Tuesday 18 December 2012

வாமன அவதாரம் தொடர்ச்சி 5

கேட்டதை கொடுக்கும் வள்ளலான உங்களிடம் நான் தேவைக்கு அதிகமாக நான் எதையும் கேட்க விரும்பவில்லை.என் அடியில் மூன்று அடி நிலம் கொடுத்தால் போதும்.தன் ஆத்மாவை மேம்படுத்தும் மனிதன் தேவைக்கு அதிகமாக ஆசைப்படுவது சரியல்ல.
          பலி ராஜா பதில் கூறினார்.பிராமண குமாரரே அனுபவம் மிக்க பெரியோர்கள் போல பேசுகிறீர்கள்.ஆனால் தோற்றத்தில் தாங்கள் சிறுபிள்ளை போல இருக்கிறீர்கள்..அதனால் தான் தன்னலத்தை அறியாமல் லாப நஷ்டங்களை அறியாமல் மூன்றடிநிலம் கேட்கிறீர்கள்.இந்த உலகம் முழுவதும் என் ஆட்சியின் கீழ் உள்ளது.நான் நினைத்தால் உலகில் உள்ள தீவுகளையும் தந்துவிடுவேன்.என்னிடம் வந்துவிட்டால் அவன் தேவைக்காக வேறு எவரிடமும் கையெந்த அவசியம் இருக்கக்கூடாது.
          வாமன பகவான் கூறினார்.பலிராஜா!இவ்வுலகில் மனிதன் ஆசைப்படும் எல்லா விசயங்களும் அவனுக்கு கிடைத்து விட்டாலும் மனிதனின் ஆசை பூர்த்தி ஆவது இல்லை.மனிதன் நிறைவடையமாட்டான்.
அவ்வாறு இருக்க மூன்றடி நிலத்தில் சந்தோஷமாடையாதவன் ஏழு தீவுகள் கொண்ட கடல் சூழ்ந்த பூமியை பெற்றும் நிறைவடைந்து விடுவானா?ஆசைக்கோ ஓர் அளவில்லை.புலன்கள் வசப்படுத்த முடியாதவன் துயரத்தை சந்தித்துக்கொண்டே இருப்பான்.கிடைத்ததை பெற்று சந்தோஷமடையாத  பிராமணனின் தேஜஸ் குறைந்து விடுகிறது.ஆதலால் எனக்கு மூன்றடி நிலமே போதுமானது.அதை தாங்கள் தந்தால் போதுமானது.
          வாமன பகவானின் வார்த்தைகளை கேட்ட பலி மகாராஜாவுக்கு சிரிப்பு தான் வந்தது.சரி உங்களுக்கு எவ்வளவு விருப்பமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.என்று கூறிவிட்டு தாரை வார்த்துக்கொடுக்க கமண்டல நீரை எடுத்தார்.அச்சமயம் குரு சுக்கிராசரியார் குறுக்கிட்டு பேசினார்.-
          அசுரவேந்தே பலிமகாராஜா! நான் சொல்லுவதை சற்று கேளுங்கள்.நாம் முன்னால் சிறுபாலகனாக வந்திருப்பது வேறு எவருமில்லை.இவர் சாட்சாத் விஷ்ணு பகவானே தான்.தேவர்களின் காரியத்தை சாதிப்பதற்காகவே தேவமாதா அதிதி கர்பத்தில் இருந்து ஜென்மமெடுத்து வந்திருக்கிறார்.தானம் என்ற பெயரில் உங்களிடம் ராஜ்யங்களை பிடுங்கி இந்திரனுக்கு தர போகிறார்.இது அசுர குலத்தவருக்கு செய்யும் அநியாயம்,அக்கிரமம்,இது துரோகம்.உங்களுடய ராஜ்யம் ஐஸ்வர்யம்,லக்ஷ்மி தேஜஸ்,உலகப்புகழ் கீர்த்தி அனைத்தையும்
தானமாக பெற்று இந்திரனுக்கு கொடுக்க போகிறார்.ஏனெனில் பகவான் விசுவரூமானவர்.விசுவரூபமெடுத்து பூமியயும்ஆகாயத்தயும்அளந்து விடுவார்.நீங்கள் பிழைப்புக்கு வழியில்லாமல் என்ன செய்ய போகிறீர்கள்.மேலும் ஆகாயமும் பூமியும் இரண்டடி அளந்தபின் மூன்றாவதடி என்ன செய்வீர்கள்.கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டாமா?தனக்கென்று மிஞ்சாத தானத்தைஅறிஞர்கள் புகழ மாட்டார்கள். இவ்வுலகில் தான் சம்பாதித்த செல்வத்தை ஐந்தாக பிரித்துக்கொள்ள வேண்டும்.அறத்திற்காகவும்,புகழுக்காகவும் பணமுதலீட்டிற்காகவும்,தன் சந்தோஷத்திற்காகவும் தன் பந்துக்களுக்காகவும் செலவிடவேண்டும்.
          அரசே நான் வாக்கு கொடுத்துவிட்டேன் என்று கவலைபடாதீர்கள்.வாக்கு தவறுவது அசத்தியம் தான்.இந்த தேகம் ஒருமரம் என்றால் சத்தியம் தான் அதன் பழங்கள்.தேக ஜீவனோபாயமின்றி
சகலமும் தந்துவிட்டால் தேகம் என்ற மரம் பட்டுப்போய்விடும்.மேலும் அறியாமல் அவசரத்தில் விவாகம் போன்ற சந்தோஷமான தருணங்களில் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள சொல்லப்படும் பொய்,பொய்யாகாது.
                                                          (தொடரும்)

Friday 30 November 2012

வாமன அவதாரம் தொடர்ச்சி 4

 
பலிசக்கரவர்த்தி மஹாராஜா பார்க்கவ பிராமண ரிஷிகளுடன் அசுவமேத யாகம் செய்வதை கேள்விப்பட்டு யாகசாலையை நோக்கி புறப்பட்டார்.அவர் செல்லும் போது,ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் பூமி நிலை தடுமாறியது.நர்மதா நதிக்கரையில் பிருகு கச்சம் என்ற ஒரு ரம்யமான இடத்தில் யாக அனுஷ்டானம் நடந்துகொண்டு இருந்தது.
 
     யாகம் செய்யும் திக்விஜர்களும்,சபயோர்களும் அந்த தெய்வ பாலகனை கண்டு பிரமித்து போய் நின்றனர்.நம் யாகசாலையை நோக்கி பேரொளியுடன் பிரகாசித்துக்கொண்டு வருவது யாரோ?சூரியனா? அல்லது அக்னி சனத்குமாரரோ?என்று யோசித்தனர்.வாமன பகவான் இளம் பிஞ்சு கரங்களில் குடை தண்ட கமண்டலங்களுடன் வந்து பிரவேசித்தார். அங்கங்கள் ஒவ்வொன்றிலும் பிரகாசமான ஒளி சிந்திக்கொண்டிருக்க சிறுவனாக காட்சியளிக்கும் அவரை கண்டு முதிய தவசீலர்களும் ஆசாரியர்களும் தன்னை மறந்து எழுந்து  நின்று வரவேற்றனர். அவர் தேஜசால் கட்டுண்ட பலிராஜா அவரை ஒரு சிறந்த பொன்னாசனத்தில் அமரச்செய்து அவர் பாதங்களில் பாதபூஜை செய்வித்தார்.பற்றற்ற மகான்களுக்கும் மனோரம்யாமான பாதகமலங்களின் தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டார்.
     பலி ராஜா கூறினார்.”ஸ்வாமி தங்கள் நால்வரவால் யாம் பெருமாகி ழ்சி   அடைந்தோம்.மகரிஷிகள் தவமே உருவெடுத்து வந்தது போல வந்திருக்கிறீர்கள்.இங்கு என் இல்லத்திற்க்கு வருகை புரிந்ததால் நாங்கள் அனைவரும் புனிதமாகி விட்டோம்.எங்கள் பித்துருக்கள் திருப்தி அடைந்து விட்டார்கள்.எங்கள் வம்ஸமே புனிதமானது.இன்று யாகத்தின் முழு பலனும் கிடைத்து விட்டது.பிராமண பாலகரே தாங்கள் எதை வேண்டுமானாலும்என்னிடம்இருந்துபெற்றுக்கொள்ளலாம்.சொல்லுங்கள்.வலம் மிக்க சாம்ராஜ்யங்கள்,கிராமங்கள், வேண்டுமா?யானை,குதிரை,தேர் படைகள் வேண்டுமா?பொன்,ரத்தினபொக்கிஷங்கள்,பணிப்பெண்கள்,பிராமண கன்னிகள் வேண்டுமா?எதையும்கேட்டுக்கொள்ளுங்கள் நான் தருவதற்கு காத்துக்கொண்டு இருக்கிறேன்.” என்றார்.
     வாமன பகவான் திருவாய் மொழிந்தார்.: அசுர குல ராஜாவே!கீர்த்தியை வளர்க்கும் அறம் கலந்த வார்த்தைகள் தங்கள் குல பரம்பரைக்கு தகுந்தபடி தான் இருக்கின்றன.நீங்கள் பிருகு வம்ச சுக்கிராசாரியாரின் சிஷ்யர்.பிரகலாதனின் பேரன்.உங்கள் குல பரம்பரையில் தைரியமும் வீரமும் குறைந்தவர் எவரும் இல்லை.யுத்ததிற்க்கு சவால் விட்டவனை எவரும் சும்மாவிட்டதில்லை.சத்தியம் தவறாத பரம்பரையில் பிறந்தவர் நீங்கள்.அன்று ஹிரணியாக்ஷனிடம் போரிட்டு ஜெயித்த பின்பும் விஷ்ணு பகவானுக்கு ஜெயித்த திருப்தி ஏற்படவில்லை.எப்படியோ கஷ்டப்பட்டு ஜெயித்தோம் என்று நினைத்தார்.மேலும் ஹிரணியகசிபு மூவுலகங்களை ஜெயித்த பின்பு விஷ்ணு பகவானிடம் போர் செய்ய வைகுண்டம் வந்த போது விஷ்ணு பகவான் கண்களுக்கு புலப்படாமல் ஹிரனியனின் இதயத்திற்குள் நுழைந்து விட்டார்.அவரை வைகுண்டத்தில் காணாமல் ஹிரணியகசிபு சிம்மகர்ஜனை செய்துவிட்டு போய்விட்டார்.(தொடரும்)

Saturday 24 November 2012

வாமன அவதாரம் தொடர்ச்சி 3

அதிதி தேவி விரைவில் பகவானை தன் கர்ப்பத்தில் சுமந்தாள்.அதனால் பிரமானந்த பரவசநிலை எய்தினாள். கச்யர் தியான சமாதியில் அனைத்தும் அறிந்து விட்டார்.பிரம்ம தேவர் பிறக்க போகும் வாமன பகவானை துதி செய்தார்.ஒரு சுபயோக சுப தினத்தில் சந்திரன் திருவோண நட்சத்திரத்தில் இருக்க புரட்டாசி மாதம் சுக்கிலபட்சம் துவாதசி திதியில் பகவான் அவதரித்தார்.சகல நட்சத்திர தாரகைகள் அனுகூலமாகவும் மங்களகரமாகவும் அமைந்திருந்தன.பகவானின் அவதார திதியை விஜயா துவாதசி என்றும் கூறுவர்.அவர் அவதார சமயத்தில் வானகத்தில் தேவ துந்துபிகள் அதிர்ந்தன.சங்கம் மிருதங்கம் அதிர அப்சரஸ்கள் நடனமாடினார்கள்.தேவர்களும்,முனிவர்களும்,பித்ருக்களும் துதி பாடினார்கள்.அதிதியின் ஆசிரமத்தில் பூமாரி பொலிந்தன.அதிதி பரம புருஷ பரமாத்மாவை கண்டு பேரானந்தம் அடைந்தாள்.தந்தை கச்யபரும் அளவில்லா ஆனந்த பரவச நிலை அடைந்தார்.சங்கு சக்கிரதாரியாக பிறந்தவர் திடீரென பிரம்மச்சாரி பாலகனாக மாறினார்.நாடகத்தில் நொடியில் நடிகன் வேஷம் மாற்றிக்கொண்டது போல இருந்தார்.அவர் வேதம் பயிலும் பிரம்மச்சாரி மாணவன் போல இருந்தார்.தேவரிஷி,மகரிஷிகள் அனைவரும் ஜாதக புனித சடங்கு செய்தனர்.பூணூல் அணிவித்தனர்.காயத்திரி தேவி சக்தியே காயத்திரியாக வந்து காயத்திரி உபதேசம் செய்வித்தாள். பிரகஸ்பதி பூணூலயும் கச்யபர் அரை ஞான் கயிரயும் தந்தனர்.பூமிமாதா மான் தோலை தந்தாள்.சந்திரன் தண்டத்தயும் அதிதி மாதா கௌடீன வஸ்திரத்தயும் தந்தார்கள்.ஆகாயம் குடை தந்தது.பிரம்மா கமண்டலத்தாயும் சப்தரிஷிகள் தர்பயை அளித்தனர்.குபேரன் பிட்சா திருவோட்டயும்,சரஸ்வதி ருத்திராசை மாலை யயும் தந்தனர்.சாட்சாத் அன்னபூரனேஸ்வரி பிசையிட்டாள்.பகவான் முறைப்படி சமித்துக்களால் ஹோமம் செய்தார்.(தொடரும்)

Tuesday 23 October 2012

வாமன அவதாரம் தொடர்ச்சி 2

தேவர்கள் கண்காணாத இடத்திற்கு சென்று மறைந்துவிட்டதும் பலி சக்கரவர்த்தி தன் அசுரப்படை பரிவாரங்களோடு சொர்க்கபுரி அமராவதியை அடைந்து ஆட்சியை பிடித்தான்.மூவுலகிலும் அதிகாரம் செய்து ஆட்சி புரிய ஆரம்பித்தான்.பிருகு வம்ச பிராமணர்களும் சுக்கிரச்சரியாரும் அகிலத்தையும் வென்ற சிஷ்யன் பலிராஜா மேலும் வளர்ச்சியடைய அன்பு மேலிட்டு நூறு யாகங்கள் செய்தார்கள்.அதனால் அரசனின் கீர்த்தி எட்டுத்திக்கிலும் பரவியது.
           தேவர்கள் ஓடி ஒளிந்ததும் அரக்கர்களின் சாம்ராஜ்யம் பிரமாதமாக நடந்தது.இதை அறிந்து தேவமாதம் மிகவும் வருதமுற்றாள்.நெடுநாள் தவமிருந்து ஆசிரமத்திற்கு திரும்பிய தன் கணவர் கச்யபமுனிவரை வரவேற்று உபசரணை செய்தாள்.அவள் வாட்டமுடன் இருப்பதை கண்டு முனிவர் எப்போதும் நமது ஆசிரமத்தை அலங்கரித்து வைத்திருப்பாய்.எங்கும் உற்சாகமும் சந்தோசமும் இல்லையே.காரணம் என்னவென்று அறிய விரும்புகிறேன்.வீட்டிற்கு வந்த விருந்தாளியை உபசரிக்க தவறி விட்டாயா?அல்லது பூஜிக்கத்தகுந்த பிராமணர்களை அலட்சியபடுத்தி விட்டாயா?அறம்,பொருள், இன்பம்,இந்த மூன்றும் இல்லறத்தில் இருப்பவனுக்கு சகல சௌக்கியங்களை அளித்து இறுதியில் வீடு பேரு அடைய வழி செய்கின்றன.நீ ஏன் சோகமாக இருக்கிறாய்? என்று கேட்டார்.
          தேவர்களை பெற்ற தேவமாதா அதிதி கூறினால்: யாக பூஜை நடத்தும் பிராமணர்கள் பசுக்கள் அறம் பொருள்,அனைத்தும் சௌக்கியமாக தான் உள்ளன.நான் தவறாமல் அதிதி பூஜை,தேவபூஜை செய்து கொண்டு தான் இருக்கிறேன்.எவரும் நமது ஆசிரமத்தை விட்டு பசியோடு சென்றதில்லை.பிரஜாபதியான நீங்கள் தான் பெற்ற மக்களிடம் பேதமில்லாமல் பாரபட்சமின்றி நடந்து கொள்கிறீர்கள்.இதை நான் அறிவேன்.தேவர்களும் அசுரர்களும் உங்கள் மக்கள் தான் இருப்பினும் நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால் அசுரர்கள் தேவர்களான எம் மக்களிடம் ராஜ்ஜியம்,புகழ்,ஐஸ்வர்யம் சம்பத்துகள் அனைத்தையும் பறித்துக்கொண்டு சொர்க்கபுரி அமராவதியை ஆட்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.அமராவதி நம் கைக்கு வரவேண்டும்.அசுரர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும்.தாங்கள் அனைவருக்கும் எது நன்மையோ அதை செய்து அருளவேண்டும்.நான் என்மக்களோடு சேர்ந்து துன்பத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.என்றாள்.
         கச்யபமுனிவர் கூறினார்: உன் துக்கம் தீர வேண்டுமென்றால் நீ ஒரு விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.பங்குனிமாதம் சுக்கில பட்சம் பனிரெண்டு நாள் பயோவிரதம் இருக்கவேண்டும்.அந்த பனிரெண்டு நாள் பகவானுக்கு நைவேத்தியம் செய்த பாலை மட்டும் உண்ணவேண்டும்.வேதமூர்த்தியாக இருக்கும் பகவானை சூரியனில் அக்னியில் ஜலத்தில் வைத்து பூசிக்கவேண்டும்.பால் பஞ்சாமிர்தம் அபிசேகம் செய்து பலவித மலர்களாலும் வஸ்திர ஆபரணங்களாலும் பூஜை செய்ய வேண்டும்.பால்பாயாச அன்னம் நிவேதினம் செய்து அதையே அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும்.விரதம் முடித்த நாளன்று பிராமணர்களை அழைத்து பால் பாயாசம் அறுசுவை உணவு அளித்து சக்திக்கு தக்கவாறு தான தர்மங்கள் செய்ய வேண்டும். பிரம்ம தேவரால் உபதேசிக்கப்பட்ட இந்த விரதத்தை நான் உனக்கு உபதேசித்தேன்.மனம்,வாக்கு,காயம் ஒன்றுபட்டு ஒரே சிந்தனையுடன் சர்வாத்மாவான நாராயணனை வழிபடுவாயாக.
         அதிதி தேவியும் மிகுந்த பக்தி சிரத்தையுடன் பகவானை வழிபட்டாள்.இறுதியில் எந்த குறையும் இல்லாது விரதத்தை முடித்தாள்.பகவானை துதி செய்து தன் அந்தராத்மாவில் பகவானை நிறுத்தினாள். உடனே எங்கும் நிறைந்த பரமாத்மா விஷ்ணு பிரத்யக்ஷமானார்.அவர் அதிதியை நோக்கி கூறினார்.”தேவி உன் விருப்பத்தை யாம் அறிவோம்.உன் மக்கள் சொர்க்கபுரி ராஜ்யத்தை திரும்பபெற வேண்டும். அசுரர்கள் வீழ்ச்சியடைய வேண்டும்.என்று விரும்புகிறாய்.தற்சமயம் யுத்தம் செய்து அவர்களை வெல்ல முடியாது.ஏனெனில் கடவுளும் விதியும் பிராமணரும் பலிராஜாவுக்கு அனுகூலமாக இருக்கிறார்கள்.அதனால் வேறு ஒரு உபாயத்தால் காரியத்தை சாதிக்கவேண்டும்.நீ செய்த விஷ்ணுபகவானின் ஆராதனை வீண் போககூடாது அல்லவா.அதற்காக உனக்கு மகனாக பிறந்து காரியத்தை சாதிக்கப்போகிறேன்” என்று கூறி மறைந்தார்
.(தொடரும்)

Monday 15 October 2012

வாமன அவதாரம்

 
இந்திரனால் கொல்லப்பட்ட அசுரராஜ பலியையும் மற்ற அசுரர்களையும் அசுரகுரு சுக்கிராச்சாரியார் மிருத சஞ்சீவினி வித்தையை கொண்டு உயிர் பெற செய்து விட்டார்.அசுர ராஜ பலி தமக்கு உயிர் கொடுத்த சுக்கிரசாரியாரையும் அவரது சொந்த பந்தங்களையும் ஆதரித்து மனப்பூர்வமாக சேவை செய்தார்.பிருகு வம்ச பிராமணர்களுக்கு எல்லாவற்றையும் அர்பணித்து விட்டு மனம் வாக்கு சரீரத்தால் அவர்களை மகிழ்வித்தார்.அதனால் பெருமகிழ்ச்சியடைந்த சுக்கிரர் பலியை தலைவராக வைத்து விசுவஜீத் என்ற அற்புதங்கள் நிகழ்த்தும் யாகத்தை செய்தார்.பலவித பொருட்களால் அக்னி தேவனை திருப்தி படுத்தினார்கள்.இறுதியில் அகில உலகங்களையும் வெல்வதற்கு சக்தி படைத்த தங்கத்தகடு வேய்ந்த ஒரு ரதம் யாககுண்டத்தில் இருந்து வந்தது.இந்திரனின் குதிரைகள் போல அதிவேகமுள்ள குதிரைகள் சிங்ககொடிபறக்கும் தேரில் பூட்டி இருந்தன.வெற்றியை தரும் தங்கமயமான வில்லும் குறையாத அம்புகளும் கொண்ட தூணிரும் தோன்றின.உடையாத தெய்வீக கவசமும் வந்தது.தாத்தா பிரகலாதன் வாடாத மலர் மாலையை வெற்றிமாலையாக பலியின் கழுத்தில் சூடினார்.எல்லாவற்றிற்கும் மேலாக பிருகு வம்ச பிராமணர்களின் பூரண ஆசிகள் கிடைத்தன.
அசுர ராஜா பலி தன்னை நன்கு அலங்கரித்துக்கொண்டு அக்னி குண்டத்திலிருந்து அக்னி போல தேரில் ஏறி அமர்ந்தார்.மாபெரும் வீர அசுர சேனாதிபதிகள் தம்தம் சேனைகளோடு வந்து சேர்ந்து கொண்டனர்.அச்சமயம் அசுர சேனை ஆகாயத்தை குடித்து விடுவது போல கனல் பறக்கும் கண்களால் திசைகளையும் லோகங்களையும் சாம்பலாக்கி விடுகிறவர்கள் போல தோற்றமளித்தனர்.

           இதை சற்றும் எதிர்பார்க்காதவர்கள் போல தேவர்கள் ஆடல் பாடல்களில் சந்தோசமாக மயங்கி கிடந்தார்கள்.தேவர்களின் தலைநகரம் அமராவதி பொன்னகரம் மின்னிக்கொண்டு இருந்தது. எங்கும் சந்தோசம் நிறைந்த சூழலில் திடிரென பலி அரசர் சேனைகள் அமராவதியை முற்றுகையிட்டன.தேவமாதர்கள் நெஞ்சம் பயத்தால் நடுங்கின.பலி அரக்கனும் அவனது சேனைகளும் அட்டகாசமாக மிக பயங்கரமாக இருந்தன.இந்திரன் தன ராஜகுரு பிரகஸ்பதியிடம் ஆலோசனை கேட்டான்.சுவாமி என் பழைய எதிரி அணுக முடியாதவனாக பயங்கர ஏற்பாடுகளுடன் அமராவதியை தாக்க வந்திருக்கிறான்.இந்த அரக்கர்களை எதிர்த்து வெல்ல முடியாது என்று நினைக்கிறேன்.எந்த சக்தியை துணை கொண்டு இப்படி வளர்ச்சியடைந்து வந்திருக்கிறான் என்று தெரியவில்லை.பிரளயகால அக்னி கபளீகரம் செய்வதற்கு பெருகி வந்து அகில விசுவத்தையும் விழுங்குவதுபோல தீ ஜூவலை நாக்குகளால் பத்து திசைகளையும் நக்கி தீர்த்துவிடுவது போல வந்திருக்கிறான்.சுவாமி எனக்கு தெரியவேண்டும்.இவன் சரீரம,மனம், புலன்கள் ஆகியவற்றில் அபூர்வ பலமும் தேஜசும் எங்கிருந்து வந்தன.?

          தேவராஜனே உனது சத்ருவின் வளர்ச்சி எந்த காரணத்தால் வந்தது என்பதை நான் அறிவேன்.சுக்கிராச்சாரியார் மற்றும் பிருகு வம்சத்து பிராமணர்களை உபாசித்ததனால் இவன் தேஜஸ் அனுகமுடியாதது ஆகிவிட்டது.சர்வசக்திமான் இறைவனை தவிர உன்னாலும் எந்நாளும் மற்ற எவராலும் இப்போது இவன்முன் நிற்க முடியாது.இப்போது நீங்கள் செய்யவேண்டியது இந்த சொர்கபுரியை விட்டு வெளியேறிவிடுங்கள்.அவன் கண்களுக்கு தெரியாமல் எங்காவது சென்று ஒளிந்து கொள்ளுங்கள்.அது தான் அனைவருக்கும் நலம் என்று தேவகுரு கூறினார்.குருவின் ஆலோசனைப்படி இஷ்டம்போல உருவம் தரிக்க வல்லமை படைத்த தேவர்கள் சொர்கத்தை விட்டு எங்கோ சென்று மறைந்தனர்.


Sunday 24 June 2012

மரணமில்லா பெருவாழ்வு தொடர்ச்சி 1

குற்றம் ஒன்றும் இல்லாத கோவிந்தன் என்று பாடப்படும் விஷ்ணு பகவானிடம் சகல வித மங்கலமயமான நற்குணங்களும் நித்யவாசம் செய்கின்றன.ஆனால் அவரோ என்னை விரும்பாதவர் போல இருக்கிறார்.அணிமாதி அஷ்ட சித்திகளும் அவரையே விரும்புகின்றன.எல்லாம் வல்ல இறைவனுக்குண்டான அஷ்ட ஐஸ்வர்யங்களும் கூடி இருக்கும் அவரோ பற்று பகயற்றவராக இருக்கிறார் என்று நினைத்து லக்ஷ்மி தேவி இவரே எனக்கு தகுந்த மணாளன் என்று மணமாலையை விஷ்ணு பகவான் கழுத்தில் சூட்டினாள்.  புன்னகயித்து நாணமுடன் காதல் கலந்த கடை கண்களால் ஸ்ரீனிவாசனை நோக்கி அவர் திருமார்பில் சென்று அமர்ந்தாள். உலக மக்கள் யாவரும் நலமும் வளமான வாழ்வும் பெற தன் அருள் பார்வையால் நோக்கினாள். உடனே தேவ துந்துபிகள் மிருதங்கள் முழங்கின.வீணா வேணுகான இசை ஒலித்தது.தேவர்கள் பூ மாரி பொழிய அப்சரஸ்கள் நடனமாட சப்தரிஷிகள் வேத மந்திர கோசம் ஒலிக்க லக்ஷ்மி தேவியின் கருணையும் அருளும் நிறைந்த பார்வை பட்டு எங்கும் அமைதியும் சந்தோசமும் பரவியது.கோபமும்,பேராசையும், பொறாமையும் குடி கொண்டுள்ள அசுரர்களை அலட்சியம் செய்தாள்.
            அதன் பின் அனைவரும் சேர்ந்து மீண்டும் கடலை கடைய ஆரம்பித்தார்கள்.திடீரென கடலில் இருந்து ஒரு தெய்வ புருஷன் தோன்றினான்.அகன்ற மார்புடன் வலிமை பொருந்திய தோள்கள் பெற்றிருந்தான்.தாமரை இதழ் போன்ற கண்கள் ஓரம் சிவந்து கழுத்து சங்கு போலிருந்தது.சியாமளா வன்னத்திருமேனியில் தெய்வ மலர் மாலை மணம் வீச மாணிக்க குண்டலங்கள் ஆட இளமை ததும்பும் கட்டழகுடன் சிங்க நடை போட்டு பட்டாடை ஆபரணங்கள் ஜொலிக்க உறுதியான நீண்ட கரங்கள் கொண்டு அமிர்த கலசம் ஏந்தி வந்தான்.இவனே விஷ்ணு பகவானின் அம்சமாக சித்த,ஆயுர்வேத மருத்துவத்தை உலகிற்கு தந்த தன்வந்திரி என்று புகழ் பெற்றவன்.யக்ஞங்களில் யாக பாகம் ஏற்பவன்.தன்வந்திரி அமிர்த கலசம் ஏந்தி வருவதை கண்டு அசுரர்கள் விரைந்து சென்று அமிர்த கலசத்தை தன்வந்திரியிடமிருந்து பலவந்தமாக பறித்துக்கொண்டனர்.முன்பே சமுத்திரத்தில் இருந்து கிடைத்த அனைத்து பொருட்களும் தமக்கே வந்து சேர வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.ஆனால் அப்படி நடக்கவில்லை.அசுரர்களிடம் அமிர்த கலசம் சிக்கி கொண்டவுடன், தேவர்கள் மிகவும் வருத்தமுற்றனர்.பகவானை சரண் அடைந்தனர்.பகவான் கூறினார்.கவலைப்பட வேண்டாம்.அவர்களுக்குள் ஒற்றுமை குலைந்து சண்டை சச்சரவுகள் நடக்கும்.அச்சமயம் நான் உங்களுக்கு துணை புரிந்து அமிர்தத்தை உங்களுக்கே கிடைக்க செய்கிறேன்.            பகவான் கூறியபடியே அமிர்த கலசத்தை அசுரர்கள் ஒருவருக்கொருவர் பிடுங்கி கொண்டார்கள்.இயலாமையால் சில அசுரர்கள் நியாயம் பேசினார்கள்.தேவர்களும் நமக்கு சமமாக தானே அமிர்தம் எடுக்க உழைத்தார்கள்.அவர்களுக்கும் இதில் உரிமை உண்டு என்றார்கள்.


நான்,நீ என்று சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஓர் அழகான பெண் தோன்றினாள்அவளது ஒவ்வொரு அங்கங்களில் இருந்தும் பிரகாசமான ஒளி வீசி ஜொலித்துக்கொண்டு இருந்தது.புதிதாக இளமை பருவம் அடைந்த மங்கை போல பொன் வைர மாலை அணிந்து மயக்கும் கண் விழி அழகால் காந்தம் போல் அசுரர்களை கவர்ந்தாள்.அழகிய கேசத்தில் முல்லை மல்லிகை சரம் சூடி ஒரு தெய்வீக மணம் கமழ வளம் வந்தாள். இடை ஆபரணம் அணிந்த இடையில் மெலிந்த இடையில் மெல்லிசான பட்டு உடுத்தி கால் கொலுசு கொஞ்சுவது போல ஒலிக்க புருவங்கள் நெளிந்து காதல் பார்வையால் தன் வசப்படுத்திக்கொண்டு அசுரர்களை நோக்கி வந்தாள்.            சொந்த பந்தங்களை பொருட்படுத்தாமல் அமிர்த கலசத்தை பறித்துக்கொண்டு கொள்ளை கூட்டத்தார் போல சண்டையிட்டுக்கொண்டு இருந்த போது ஒளி வீசும் தேவதை போல ஒரு பெண் வந்து நிற்க கண்டனர்.மயக்கும் அழகில் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தனர்.சண்டையை நிறுத்திவிட்டு கூறினார்கள்.            உவமையற்ற சௌந்தர்யம் படைத்த பெண்ணே நீ யார்?ஒளி சிந்தும் உந்தன் மயக்கும் பேரழகை தேவர்,சித்தர்,கந்தர்வ,சாரண,அசுர பெண்களிடமும் நாங்கள் கண்டதில்லை.நீ யார் மகள்?எங்கிருந்து வந்தாய்?சுந்தரி நாங்கள் அனைவரும் கஷ்யப புத்திரர்கள்.அசுர ராக்ஷச சகோதரர்கள்.பங்காளிகள்.நாங்கள் மிகுந்த சிரமப்பட்டு கடலை கடைந்து இந்த அமிர்த கலசத்தை பெற்று இருக்கிறோம்.நீ நல்லவளாக நியாய தர்ம பிரகாரம் பாரபட்சமில்லாமல் பங்கிட்டு தருவாயா?உன்னிடம் அமிர்தக்கலசத்தை தருகிறோம்.அசுரர்கள் இவ்வாறு கேட்டுக்கொண்டதும் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்த மோகினி வெகு அழகாக சிரித்தாள்.கடைக்கண் பார்வையால் அசுரர்களை நோக்கி கூறினாள். மகரிஷி கஷ்யபர் புதல்வர்கள் என்று கூறிக்கொள்கிறீர்கள்.அறிமுகம் இல்லாத முன் பின் தெரியாத பெண்ணை நம்பலாமா?விவேகம் உள்ள மனிதர்கள் தன் இஷ்டம் போல் திரியும் பெண்ணை நம்ப மாட்டார்கள்.என்னிடம் நியாயத்தை எதிர்பார்கிறீர்கள்.            மோகினி இவ்வாறு கூறியதும் அசுரர்களுக்கு மேலும் அவள் மீது நம்பிக்கை வளர்ந்தது.அவர்கள் மோகினியை நோக்கி கள்ளத்தனமாக சிரித்து விட்டு அமிர்த கலசத்தை அவளிடம் கொடுத்தார்கள்.மோகினி அமிர்தக்கலசத்தை பெற்றுக்கொண்டு புன்னகயித்து இனிமையாக கூறினாள்.நான் எது செய்தாலும் அதற்க்கு நீங்கள் உடன் பட வேண்டும் உசிதமாக இருந்தாலும் சரி,அனுசிதமாக இருந்தாலும் சரி எந்த எதிர்ப்பும் தெரிவிக்க கூடாது.நான் அனைவருக்கும் பங்கிட்டு கொடுப்பேன்.உங்களுக்கு சம்மதம் என்றால் இந்த காரியத்தை செய்கிறேன்.அவள் கூறிய வார்த்தைகளின் நுணுக்கத்தை அறியாது அசுரர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் 'சம்மதம் 'என்று கூறினார்கள்.            அதன் பின் தேவர் அசுரர்கள் அனைவரும் ஒரு நாள் உபவாசம் இருந்தனர்.முறைப்படி நீராடி விட்டு ஹோமம் வளர்த்து அக்னியில் ஹவிசை இட்டனர்.பிராமணர்களுக்கு பசு தானமும் அன்ன தானமும் செய்து விட்டு அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்ப புத்தாடை உடுத்தி அமிர்தம் பருக தர்பாசனத்தில் அமர்ந்து தயாரானார்கள்.நறுமணம் கமழும் மாலை அணிந்து தூப தீபங்களால் சுகந்த மனம் வீச சபா மண்டபத்தில் நுழைந்து அமர்ந்தனர்.          மெல்லிய பட்டு சேலை உடுத்தி பர தேவதை போல் மோகினி அமிர்தகலசம் ஏந்தி சபா மண்டபத்தில் தென்றல் போல் நுழைந்தாள். அசுரர்கள் அவளது பேரழகை ரசித்த வண்ணம் இருந்தனர்.தங்க கொலுசு ஜல்,ஜல் என்று ஒலிக்க தேவர்களையும் அசுரர்களையும் பிரித்து தனித் தனியே வரிசைகளில் அமர்த்தினாள். பிறவியிலேயே அசுர ராக்ஷசர்கள் கொடூர குணம் படைத்தவர்கள்.இவர்களுக்கு அமிர்தம் கொடுத்தால் பாம்புக்கு பால் வார்த்தது போல பதிலுக்கு விஷத்தை தான் உமிலுவார்கள் என்று நினைத்து பார்வையால் அசுரர்களை மயக்கி அழகாக புன்னகை பூத்து தேவர்கள் வரிசையில் அமிர்தம் ஊற்றிக்கொண்டு வந்தாள்.அசுரர்கள் மோகினியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதால் வார்த்தைக்கு கட்டுப்பட்டு பேசாமல் இருந்தனர்.மேலும் இந்த பெண்ணுடன் தகராறு செய்வது அவமானத்திற்கு உரிய விஷயம் ,அது அன்பை முறித்து விடும் என்று நினைத்து பேசாமல் இருந்தனர்.            அசுரருள் ராகு என்ற அசுரன் விஷ்ணு பகவானின் சூதை அறிந்து அவன் தேவன் போல வேடமணிந்து தேவர்கள் வரிசையில் அமர்ந்து கொண்டான்.மோகினியிடம் அமிர்தம் பெற்று குடித்துக்கொண்டு இருந்த சமயம் சூரியனும் சந்திரனும் அவன் அசுரன் என்று காண்பித்து விட்டனர்.உடனே விஷ்ணு பகவான் அவன் தலையை சக்ராயுதத்தால் துண்டித்தார்.அமிர்தம் குடித்து விட்டதால் இறக்காமல் தலையும் உடலும் இரண்டாக பிரிந்து விட்டன.

Sunday 10 June 2012

மரணமில்லா பெருவாழ்வு தொடர்ச்சி

கூர்ம அவதாரம் எடுத்த பகவானுக்கு முதுகில் மந்திர மலை சுற்றுவது தன் முதுகில் சொரிவது போல இருந்தது. பகவானின் மகிமை அளவற்றது.வேதங்களும் உபநிஷதங்களும் அவர் மகிமைகளை வர்ணிக்க முடியாமல் திணறுகின்றன.வாசுகி நாகத்தை பிடித்து இழுக்கும் போது தேவர்களுக்குள் தெய்வ சக்தியாக அசுரருக்குள் அசுர சக்தியாக பகவான் செயல் பட்டார்.வாசுகி பாம்பை மயக்கமடைய செய்து அருள் புரிந்தார்.மந்திர மலை உச்சியில் தன் சக்தியால் மலையை அமுக்கினார்.பிரம்மா,சங்கரர் முதலிய தேவர்கள் பூ மாரி பொழிந்தனர்.திமிங்கலம்,மீன் முதலிய நீர் வாழ் பிராணிகள் நீரின் சுழற்சியால் மயக்க மடைந்தனர்.நாக ராஜா வாசுகி யின் ஆயிரம் கண்களில் இருந்தும் வாய்களில் இருந்தும் விஷம் கலந்த அக்னி சுவாச காற்று புகையாக கிளம்பியது.அதனால் காட்டு தீயில் கருகி போன சால மரங்கள் போல அசுரர்கள் காட்சியளித்தனர் .அந்த அக்னி காற்று தேவர்களையும் விடவில்லை.அவர்கள் ஆடை அணிகலன்கள் அனைத்தும் கருத்து போயின.அவர்கள் வெப்பத்தால் துவண்டனர்.பகவான் தேவர்கள் பக்கம் இருந்ததால் மலை தூறல் பட்டு சில் என்று கடல் காற்று வீசியது.தேவர்களும் அசுரர்களும் துவள்வதை கண்டு பகவான் தன் நான்கு திருக்கரங்கள் பிடித்து இழுத்து கடைந்தார். மஞ்சள் பட்டாடையும் அழகிய கேசமும் பறக்க குண்டலங்கள் ஆட ஆபரணங்கள் மின்ன அகல விசுவத்தையும் வென்ற நல்லவர்களுக்கு அபயம் அளிக்கும் நான்கு திருக்கரங்கள் கொண்டு பகவான் கடைந்தார்.அச்சமயம் கடல் வாழ் உயிரினங்கள் இங்கும் அங்கும் ஓடி கலக்கமடைந்தன.கடலை வேகமாக கடைந்தால் கடலில் இருந்து விஷம் பொங்கி வந்தது.விஷம் வேகமாக பரவ ஆரம்பித்தது.கடலிலும் பூமியிலும் ஆகாயத்திலும் உயிரினங்கள் தஞ்சமடைய வழியின்றி தவித்தன. இனி நம்மை காப்பவர் எவரோ? என்று கத்திக்கொண்டு ஓடினர்.பிரஜாபதிகளும் தேவர்களும் கைலாயத்தை நோக்கி ஓடினர்.அங்கு சிவபெருமான் பார்வதி தேவியுடன் தவக்கோலத்தில் இருந்தார்.அனைவரும் சிவனை நோக்கி துதி செய்தனர்.---பெருமானே மூவுலகங்களையும் இந்த நெருப்பாக சுடும் விஷம் தாக்க வருகிறது.ஜகத்குருவான நீங்கள் எம்மை காத்தருள வேண்டும்.எல்லாம் வல்ல இறைவன் நீங்கள்.தன்னொளி கொண்டவர்.தேவர்,மானிடர் ஆகிய அனைத்து உயிர்களுக்கும் உயிர் கொடுக்கும் ஈசன் பிரம்ம தத்துவமாக விளங்குகிறீர்கள்.அறக்கடவுள் ரிஷபத்தை வாகனமாக கொண்ட நீங்கள் பிரணவ வேத விசுவ ரூபமாக  நிற்கிறீர்கள், பகவானே தங்களின் எல்லையில்லா விசுவ ரூபத்தை பிரம்மா,இந்திரன் முதலிய தேவர்களாலும் வர்ணிக்க முடியாத பட்சத்தில் எங்களால் எப்படி முடியும்?தன ஆற்றலை மறைத்துக்கொண்டு மக்கள் நன்மைக்காக தாங்கள் பிரத்யேட்சமாக காட்சி அளிக்கிறீர்கள்.
            சிவபெருமான் கூறினார்: "தேவி பார்த்தாயா,மக்கள் அனைவரும் கஷ்டத்தில் வீழ்ந்து இருக்கின்றனர். பிரஜைகளை ரட்சிப்பது என் கடமை அல்லவா?சான்றோர் தன் உயிரை கொடுத்தாவது மக்கள் உயிரை காப்பாற்றுவார்கள்.அது அவர்களுடைய இயல்பு.சிவபெருமான் இவ்வாறு கூறியதும் அனைத்தும் அறிந்த பார்வதி தேவி புன்னகை பூத்து ஆமோதித்தாள்.கருணை கடலான சிவபெருமான் ஜீவலோகத்தை ரட்சிக்க கொடிய ஹாலா ஹல விஷத்தை ஒன்று திரட்டி கையில் எடுத்து விழுங்கி விட்டார்.விஷத்தை உண்டதால் கழுத்து நீல நிறமாகி விட்டது.அதுவும் சிவபெருமானின் அழகைகூட்டி காண்பித்தது.கீழே சிதறுண்ட விஷ துளிகளை தேள்,சர்ப்பம் போன்ற விஷ ஜந்துக்களும்,விஷ தாவரங்களும் தன்னுள் கிரகித்துக்கொண்டன.
             சிவபெருமான் விஷத்தை தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டதும் இதமான சுகந்த காற்று வீசியது.எங்கும் அமைதி நிலவியது.வெப்பம் தணிந்தது.தேவர்களும் அசுரர்களும் மீண்டும் பாற்கடலை கடைய ஆரம்பித்தார்கள்.முதன் முதலாக காமதேனு தோன்றியது.அக்னி ஹோத்திர காரியங்களுக்காக உபயோகப்படும் கோமாதா, யாகம் செய்வதற்காக பஞ்சகவ்யம் தந்து (நெய்,பால்,தயிர்,கோமயம் ,சாணம்)யாக பூஜை நடத்துபவருக்கு நற்கதி அளிக்கவல்லது. சத்தியலோகம் சேர்பிக்கும் காமதேனுவை பிரம்ம ரிஷிகள் தமக்கு வேண்டும் என்று ஏற்றுக்கொண்டனர்.அதன் பின் உச்சைசிரவா என்ற பறக்கும் குதிரை தோன்றியது.அசுர ராஜா பலி அதை ஏற்றுக்கொண்டார்.ஐராவதம் என்ற வெள்ளையானை தோன்றியது.அதை இந்திரன் ஏற்றுக்கொண்டார்.அதன்பின் கௌஸ்த்துபமணி என்ற பத்ம ராக மணி ரத்தினம் வந்தது.அதை விஷ்ணு பகவான் ஏற்றுக்கொண்டு கழுத்தில் அணிந்து கொண்டார்.அதன் பின் கற்பக விருட்சமும் அப்சரஸ்களும் தோன்றினர்.இவர்களுடன் லக்ஷ்மி தேவி வந்தார்.அவளுடைய சௌந்தர்யமும் இளமையும் அனைவரையும் மயங்க வைத்தது.அவள் திசையெங்கும் ஒளி வீசி நிற்பதை கண்டு தேவர்களும், முனிவர்களும்,அசுரர்களும் அவளை அடைய வேண்டும் என்று ஆசைபட்டனர்.இந்திரன் லக்ஷ்மி தேவி அமர்வதற்கு ஒரு சொர்ண சிம்மாசனம் கொண்டு வந்தார்.புனித நதிகள் எல்லாம் உருவம் தரித்து பொற்கலசங்களில் அபிஷேகம் செய்வதற்கு புனித தீர்த்த நீர் கொண்டு வந்தனர்.காமதேனு பஞ்ச கவ்யம் கொண்டு வந்தாள். பூமிதேவி ஒளஷத மூலிகைகளை புனித நீரில் சேர்த்தார்.வசந்த ரிது சித்திரை,வைகாசியில் பூக்கும் மலர்களை கொண்டு வந்தது.கந்தர்வர்கள் சங்கீதம் பாட அப்சரஸ்கள் நடனமாட மேகங்கள் உருவம் தரித்து மிருதங்கம்,துந்துபி,டமரு ஒலிக்கச்செய்து வீணா வேணு சங்கு நாதம் இசைக்க ரிஷி முனிவர்கள் அனைவரும் முறைப்படி பகவதி லக்ஷ்மி தேவிக்கு அபிஷேகம் செய்தனர்.லக்ஷ்மி தேவி தாமரை மலரை கையில் ஏந்தி சொர்ண சிம்மாசனத்தில் வீற்று இருந்தாள். திக்கஜஸ்கள் பொற்கலசங்கள் கொண்டு ஒளஷதங்கள் கலந்த நீரை ஊற்றி அபிஷேகம் செய்தன.பிரம்ம ரிஷிகள் வேத மந்திரத்தை ஓதினர்.சமுத்திர ராஜன் தேவிக்கு பட்டாடை சாத்தினான்.வருண பகவான் தேவிக்கு வைஜயந்தி மாலையை சூற்றினான்.பிரஜாபதி விசுவ கர்மா பொன் வைர வைடூர்ய ஆபரணங்கள் அணிவித்தான்.சரஸ்வதி தேவி முத்து மாலையும், பிரம்மா தாமரை மலரையும், நாக தேவதைகள் குண்டலங்களையும் தந்தனர்.பிராமணர்கள் ஸ்வஸ்தி மந்திரங்கள் பாட லக்ஷ்மி தேவி மணமாலையை கரங்களில் ஏந்தி புறப்பட்டாள். கொடி இடை ஆட சந்தனமும் கேசரமும் மணக்க பாத கொலுசு சதங்கை ஒலிக்க போர்க்கொடி போல் நடந்து வந்தாள். தனக்கு ஏற்ற மணாளனை தேடினாள். தேவ,கந்தர்வ,யக்ஷ,அசுர,சித்த,சாரணர்களில் தேடிக்கொண்டு வந்தாள்.அவள் மனதில் எண்ணினாள்:-- தவத்தில் சிறந்தவர் கோபத்தை அடக்கவில்லை.சிலரில் ஞானம் இருந்தும் வைராக்கிய ஆசையை ஜெயிக்கவில்லை.மகா மகிமை பொருந்தி இருந்தாலும் காமத்தை வென்றவன் இல்லை.ஐஸ்வர்ய செல்வமிருந்தும் பிறர் தயவை நாட வேண்டிய கட்டாயத்தில் இவர் உள்ளார்.அறத்தில் சிறந்தவர்களாக இருந்தும் இவர்களிடம் பிராணிகளிடம் அன்பும் கருணையும் இல்லை.இவரிடம் தியாகம் இருந்து என்ன பயன்?அது முக்திக்கு உதவியாக இல்லை.இவரிடம் வீரம் இருந்தும் ஆயுளுக்கு உத்திரவாதம் இல்லை.சில சாது மகாத்மாக்கள் பற்றற்று இருந்து சமாதியில் நிஷ்டையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.சில ரிஷிகள் நீண்ட ஆயுள் பெற்றிருந்து காண்பதற்கு அமங்கலமாக இருக்கிறார்கள்.சிலர் அழகாக மங்களகரமாக இருந்தாலும் அற்ப ஆயுள் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.சிலரிடம் இரண்டும் (ஆயுள்,அழகு)இருந்தும் குணம் கெட்டவர்களாக இருக்கிறார்கள் (தொடரும்)