Wednesday 7 January 2015

பஷ்சிமோத்தானாசனம்


இந்த ஆசனத்தில் பின் இருக்கும் தசைகளும் நாடி நரம்புகளும் அழுத்தம் கொடுக்கப்படுவதால் இதை பஷ்சிமோத்தானாசனம் என்று கூறுகிறார்கள். யோகாசனங்களில் இது மகத்துவ பூர்வமானது. இதில் வயிறு, முதுக்குத்தண்டு, முழங்கால். தோள்கள், ஆகியவற்றிற்கு நன்கு பயிற்சி கிடைக்கிறது. இது எல்லா அங்கங்களையும் சுறுசுறுப்பாக்குகிறது.
          இந்த ஆசனத்தில் ஈரல், சிறுகுடல்,பெருங்குடல், அடிவயிறு, ஆகியவை இறுக்கப்பட்டு தளர்வாக்கப்படுகின்றன. இதனால் இவற்றில் அதிகமான சுத்த ரத்தம் பாய்கிறது. வயிற்று கோளாறுகள், அஜீரணம், தொடை சேரும் இடுப்பு வலி, மலச்சிக்கல், சாயிட்டிக் ஜாயிண்ட் பெயின்(வாதம்) முதலிய ரோகங்கள் அழிக்கப்படுகின்றன. பசித்தீயை அதிகரிக்கிறது. வயிற்றுப்போக்கு குணமாகிறது. இந்த ஆசனம் சரி செய்ய முடியாத சர்க்கரை நோயை வேருடன் அழிக்கிறது. ஏனெனில் கணயம் இதனால் தாக்கப்படுகிறது. கற்பபை உறுதியாகிறது. சிறுநீர் கோளாறுகள் அழிக்கின்றன. சொப்பன தோஷம் சுக்கில தோஷம் நீங்குகிறது. மேலும் பெண்களுக்கு வெள்ளைப்பொக்கு, அதிக இரத்தப்போக்கு அல்லது சீர் இல்லாத மாதவிடாய் தொந்தரவுகள் எல்லாம் குணமாகின்றன. நுரை ஈரல் நெஞ்சு தசைகள் அனைத்திலும் சுத்த இரத்தம் பாய்ந்து ஆரோக்கியமாகின்றன. கண்டமாலை(கழுத்தை சுற்றி கட்டிகள்) டான்சில்,ஜலதோஷம், இருமல், மூச்சிறைப்பு எல்லாம் தடுக்கப்படுகின்றன. நுரைஈரலில் வரும் டி‌பி வியாதி அதாவது காசநோய் தடுக்கப்படுகிறது.
          இந்த ஆசனத்தால் இதயநோய், உயரிரத்தழுத்தநோயும் குணமாவதை அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கிறார்கள். கொழுப்பு சத்து அதிகமாகி  கனத்த சரீரம் உள்ளவர்கள் இதை முறையாக செய்து (கொழுப்பு சேரும் உணவுகளை தவிர்த்து வந்தால் நிச்சயம் எடை குறையும்.
          இந்த ஆசனம் செய்யும் சமயம் இஷ்ட தெய்வத்தை தியானம் செய்தால் அலைபாயும் மனம் ஸ்திரமாகும்.யோகிகள் கூறுகிறார்கள்: இந்த ஆசனத்தில் இருக்கும்போது மனம் ஒன்றி குண்டலினி எழுச்சியை மனதால் தூண்டப்பட்டால் மூலாதாரத்தில் இருக்கும் மின் சக்தி உயிர் பெற்று முதுகுத்தாண்டில் மேலே ஏறுவதை யோகப்பயிற்சி செய்யும் மனிதனால் நிச்சயம் உணர முடியும். குண்டலினி என்னும் பஷ்சிமா சக்தி உத்தானம் மேலே எழுவதே பஷ்சிமோத்தானாசனம் ஆகிறது.
செய்யும் வீதி:
          கீழே கம்பளி அல்லது போர்வையை விரித்துக்கொள்க. காலை நீட்டி நேராக படுக்க வேண்டும். இரண்டு கைகளையும் காதுகளோடு சேர்த்துக்கொள்க. தலைக்கு நேராக வைத்துக்கொள்க. இரண்டு கால்களையும் சேர்த்து வைத்துக்கொள்க. கால் பெருவிரல்கள் மேல்நோக்கி இருக்க இரண்டு கைகளையும் காதுகளில் ஒட்டியபடி நீட்டி சரீரத்தின்   முன் பகுதி மேலே எழும்பவேண்டும்.பின் முன்னால் குனிய வேண்டும். சுவாசத்தை எல்லாம் வெளியேற்றிய பின் கை விரல்களால் பாதத்தின் பெரு  விரல்களை பிடிக்க வேண்டும். அச்சமயம் மனதால் அழுத்தம் கொடுத்து வயிற்றை உள்நோக்கி எக்க வேண்டும். ஆசனவாயையும் சுருக்கிக்கொள்ள வேண்டும். முன்பு வெளியேற்றிய சுவாசத்துடன் மீண்டும் மூச்சு வாங்காமல் கால் பெரு விரல்களை பிடித்துக்கொண்டிருக்க வேண்டும். இந்த நிலையில் கால்கள் பூமியில் நேராக பதிந்திருக்க வேண்டும். முழங்கால்கள் மேலே மடங்காமல் மார்பு தொடைகளின் மேல்பாகத்தில் ஸ்பரிசிக்க வேண்டும். அதன் பின் வெளியேற்றிய மூச்சை உள் இழுத்து மெதுவாக நிமிர்ந்து பூமியில் படுக்க வேண்டும். ஐந்து, ஆறு நொடிகள் படுத்து ஓய்வெடுத்ததும் மீண்டும் சுவாசத்தை வெளியேற்றி ஆசனத்தை செய்ய வேண்டும்.
          ஆரம்ப காலத்தில் ஆசனம் செய்வது கடினமாக இருக்கும். விடா முயற்சியுடன் இருந்தால் ஆசனம் கைகூடும். குனிவதில், நிமிர்வதில் அவசரம் கூடாது. படக்கென்று முழங்கால் மேல் தலையை வைக்க கூடாது. அவசரமாக படக்கென்று செய்தால் இடுப்பு,தொடை, நரம்புகள் பாதிக்கப்படும் ஆபத்து உண்டாகும். அமைதியாக சாந்தமாக செய்ய வேண்டும். ஆரம்பத்தில் கால்கள் நேராக நீட்ட முடியாமல் அல்லது கைகளால் கால் பெருவிரல்களை பிடிக்க முடியாமல் போகும். அதனால் மனம் சோர்ந்து விட கூடாது. மனம் இருந்தால் நிச்சயம் ஒருநாள் நமது தேகம் வளையும். சொன்னபடி கேட்கும். இரண்டு வாரம் செய்தபின் தேகத்தின் தசைகளில் இறுக்கம் போகும். கால்களை மடக்காமல் கைகளால் கால் பெரு விரல்களை தொடலாம்.
          ஆரம்பத்தில் மூச்சை வெளியேற்றி அடக்கவும். ஆசன வாயை சுருக்கவும் சங்கடமாக இருக்கும். அச்சமயம் சுவாசம் இயல்பாக போய் வரட்டும். பழகியபின் விதிகளை கடைப்பிடிக்கலாம்.
          இந்த ஆசனத்தை மூன்றிலிருந்து பத்து முறை செய்யலாம். எவ்வளவு நேரம் இந்த ஆசனத்தை செய்தோமோ அந்த அளவு நேரம் அவசியம் சவாசனத்தில் இருக்க வேண்டும். இதனால் முதுகுத்தாண்டில் சுஷம்னா நாடி விசேசமாக பலப்படும். சிலர் இதை முதலில் மல்லாக்க படுக்காமல் உட்கார்ந்து கால்களை நீட்டியபின் இரண்டு கைகளால் கால் விரல்களை குனிந்து பிடிப்பார்கள். இதே ஆசனத்தை நின்ற நிலையில் கூட செய்வார்கள்.
          நின்ற நிலையில் இரண்டு கைகளையும் ஆகாயத்தில் நேராக கொண்டு போக வேண்டும். கால்கள், முதுக்குத்தண்டு,தலை, கழுத்து எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். அதன்பின் சுவாசத்தை வெளியேற்றி வயிற்றை உள்பக்கம் சுருக்கி மெதுவாக கீழே குனிய வேண்டும். கைகளால் கால் விரல்களை பிடிக்க வேண்டும். தலையை முழங்காலில் பதிய வைக்க வேண்டும். முழங்கால் மடங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்த அளவு இந்த நிலையில் இருந்து விட்டு மெதுவாக வெளியேற்றிய சுவாசத்தை உள் இழுத்து முன்பு போல நேராக நின்று சில நொடிகள் ஓய்வெடுத்த பின் மீண்டும் மீண்டும் குனிந்து செய்யலாம். முதலில் சொல்லப்பட்ட ஆசனத்தின் பலன்கள் இந்த ஆசனத்திலும் கிடைக்கும்.
          இந்த ஆசனத்தை கர்பமான பெண்களை தவிர மற்ற பெண்கள் அனைவரும் செய்யலாம். மேலும் முதியவரும்,பாலகரும், இளைஞர்களும் செய்யலாம்.
          இந்த ஆசனத்தில் அர்த்த பஷ்சிமோதாசனம் என்ற வகையை கூட செய்யலாம். முதலில் இரண்டு கால்களையும் நேராக நீட்டி நிமிர்ந்து அமர்க. அதன் பின் ஒரு காலை மடக்கி குதிகாலை ஜனனேந்த்திரியத்திர்க்கு கீழ் உள்ள பகுதியில் அழுத்தி வைத்துக்கொண்டு மற்றொரு காலை நீட்டிக்கொண்டு இரண்டு கைகளால் நன்கு குனிந்து நீட்டிய பெரு விரல்களை பிடிக்க வேண்டும்.
          காலை மாற்றி மாற்றி மேற் சொன்னபடி  செய்யலாம். முழங்கால் வரை குனிந்து காலை மடக்காமல் கால் விரல்களை பிடித்துக்கொள்ள முடிந்தால் ஆசனம் சித்தியாகிவிட்டது என்று நினைக்க வேண்டும். இதையும் பிராணாயாமத்துடன் செய்யலாம். (தொடரும்)            


No comments:

Post a Comment