமத்தை உச்சரித்து விட்டான்.இவன் கோடி ஜன்மங்களின் பாவங்களுக்கு பிராயசித்தம் செய்து விட்டான். கொள்ளையடிப்பவன்,குடிகாரன்,நண்பனுக்கு துரோகம் செய்பவன்,பிராமணனை கொன்றவன்,தாய்,தந்தை,பெண்,பசு ஆகியோரை கொன்றவன் அனைவரும் பகவானின் திருநாம ஜபம் செய்து தன் பாவங்களை போக்கிக்கொள்ள முடியும்.
           பாவத்திற்க்கு பிராயசித்தம் என்பது மீண்டும் பாவ வழியில் போனால் அது பிராயசித்தம் ஆகாது.தவ,தானம்,விரதம் ஆகியவற்றால் பிராயசித்தம் செய்தால் அந்த பாவங்கள் நிச்சயம் அழிந்து விடும். ஆனால் பகவானின் திருநாமங்களை ஜபம் செய்தால் பாவங்கள் அழிவதுடன் திருநாமத்தை உச்சரிக்கும் மனமும் தூய்மை அடைகிறது.  வேறு பிராயசித்தங்களால் மனதில் இருக்கும் அழுக்குகள் வேருடன் அழிவதில்லை . தெரியாமல் அறியாமல் நெருப்பை தொட்டால் அது சுட்டு விடுகிறது.அது போல தெரியாமல் அறியாமல் பகவான் நாமத்தை உச்சரித்தால் பாவங்கள் தாமாக எரிக்கப்படும்.அதற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.அதிகமாக ஜபம் செய்யும் போது அது மந்திரமாக மாறிவிடுகிறது.
          யம தூதர்களே நாங்கள் சொல்கிறோம்.அதை பிரமானமாக எடுத்துக்கொள்ளுங்கள்.வேறு ஒரு கருத்தை நினைத்து,அல்லது பிற வஸ்துவை அல்லது மனிதரை குறிப்பிடும் போது, அந்த திருநாமத்தை வைத்து பிறரை பரிகாசம் செய்யும்போது பிறரை குறித்து கோபித்துகொள்ளும்போது,நீண்ட ராகம் எடுத்து பாடும்போது உச்சரிக்கப்படும் பகவானின் திருநாமம் பாவங்களை நாசப்படுத்துகிறது. மேலும் சறுக்கிவிழும்போது,தும்மும்போது வலியால் துடிக்கும்போது கீழே விழுந்து அடிபடும்போது மேலே தீ பட்டு சுடும்போது ,பாம்பு முதலிய விஷ ஜந்துக்கள் கடிக்கும் போது ஹரி,ஹரி என்று உச்சரிக்கவேண்டும்.அப்போது யம யாதனை (யம வாதை)வராது என்று கூறி விஷ்ணு பகவானின் தூதர்கள் மரண தருவாயில் பகவான் நாமம் உச்சரிக்கப்படும்போது எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.என்று கூறிவிட்டு யமகிங்கரர்கள் பிடியில் இருந்த அஜாமிளனை காப்பாற்றி விட்டு மறைந்து விட்டனர்.
(தொடரும்)   

Friday 5 April 2013

அஜாமிளன் 2

அவர்கள் விஷ்ணுவின் சேவகர்களை பார்த்து யார் நீங்கள்? தெய்வ புருஷர்கள் போல இருக்கிறீர்கள்! எங்களை ஏன் தடுக்கிறீர்கள்?இந்த பாவிக்காக பரிந்து கொண்டு எதையும் பேசமுடியாது என்றால் இவன் பஞ்சமா பாதகங்களை வாழ்நாள் முழுவதும் செய்திருக்கிறான்.யமதர்ம ராஜாவின் ஆணையை மீற நீங்கள் யார்?தன் பேரொளியால் இருட்டை போக்கி எங்கும் பிரகாசமாக்கி கொண்டு ஏன் வந்தீர்கள்?
           விஷ்ணு பகவானின் தூதர்கள் சிரித்து விட்டு மேகம் இடியோசை குரலில் பேசினார்கள்.—யம தூதர்களே நீங்கள் உண்மையிலேயே யமதர்மராஜாவின் ஆணைப்படி நடக்கிறீர்கள் என்றால் தர்மத்தின் சொரூபம் என்ன?அதன் தத்துவம் என்ன?தண்டனை யாருக்கு கொடுக்க வேண்டும்? பாவத்திற்க்கு பிராயசித்தம் செய்து விட்டவனுக்குமா தண்டனை தரப்படும்?இதற்குமுதலில் பதில் சொல்லிவிட்டு பிறகு இந்த ஆத்மாவை எடுத்து செல்லுங்கள் என்றனர்.
          யமதூதர்கள் பதில் அளித்தார்கள்-வேதங்களால் விதிக்கப்பட்ட கர்மங்களை செய்வதே தர்மம் என்றும் விதிக்கப்படாத தடுக்கப்பட்ட கர்மங்களை அதர்மம் என்றும் நிச்சயிக்கப்பட்டுள்ளன.எல்லாம் வல்ல இறைவனே வேத சொரூபமானவர்.வேதங்களே அவரது மூச்சு. தன்னோளி பெற்ற ஞானம்.அவரால் படைக்கப்பட்ட சாத்வீக ராஜச தாமச குணங்களை கொண்டு பொருள்களும் பிராணி வர்க்கங்களும் அவரை ஆதாரமாக கொண்டு உள்ளன.குணங்கள் காரியங்கள் ரூபம் அனைத்தும் வேதங்களால் வகுக்கப்படுகின்றன.இவ்வுலகத்தில் ஜென்மமெடுத்த ஜீவனால் மனதின் எண்ணங்களோடு செய்யப்படும் கர்மங்களுக்கு சாட்சியாக சூரியன்,அக்னி,ஆகாயம்,வாயு,புலன்கள்,சந்திரன்,சந்தியாகாலம்,இரவு,பகல்,திசைகள்,ஜலம்,பூமி,காலம்,தர்மம் இவையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கின்றன.இவைகளால் அதர்மம் நிச்சயிக்கப்படுகிறது.அதற்கு தகுந்தாற்போல் தண்டனை நிச்சயிக்கப்படுகிறது.தேவ புருசர்களே ஒரு பிராணி அல்லது ஜீவன் எந்த கர்மத்தை செய்தாலும் அது அவரது குணத்தை அனுசரித்தே இருக்கும்.அதனால் எல்லோராலும் பாவமும் புண்ணியமும் செய்யப்படுகின்றன.தேகம் தரித்த எந்த ஜீவனும் கர்மம் செய்யாமல் இருக்க முடியாது.எவ்வளவு பாவமும் புண்ணியமும் செய்கிறானோ அதற்கு தக்கவாறு பரலோகத்தில் அந்த பலனை பெறுவான்.
சாத்வீகம் ,ராஜசம்,தாமஸம்,இந்த மூன்று குண பேதங்களால் இந்த லோகத்தில் மூன்று விதமான ஜீவன்கள் உள்ளன.ஒன்று புண்ணியம் செய்பவர்கள்,பாபாத்மாக்கள்,பாவம் புண்ணியம் இரண்டும் செய்பவர்கள்.அதற்க்கு தகுந்தாற்போல சுகமாகவும் துக்கமாகவும் சுகம் துக்கம் இரண்டும் கலந்து இருக்கிறார்கள்.பரலோகத்தில் சுக துக்கங்களை கூடுதலாக, குறைவாக பெற்றிருப்பார்கள்.எங்கள் ஸ்வாமி யமதர்மராஜா எல்லாம் அறிந்தவர்.பிறப்பற்றவர்.அவர் அனைவரது இதயங்களில் வீற்று இருக்கிறார்.சாட்சியாக பூர்வ கர்ம வினைகளையும் அறிவார்.எதிர்கால கர்ம வினைகளும் அறிவார்.
          தூங்கிக்கொண்டு இருக்கும் மனிதன் சொப்பனத்தில் இருக்கப்படும் சரீரத்தை மட்டும் உணர்ந்து அதை சத்தியமாக நினைக்கிறான்.விழித்த நிலையில் இருக்கும் சரீரத்தை மறந்து விடுகிறான்.   
அதுபோலவே அவன் இந்த ஜென்மத்தில் பூர்வ ஜென்ம ஞாபகங்களை மறந்து விடுகிறான்.தற்காலத்தில் பெற்ற சரீரத்தை தவிர முன் ஜென்ம விவரங்களையும் இனி நடக்கபோக்கும் விஷயங்களையும் ஜென்மங்களையும் அறிய மாட்டான்.தெய்வங்களே! ஜீவன் என்பவன் ஐந்து ஞானேந்திரியங்களுடன்(கண்,காது,மூக்கு,ரசனை,ஸ்பரிசம்)ஐந்து கர்மேந்திரியங்களுடன்(கை கால வாக்கு பாயு உபஸ்தம்)மனம் புத்தி நான் என்ற தன்மையுடன் (அகங்காரம்) கர்மங்களை செய்கிறான் அல்லது விதிக்கப்பட்ட சுக துக்கங்களை அனுபவிக்கின்றான்.சூட்சும சரீரம் மேற்சொன்ன புலன்ங்களோடு சேர்ந்தும் இருக்கும் (தொடரும்)  

Thursday 21 March 2013

அஜாமிளன்

 
கான்யகுப்ஜ தேசத்தில் ஒழுக்கசீலமுள்ள ஒரு பிராமணன் இருந்தான்.சாஸ்திரங்கள் படித்து நற்குணங்கள் பெற்றிருந்தான்.மந்திரங்கள் படித்து சத்தியம் பேசும் நல்லவனாக குரு,அதிதி, அக்னி,பெரியோர்கள்,மாதா,பிதா ஆகியோரை சேவிப்பவனாக இருந்தான்.பரோபகார சிந்தனை பெற்றிருப்பான்.அதிகம் பேசமாட்டான்.இப்படிபட்டவன் பாதை தவறினான்.
ஒரு நாள் தந்தையின் ஆணைப்படி பூஜைக்காக தர்பையை பறித்து வர காட்டிற்க்கு சென்று இருந்தான்.அச்சமயம் ஒரு காட்சியை கண்டான்.ஒருவன் கள் குடித்து விட்டு ஒருபெண்ணுடன் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.அந்த பெண்ணும் குடித்து விட்டிருந்தாள்.அவள் அறைகுறை ஆடை அணிந்து ஆடிக்கொண்டிருந்தாள்.தினமும் மலர்கள் பறிக்க போகும்போது இந்த காட்சியை பார்த்துக்கொண்டே போவான்.ஒருநாள் திடீரென அந்த பெண் அஜாமிளனோடு சினேகிதமானால்.சில நாட்கள் கழிந்த பின் அந்த சிநேகிதம் பலப்பட்டது.
          அஜாமிளன் அந்த பெண்ணின் சந்தோசத்திற்காக ஆடை ஆபரணங்களை கொண்டு வந்து தந்தான்.நல்லவளான தன் சொந்த மனைவியை மறந்தான்.தன் இல்லத்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை அவளுக்கு பரிசாக அளித்தான்.தன் இல்லத்தில்  தந்தையோடு செய்யும் தெய்வவழிபாடுகளையும்,வேதபாராயணங்களையும் மறந்தான்.வைதீக கர்மங்களை துறந்தான்.தந்தையின் சொத்துக்களை அழித்தான்.மொத்தத்தில் அவளுக்கு அடிமையாகி தன் வீட்டிற்க்கு திரும்பாமல் அவளுடன் வாழ்க்கை நடத்த ஆரம்பித்தான்.அதனால் குழந்தைகள் பிறந்து குடும்பம் பெரிதானது.பிழைப்புக்கு காசு,பணம் இல்லாமல் போகவே அவன் திருட ஆரம்பித்தான்.தீய வழியில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தான்.வழிப்போக்கர்களிடமும் யாத்ரீகர்களிடமும் கொள்ளை அடித்தான்.அல்லது பிறரிடம் கடன் வாங்கி ஏமாற்றுவான், சூதாடுவான்.இவ்வாறு தன் ஆயுளின் பெரும்பகுதி கடந்து விட்டது.அவன் 10 பிள்ளைகள் பெற்றான்.பத்தாவது மகன் மீது அளவு கடந்த பாசம் வைத்து இருந்தான்.எதற்கெடுத்தாலும் நாராயணா!நாராயணா! என்றுபெயரை சொல்லி கூப்பிடுவான். அவன் சாப்பிட்டால் இவனும் சாப்பிடுவான்.அவன் நீர் குடித்தால் இவனும் நீர் குடிப்பான்.அந்த சின்ன மகன் மீது உயிரயே வைத்திருந்தான்.தனது 88வது வயதில் காலன் தம்மை கொண்டு போக வந்ததை அறியாமல் இருந்தான்.
          
நோய்வாய் பட்டு மரணப்படுக்கையில் கிடக்கும்போது பாசக்கயிற்றை போட்டு இவன் சூட்சும உடம்பை இழுத்த சமயம் மரண அவஸ்தையில் அவன் சின்ன மகனை நினைத்து நாராயணா,நாராயணா என்று கரகரத்த குரலில் கத்தினான்.மரணத்தருவாயில் எவரோ நமது பகவானின் பெயரை சொல்லி அழைக்கிறார்கள் என்று நினைத்து விஷ்ணு பகவானின் நான்கு பார்ஷத சேவகர்கள் விஷ்ணுவை போலவே நான்கு கரங்களுடன் சங்கு சக்கரம் தரித்திருப்பவர்கள் வேகமாக அஜாமிளன் படுத்திருக்கும் இடத்திற்க்கு ஓடி வந்தனர்.அங்கு பயங்கர கொடூர உருவம் கொண்ட யம கிங்கரர்கள் அஜாமிளனை நரகத்திற்க்கு இழுத்து போக முயன்று கொண்டிருந்தனர்.(தொடரும்)    

Saturday 16 February 2013

கற்புக்கரசி சுகன்யா 2

சுகன்யா பதற்றமடைந்து செய்வதறியாது தவித்தாள்.இவர்களில் யார் என் கணவர் என்று அறியாமல் அஸ்வினி குமாரர்களையே சரணடைந்தாள்.தன் கணவர்  யார் என்று அடையாளம் காட்டச்சொல்லி வேண்டினாள்.அவள் கற்பைகண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்து அஸ்வினி குமாரர்கள் அவள் கணவர் சியவனரிஷியை (தேவகுமாரராக மாறிய)அடையாளம் காட்டிவிட்டு வானுலகம் சென்று மறைந்தார்கள்.
          சிலகாலம் கழிந்த பின் சுகன்யாவின் தந்தை தாம் செய்யப்போகும் யாகத்தை தலைமைதாங்கி நடத்திக்கொடுப்பதற்க்கு சியவனரிஷியின் ஆசிரமத்திற்க்கு வருகை தந்தார்.அச்சமயம் தம் மகள் பேரொளி படைத்த ஒரு வாலிபனோடு சிரித்து பேசிக்கொண்டிருப்பதை கண்டார்.அதனால் வருத்தமும் கோபமும் அடைந்தவர்,” உன்னை மகள் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன்.உலகத்தவர் வணங்கும் சியவன ரிஷியை கிழவன்,எதற்கும் பிரயோஜனப்படாதவன்,என்று துறந்து விட்டு இந்த வாலிபனுடன் இருக்கிறாய்? நீ உயர் குடியில் (க்ஷத்திரிய)ராஜாவின் மகளாக இருந்தும் கற்புநெறி தவறிவிட்டாய். நீ தந்தையின் வம்சத்தையும்,கணவரின் வம்சத்தையும் நரகத்திற்க்கு கொண்டு போய் சேர்க்க வழி வகுத்துவிட்டாய்”அதற்கு சுகன்யா “தந்தையே நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.இவர் உங்கள் மருமகன் சியவனரிஷி தான்” என்று கூறி வாலிப பருவம் கிடைத்த சங்கதியை விரிவாக கூறினாள்.அதனால் சந்தோஷமடைந்த சர்யாதி மகளை கட்டி அணைத்துக்கொண்டார்.
          சர்யாதி மன்னரின் யாகம் பிரமாதமாக தொடங்கியது.யாகத்தை நடத்தி வைக்கும் சியவனரிஷி மந்திரங்களை உச்சரித்து உரிய நேரத்தில் தாம் வாக்கு தந்தபடி அஸ்வினி குமாரர்களுக்கு சோமபானம் கிடைக்க செய்தார்.அதனால் கோபமடைந்த இந்திரன் வஜ்ராயுதமெடுத்து மன்னர் சர்யாதியை தாக்க வந்தான்.சியவனரிஷி தன் தபோபலத்தால் இந்திரனின் கையை ஸ்தம்பிக்க செய்து விட்டார்.வஜ்ராயுதமெடுத்து தாக்க வந்த கை அப்படியே செயலற்று நின்றது. அதன் பின் தேவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து சியவனரிஷியை சமாதானப்படுத்தினார்கள்.,இனி யாகங்களில் சோமபான உரிமையை அஸ்வினி குமாரர்கள் பெறுவார்கள் என்று வாக்களித்தனர்.இந்திரனின் ஸ்தம்பித்த கை சரியானது.சர்யாதி தாம் செய்த சோமயாகத்தை சுபமாக முடித்தார்.
  

Friday 15 February 2013

கற்புக்கரசி சுகன்யா

 
மனுவின் புதல்வர் சர்யாதி என்றொரு அரசர் நல்லாட்சி செய்து வந்தார்.அவர் வேதங்களை படித்து கரை கண்டிருந்தார்.அங்கிரஸ கோத்திர ரிஷிகளின் யாகத்தில் இரண்டாம் நாள் செய்ய வேண்டிய காரியங்களையும் மந்திரங்களையும் சொல்லித்தந்தார்.
         
 ஒரு நாள் சியவன ரிஷி ஆசிரமம் இருந்த காட்டிற்க்கு சென்று இருந்தார்.கூடவே தன் படைகளுடனும் மகள் அரசிளங்குமரியான சுகன்யாவும் விருப்பமுடன் வர இயற்கை எழில் ரசித்தபடி காட்டில் தாங்கினார்.சுகன்யா மரங்களையும் வனாந்திரத்தயும் ரசித்தபடி சியவன ஆசிரமம் வந்து சேர்ந்தாள்.அங்கு ஒரு கரயான் புற்று பெரிதாக இருந்தது.அதில் மின்மினி பூச்சி போல இரண்டு ஜோதி பிரகாசமுடன் தெரிந்தது.சுகன்யா குழந்தைதனமாக ஒரு குச்சி எடுத்து அந்த ஜோடிகளை குத்தினாள்.அதனால் அதிலிருந்து மிகையாக ரத்தம் வடிந்தது.அதன் விளைவால் படைவீரர்களின் சிறுநீரும்,மலமும் நின்று விட்டன.அரசன் பதற்றமடைந்து வினவினான்.இது என்ன கஷ்டகாலம்? உங்களில் யாராவது ஒருவர் சியவன ரிஷிக்கு குற்றமிழைத்தீரா?ரிஷியின் கோபத்திற்கு ஆளாகிவிட்டோம்.அச்சமயம் சுகன்யா நடந்ததை கூறினாள்.”தந்தையே நான்தான் கறையான் புற்றிலிருந்த ஜோதியை முனிவரின் கண் என்று தெரியாமல் குத்தி விட்டேன்.”
          அரசர் சியவன ரிஷியின் சாபத்திற்கு பயந்து ரிஷியை பணிந்து மன்னிப்பு கேட்டு (கண் தெரியாத) ரிஷிக்கு தன் மகளை மணம் முடித்து கொடுத்து தன்னயும் தன் நாட்டையும் காத்துக்கொண்டார்.
           சர்யாதி நாடு திரும்பியதும் சுகன்யா சியவன ரிஷிக்கு குறிப்பறிந்து சேவை செய்தாள்.அவர் மணம் கோணாமல் சிந்தை அறிந்து சேவை செய்தாள்.சில காலம் சென்றவுடன் சியவன ரிஷி ஆசிரமத்திற்க்கு தேவ மருத்துவார்களான  அஸ்வினிக்குமாரர்கள் இருவர் வந்தனர்.அவர்களை கண்டு  சியவனரிஷி கூறினார்.”நீங்கள் இருவரும் எதையும் சாதிக்க வல்லவர்கள்.என்னை பெண்கள் மனம் கவரும் கட்டழகனாக,வாலிபனாக மாற்றுங்கள்.யாகங்களில் உங்களுக்கு சோமரஸ பானம் அனுமதியில்லை என்பதை நான் அறிவேன்.இனிமேல் தேவர்,மானுடர்,ரிஷிகள் செய்யும் எல்லா யாகங்களிலும் சோமரஸ பானத்திற்க்கு தகுதி உள்ளவர்களாக செய்கிறேன்.அந்த உரிமையை உங்களுக்கு கிடைக்க செய்கிறேன்.” என்றார்.
          அஸ்வினி குமாரர்களும் அதற்க்கு சரி என்று ஒப்புக்கொண்டனர்.தொண்டு கிழவராக இருக்கும் சியவனரிஷியை அழைத்து வந்து அவர் கையை பிடித்து அஸ்வினி குமாரர்களும் சேர்ந்து சித்தர்கள் ஏற்படுத்திய ஒரு குளத்தில் மூழ்கினார்கள்.சியவனரும் அஸ்வினி குமாரர்களும் சேர்ந்து சித்தர் குளத்தில் மூழ்கி எழுந்தனர்.அச்சமயம் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.மூவரும் ஒன்று போல பட்டாடை உடுத்தி பொன்னாபரணங்கள் அணிந்து ரத்தின கிரீடம் ஜொலிக்க தாமரை மலர் மாலையும் அணிந்து மூன்று தேவ புருஷர்கள் போல அதிசுந்தர புருசர்களாக வெளிவந்தனர்.  ஆனால் முக ஜாடையிலும் ஆடை அலங்காரங்களிலும் ஒன்று போல இருந்தார்கள். திடகாத்திர அங்கங்களுடன் ,சூரியதேஜசுடனும் பிரகாசமாக இருந்தார்கள்.
                                   (தொடரும்)