Wednesday 15 May 2013

அஜாமிளன் 3

அந்த சூட்சும சரீரமே எல்லா ஜன்மங்களில் மகிழ்ச்சி,சோகம்,பயம்,பீடை,எல்லாம் அனுபவித்துக்கொண்டு பிறப்பு,இறப்பு,சுழற்சியில் சிக்கிக்கொண்டு இருக்கிறது.அதன் காரணம் காமம்,குரோதம்,லோபம்,மோகம்,மத மாத்ஸர்யம் ஆகிய  சத்ருக்களை ஜெயிக்காமல் விருப்பு வெறுப்பு என்ற வாசனைகள் மனதின் அடித்தளத்தில் தேங்கி விடுகின்றன.அவற்றுக்கு அடிமையாகி மேலும் மேலும் கர்மங்கள் செய்து அவற்றின் பலன்கள் என்ற நூலால் பட்டுபுழு போல தன்னையே சுற்றிக்கொள்கிறான்.பூர்வ ஜென்மத்தின் கர்மங்களுக்கு தக்கவாறு அவனுக்கு தேகம் கிடைக்கிறது.ஆணாகி,பெண்ணாகி பிறக்கிறான்,மடிக்கிறான்..பர லோகங்களில் பாவங்களை அனுபவிக்கிறான்.
பிறப்பு இறப்புகளில் இருந்து விடுதலை பெற இறைவனருள் வேண்டும்.இறைவனருள் புண்ணியாத்மாக்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்.
         தெய்வங்களே இதோ பாருங்கள். இவன் தன் சொந்த சுகத்திற்காக, சொந்த சந்தோசத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாவத்தையே செய்திருக்கிறான்.ஆதலால் இவனை யமலோகத்திற்க்கு அழைத்துச்சென்று யமதர்ம ராஜாவின் தீர்ப்புபடி இவனுக்கு தண்டனை வழங்குவோம்.இவன் பாவத்திற்க்கு தக்க தண்டனை அனுபவித்து விட்டு பின்பு தான் சுத்தமாவான்.யமதூதர்களின் சொற்பொழிவை கேட்டு ஸ்ரீவிஷ்ணுவின் சேவகர்கள் கூறினார்கள்.
          வருத்ததிர்க்குறிய விஷயம் என்னவென்றால் நியாயம் நடக்க வேண்டிய இடத்தில் அநியாயம் எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. தண்டிக்க தகாதவர்கள் தண்டிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. பிரஜைகளின் ரட்சகர்களே பிரஜைகளுக்கு துரோகம் செய்வதா?யமதூதர்களே இவன் மரணதருவாயில் பகவானின் மோட்சம் தரும் திருநாமத்தை உச்சரித்து விட்டான்.இவன் கோடி ஜன்மங்களின் பாவங்களுக்கு பிராயசித்தம் செய்து விட்டான். கொள்ளையடிப்பவன்,குடிகாரன்,நண்பனுக்கு துரோகம் செய்பவன்,பிராமணனை கொன்றவன்,தாய்,தந்தை,பெண்,பசு ஆகியோரை கொன்றவன் அனைவரும் பகவானின் திருநாம ஜபம் செய்து தன் பாவங்களை போக்கிக்கொள்ள முடியும்.
           பாவத்திற்க்கு பிராயசித்தம் என்பது மீண்டும் பாவ வழியில் போனால் அது பிராயசித்தம் ஆகாது.தவ,தானம்,விரதம் ஆகியவற்றால் பிராயசித்தம் செய்தால் அந்த பாவங்கள் நிச்சயம் அழிந்து விடும். ஆனால் பகவானின் திருநாமங்களை ஜபம் செய்தால் பாவங்கள் அழிவதுடன் திருநாமத்தை உச்சரிக்கும் மனமும் தூய்மை அடைகிறது.  வேறு பிராயசித்தங்களால் மனதில் இருக்கும் அழுக்குகள் வேருடன் அழிவதில்லை . தெரியாமல் அறியாமல் நெருப்பை தொட்டால் அது சுட்டு விடுகிறது.அது போல தெரியாமல் அறியாமல் பகவான் நாமத்தை உச்சரித்தால் பாவங்கள் தாமாக எரிக்கப்படும்.அதற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.அதிகமாக ஜபம் செய்யும் போது அது மந்திரமாக மாறிவிடுகிறது.
          யம தூதர்களே நாங்கள் சொல்கிறோம்.அதை பிரமானமாக எடுத்துக்கொள்ளுங்கள்.வேறு ஒரு கருத்தை நினைத்து,அல்லது பிற வஸ்துவை அல்லது மனிதரை குறிப்பிடும் போது, அந்த திருநாமத்தை வைத்து பிறரை பரிகாசம் செய்யும்போது பிறரை குறித்து கோபித்துகொள்ளும்போது,நீண்ட ராகம் எடுத்து பாடும்போது உச்சரிக்கப்படும் பகவானின் திருநாமம் பாவங்களை நாசப்படுத்துகிறது. மேலும் சறுக்கிவிழும்போது,தும்மும்போது வலியால் துடிக்கும்போது கீழே விழுந்து அடிபடும்போது மேலே தீ பட்டு சுடும்போது ,பாம்பு முதலிய விஷ ஜந்துக்கள் கடிக்கும் போது ஹரி,ஹரி என்று உச்சரிக்கவேண்டும்.அப்போது யம யாதனை (யம வாதை)வராது என்று கூறி விஷ்ணு பகவானின் தூதர்கள் மரண தருவாயில் பகவான் நாமம் உச்சரிக்கப்படும்போது எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.என்று கூறிவிட்டு யமகிங்கரர்கள் பிடியில் இருந்த அஜாமிளனை காப்பாற்றி விட்டு மறைந்து விட்டனர்.
(தொடரும்)   

No comments:

Post a Comment